Powered By Blogger

Tuesday, February 12, 2019

தொழில்நுட்பத்தின் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்போம்


 

நிலாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டுவது அந்தக்கால அம்மாக்களின் வழக்கம். ஆனால் இந்த எலக்டிரானிக் காலத்திலோ, பெரும்பாலான அம்மாக்கள் செல்போன்களைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். குழந்தைகளும் செல்போனில் தெரியும் பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு அடம் பிடிக்காமல்   சாப்பிடுகிறார்கள்.
உணவு உண்ணும்போது மட்டுமல்ல,  குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போதும் பெற்றோர்களுக்கு கைகொடுப்பது செல்போன்கள்தான். இதைக் கையில் கொடுத்தால் போதும் குழந்தைகள் பெரியவர்களை தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக அமர்ந்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.  இப்படி  கிட்டத்தட்ட குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களாகவே  சில வீடுகளில் செல்போன்கள் உள்ளன.
 இப்படி செல்போன்களில் ஆரம்பிக்கும் தொழில்நுட்பக் கருவிகளின் நட்பு, குழந்தைகள் வளர வளர கம்ப்யூட்டர், வீடியோ கேம் என்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இதனால் உடல்ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடாமல் உடல் பருமன், பார்வைக் குறைவு என பல்வேறு பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  இப்படி  ஒரு கட்டத்தில்  பெற்றோருக்கு வரமாக இருந்த தொழில்நுட்பக் கருவிகள் காலம் செல்லச் செல்ல சாபமாக மாறி விடுகிறது. தொழில்நுட்பச் சாதனங்களில் பிடியில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.   
குழந்தைகளுக்கு ரோல் மாடலாய் இருங்கள்
 குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் வளர்கின்றன  எனவே அவர்கள்  கம்ப்யூட்டர்செல்போன்ஐபேட் போன்ற தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது  என்று நீங்கள் விரும்பினால்முதலில் நீங்கள் அவற்றின் பிடியில் இருந்து விடுபடுங்கள்நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கு மேல் இவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியெடுத்து அதன்படி செயல்படுங்கள்இதன்மூலம் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருந்து காட்டுங்கள்அப்படிச் செய்தால்,பெற்றோரைப் போலவே தாங்களும் தொழில்நுட்ப சாதனங்களை அதிகம் சாராமல் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் குழந்தைகளுக்கும் ஏற்படும். 
 குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள்:
குழந்தைகளின் தனிமைதான் அவர்கள்   தொழில்நுட்பச் சாதனங்களை  நாடிச்செல்ல முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே முடிந்தவரை குழந்தைகளை அதிக நேரம் தனிமையில் வாட விடாதீர்கள். அவர்களுடன் அதிக நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு நல்ல புத்தகங்களை படித்துக் காட்டுங்கள்.
மேலும்  குழந்தைகளுடன் சேர்ந்து சமைப்பது, அவர்களுடன் விளையாடுவது, அன்றைய தினம் குழந்தைகள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் பற்றி விவாதிப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என்று பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம். இதனால் குழந்தைகளின் மனதும் தொழில்நுட்ப சாதனங்களிடம் இருந்து விடுபடும். பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆக்கபூர்வமான பணிகளையும் செய்ய முடியும்.
இன்டர்னெட் இணைப்பை அணைத்து வையுங்கள்
தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது முழுக்க முழுக்க தவறு என்று கூற முடியாது. தேவையான அளவில் நாளொன்றுக்கு சில மணி நேரம் அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. எனவே உங்கள் குழந்தைகள் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்காமல் அவர்கள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் அவற்றைப் பயன்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். குழந்தைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவழிப்பதைக் கட்டுப்படுத்த, வீட்டில் உள்ள இன்டர்னெட் இணைப்பை  பெரும்பகுதி நேரம் அணைத்து வையுங்கள். அல்லது பாஸ்வேர்டை உருவாக்கி நீங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றுங்கள்.  தினமும் 2 மணிநேரத்துக்கு மேல் சமூக வலைதளங்களிலோ, தொழில்நுட்பச் சாதனங்களிலோ நேரத்தைச் செலவழிக்க கூடாது என்பதை வீட்டில் சட்டமாக நிறைவேற்றி அதைக் கடைபிடியுங்கள்.
முடிந்தவரை குழந்தைகளின் படுக்கை அறைக்குள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி போன்ற சாதனங்களை வைக்காதீர்கள். இதன்மூலம் பெற்றோர்கள் கவனிக்காத வகையில், அவர்கள் அதனை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். படுக்கை அறை, சாப்பாட்டு அறை, கார்கள் போன்ற இடங்களில் தொழில்நுட்பச் சாதனங்களை பயன்படுத்தக்  கூடாது என்ற சட்டத்தை வீட்டுக்குள் ஏற்படுத்துங்கள். இதனால் அவற்றைப் பயன்படுத்தும் நேரம் சற்று குறையும்.
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்
தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகள் அதிக அளவில் பயன் படுத்துவதைத் தவிர்க்க, அவர்களின் கவனத்தை மற்ற விஷயங்களில் திருப்பிவிட வேண்டும். அந்த நேரத்தில் வீட்டுப் பாடங்களைச் செய்வது, படிப்பது போன்ற விஷயங்களில் குழந்தைகளை திசைதிருப்ப வேண்டும். படிப்பைத் தவிர வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, அறைகளில் உள்ள பொருட்களை அடுக்குவது, மின்விசிறிகளைத் துடைப்பது, தரையைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களின் கவனம் திசை திரும்புவதுடன் வீடும் பொலிவு பெறும்.  வீட்டு வேலைகளைச் செய்வதில் குழந்தைகளும் பயிற்சி பெறுவார்கள்
குழந்தைகளுக்கு கூடுதலாக நேரம் இருந்தால் வர இறுதி நாட்களில் ஓவியம், நடனம், நீச்சல் போன்ற புதிய வகுப்புகளில் அவர்களைச் சேர்க்கலாம். இப்படிச் சேர்க்கும்போது இந்த வகுப்புகளில் சேர உங்கள் குழந்தைகள் நிஜமாகவே ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொண்டு சேர்ப்பது நல்லது..  விடுமுறை நாட்களில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த பூங்காக்கள், மால்கள், திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்றும் தொழில்நுட்பக் கருவிகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பலாம். உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களுடனான குழந்தைகளின் உறவையும்  மேம்படுத்தலாம்.
தூக்கத்தில் கவனம் செலுத்துங்கள்
செல்போன், கம்ப்யூட்டர் போன்ற கருவிகளால்  ஈர்க்கப்பட்டு, அதில் அதிக நேரத்தைச் செலவழிக்கும் குழந்தைகள் அதிக நேரம் தூங்குவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை சரிசெய்ய தினமும் 8 மணிநேரமாவது தூங்கியாக வேண்டும் என்ற விதியை குழந்தைகளிடம் அமல்படுத்துங்கள். அதற்காக தினமும் இரவு 9 மணிக்கே அவர்கள் படுக்கச் செல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துங்கள்.
கம்ப்யூட்டர்கள், செல்போன் திரைகளைத்  தொடர்ந்து பார்ப்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கண் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதை உங்கள் குழந்தைகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவது நல்லது. அவ்வாறு செய்யாவிட்டால் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை குழந்தைகளிடம் விரிவாக விளக்கி இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். இதற்கு அவர்கள் சம்மதித்தால் சிறு பரிசுகளை வழங்கி அவர்களை மேலும் ஊக்குவிக்கலாம்.


மழைக்காலத்தில் குழந்தைகளை காப்பது எப்படி?


 மழைக்காலம் என்றாலே மனதுக்கு மகிழ்ச்சிதான். சிலுசிலுவென அடிக்கும் காற்று, ஹோவென்ற இரைச்சலுடன் பெய்யும் பெருமழை, குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை, இதமான சாறல், எங்கெங்கும் பரவிக் கிடக்கும் பசுமை என்று மனதைக் கொள்ளைகொள்ளும் பல விஷயங்கள் மழைக்காலத்தை இனிமையாக்குகின்றன.
இப்படி இனிமையான பல விஷயங்களைத்  தரும் மழைக்காலத்துக்கு கொடூரமான மற்றொரு முகமும் உண்டு. சளி, காய்ச்சல்,  வயிற்றுப்போக்கு என எண்ணற்ற நோய்கள் மக்களைத் தாக்குவதும் இந்தக் காலத்தில்தான்.  மனிதர்களைப் போலவே கொசுக்களுக்கும்   இந்த மழைக்காலம் பிடிக்குமோ என்னவோ, கட்டுப்பாடின்றி எல்லா இடங்களிலும் நுழைந்து மழைக்காலத்தில் அவை மனிதர்களைக் கலங்கடிக்கின்றன. கொசுக்கள்தான் இப்படியென்றால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பும் கிருமிகளும் அதைவிட தீவிரமாக மனிதர்களை தாக்குகின்றன. இதனால் பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழலில் மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
வைட்டமின் சி அவசியம்
மழைக்காலங்களின்போது குழந்தைகளுக்கு சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தைகளுக்கு சளிப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அதற்கு எதிர்ப்பு சக்தியளிக்கும் உணவுகளையும், பழங்களையும்  மழைக்காலத்தின் தொடக்கம் முதலே  அவர்களுக்கு வழங்குவது நல்லது. குறிப்பாக வைட்டமின் சி  அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களின் சாறுகள் மற்றும் பால் ஆகியவற்றை குழந்தைகளுக்கு அதிகம் வழங்கவேண்டும். மேலும் தினமும்  அவர்களுக்கு வழங்கும் உணவுகளில் இஞ்சி, பூண்டு, துளசி ஆகியவற்றை சிறிதளவாவது  கலந்து கொடுப்பது சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள்  அவர்களை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும். 
குழந்தைகள் விளையாடச் சென்றால்...
மழைக்காலங்களில் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவது நல்லதல்ல. ஆனால் மழைக்காலம் பொதுவாக 3 மாதங்கள் வரை நீடிக்கும். இக்காலம் முழுவதும் வெளியில் சென்று விளையாடக் கூடாது என்று  சொன்னால் எந்தக் குழந்தைதான் ஒப்புக்கொள்ளும்? வெளியில் போய் ஆடவேண்டும் என்று நிச்சயமாக அடம் பிடிக்கும். பெற்றோர்களாலும் ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தைகளை கட்டுப்படுத்த முடியாது. இதுபோன்ற சூழலில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. மேலும் குழந்தைகள் விளையாடச் செல்லும்போது அவர்கள் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாடச் செல்லும்போது, உடலில் பெரும்பாலான இடங்களை மறைக்கும்படியான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
 மழைத் தண்ணீரில் விளையாடும்போது கிருமிகள் அவர்களைத் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதால், விளையாடி முடித்து வந்ததும்  வெந்நீரில் அவர்களைக் குளிக்க வைப்பது நல்லது. இல்லாவிட்டால் குறைந்தபட்சம் கைகளையாவது சோப்பு போட்டு கழுவவைக்க வேண்டும். சளி, ஜுரம் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், முடிந்தவரை மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு சிறு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தெருவோர   உணவுகள் வேண்டாம்
மழைக்காலத்தில் சூடாக ஏதாவது சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த எண்ணம் சற்று அதிகமாகவே தோன்றும். இதன் காரணமாக தெருவோரங்களில் உள்ள பஜ்ஜி, போண்டா மற்றும் சுண்டல் கடைகளிலும், பானி பூரி, பேல் பூரி போன்ற சாட் உணவுகளை விற்கும் கடைகளிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் மழைக்காலத்தில் இத்தகைய தெருவோர கடைகளில் சாப்பிடுவது குழந்தைகளுக்கு  தீங்கை ஏற்படுத்தும். தூய நீரில் செய்யப்படாத இந்த உணவுகள், எந்த அளவுக்கு சுவையாக இருக்குமோ, அதே அளவுக்கு வயிற்று வலி, காய்ச்சல் போன்ற நோய்களையும்  கொண்டுவரும். எனவே குழந்தைகளை மழை நேரத்தில் அக்கடைகளில் சாப்பிட விடாதீர்கள்.
அதற்கு பதிலாக வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடிக்கும் நொறுக்குத் தீனிகளை செய்து கொடுங்கள். இதனால் தாய்மார்களுக்கு சற்று கூடுதல் வேலைப் பளு கூடும் என்றாலும், பிற்பாடு குழந்தைகளுக்கு நோய் வந்து டாக்டர், மருத்துவமனை என்று அலைவதை விட இது மேலானது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.  
உடைகளில் கவனம் தேவை
குழந்தைகளுக்கு குளிர் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஒருசில பெற்றோர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடைகளை அவர்களுக்கு அணிவிப்பார்கள். அதற்கு மேல் ஸ்வெட்டர்களையும் அணிவிப்பார்கள். இது தவறான விஷயமாகும். இப்படி அளவுக்கு அதிகமான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அவர்கள் உடல் அதிக சூடாகி வியர்வை வரும். அதிக வியர்வை வருவதாலும் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிக வெப்பம் தரும் வகையில் பல ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பதற்கு பதிலாக கதகதப்பான ஏதாவது ஒரு ஆடையை மட்டும் அவர்களுக்கு அணிவிப்பது நல்லது. குழந்தைகள் மழையில் நனைந்தால், அவர்களின் உடைகளை உடனடியாக மாற்றிவிட வேண்டும்.  இல்லாவிட்டால் அவர்களுக்கு சளி பிடிப்பதற்கான வய்ப்புகள் அதிகரிக்கும்.
அடிக்கடி தண்ணீர் கொடுங்கள்
 பொதுவாக மழைக்காலங்களில் அதிக தாகம் எடுக்காது. இதனால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்காவிட்டால், அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை கட்டாயப்படுத்தியாவது அடிக்கடி தண்ணீர் குடிக்க வையுங்கள். அந்த தண்ணீரையும் நன்றாக காய்ச்சி குடிக்கவையுங்கள். வெளியிடங்களுக்கு குழந்தைகளுடன் செல்ல நேர்ந்தால் அவர்களுக்கான கொதிக்கவைத்த தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள். கிருமிகள் இருக்கலாம் என்பதால் வெளியிடங்களில் தண்ணீரையோ, குளிர்பானங்களையோ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
நோய்களில் இருந்து காக்க
கொசுக்களால் பரவும் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்குள் கொசுக்கள் வராமல் தடுக்க, கொசு விரட்டிகளை பயன்படுத்துவது நல்லது. அழுக்குத் துணிகளை வீட்டில் சேர்த்து வைக்காமல் இருத்தல், குப்பை கூளங்களை உடனடியாக அப்புறப்படுத்துதல் ஆகியவற்றிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
போதுமான முன் எச்சரிக்கையுடன் இருந்தால் இந்த மழைக்காலத்தை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

குழந்தைகளை தனியாக வீட்டில் விடுகிறீர்கள்?



பி.எம்.சுதிர்
இந்தியாவில் முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. இதனால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள தாத்தா, பாட்டிகள் இருந்தார்கள். அம்மாக்களும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்ததால் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது காலம் மாறிப்போய் விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்துபோய், அம்மா, அப்பா, குழந்தை என்று சிறு  குடும்பங்களாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகள்தான்.
வேலை விஷயமாக அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் செல்ல, தனியாக வீட்டில் இருக்கவேண்டிய நிலைக்கு பல குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். ஒருசில பெற்றோர்கள் குழந்தைக் காப்பகங்களில் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்கிறார்கள். இருப்பினும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும்  பெரும்பாலான வீடுகளில் மாலையில் அவர்கள் வீடு திரும்பும்வரை தனியாக இருக்கவேண்டிய கட்டாயத்துக்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில்   வீட்டில் அவர்கள்  பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
தனிமைக்கு  தயாரா?
குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு நீங்கள் வேலைக்கோ, வெளியிலோ செல்வதாக இருந்தால், முதலில் குழந்தை அதற்கு தயாராக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டில் தனியாக இருக்க தங்களுக்கு பயமாக இருப்பதாக குழந்தைகள் தெரிவித்தால், அவர்களை  விட்டுவிட்டுச் செல்லும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக பக்கத்து வீட்டிலோ, உறவினர்களின் வீட்டிலோ குழந்தையை விட்டுவிட்டு செல்லலாம். அல்லது அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஆளை நியமிக்கலாம்.
வீட்டில் தனியாக இருக்க  தயாராக இருப்பதாக உங்கள் குழந்தை கூறினால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் சூட்சுமம் அவர்களுக்கு இருக்கிறதா?, காயமடைந்தால் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்துகொள்ள அவர்களுக்கு தெரியுமா?, அவசர உதவிக்கு மற்றவர்களை போனில் அழைக்கும் ஆற்றல்  உள்ளதா என்பதுபோன்ற கேள்விகளுக்கும் விடைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. இந்த கேள்விகளுக்கெல்லாம், உங்கள் குழந்தையால் செய்ய முடியும் என்ற பதிலை உங்கள் மனம் அளித்தால் மட்டும் அவர்களை தனியாக வீட்டில் விட்டுச் செல்லலாம்.
அடிக்கடி போனில் தொடர்புகொள்ளுங்கள்
நீண்ட நேரத்துக்கு குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்ல நீங்கள் முடிவெடுத்து இருந்தால், அதற்கு முன்னதாக அவர்களால் வீட்டில் தனியாக இருக்க முடியுமா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். அதற்காக சுமார் 1 மணிநேரம் அவர்களை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பக்கத்து வீட்டில் இருந்தோ, அல்லது வீட்டுக்கு அருகாமையில் இருந்தோ அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இந்த ஒரு மணிநேர சோதனைக்கு பிறகு, குழந்தைகளை அழைத்து, அவர்களால் வீட்டில் பயமின்றி தனியாக இருக்க  முடிந்ததா, இந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி கேட்டுத் தெரிந்துள்ள வேண்டும். அவர்கள் சந்தித்ததாகச் சொல்லும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டுபிடித்த பிறகே, அவர்களை நெடுநேரம் வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் முடிவுக்கு பெற்றோர்கள் வரவேண்டும்.
வீட்டிலிருந்து செல்லும்போது, எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவோம் என்ற தகவலை துல்லியமாக குழந்தைகளிடம் சொல்லிவைக்க வேண்டும். மேலும் திரும்பி வரும்வரை குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி வைப்பது நல்லது. அத்துடன் வெளியில் எத்தனை முக்கியமான வேலைகள் இருந்தாலும் அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தைகளை தொடர்புகொண்டு அவர்கள் சவுகரியமாக இருக்கிறார்களா என்பதை சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.
கட்டுப்பாட்டை வலியுறுத்துங்கள்
வீட்டில் தாங்கள் மட்டும் தனியாக இருக்கப் போவதாக தெரிந்துகொண்டாலே குழந்தைகளுக்கு சுதந்திரச் சிறகுகள் முளைத்துவிடும். இஷ்டத்துக்கு ஓடியாடி விளையாடலாம்,  டிவி பார்க்கலாம், கம்ப்யூட்டரில் விளையாடலாம் என்று அவர்கள் அதீத உற்சாகமடைவார்கள். எனவே தனியாக இருக்கும்போதும் வீட்டின் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதில்லை என்ற உறுதிமொழியை அவர்களிடம் இருந்து பெறவேண்டும். குறிப்பாக யாரும் இல்லாத நேரத்தில் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவந்து கும்மாளமிடக்கூடாது, அவசியமில்லாத அறைகளை திறக்கக் கூடாது, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுபோன்ற கட்டுப்பாடுகளில் உறுதியாக இருக்க அவர்களை வலியுறுத்த வேண்டும்.
குழந்தைகள் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வீட்டில் மறைத்து வைத்துவிட்டுச் செல்லவும். உதாரணமாக    மருந்துகள், கத்தி போன்ற கூரான ஆயுதங்கள், புகையிலைப் பொருட்கள், தீப்பெட்டி போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது.
தனிமையை போக்க செல்லப் பிராணிகள்
செல்லப் பிராணிகள் குழந்தைகளுக்கு ஏற்ற நண்பர்களாக இருப்பார்கள் என்பதால் குழந்தைகளை அடிக்கடி வீட்டில் தனியாக விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு துணையாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பது நல்லது. இதனால் குழந்தைகளின் தனிமையும், மன இறுக்கமும் குறைய வாய்ப்பு உள்ளது.
வீட்டில் தனியாக இருக்கும்போது அனைத்து கதவுகளையும்,  மூடி வைத்திருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வையுங்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதிதாக யாரும் வந்தால் கதவைத் திறக்கக் கூடாது. கதவை மூடியவாறே உள்ளே இருந்துகொண்டு வந்திருப்பது யார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வந்திருப்பவர் வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு கதவைத் திறக்க முற்பட்டால்,   அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்புகொண்டு எப்படி உதவிக்காக அழைக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். அதுபோல் விளையாடும்போது காயம் பட்டாலோ, திடீரென்று நெருப்பு ஏற்பட்டாலோ, என்ன செய்ய வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களைத் தயார்படுத்த வேண்டும்.  
உணவுகளை இருப்பு வையுங்கள்
குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், அவர்களுக்கான மருந்துகள் ஆகியவற்றை வீட்டில் இருப்பு வைத்துவிட்டு செல்லவேண்டும். இரவில் எந்த நேரமும் மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் வீட்டில் எமர்ஜென்ஸி லாம்ப்களை சார்ஜ் செய்துவிட்டு அது இருக்கும் இடத்தை குழந்தைகளிடம் தெளிவாக விளக்கிவிட்டு செல்லவும். அதுபோல் அவசர உதவிக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் ஓரிடத்தில் எழுதி வைத்துவிட்டு செல்லவும்.

குழந்தைகளிடம் சொல்லக்கூடாத வார்த்தைகள்



பேசுவது என்பது தனிக் கலை. பொது இடங்களில் மட்டுமல்ல, வீட்டில்கூட நாம் பேசும்போது, அது சரியாக இருக்குமா என்று யோசித்தே பேசவேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளிடம் வார்த்தைகளை பார்த்து விட வேண்டும். நாம் பேசும் ஒருசில வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தவோ, மனநிலையை பாதிக்கவோ வாய்ப்பு உண்டு. அதனால் ஒரு சில விஷயங்களை குழந்தைகளிடம் நாம் சொல்லாமல் இருப்பது நல்லது. அப்படி சொல்லக்கூடாத வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
 எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லை’
குழந்தைகள் ஏதாவது தவறு செய்தாலோ, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலோ உடனடியாக சில பெற்றோர்கள் அவர்களைப் பார்த்து,  ‘எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லை’ ’நீ என்னை மிகவும் ஏமாற்றிவிட்டாய்’ என்பதைப்  போன்ற வார்த்தைகளைக் கூறுவார்கள்.  பெற்றோரைப் பொருத்தவரை அது அவர்கள்  மீதான தங்கள் வெறுப்பை காட்டும்   சாதாரண சொற்களாக  இருக்கலாம். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் தன்னம்பிக்கையை அதிரடியாக தகர்க்கும் வார்த்தைகள் இவை.
 பொதுவாக ஒரு குழந்தை தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என்றால், அவர்களை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களை நம்புகிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் இருந்தால்தான் அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். மாறாக தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று பெற்றோர்களே தெரிவித்தால் குழந்தைகள் மனதளவில் நொறுங்கிப் போய்விடுவார்கள். இதனால் அவர்களின் முன்னேற்றம் தடைபட வாய்ப்பு உண்டு. எனவே எந்த காலகட்டத்திலும் அவர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
 ‘அவனைப் பார்த்து கற்றுக்கொள்’
ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும், தங்கள் குழந்தையுடன் அதே வகுப்பில் நன்றாக படிக்கும் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஒருசில பெற்றோரின் வழக்கம். அப்படி ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு வேளை  தங்கள் குழந்தை குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் அவ்வளவுதான். “அவனும் உன்னைப் போன்ற பையன்தானே. அவனைப் போல் உன்னால் ஏன் மதிப்பெண் வாங்க முடியவில்லை. எப்படி படிக்க வேண்டும் என்று அவனைப் பார்த்து கற்றுக்கொள்” என்று அந்த சிறுவனுடன் தங்கள் குழந்தையை ஒப்பிட்டு பேச தொடங்கி விடுவார்கள். தேர்வு சமயத்தில்தான் என்றில்லை, ஒவ்வொரு கட்டத்திலும் மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தையை ஒப்பிடுவது பல பெற்றோரின் வழக்கமாக உள்ளது. இதனால் குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மைதான் ஏற்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். ஒருவரிடம் இருக்கும் திறமை மற்றவருக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிடுவதால் அவர்களிடையே பொறாமையும், தாழ்வு மனப்பான்மையும்தான் ஏற்படும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.
‘உன் அம்மா கொஞ்சம்கூட சரியில்லை’
வீட்டில் பெற்றோர்களுக்குள் சண்டை ஏற்பட்டால், அதனால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அதிலும் ஒருசில பெற்றோர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி குழந்தைகளிடமே புகார் கூறுவார்கள். ‘உன் அம்மா சரியில்லை. எப்போது பார்த்தாலும் சண்டை போடுகிறார்’ என்பதுபோன்ற புகார்களை சில அப்பாக்களும், ‘உன் அப்பா சரியில்லை. எப்போது பார்த்தாலும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்’ என்று சில அம்மாக்களும் குழந்தைகளிடம் புகார் கூறுவது உண்டு. ஆனால் அது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.  ஒவ்வொரு குழந்தைகளும் முதல் ரோல்மாடல் தங்கள் பெற்றோர்கள்தான். இந்நிலையில் அவர்களைப் பற்றியே குழந்தைகளிடம் புகார் பட்டியலை வாசித்தால்,  அது அவர்களின் மனவளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். மேலும் இதனால் தங்கள் பெற்றோரைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் குழந்தைகளின் மனதில் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.
  உன்னால் இதைச் செய்ய முடியாது’
சில சமயங்களில் தங்களால் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்ய குழந்தைகள் முயற்சிக்கும். உதாரணமாக சைக்கிள் ஓட்ட முயல்வது, யாருடைய உதவியுமின்றி கனமான பொருட்களைத் தூக்கிச் செல்வது போன்ற வேலைகளைச் செய்ய குழந்தைகள் முயற்சிக்கும். இதுபோன்ற சமயங்களில் நம்மால் முடிந்தவரை அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதனால் பொருட்சேதம் ஏற்பட்டாலோ, அல்லது அவர்களுக்கேகூட அடிபட்டாலோ அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. ‘அடுத்த முறை முயற்சி செய்தால் உன்னால் இதைச் சரியாக செய்ய முடியும்’ என்று நம்பிக்கை வார்த்தைகளை சொல்ல வேண்டும்.
 அப்படிச் செய்தால் ஒரு சில முயற்சிகளுக்கு பிறகாவது அந்த வேலையை அவர்கள் சரியாக செய்து முடிப்பார்கள். மாறாக, ‘உன்னால் இதைச் செய்ய முடியாது’ என்றோ,’இப்படிச் செய்தால் உனக்கு அடிபட்டு விடும்’ என்றோ கூறி அவர்களின் தன்னம்பிக்கையை கெடுக்கக்கூடாது. இப்படி செய்வதால் புதிதாக எந்த முயற்சியையும் அவர்கள் செய்யாமல் விட்டு விட வாய்ப்புகள் உண்டு.
 ‘இதுக்கு மேல எதுவும் பேசாத’
நல்ல பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்போதும் நட்பாக இருக்கவேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசவேண்டு. பள்ளியில் தினமும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் பெற்றோர்கள் நமக்குத் துணையாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் ஆழமாக ஏற்படும். தங்களின் பிரச்சினைகளைப் பற்றி அவர்களும்  மனம் விட்டு பேசுவார்கள். ஆனால் சில பெற்றோர்களோ, குழந்தைகள் மீது உச்சகட்ட கோபம் வரும்போது, குழந்தைகளின் விளக்கத்தைக்கூட முழுமையாக கேட்காமல், “இதுக்கு மேல எதுவும் பேசாத” என்று கூறி அடக்குவார்கள். இதனால் குழந்தைகள் தங்கள் தரப்பு நியாயத்தை முழுமையாக பகிர்ந்துகொள்ள முடியாமல் மனதுக்குள்ளேயே போட்டு புழுங்குவார்கள். இதனால் அவர்களின் மனம் காயப்படுவதுடன் பெற்றோர்களுடனான அவர்களின் நட்பும் பதிக்கப்படலாம்.
   சீக்கிரம் முடி’
குழந்தைகள் சாப்பிடும்போதோ, படிக்கும்போதோ அல்லது ஏதாவது வேலையைச் செய்யும்போதோ,  ‘சீக்கிரம் முடி’ என்று சொல்லி அவர்களை அவசரப்படுத்த கூடாது. இதனால் அவர்களுக்கு பதற்றம் ஏற்படும். அதனால் அவர்களால் எதையும் சரியாக செய்துமுடிக்க முடியாது. குறிப்பாக சாப்பிடும்போதோ அல்லது படிக்கும்போதோ இப்படி அவசரப்படுத்தினால் அந்த காரியத்தை அவர்களால் சரியாக செய்து முடிக்க முடியாது. பிறகும் அதற்காகவும் குழந்தைகளை திட்டவேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே மனக்கசப்புகள் ஏற்படவும் வாய்ப்பு ஒண்டு.



