Powered By Blogger

Sunday, November 15, 2020

விளையாட்டாய் சில கதைகள் - 20 - 23

 நவம்பர் 11


 ரோகித் சர்மாவின் ஆவேச ஆட்டம்


ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவில் பதக்கங்களைக் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் மைக்கேல்  பெல்ப்ஸ். 5  ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற  இவர் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 28. அதில் தங்கப் பதக்கங்கள் மட்டும் 23. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் 46 நாடுகள் மட்டுமே இதுவரை மொத்தமாக இத்தனை பதக்கங்களை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அளவுக்கு புகழ்பெற்ற விளையாட்டு வீரரான மைக்கேல்  பெல்ப்ஸ், சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல் இல்லை. அதிக துறுதுறுப்புடன் இருந்த அவர், படிப்பில் மந்தமாக இருந்துள்ளார். இதனால்  கவலையடைந்த அவரது அம்மா மருத்துவரிடம் காட்டியுள்ளார், மருத்துவர் பரிசோதனை செய்ததில்,  அவர் கவனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நோய் குணமாக, மருந்துகளை அளிப்பதுடன், அவரை நீச்சலில் ஈடுபடுத்துமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்படித்தான் பெல்ப்ஸுக்கு நீச்சல் அறிமுகமானது. 


 ஆரம்பத்தில் நீச்சல் குளத்தில் இறங்கவே பயப்படும் சிறுவனாக பெல்ப்ஸ் இருந்துள்ளார். “தண்ணீருக்குள் முகம் புதைக்க பயந்ததால் முதலில் பேக் ஸ்ட்ரோக் (மல்லாந்து படுத்த நிலையில் நீச்சல் அடிப்பது)  முறை நீச்சலில் பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் மற்ற நீச்சல்களில் கவனம் செலுத்தினேன்” என்கிறார் பெல்ப்ஸ். இதன் பிறகு நீச்சலே அவரது வாழ்க்கையாகிப் போனது.  


ஒன்றுக்கும் உதவாத குழந்தை என்ற நிலையில் இருந்து வளர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ், இன்று ரூ.3,500 கோடிக்கு சொந்தக்காரர்.   “தினமும் இரவு 8 மணிநேர தூக்கம். பகலில் 6 மணிநேர நீச்சல் பயிற்சி, மதியம் 3 மணிநேர தூக்கம். எப்போதும் அடுத்த லட்சியத்தைப் பற்றியே சிந்தனை. அதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்கிறார் மைக்கேல் பெல்ப்ஸ்.


நவம்பர் 12


முதல் வெற்றியை தந்த சேப்பாக்கம் மைதானம்


சேப்பாக்கம் என்றதும்  நினைவுக்கு வருவது அங்குள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்தான். இந்தியாவின் மிகப்  பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்ற பெருமை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக சேப்பாக்கம் மைதானம் கட்டப்பட்டது.  1916-ம் ஆண்டு முதல் இங்கு  கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


7.52 லட்சம் சதுரடி நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், முதலில்   ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கிரவுண்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டது.  பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.சிதம்பரத்தின் பெயர் இந்த  மைதானத்துக்கு சூட்டப்பட்டது.  1934-ம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மெட்ராஸ் மற்றும் மைசூரு அணிகள் மோதின.  


2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக 2009-ம் ஆண்டு இந்த மைதானம் நவீன முறையில் மாற்றிக் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை வழங்கிய மைதானம் என்ற பெருமை சேப்பாக்கம் மைதானத்துக்கு உள்ளது. . 1952-ம் ஆண்டு இந்த மைதானத்தில்  இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தங்கள் முதல்  வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.  சேப்பாக்கம் மைதானம் இந்திய அணிக்கு மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கும் ராசியானதாக உள்ளது.  இங்கு இந்திய  வீரர்கள் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர். 


இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுனில் கவாஸ்கர், 30-வது சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தது சேப்பாக்கம் மைதானத்தில்தான். 1983-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார். வீரேந்தர் சேவக் (319 ரன்கள்), கருண் நாயர் (303 ரன்கள்) ஆகிய 2 வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரும் இங்கு பல சதங்களை அடித்துள்ளார்.




நவம்பர் 13


விஸ்வரூபம் எடுத்த ரோகித் சர்மா


கிரிக்கெட் போட்டிகளைப்  பொறுத்தவரை சாதனை என்று  வந்துவிட்டால் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளில்லை.  டெஸ்ட் போட்டிகளில்  10 ஆயிரம் ரன்களைக் கடந்தது, சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தது, அதிக சதங்களை அடித்தது என்று இந்தியர்களின் பெயரைச் சொல்ல பல சாதனைகள் உள்ளன. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில்  அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்த நாள் நவம்பர் 13.




பொதுவாகவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் இரட்டைச் சதத்தை அடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. 1970-களில் இருந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமானாலும், இப்போட்டியில் முதல் இரட்டைச் சதம், 2010-ம் ஆண்டில்தான் அடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2010-ல் நடந்த ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை அடித்தார். இதைத்தொடர்ந்து 2011-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வீரேந்தர் சேவாக்கும், அவரைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மாவும் இரட்டைச் சதத்தைக் கடந்தனர். 


இந்த சூழலில்தான் 2014-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்  ரோகித் சர்மா. 4 ரன்களை எடுத்திருந்த நேரத்தில், அவர் கொடுத்த கேட்சை திசரா பெரைரா தவறவிட்டார். இது ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. முதல் 100 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ரோகித் சர்மா, அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்தார்.  அடுத்த  73 பந்துகளில் 164 ரன்களை விளாசித் தள்ளினார். மொத்தத்தில் அன்றைய போட்டியில் அவர் 173 பந்துகளில் 264 ரன்களை எடுத்தார். இதில் 33 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.


ரோகித் சர்மாவின் வெறியாட்டத்தால் அன்றைய தினம் இந்திய அணி 50 ஓவர்களில் 404 ரன்களைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணி 251 ரன்களில் ஆட்டமிழந்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா தனியாக அடித்த ஸ்கோரைவிட இலங்கை அணி 13 ரன்கள் குறைவாகப் பெற்றது. அன்றைய போட்டியில் ரோகித் சர்மா அடித்த 264 ரன்களை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.


நவம்பர் 12


செஸ் பாதி... பாக்ஸிங் பாதி


செஸ் போட்டியையும்,  குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளையாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ்  பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்துகொள்வோம்.

வீரகளின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து  நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் வீரர்கள்  செஸ் போட்டியில் 6 சுற்றும், குத்துச்சண்டையில் 5 சுற்றும் மோதவேண்டும். இதில் செஸ் போட்டி 4 நிமிடங்களைக் கொண்டதாகவும், குத்துச்சண்டை போட்டி 3 நிமிடங்களைக்  கொண்டதாகவும்   இருக்கும். 

ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் போட்டியாளர்களுக்கு ஒரு நிமிடம் ஓய்வு அளிக்கப்படும். இதில் செஸ் போட்டியில் தோற்பதைத் தவிர்க்க எந்த வீரராவது காய் நகர்த்தலில் தாமதம் செய்தால், அவருடைய புள்ளிகள் கழிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அதற்கு முன் குறைந்தது 50 அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளிலாவது பங்கேற்றிருக்க வேண்டும்.

1992-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் செஸ் பாக்ஸிங் ஆடப்பட்டு வந்தாலும், சர்வதேச அளவிலான முதல் செஸ் பாக்ஸிங் போட்டி 2003-ம் ஆண்டில்தான் நடந்தது. நெதர்லாந்து குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் உலக செஸ் பாக்ஸிங் அமைப்பு இணைந்து ஏற்படு செய்த இந்த போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபிங் வெற்றிபெற்றார்.

உலகெங்கிலும் தற்போது 150 தொழில்முறை ஆட்டக்காரர்கள் செஸ் பாக்ஸிங் போட்டிகளில் ஆடி வருகிறார்கள். பெர்லின், லண்டன் உட்பட பல்வேறு நகரங்களில் இந்த விளையாட்டுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன.

விளையாட்டாய் சில கதைகள் - சேப்டர் 16 - 19

 நவம்பர் 7 

ஷர்மிளாவின் இதயம் கவர்ந்த பட்டோடி 

விராட் கோலிக்கும் அனுஷ்காவுக்கும் இடையிலான காதல் இந்த தலைமுறைக்கு தெரிந்த விஷயம். கிரிக்கெட்-பாலிவுட் காதலுக்கு 1960-களிலேயே அச்சாரம் போட்டவர்  ‘டைகர்’ என செல்லமாக அழைக்கப்பட்ட  மன்சூர் அலிகான் பட்டோடி. 

 21 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று பட்டோடி புகழ்பெற்றிருந்த  காலத்தில்,  பாலிவுட்டின் மகாராணியாக இருந்தார் ஷர்மிளா தாகூர். அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் பெரிய அளவில் இல்லை.  கிரிக்கெட் ரசிகையான ஷர்மிளா தாகூர், படப்பிடிப்புகளுக்கு நடுவே அவ்வப்போது கிரிக்கெட் கமென்ட்ரிகளைக்  கேட்பதிலும், கிரிக்கெட்டைப் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இந்த வகையில் பட்டோடியின் பெயர் அடிக்கடி அவர் காதில் விழுந்தது. அவரது அதிரடியான பேட்டிங் ஸ்டைல், ஷர்மிளாவின் இதயத்தைக் கவர்ந்தது. பின்னர் அதுவே மெல்ல மெல்ல காதலாக மாறியது. 

 அதே நேரத்தில் கிரிக்கெட் இல்லாத நாட்களில் பார்ட்டிகளில் பிசியாக இருந்தார்  ‘டைகர்’ பட்டோடி. பல பெண்களுடன் அவர் சுற்றுவதாக அந்நாளில்  கிசுகிசுக்கப்பட்டது. இத்தகைய சூழலில்,    1965-ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஒரு பார்ட்டியில் பட்டோடியும் ஷர்மிளாவும்  சந்தித்துக்கொண்டனர். முதல் சந்திப்பிலேயே இருவரின் மனதிலும் காதல் தீ பற்றிக்கொண்டது. இவர்களது காதல் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக மின்னியது. பட்டோடிக்கு கிரிக்கெட்டும், ஷர்மிளா தாகூருக்கு படப்பிடிப்பும் இல்லாத நாட்களில் இருவரும் ஊர்சுற்றினர். இது பட்டோடியின் கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்ததாக பலரும் குற்றம் சாட்டினர். 

1960-களின் இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, அங்கு தொடரை மோசமாக இழந்தது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பட்டோடி, தன் காதலிக்கு பரிசளிப்பதற்காக ஒரு ஃபிரிட்ஜைத் தேடி லண்டனில் கடைகடையாக சுற்றியதாகவும் ஒரு கதை உலவுகிறது. இப்படி பல்வேறு கதைகள் தங்களைச் சுற்றி இருக்க, 1969-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.  

நவம்பர் 8 

குதிரை மீது ஒரு விளையாட்டு 

நமக்கு அதிகம் தெரியாத விளையாட்டுகளில் ஒன்று போலோ.  தலா வீரர்களைக் கொண்ட அணிகள் ஆடும் விளையாட்டான போலோவில், வீரர்கள்  குதிரையின் மீது அமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடுவார்கள். எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை அடிப்பதே இந்த விளையாட்டின் முக்கிய லட்சியம். போட்டி நேரத்தில்  அதிக முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தைச் செலுத்தும் அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.  நிமிடங்களைக் கொண்ட சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது.   

 

இந்த ஆட்டம் முதலில் ஈரானில் ஆடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசிய நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமாக இருந்துள்ளது. அக்காலகட்டத்தில் அரசர்களின் தனிப்பட்ட காவல் படையினரும்,  மதிப்புமிக்க படைப்பிரிவினரும் தங்கள்  வலிமையை வெளிப்படுத்துவதற்காக இந்த ஆட்டத்தை ஆடியுள்ளனர். அப்போது போலோ விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் தலா 100 வீரர்கள் வரை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.   

 இந்தியாவில் 13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அரசர்களால் போலோ விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரச குடும்பங்கள் பலவற்றில் இந்த விளையாட்டு புகழ்பெற்றது. பின்னர் இந்தியாவில் இருந்து சென்றுள்ள வெள்ளையர்கள் மூலம் இங்கிலாந்தில் போலோ விளையாட்டு பிரபலமாக,  1869-ம் ஆண்டில் இங்கிலாந்தில் முதல் முறையாக போலோ  விளையாட்டு போட்டி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இப்போட்டி பரவியுள்ளது.   

உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக போலோ ஆடப்பட்டாலும், முதலாவது சர்வதேச போலோ போட்டி நடத்தப்பட்டது 1886-ம் ஆண்டில்தான். இதில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அதன்பின்னர் அமெரிக்காவும், இங்கிலாந்தும் மாறி மாறி சர்வதேச போலோ போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.   

--------------------------------------- 

நவம்பர் 9 

காதைக் கடித்த மைக் டைசன் 

ஒரு உறையில் 2 வாள்கள் இருக்க முடியுமா, ஒரு கூண்டுக்குள் ஆக்ரோஷமான 2 சிங்கங்கள் இருக்க முடியுமா? ஆனால் குத்துச்சண்டை உலகில் ஒரே நேரத்தில் 2 ஆக்ரோஷமான வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள்தான் மைக் டைசனும், இவாண்டர் ஹோலிபீல்டும். 

1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது இருவரும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். இந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவுக்காக பங்கேற்ற இருவரும், பதக்கங்களை வெல்லாவிட்டாலும் இக்காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து ஊர் சுற்றியுள்ளனர். ஆனால் பின்னாளில் தொழில்முறை குத்துச்சண்டை  வீரர்களாக மாறியதும் அவர்களிடையே தங்களில் யார் பெரிய வீரர் என்ற ஈகோ உருவானது. தொடர்ந்து தங்கள் எதிராளிகளை வீழ்த்தி வெற்றிகளைப் பெற்றுவந்த இருவரும், முதல் முறையாக 1996-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி களம் கண்டனர். உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக இந்த குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதற்கு முன் ஏற்கெனவே மைக் டைசன் சாம்பியனாக இருந்தார். அந்நாளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த குத்துச்சண்டை போட்டியில் இவாண்டர் ஹோலிபீல்ட் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கப்பற்றினார். 

தோல்வியே காணாதவராக இருந்த மைக் டைசனால் இந்த தோல்வியை தாங்க முடியவில்லை. இந்த தோல்வியை ஏற்க மறுத்த அவர், ஹோலிபீல்டை மீண்டும் சண்டைக்கு அழைத்தார். ஹோலிபீல்டும் இந்தச் சவாலை ஏற்க 1997-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இருவருக்குள்ளும் மறு யுத்தம் நிகழ்ந்தது. 

பரபரப்பாக போய்கொண்டு இருந்த இந்த குத்துச்சண்டையில் ஒரு கட்டத்தில் ஹோலிபீல்ட் ஜெயிக்கும் நிலை வரை, அவேசமாக அவரது காது மடலின் ஓரத்தைக் கடித்துத் துப்பினார் மைக் டைசன். இதைத்தொடர்ந்து ஹோலிபீல்டின் மற்றொரு காதையும் அவர் கடிப்பதற்கு முன்னேற, போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஹோலிபீல்ட் இப்போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.        

