வீடுகளுக்கு அடுத்ததாக மாணவர்கள் அதிக நேரம் செலவழிக்கும் இடம் வகுப்பறை. அதுபோல் குடும்பத்தினருக்கு அடுத்ததாக மாணவர்கள் அதிக நேரம் செலவழிப்பது வகுப்பு ஆசிரியருடனும், வகுப்புத் தோழர்களுடனும்தான். எனவே ஒரு மாணவரை மிகச் சிறந்த மனிதனாக வடிவமைப்பதில் வகுப்பறைக்கும் முக்கிய பங்கு உள்ளது. அந்த வகுப்பறைக்குள் மாணவர்களை ஈர்ப்பதிலும், அதற்குள் சிறப்பான ஒரு சூழலை ஏற்படுத்துவதிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. வகுப்பறைக்குள் சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க ஆசிரியர்கள் செய்யவேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:
வகுப்பறையின் அமைப்பை மாற்றுங்கள்:
ஒரே விஷயத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாலோ, ஒரே சூழலில் நீண்டகாலம் இருக்கவேண்டி இருந்தாலோ மாணவர்களுக்கு அலுப்புத் தட்டலாம். எனவே மாதம் ஒரு முறையாவது வகுப்பறையின் சூழலையும், அமைப்பையும் மாற்றுங்கள். ஒரு வாரம் புவியியல் சம்பந்தப்பட்ட படங்களை வைத்து வகுப்பறையை அலங்கரித்திருந்தால், அடுத்த மாதம் அறிவியல் தொடர்பான படங்களை வைத்து வகுப்பறையை அலங்கரியுங்கள். அதற்கு அடுத்த மாதம் வரலாறு சம்பந்தப்பட்ட படங்களை பயன்படுத்தி வகுப்பறையை அழகுபடுத்துங்கள். இதற்கான பணிகளை மாணவர்களை வைத்தே செய்யுங்கள். அவர்களே இது தொடர்பான ஓவியங்களையும், சார்ட்களையும் தயாரிப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள். இதனால் மாணவர்களுக்கு தங்கள் வகுப்பறையை அலங்கரிக்கிறோம் என்ற உணர்வு ஏற்படும். பாடம் சம்பந்தப்பட்ட படங்களை வகுப்பறையில் அடிக்கடி பார்க்க நேர்வதால், அதைப் பற்றிய புரிதலும் ஏற்படும்.
மாணவர்களின் இருக்கையை அடிக்கடி மாற்றுங்கள்:
படிப்பில் இருந்து மாணவர்களை திசைமாற்றும் விஷயங்களில் ஒன்று அரட்டை. அதிலும் ஒரே இடத்தில் அருகருகே 2 மாணவர்களை பல நாட்கள் தொடர்ந்து அமரவைத்தால், கேட்கவே வேண்டாம். அவர்களின் நட்பு பலமாகி அரட்டைக் கச்சேரி அதிகரித்துவிடும். இதைத் தவிர்க்க மாணவர்களை அடிக்கடி இடம் மாற்றுங்கள். இதனால் அரட்டைகளை குறைக்க முடியும். அத்துடன் மாணவர்களிடையே ‘முதல் பெஞ்ச்
மாணவன்’, ‘கடைசி பெஞ்ச் மாணவன்’ என்ற பாகுபாட்டையும் குறைக்கலாம்.
வகுப்பறையை சுற்றி வாருங்கள்:
சில ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போதும் நோட்ஸ்களை டிக்டேட் செய்யும்போதும் ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருப்பார்கள். இப்படி செய்வதால் ஆசிரியர்களால் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியாது. இதனால் மாணவர்கள் தங்களை சரியாக கவனிக்கிறார்களா என்பதையும் அறிய முடியாது. இந்த நிலை ஏற்படுவதை தடுக்க, பாடம் நடத்தும்போதும், நோட்ஸ்களை டிக்டேட் செய்யும்போதும் வகுப்பறையை சுற்றி வருவது நல்லது. இப்படி வகுப்பறையைச் சுற்றி வரும்போது பாடங்களை எழுதாமல் தனிப்பட்ட வேலைகளைச் செய்யும் மாணவர்களையும், அரட்டை அடிக்கும் மாணவர்களையும் கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்தலாம்.
கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்:
மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியர்களுக்கு கோபம் வருவது இயல்பு. அப்படி கோபம் வந்தால் சில ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பார்கள். ஒரு சிலர் கடுமையான வார்த்தைகளால் திட்டுவார்கள். இதுபோன்ற சமயங்களில் சக மாணவர்கள் முன்பு, மிகக் கடுமையான வார்த்தைகளால் அவர்களை திட்டாமல் இருப்பது நல்லது. இதனால் ஏற்படும் அவமானத்தால் அவர்கள் மேலும் கடுமையானவர்களாக வாய்ப்பு உள்ளது. எனவே முடிந்தவரை சம்பந்தப்பட்ட மாணவரிடம் தண்மையாக பேசி அறிவுரை கூறுங்கள். அவசியம் திட்டவேண்டும் என்றால் வகுப்பு முடிந்த பிறகு தனியே அழைத்துப் போய் திட்டி, அறிவுரை கூறுங்கள். இதனால் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்த அதிக வாய்ப்புகள் உள்ளது.
அனைவரையும் சமமாக நடத்துங்கள்:
உங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களை எப்போதும் சமமாக நடந்துங்கள். ஒவ்வொரு மாணவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் தனித்தன்மையும் ஆற்றலும் இருக்கும். எனவே நன்றாக படிக்கும் மாணவர்கள், படிக்காத மாணவர்கள் என்று பாரபட்சம் காட்டாமல் அனைவரையும் சமமாக நடத்துங்கள். தங்களாலும் சாதிக்க முடியும் என்ற நேர்மறை எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதையுங்கள். படிப்பை மட்டுமின்றி மாணவர்களிடம் உள்ள பிற ஆற்றல்களையும் ஊக்குவியுங்கள். தங்கள் ஆசிரியர்கள் தங்களை அன்பாக,
அனைவருடனும் சமமாக நடத்துகிறார்கள் என்ற எண்ணமே அவர்களுக்கு படிப்பின் மீதும் வகுப்பறையின் மீதும் ஆர்வத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment