Powered By Blogger

Wednesday, December 11, 2019

விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள் - போலோ




போலோ என்பது குதிரையின் மீது அமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. 2 அணிகள் விளையாடும் இந்த விளையாட்டில், ஒவ்வொரு அணியிலும் தலா 4 வீரர்கள் இருப்பார்கள். எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை அடிப்பதே இந்த விளையாட்டின் முக்கிய லட்சியம்.

போட்டி நேரத்தில்  அதிக முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தைச் செலுத்தும் அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.  7 நிமிடங்களைக் கொண்ட 4 சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. சில சமயங்களில் 8 சுற்றுகளைக் கொண்டதாகவும் இப்போட்டி நடத்தப்படும். போட்டியின்போது ஆட்டக்காரர்கள் விதிகளை மீறாமல் பார்த்துக்கொள்வதற்காக 2 அம்பயர்கள் இருப்பார்கள்.

இந்த ஆட்டம் முதலில் ஈரானில் ஆடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசிய நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமாக இருந்துள்ளது. அக்காலகட்டத்தில் அரசர்களின் தனிப்பட்ட காவல் படையினரும்,  மதிப்புமிக்க படைப்பிரிவினரும் தங்கள்  வலிமையை வெளிப்படுத்துவதற்காக இந்த ஆட்டத்தை ஆடியுள்ளனர். அப்போது போலோ விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் தலா 100 வீரர்கள் வரை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் போலோ ஆட்டக் களமானது ஒரு போர்க்களம் போன்று இருக்குமாம்.   

ஈரானில் இருந்து அரேபியா, திபெத், சீனா ஆகிய நாடுகளுக்கு இந்த விளையாட்டு பரவியது. இந்தியாவில் 13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அரசர்களால் போலோ விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரச குடும்பங்கள் பலவற்றில் இந்த விளையாட்டு புகழ்பெற்றது. பிற்காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள், இங்கிருந்து போலோ விளையாட்டைக் கற்றுக்கொண்டனர். அசாம் மாநிலத்தில் தேயிலைத் தோட்டங்களை அமைத்த ஆங்கிலேயர்கள் மத்தியில் முதலில் இந்த விளையாட்டு பரவியதாகவும் இதைத் தொடர்ந்து ஐரோப்பிய போலோ கிளப்பை 1859-ம் ஆண்டு சில்சார் எனும் இடத்தில் அவர்கள் தொடங்கியதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

1860-களில் கொல்கத்தாவிலும் ஒரு போலோ கிளப் தொடங்கப்பட்டது. இந்தியாவில் குதிரைப்படை வீரர்களிடையே இந்த விளையாட்டு வேகமாக பிரபலமடைந்தது.  பின்னர் இந்தியாவில் இருந்து சென்றுள்ள வெள்ளையர்கள் மூலம் இங்கிலாந்தில் போலோ விளையாட்டு பிரபலமாக,  1869-ம் ஆண்டில் இங்கிலாந்தில் முதல் முறையாக போலோ  விளையாட்டு போட்டி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இப்போட்டி பரவியுள்ளது. அக்காலகட்டத்திலேயே இங்கிலாந்தில் நடந்த போலோ போட்டிகளைக் காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ராணுவ வீரர்களால் மட்டும் ஆடப்பட்டு வந்த இந்த விளையாட்டு, பின்னர் பலகலைக்கழகங்களிலும், ஐரோப்பாவின்  அரச குடும்பங்களிலும் வேகமாக பரவியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக போலோ ஆடப்பட்டாலும், முதலாவது சர்வதேச போலோ போட்டி நடத்தப்பட்டது 1886-ம் ஆண்டில்தான். இதில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அதன்பின்னர் அமெரிக்காவும், இங்கிலாந்தும் மாறி மாறி சர்வதேச போலோ போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. அதன்பிறகு இந்த விளையாட்டில் அர்ஜென்டினாவின் கை ஓங்கியது.

1983-ம் ஆண்டில் அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் சர்வதேச போலோ கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. இந்த கூட்டமைப்பு தொடங்கப்பட்ட  சில ஆண்டுகள் (1987-ம் ) ஆண்டு உலக போலோ சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் அர்ஜென்டினா அணி அதிக முறை கோப்பையை வென்றுள்ளது.
   

No comments:

Post a Comment