  

--------------------------- 

நவம்பர் 10 

யார்க்கர் எக்ஸ்பிரஸ் 

வேகப்பந்து வீச்சில் இன்று உலக அளவில் முன்னிலையில் இருப்பவர் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா. தனது பந்துவீச்சில் பிரம்மாஸ்திரமாக அவர் கருதுவது யார்க்கர் வகை பந்துவீச்சைத்தான்  வேகமாக ஓடிவந்து பேட்ஸ்மேனின் கால் பாதங்களைக்  குறிவைத்து பந்துவீசும்  முறைக்குப் பெயர்தான் யார்க்கர். இந்த பந்துவீச்சு முறையில் பும்ரா  சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம், அவரது அம்மாவின் அன்புக் கட்டளைதான் என்று பும்ரா ஒருமுறை கூறியுள்ளார்.   

 

பும்ராவின் தந்தையான ஜஸ்பீர் சிங் இளம் வயதிலேயே ஹெபடைடிஸ் பி நோயால் இறக்க, பும்ராவையும் அவரது சகோதரியையும் பள்ளி ஆசிரியையான தாயார் தல்ஜீத்தான் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.  

 

சிறு வயதில் கிரிக்கெட்டில், குறிப்பாக பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த பும்ராவுக்கு அவரது தாயார் தல்ஜீத் விதிக்கும் அன்புக் கட்டளைகள் இரண்டுதான். முதல் கட்டளை வீட்டுக்குள் விளையாட வேண்டும். 2-வது கட்டளை, விளையாட்டின்போது சத்தம் எழுப்பி தனது தூக்கத்தை கெடுக்கக் கூடாது. இந்த கட்டளைகளையும் நிறைவேற்ற பும்ரா ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தன் வீட்டு ஹாலில் தரையும், சுவரும் இணையும் ஸ்கர்டிங் பகுதியில் குறிபார்த்து பந்துவீசுவதுதான் அந்த வழி. அப்படிச் செய்தால் ஒரே இடத்தில் குறிபார்த்து பந்து வீசும் பயிற்சி பெறுவதுடன் அதிக சத்தம் வராமலும் அவரால் ஆட முடிந்தது. அப்படி குறிபார்த்து பந்து வீசிப் பழகியதுதான் இன்று மிக நேர்த்தியாக பேட்ஸ்மேனின் கால்களுக்கு நெருக்கமாக யார்க்கர்களை வீச அவருக்கு உதவுகிறது.  டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் என்று அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கிறார். 

விளையாட்டாய் சில கதைகள் - சேப்டர் 11 - 15

 நவம்பர் - 2 

3 ஓவர்களில் சதம் அடித்த பிராட்மேன் 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 3 ஓவர்களில் 50 ரன்களைக் குவிக்கும் அனிகளையும், பேட்ஸ்மேன்களையும் இன்று நாம் கொண்டாடி வருகிறோம்.  ஆனால் ஒரு பேட்ஸ்மேன் நினைத்தால் 3 ஓவர்களில் சதமே அடிக்க முடியும் என்பதை டான் பிராட்மேன் நிரூபித்த நாள் நவம்பர் 2, 1931. 

கிரிக்கெட் விளையாட்டின் பிதாமகன் என்று எல்லோராலும் புகழப்படுபவர் டான் பிராட்மேன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட்ஸ்மேனான இவர், செய்யாத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம். அந்த வரிசையில் வெறும் மூன்றே ஓவர்களில் அடித்த இந்தச் சதமும் வருகிறது. 

1931-ம் ஆண்டில் நவம்பர் 2-ம் தேதி நடந்த  முதல்தர கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பிளாக்ஹீத் மற்றும் லித்கோ அணிகள் மோதின. இப்போட்டியில்  பிளாக்ஹீத் அணிக்காக பிராட்மேன் களம் இறங்கினார். அப்போது அவருக்கு வயது 23. அன்றைய  காலகட்டத்தில் கிரிக்கெட்டில் ஒரு ஓவர் என்பது 8 பந்துகளைக் கொண்டதாக இருந்தது.  

பிளாக்ஹீத் அணி முதலில் பேட்டிங் செய்ய, பிராட்மேன் களம் இறங்கினார். இப்போட்டியில் அவருக்கு எதிராக பில் பிளாக் என்பவர் முதல் ஓவரை வீசினார். இதற்கு முன்னர் நடந்த போட்டியில்தான் பிராட்மேனை சொற்ப ரன்களில் அவுட் ஆக்கியிருந்தார் பில் பிளாக். அதனால் அவரைப் பழிவாங்க எண்ணிய பிராட்மேன், முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டினார். அத்துடன் அவரது வேகம் தணியவில்லை அடுத்தடுத்து சிக்சர்களைப் பறக்கவிட்ட பிராட்மேன், முதல் ஓவரில் மொத்தம் 33 ரன்களைச் சேர்த்தார். அடுத்ததாக ஹாரி பேக்கர் என்ற பந்துவீச்சாளர் வர, அவரது ஓவரிலும் 40 ரன்களைக் குவித்த பிராட்மேன், பில் பி்ளாக் வீசிய 3-வது ஓவரில் தனது சதத்தை நிறைவு செய்தார். இந்த சதத்தை அடிக்க அவருக்கு 18 நிமிடங்களே தேவைப்பட்டன. 

இப்போட்டியில் அடுத்தடுத்த பந்துகளில் பிராட்மேன் அடித்த ரன்கள்  6, 6, 4, 2, 4, 4, 6, 1, 6, 4, 4, 6, 6, 4, 6, 4, 6, 6, 1, 4, 4, மற்றும் 6

 November -  

டென்னிஸ் உலகின் காதல் ஜோடி 

சினிமா நட்சத்திரங்களுக்கு இடையில் மட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள் இடையிலும் காதல் தோன்றுவதுண்டு. அப்படி கடந்த நூற்றாண்டில் புகழ்பெற்ற காதலர்களாய் இருந்த விளையாட்டு ஜோடிதான் ஜிம்மி கானர்ஸும், கிறிஸ் எவர்ட்டும். டென்னில் அரங்கில் ஆண்கள் பிரிவில் ஜிம்மி கானர்ஸும், பெண்கள் பிரிவில் கிறிஸ் எவர்ட்டும் சாதனைகளைப் படைத்துக்கொண்டிருந்த காலத்தில், 1970-களின் தொடக்கத்தில் இவர்களிடையே காதல் அரும்பியது.  

தாங்கள்  காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் இருவரும் பகிரங்கமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து பத்திரிகைகளுக்கு தீனி போடும் நம்பர் ஒன் காதல் ஜோடியாக இவர்கள் உருவெடுத்தனர். முக்கிய டென்னிஸ்  போட்டிகளின்போதும், உல்லாசப் பயணங்களின்போதும் இந்த ஜோடியின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கென்றே சிறப்பு நிருபர்களை மேற்கத்திய பத்திரிகைகள் களம் இறக்கின. 

தாங்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாக கானர்ஸும், கிறிஸ்ஸும் அறிவிக்க, அந்த நாளுக்காக அனைவரும் காத்திருந்தனர். 

