Powered By Blogger

Sunday, November 15, 2020

விளையாட்டாய் சில கதைகள் - சேப்டர் 16 - 19

 நவம்பர் 7 

ஷர்மிளாவின் இதயம் கவர்ந்த பட்டோடி 

விராட் கோலிக்கும் அனுஷ்காவுக்கும் இடையிலான காதல் இந்த தலைமுறைக்கு தெரிந்த விஷயம். கிரிக்கெட்-பாலிவுட் காதலுக்கு 1960-களிலேயே அச்சாரம் போட்டவர்  ‘டைகர்’ என செல்லமாக அழைக்கப்பட்ட  மன்சூர் அலிகான் பட்டோடி. 

 21 வயதிலேயே இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று பட்டோடி புகழ்பெற்றிருந்த  காலத்தில்,  பாலிவுட்டின் மகாராணியாக இருந்தார் ஷர்மிளா தாகூர். அப்போதெல்லாம் தொலைக்காட்சிகள் பெரிய அளவில் இல்லை.  கிரிக்கெட் ரசிகையான ஷர்மிளா தாகூர், படப்பிடிப்புகளுக்கு நடுவே அவ்வப்போது கிரிக்கெட் கமென்ட்ரிகளைக்  கேட்பதிலும், கிரிக்கெட்டைப் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இந்த வகையில் பட்டோடியின் பெயர் அடிக்கடி அவர் காதில் விழுந்தது. அவரது அதிரடியான பேட்டிங் ஸ்டைல், ஷர்மிளாவின் இதயத்தைக் கவர்ந்தது. பின்னர் அதுவே மெல்ல மெல்ல காதலாக மாறியது. 

 அதே நேரத்தில் கிரிக்கெட் இல்லாத நாட்களில் பார்ட்டிகளில் பிசியாக இருந்தார்  ‘டைகர்’ பட்டோடி. பல பெண்களுடன் அவர் சுற்றுவதாக அந்நாளில்  கிசுகிசுக்கப்பட்டது. இத்தகைய சூழலில்,    1965-ம் ஆண்டில் கொல்கத்தாவில் நடந்த ஒரு பார்ட்டியில் பட்டோடியும் ஷர்மிளாவும்  சந்தித்துக்கொண்டனர். முதல் சந்திப்பிலேயே இருவரின் மனதிலும் காதல் தீ பற்றிக்கொண்டது. இவர்களது காதல் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக மின்னியது. பட்டோடிக்கு கிரிக்கெட்டும், ஷர்மிளா தாகூருக்கு படப்பிடிப்பும் இல்லாத நாட்களில் இருவரும் ஊர்சுற்றினர். இது பட்டோடியின் கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்ததாக பலரும் குற்றம் சாட்டினர். 

1960-களின் இறுதியில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி, அங்கு தொடரை மோசமாக இழந்தது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத பட்டோடி, தன் காதலிக்கு பரிசளிப்பதற்காக ஒரு ஃபிரிட்ஜைத் தேடி லண்டனில் கடைகடையாக சுற்றியதாகவும் ஒரு கதை உலவுகிறது. இப்படி பல்வேறு கதைகள் தங்களைச் சுற்றி இருக்க, 1969-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.  

நவம்பர் 8 

குதிரை மீது ஒரு விளையாட்டு 

நமக்கு அதிகம் தெரியாத விளையாட்டுகளில் ஒன்று போலோ.  தலா வீரர்களைக் கொண்ட அணிகள் ஆடும் விளையாட்டான போலோவில், வீரர்கள்  குதிரையின் மீது அமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடுவார்கள். எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தை அடிப்பதே இந்த விளையாட்டின் முக்கிய லட்சியம். போட்டி நேரத்தில்  அதிக முறை எதிரணியின் கோல் எல்லைக்குள் பந்தைச் செலுத்தும் அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.  நிமிடங்களைக் கொண்ட சுற்றுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது.   

 

இந்த ஆட்டம் முதலில் ஈரானில் ஆடப்பட்டதாக சொல்லப்படுகிறது. கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே மத்திய ஆசிய நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமாக இருந்துள்ளது. அக்காலகட்டத்தில் அரசர்களின் தனிப்பட்ட காவல் படையினரும்,  மதிப்புமிக்க படைப்பிரிவினரும் தங்கள்  வலிமையை வெளிப்படுத்துவதற்காக இந்த ஆட்டத்தை ஆடியுள்ளனர். அப்போது போலோ விளையாட்டில் ஒவ்வொரு அணியிலும் தலா 100 வீரர்கள் வரை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.   

 இந்தியாவில் 13-ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அரசர்களால் போலோ விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரச குடும்பங்கள் பலவற்றில் இந்த விளையாட்டு புகழ்பெற்றது. பின்னர் இந்தியாவில் இருந்து சென்றுள்ள வெள்ளையர்கள் மூலம் இங்கிலாந்தில் போலோ விளையாட்டு பிரபலமாக,  1869-ம் ஆண்டில் இங்கிலாந்தில் முதல் முறையாக போலோ  விளையாட்டு போட்டி நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இப்போட்டி பரவியுள்ளது.   

உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக போலோ ஆடப்பட்டாலும், முதலாவது சர்வதேச போலோ போட்டி நடத்தப்பட்டது 1886-ம் ஆண்டில்தான். இதில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது அதன்பின்னர் அமெரிக்காவும், இங்கிலாந்தும் மாறி மாறி சர்வதேச போலோ போட்டிகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.   

