Powered By Blogger

Sunday, November 15, 2020

விளையாட்டாய் சில கதைகள் - 20 - 23

 நவம்பர் 11


 ரோகித் சர்மாவின் ஆவேச ஆட்டம்


ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவில் பதக்கங்களைக் குவித்த வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் மைக்கேல்  பெல்ப்ஸ். 5  ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற  இவர் வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 28. அதில் தங்கப் பதக்கங்கள் மட்டும் 23. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளில் 46 நாடுகள் மட்டுமே இதுவரை மொத்தமாக இத்தனை பதக்கங்களை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அளவுக்கு புகழ்பெற்ற விளையாட்டு வீரரான மைக்கேல்  பெல்ப்ஸ், சிறுவயதில் மற்ற குழந்தைகளைப் போல் இல்லை. அதிக துறுதுறுப்புடன் இருந்த அவர், படிப்பில் மந்தமாக இருந்துள்ளார். இதனால்  கவலையடைந்த அவரது அம்மா மருத்துவரிடம் காட்டியுள்ளார், மருத்துவர் பரிசோதனை செய்ததில்,  அவர் கவனச் சிதறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நோய் குணமாக, மருந்துகளை அளிப்பதுடன், அவரை நீச்சலில் ஈடுபடுத்துமாறு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்படித்தான் பெல்ப்ஸுக்கு நீச்சல் அறிமுகமானது. 


 ஆரம்பத்தில் நீச்சல் குளத்தில் இறங்கவே பயப்படும் சிறுவனாக பெல்ப்ஸ் இருந்துள்ளார். “தண்ணீருக்குள் முகம் புதைக்க பயந்ததால் முதலில் பேக் ஸ்ட்ரோக் (மல்லாந்து படுத்த நிலையில் நீச்சல் அடிப்பது)  முறை நீச்சலில் பயிற்சி பெற்றேன். அதன் பிறகுதான் மற்ற நீச்சல்களில் கவனம் செலுத்தினேன்” என்கிறார் பெல்ப்ஸ். இதன் பிறகு நீச்சலே அவரது வாழ்க்கையாகிப் போனது.  


ஒன்றுக்கும் உதவாத குழந்தை என்ற நிலையில் இருந்து வளர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ், இன்று ரூ.3,500 கோடிக்கு சொந்தக்காரர்.   “தினமும் இரவு 8 மணிநேர தூக்கம். பகலில் 6 மணிநேர நீச்சல் பயிற்சி, மதியம் 3 மணிநேர தூக்கம். எப்போதும் அடுத்த லட்சியத்தைப் பற்றியே சிந்தனை. அதுதான் என் வெற்றியின் ரகசியம்” என்கிறார் மைக்கேல் பெல்ப்ஸ்.


நவம்பர் 12


முதல் வெற்றியை தந்த சேப்பாக்கம் மைதானம்


சேப்பாக்கம் என்றதும்  நினைவுக்கு வருவது அங்குள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானம்தான். இந்தியாவின் மிகப்  பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்று என்ற பெருமை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு உண்டு. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம், டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றுக்கு அடுத்ததாக சேப்பாக்கம் மைதானம் கட்டப்பட்டது.  1916-ம் ஆண்டு முதல் இங்கு  கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


7.52 லட்சம் சதுரடி நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், முதலில்   ‘மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் கிரவுண்ட்’ என்றுதான் அழைக்கப்பட்டது.  பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான எம்.ஏ.சிதம்பரத்தின் பெயர் இந்த  மைதானத்துக்கு சூட்டப்பட்டது.  1934-ம் ஆண்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மெட்ராஸ் மற்றும் மைசூரு அணிகள் மோதின.  


2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்காக 2009-ம் ஆண்டு இந்த மைதானம் நவீன முறையில் மாற்றிக் கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியை வழங்கிய மைதானம் என்ற பெருமை சேப்பாக்கம் மைதானத்துக்கு உள்ளது. . 1952-ம் ஆண்டு இந்த மைதானத்தில்  இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் தங்கள் முதல்  வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.  சேப்பாக்கம் மைதானம் இந்திய அணிக்கு மட்டுமின்றி இந்திய வீரர்களுக்கும் ராசியானதாக உள்ளது.  இங்கு இந்திய  வீரர்கள் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைப் பதிவு செய்துள்ளனர். 


இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய சுனில் கவாஸ்கர், 30-வது சதத்தை அடித்து டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தது சேப்பாக்கம் மைதானத்தில்தான். 1983-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார். வீரேந்தர் சேவக் (319 ரன்கள்), கருண் நாயர் (303 ரன்கள்) ஆகிய 2 வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர். சச்சின் டெண்டுல்கரும் இங்கு பல சதங்களை அடித்துள்ளார்.