 

இந்தச் சூழலில் ஒருநாள், தாங்கள் பிரிந்துவிட்டதாக இவர்கள் அறிவித்தனர். பிரிவுக்கான காரனம் பல ஆண்டுகளாக தெரியாமல் இருந்த நிலையில் இந்த கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்துள்ளார் ஜிம்மி கானர்ஸ்.  “எங்கள் காதலின் அடையாளமாக கிறிஸ் எவர்ட்டின் வயிற்றில் ஒரு கரு உருவானது. அதைக் கலைக்க அவர் விரும்பினார். அதை நான் ஏற்கவில்லை. இந்த விஷயத்தில் என் பேச்சை கேட்காமல் கருவைக் கலைத்ததால் நான் அவரை விட்டு விலகினேன் என்று கூறியுள்ளார் ஜிம்மி கானர்ஸ். 

ஜிம்மி கானர்ஸையும், தன் வயிற்றில் வளரும் குழந்தையையும் விட டென்னிஸ் விளையாட்டை கிரிஸ் அதிகம் நேசித்திருக்கலாம். உறவுகளால் தன் டென்னிஸ் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவர் கானர்ஸைப் பிரிந்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். காதலை இழந்த கிறிஸ், டென்னிஸில் மட்டும் தன் பிடியை விடவில்லை. 1975-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி, டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 

--------------- ------------------------- 

நவம்பர் -4  

ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் 

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப காலகட்டங்களில் ஹாக்கி விளையாட்டு மட்டுமே இந்தியாவுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளதுஇந்தச் சூழலில்தனிநபர் பிரிவிலும் இந்தியாவால் பதக்கங்களை வெல்ல முடியும் என்று நிரூபித்தவர்  கே.டி.ஜாதவ் என்று அழைக்கப்படும் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ்.  1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில்மல்யுத்தத்தில் இவர் வென்ற வெண்கலப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் வெண்கலப் பதக்கம்

ஹெல்சிங்கியில் நடந்த இந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லைஇவர் பங்கேற்பதாக இருந்த ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டிக்கு முதலில்  நிரஞ்சன் தாஸ் என்பவர்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்இதைக் கேள்விப்பட்டதும் பதறிப் போனார் ஜாதவ்உடனடியாக விளையாட்டுத் துறையில் செல்வாக்கு கொண்ட,  பாட்டியாலா மகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்ஜாதவைப் பற்றி நன்கு தெரிந்தவரான பாட்டியாலா மகாராஜாவும் அவருக்கு உதவ முன்வந்தார்நிரஞ்சன் தாஸுக்கும்ஜாதவுக்கும் இடையில் போட்டி நடத்தி  அதில் வெல்பவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்இதன்படி நடந்த போட்டியில் நிரஞ்சன் தாஸை வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் ஜாதவ்

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும்இதில் பங்கேற்கச் செல்ல போதிய நிதி இல்லாமல் ஜாதவ் தவித்தார்இந்த சமயத்தில் அவர் படித்தராஜாராம் கல்லூரியின் முதல்வர் ஜாதவுக்கு உதவினார்தன் வீட்டை அடகுவைத்து ரூ.7,000 வழங்கினார்மேலும் சில நண்பர்களும் உதவஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார் ஜாதவ்தன்னை கஷ்டப்பட்டு ஒலிம்புக்கு அனுப்பிய நண்பர்கல் பெருமைப்படும் விதத்தில் இப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்

November  - 5 

பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்! 

இந்திய கிரிக்கெட்டின் இப்போதைய பெருமையாக கருதப்படும் கோலியின் பிறந்தாள் இன்று (நவம்பர் 5). உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் கோலி,  86 டெஸ்ட் போட்டிகளில் 7,240 ரன்களையும், 248 ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்களையும் குவித்துள்ளார்சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் விளாசியுள்ள சதங்களின் எண்ணிக்கை மட்டும் 70. இந்த அளவுக்கு வேகமாக கோலி ரன்களைக் குவிப்பதற்கு காரணம் அவரது மன உறுதிஇதற்கு  உதாரணமாக 2006-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்,.    