குழந்தைகளிடம் அடிக்கடி சொல்லவேண்டிய வார்த்தைகள்


  ஸ்கூலுக்கு போகணும் டைம் ஆயிடுச்சு..  எந்திரி’, பல்லு தேய்ச்சுட்டியா?’   ‘லஞ்ச் பாக்ஸை மறக்காம எடுத்துட்டு போ’ - இப்படி ஒவ்வொரு நாளும் நாம் குழந்தைகளிடம் சொல்லும் வார்த்தைகள் ஏராளம். இவையெல்லாம் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்கும் வார்த்தைகள். அதே நேரத்தில் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவும், தன்னம்பிக்கையுடன்  வைத்திருக்கவும் நாம் சில வார்த்தைகளை  அவர்களிடம் அடிக்கடி  சொல்லவேண்டும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அவர்களின் கருத்துப்படி குழந்தைகளின் வளர்ச்சிக்காக நாம் அன்றாடம் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்..
   உன்னால் இதைச் செய்ய முடியும்’
 “கடினமான வேலைகளை ஒரே முயற்சியில் செய்து முடிப்பது கடினம். எனவே முதல் முயற்சியில் தோல்வியடைந்தால் அதற்காக  சோர்ந்துபோகக் கூடாது’ என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தி வளர்க்க வேண்டும். தீவிரமாக முயன்றால் எந்தவொரு செயலையும்  வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக சைக்கிள் ஓட்டுவது, நீச்சலடிக்க கற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் முதல் முயற்சியில்  தோல்வியடைந்தால் அவர்கள் சோர்ந்து போவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ‘உன்னால் இதைச் செய்ய முடியும்’ என்று கூறி அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். இது அவர்களை உத்வேகப்படுத்தி, எடுத்த செயல்களை வெற்றிகரமாக செய்துமுடிக்க உதவும்.

‘எங்களுக்கு உன்னை அவ்ளோ பிடிக்கும்’

குழந்தைகள் நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பது அன்பைத்தான். அதை நாம் திகட்டத் திகட்ட அவர்களுக்கு வழங்க வேண்டும். அத்துடன் நாம் அவர்களை அதிக அளவில் நேசிக்கிறோம் என்பதை   வார்த்தைகளால் உணரவைக்க வேண்டும். ‘எங்களுக்கு உன்னை அவ்ளோ பிடிக்கும்’, ‘எது நடந்தாலும் உன் மீது  கொண்ட அன்பு   மாறாது’ என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் சொல்லச் சொல்ல அவர்களின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். தங்களை முக்கியமானவர்களாக கருத ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது அவர்களின் வெற்றிகளுக்கு துணை நிற்கும். 


‘இன்று உனக்கு நடந்த நல்ல விஷயங்கள் என்ன?’

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது நமது குழந்தைகளுடன் மனம்விட்டு பேசவேண்டும். முடிந்தவரை இரவு உணவுக்குப் பின் தூங்கச் செல்லும் முன்பு உங்கள் வீட்டுத் தெருவிலேயே அவர்களுடன் ஒரு சிற்றுலா சென்று, மனம் விட்டு பேசவேண்டும்.  அப்படி பேசும்போது ஒவ்வொரு நாளும், ‘இன்று உனக்கு நடந்த நல்ல விஷயங்கள் என்ன?’ என்று குழந்தைகளிடம் கேட்கலாம். அப்படி கேட்பதால் பெற்றோரிடம் சொல்வதற்காகவாவது தினமும் ஒரு நல்ல விஷயத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். தங்களைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே அவர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். இதனால்    அவர்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாக வாய்ப்புள்ளது.