நவம்பர் 13


விஸ்வரூபம் எடுத்த ரோகித் சர்மா


கிரிக்கெட் போட்டிகளைப்  பொறுத்தவரை சாதனை என்று  வந்துவிட்டால் இந்தியர்களை அடித்துக்கொள்ள ஆளில்லை.  டெஸ்ட் போட்டிகளில்  10 ஆயிரம் ரன்களைக் கடந்தது, சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தது, அதிக சதங்களை அடித்தது என்று இந்தியர்களின் பெயரைச் சொல்ல பல சாதனைகள் உள்ளன. அந்த வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில்  அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்த நாள் நவம்பர் 13.




பொதுவாகவே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு வீரர் இரட்டைச் சதத்தை அடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. 1970-களில் இருந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமானாலும், இப்போட்டியில் முதல் இரட்டைச் சதம், 2010-ம் ஆண்டில்தான் அடிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 2010-ல் நடந்த ஒருநாள் போட்டியில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை அடித்தார். இதைத்தொடர்ந்து 2011-ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக வீரேந்தர் சேவாக்கும், அவரைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மாவும் இரட்டைச் சதத்தைக் கடந்தனர். 


இந்த சூழலில்தான் 2014-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி இலங்கை அணியை எதிர்கொண்டது இந்தியா. இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்  ரோகித் சர்மா. 4 ரன்களை எடுத்திருந்த நேரத்தில், அவர் கொடுத்த கேட்சை திசரா பெரைரா தவறவிட்டார். இது ரோஹித் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியது. முதல் 100 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ரோகித் சர்மா, அதன் பிறகு விஸ்வரூபம் எடுத்தார்.  அடுத்த  73 பந்துகளில் 164 ரன்களை விளாசித் தள்ளினார். மொத்தத்தில் அன்றைய போட்டியில் அவர் 173 பந்துகளில் 264 ரன்களை எடுத்தார். இதில் 33 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.


ரோகித் சர்மாவின் வெறியாட்டத்தால் அன்றைய தினம் இந்திய அணி 50 ஓவர்களில் 404 ரன்களைக் குவித்தது. பதிலுக்கு இலங்கை அணி 251 ரன்களில் ஆட்டமிழந்தது. இப்போட்டியில் ரோகித் சர்மா தனியாக அடித்த ஸ்கோரைவிட இலங்கை அணி 13 ரன்கள் குறைவாகப் பெற்றது. அன்றைய போட்டியில் ரோகித் சர்மா அடித்த 264 ரன்களை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.


நவம்பர் 12


செஸ் பாதி... பாக்ஸிங் பாதி


செஸ் போட்டியையும்,  குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளையாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ்  பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்துகொள்வோம்.

வீரகளின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து  நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் வீரர்கள்  செஸ் போட்டியில் 6 சுற்றும், குத்துச்சண்டையில் 5 சுற்றும் மோதவேண்டும். இதில் செஸ் போட்டி 4 நிமிடங்களைக் கொண்டதாகவும், குத்துச்சண்டை போட்டி 3 நிமிடங்களைக்  கொண்டதாகவும்   இருக்கும். 

ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும் போட்டியாளர்களுக்கு ஒரு நிமிடம் ஓய்வு அளிக்கப்படும். இதில் செஸ் போட்டியில் தோற்பதைத் தவிர்க்க எந்த வீரராவது காய் நகர்த்தலில் தாமதம் செய்தால், அவருடைய புள்ளிகள் கழிக்கப்படும். இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் அதற்கு முன் குறைந்தது 50 அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளிலாவது பங்கேற்றிருக்க வேண்டும்.

1992-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் செஸ் பாக்ஸிங் ஆடப்பட்டு வந்தாலும், சர்வதேச அளவிலான முதல் செஸ் பாக்ஸிங் போட்டி 2003-ம் ஆண்டில்தான் நடந்தது. நெதர்லாந்து குத்துச்சண்டை கூட்டமைப்பு மற்றும் உலக செஸ் பாக்ஸிங் அமைப்பு இணைந்து ஏற்படு செய்த இந்த போட்டி ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபிங் வெற்றிபெற்றார்.

உலகெங்கிலும் தற்போது 150 தொழில்முறை ஆட்டக்காரர்கள் செஸ் பாக்ஸிங் போட்டிகளில் ஆடி வருகிறார்கள். பெர்லின், லண்டன் உட்பட பல்வேறு நகரங்களில் இந்த விளையாட்டுக்கான பயிற்சி மையங்கள் உள்ளன.

No comments:

Post a Comment