--------------------------------------- 

நவம்பர் 9 

காதைக் கடித்த மைக் டைசன் 

ஒரு உறையில் 2 வாள்கள் இருக்க முடியுமா, ஒரு கூண்டுக்குள் ஆக்ரோஷமான 2 சிங்கங்கள் இருக்க முடியுமா? ஆனால் குத்துச்சண்டை உலகில் ஒரே நேரத்தில் 2 ஆக்ரோஷமான வீரர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள்தான் மைக் டைசனும், இவாண்டர் ஹோலிபீல்டும். 

1984-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியின்போது இருவரும் நண்பர்களாகத்தான் இருந்தார்கள். இந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவுக்காக பங்கேற்ற இருவரும், பதக்கங்களை வெல்லாவிட்டாலும் இக்காலகட்டத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து ஊர் சுற்றியுள்ளனர். ஆனால் பின்னாளில் தொழில்முறை குத்துச்சண்டை  வீரர்களாக மாறியதும் அவர்களிடையே தங்களில் யார் பெரிய வீரர் என்ற ஈகோ உருவானது. தொடர்ந்து தங்கள் எதிராளிகளை வீழ்த்தி வெற்றிகளைப் பெற்றுவந்த இருவரும், முதல் முறையாக 1996-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி களம் கண்டனர். உலக குத்துச்சண்டை கூட்டமைப்பின் ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்காக இந்த குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதற்கு முன் ஏற்கெனவே மைக் டைசன் சாம்பியனாக இருந்தார். அந்நாளில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த குத்துச்சண்டை போட்டியில் இவாண்டர் ஹோலிபீல்ட் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தைக் கப்பற்றினார். 

தோல்வியே காணாதவராக இருந்த மைக் டைசனால் இந்த தோல்வியை தாங்க முடியவில்லை. இந்த தோல்வியை ஏற்க மறுத்த அவர், ஹோலிபீல்டை மீண்டும் சண்டைக்கு அழைத்தார். ஹோலிபீல்டும் இந்தச் சவாலை ஏற்க 1997-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இருவருக்குள்ளும் மறு யுத்தம் நிகழ்ந்தது. 

பரபரப்பாக போய்கொண்டு இருந்த இந்த குத்துச்சண்டையில் ஒரு கட்டத்தில் ஹோலிபீல்ட் ஜெயிக்கும் நிலை வரை, அவேசமாக அவரது காது மடலின் ஓரத்தைக் கடித்துத் துப்பினார் மைக் டைசன். இதைத்தொடர்ந்து ஹோலிபீல்டின் மற்றொரு காதையும் அவர் கடிப்பதற்கு முன்னேற, போட்டியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஹோலிபீல்ட் இப்போட்டியில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.        

  

--------------------------- 

நவம்பர் 10 

யார்க்கர் எக்ஸ்பிரஸ் 

வேகப்பந்து வீச்சில் இன்று உலக அளவில் முன்னிலையில் இருப்பவர் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா. தனது பந்துவீச்சில் பிரம்மாஸ்திரமாக அவர் கருதுவது யார்க்கர் வகை பந்துவீச்சைத்தான்  வேகமாக ஓடிவந்து பேட்ஸ்மேனின் கால் பாதங்களைக்  குறிவைத்து பந்துவீசும்  முறைக்குப் பெயர்தான் யார்க்கர். இந்த பந்துவீச்சு முறையில் பும்ரா  சிறந்து விளங்குவதற்கு முக்கிய காரணம், அவரது அம்மாவின் அன்புக் கட்டளைதான் என்று பும்ரா ஒருமுறை கூறியுள்ளார்.   

 

பும்ராவின் தந்தையான ஜஸ்பீர் சிங் இளம் வயதிலேயே ஹெபடைடிஸ் பி நோயால் இறக்க, பும்ராவையும் அவரது சகோதரியையும் பள்ளி ஆசிரியையான தாயார் தல்ஜீத்தான் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார்.  

 

சிறு வயதில் கிரிக்கெட்டில், குறிப்பாக பந்து வீச்சில் ஆர்வம் கொண்டிருந்த பும்ராவுக்கு அவரது தாயார் தல்ஜீத் விதிக்கும் அன்புக் கட்டளைகள் இரண்டுதான். முதல் கட்டளை வீட்டுக்குள் விளையாட வேண்டும். 2-வது கட்டளை, விளையாட்டின்போது சத்தம் எழுப்பி தனது தூக்கத்தை கெடுக்கக் கூடாது. இந்த கட்டளைகளையும் நிறைவேற்ற பும்ரா ஒரு வழியைக் கண்டுபிடித்தார். தன் வீட்டு ஹாலில் தரையும், சுவரும் இணையும் ஸ்கர்டிங் பகுதியில் குறிபார்த்து பந்துவீசுவதுதான் அந்த வழி. அப்படிச் செய்தால் ஒரே இடத்தில் குறிபார்த்து பந்து வீசும் பயிற்சி பெறுவதுடன் அதிக சத்தம் வராமலும் அவரால் ஆட முடிந்தது. அப்படி குறிபார்த்து பந்து வீசிப் பழகியதுதான் இன்று மிக நேர்த்தியாக பேட்ஸ்மேனின் கால்களுக்கு நெருக்கமாக யார்க்கர்களை வீச அவருக்கு உதவுகிறது.  டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட், டி20 போட்டிகள் என்று அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக இருக்கிறார். 

No comments:

Post a Comment