2006-ம் ஆண்டில்   டெல்லி அணிக்காக  கோலி ஆடிக்கொண்டு இருந்தார்.  இந்த நேரத்தில்  கர்நாடகாவுக்கும் டெல்லிக்கும் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்தது.  முதலில் ஆடிய கர்நாடகா 446 ரன்களைக் குவிக்கஅடுத்து ஆடிய டெல்லி அணி   அடுத்தடுத்து  105 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது.  விராட் கோலி 40 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.  அடுத்த நாள் ஆட்டத்தில்    கோலியையே அணி நம்பியிருந்ததுஇந்தச் சூழலில் அன்றைய தினம் கோலியின் அப்பா பிரேம் கோலி காலமானார்

   

அப்பா இறந்ததால் அடுத்த நாள்   விராட் கோலி ஆடமாட்டார் என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர்ஆனால் அதற்கெல்லாம் மாறாக அடுத்த நாளே பேட்டும் கையுமாக மைதானத்தில் ஆஜரான கோலிதந்தை இறந்த துக்கத்தையும் மறந்து 90 ரன்களைச் சேர்த்தார்டெல்லி அணி பாலோ ஆன் ஆகாமல் காத்தார்அந்த மன உறுதிதான் அவரை உலகின் நம்பர் ஒன் வீரனாக்கியுள்ளது

 

நவம்பர்  - 6 

  

கடன்வாங்கி உருவான விளையாட்டு 

 ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டை  ஜேம்ஸ் நைஸ்மித் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில்அக்கல்லூரியில் மாணவராக இருந்தார் வில்லியம் ஜி.மோர்கன்.  பின்னர் அதே கல்லூரியில் இவர் விளையாட்டுத் துறை ஆசிரியராக சேர்ந்ததும்தன் ஆசிரியரின் வழியில் புதிதாக ஒரு ஆட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்

 

அப்படி நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அவர் கண்டுபிடித்த விளையாட்டுதான் வாலிபால்கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தும்  பந்துடென்னிஸ் போட்டிகளில் பயன்படுத்தும்  வலைகைப்பந்து விளையாட்டில் இருந்து கைகளைப் பயன்படுத்தும் முறை  என பல விளையாட்டுகளில் இருந்து சிற்சில விஷயங்களை கடன்வாங்கிஅவற்றை ஒன்றாக கலந்து  1895-ம் ஆண்டில் அவர் வாலிபால் விளையாட்டை உருவாக்கினார்

ஆரம்பத்தில் ‘மிண்டோனெட் என்று பெயரிடப்பட்ட இந்த விளையாட்டுமிகக்குறைந்த நாட்களிலேயே கல்லூரி மாணவர்களிடமும்ஒய்எம்சிஏ அங்கத்தினரிடமும் பிரபலமடைந்ததுபின்னாளில் ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர்ஆல்பிரட் ஹல்ஸ்டெட்இவ்விளையாட்டுக்கு ‘வாலிபால் என்று பெயரிட்டார்.   

 

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வந்த வாலிபால், 1913-ம் ஆண்டில் ஆசியாவுக்குள் அடியெடுத்து வைத்ததுதொடக்கத்தில் இங்கு நடந்த வாலிபால் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் தலா 16 வீரர்கள் இடம்பெற்றனர்.  1916-ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டுக்கென  விதிகள் வகுக்கப்பட்டனதிருத்தப்பட்ட விதிகளின் கீழ் வாலிபால் விளையாட்டில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைக் கொண்டிருக்கலாம்இதில் 3 வீரர்கள் முன்வரிசையிலும், 3 வீரர்கள் பின்வரிசையிலும் இருக்க வேண்டும்தேவைப்பட்டால் ஆட்டத்தின்போது  வெளியில் உள்ள உபரி வீரர்களை மாற்று வீரர்களாக களத்தில் இறக்கலாம்.  வாலிபால் போட்டிகள் 3 செட்களைக் கொண்டதாக இருக்கும் முதல் 2 செட்களில் 25 புள்ளிகளை முதலில் எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.