 ‘உனக்கு நான் இருக்கிறேன்’
நம் குழந்தைகள் நம்மை நம்பித்தான் உள்ளன. எந்தவொரு கட்டத்திலும் அவர்களை நாம் கைவிடக் கூடாது. சில சமயங்களில் குழந்தைகள் பள்ளியில் ஏதாவது சேட்டை செய்யலாம். அதற்காக ஆசிரியர்கள் உங்களை அழைத்து கண்டிக்கலாம். இதுபோன்ற நேரங்களில் நம் குழந்தைகளை கவனமாக கையாள வேண்டும். ‘உன்னைப் பெத்ததால டீச்சர் முன்னாடி கைகட்டி நிக்க வச்சுட்டியே’  என்று இந்த கட்டத்தில் நம் கோபத்தை உமிழ்ந்துவிடக் கூடாது.
மாறாக இதுபோன்ற சமயத்தில்தான் நாம் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்று சொல்லி அவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களின் சிக்கலுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதற்கு தீர்வுகாண வேண்டும். முக்கியமாக நமது வார்த்தைகள் மூலம் இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு நாம் துணையாக இருக்கிறோம் என்பதை புரியவைக்க வேண்டும். இதனால்  நமக்கு துணையாக  பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

 ‘நல்லா இருக்கியா?’
இது சாதாரண வார்த்தைகளாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இவைதான்  குழந்தைகளின் மனதைத் திறக்கும் மந்திரச் சாவி என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.  குழந்தைகள் ஏதாவது வருத்தத்தில் இருந்தாலோ, இக்கட்டான மனநிலையில் இருந்தாலோ, இந்தக் கேள்வி அவர்களின் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டவும், பெற்றோருடன் ஒரு நீண்ட உரையாடலை நடத்தவும் உதவியாக இருக்கும். இதன்மூலம் அவர்களின் சிக்கல்களுக்கு  தீர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் குழந்தைகள் சோர்வாக இருந்தாலோ, எதிலும் உற்சாகம் காட்டாமல் இருந்தாலோ, நிச்சயமாக இந்த கேள்வியைக் கேளுங்கள். மன அழுத்தத்தில் இருந்து அவர்கள் விடுபட உதவுங்கள்.
என்னை மன்னித்துவிடு
பெற்றோர்கள் சில சமயங்களில் தங்கள் குழந்தைகள் தவறே செய்யாதபோதிலும் அவர்களைத் தப்பாக  நினைத்து அடித்துவிடுவார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் தாங்கள் தவறு செய்துவிட்டது தெரிந்தால் பெற்றோர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டு குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக நினைத்து அடிக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமின்றி, அவர்களின் தேவையை நிறைவேற்ற முடியாத நேரங்களிலும், சொன்ன வார்த்தையை காப்பாற்ற முடியாத காலகட்டங்களிலும்கூட அவர்கள் நம்மைவிட சிறியவர்கள்தானே என்ற எண்ணத்தை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் பெற்றோர்கள்   மன்னிப்பு கேட்பது நல்லது. இதன்மூலம் குழந்தைகள் மனதிலும் தாங்கள் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் பெருகும். மேலும் தவறு செய்தால் வருந்தும் மனப்பான்மையும் வளரும். 

‘உன் செயலைப் பார்த்து பெருமையாக இருக்கிறது’
அடுத்தவருக்கு உதவுவது, தேர்வில் நன்றாக செயல்பட்டு அதிக மதிப்பெண்ணைப் பெறுவது, வீட்டில் சகோதரர்களிடம் சண்டையிடாமல் அமைதியாக இருப்பது என்று நல்ல செயல்களைச் செய்தால்,  ‘உன் செயலைப் பார்த்து பெருமையாக இருக்கிறது’ என்று பாராட்ட வேண்டும். இந்த பாராட்டுதான் மேலும் மேலும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கும். மாறாக நல்ல செயல்களைச் செய்யும்போது பாராட்டாமல் ஏதாவது தவறுகளைச் செய்யும்போது மட்டும் திட்டினால், அவர்களுக்கு நம் மீது வெறுப்பு ஏற்படும். ‘எத்தனையோ நல்லது செய்கிறோம். அதையெல்லாம் பாராட்டாமல் தவறு செய்தால் மட்டும் திட்டுகிறார்களே’ என்று வருத்தப்படுவார்கள். ஆகவே குழந்தைகளை பாராட்டுவதில் ஒருபோதும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.