பி.எம்.சுதிர்
இந்தியாவில் முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் அதிகமாக இருந்தன. இதனால் குழந்தைகளை பார்த்துக்கொள்ள தாத்தா, பாட்டிகள் இருந்தார்கள். அம்மாக்களும் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்ததால் குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது காலம் மாறிப்போய் விட்டது. கூட்டுக் குடும்ப வாழ்க்கை சிதைந்துபோய், அம்மா, அப்பா, குழந்தை என்று சிறு குடும்பங்களாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வீட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது குழந்தைகள்தான்.
வேலை விஷயமாக அம்மாவும், அப்பாவும் வேலைக்குச் செல்ல, தனியாக வீட்டில் இருக்கவேண்டிய நிலைக்கு பல குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். ஒருசில பெற்றோர்கள் குழந்தைக் காப்பகங்களில் தங்கள் குழந்தைகளை விட்டுவிட்டுச் செல்கிறார்கள். இருப்பினும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் பெரும்பாலான வீடுகளில் மாலையில் அவர்கள் வீடு திரும்பும்வரை தனியாக இருக்கவேண்டிய கட்டாயத்துக்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற சூழலில் வீட்டில் அவர்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
தனிமைக்கு தயாரா?
குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு நீங்கள் வேலைக்கோ, வெளியிலோ செல்வதாக இருந்தால், முதலில் குழந்தை அதற்கு தயாராக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வீட்டில் தனியாக இருக்க தங்களுக்கு பயமாக இருப்பதாக குழந்தைகள் தெரிவித்தால், அவர்களை விட்டுவிட்டுச் செல்லும் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக பக்கத்து வீட்டிலோ, உறவினர்களின் வீட்டிலோ குழந்தையை விட்டுவிட்டு செல்லலாம். அல்லது அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஆளை நியமிக்கலாம்.
வீட்டில் தனியாக இருக்க தயாராக இருப்பதாக உங்கள் குழந்தை கூறினால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படும் சூட்சுமம் அவர்களுக்கு இருக்கிறதா?, காயமடைந்தால் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்துகொள்ள அவர்களுக்கு தெரியுமா?, அவசர உதவிக்கு மற்றவர்களை போனில் அழைக்கும் ஆற்றல் உள்ளதா என்பதுபோன்ற கேள்விகளுக்கும் விடைகளைத் தெரிந்துகொள்வது நல்லது. இந்த கேள்விகளுக்கெல்லாம், உங்கள் குழந்தையால் செய்ய முடியும் என்ற பதிலை உங்கள் மனம் அளித்தால் மட்டும் அவர்களை தனியாக வீட்டில் விட்டுச் செல்லலாம்.
அடிக்கடி போனில் தொடர்புகொள்ளுங்கள்
நீண்ட நேரத்துக்கு குழந்தைகளை வீட்டில் விட்டுச் செல்ல நீங்கள் முடிவெடுத்து இருந்தால், அதற்கு முன்னதாக அவர்களால் வீட்டில் தனியாக இருக்க முடியுமா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். அதற்காக சுமார் 1 மணிநேரம் அவர்களை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பக்கத்து வீட்டில் இருந்தோ, அல்லது வீட்டுக்கு அருகாமையில் இருந்தோ அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இந்த ஒரு மணிநேர சோதனைக்கு பிறகு, குழந்தைகளை அழைத்து, அவர்களால் வீட்டில் பயமின்றி தனியாக இருக்க முடிந்ததா, இந்த நேரத்தில் அவர்கள் சந்தித்த பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி கேட்டுத் தெரிந்துள்ள வேண்டும். அவர்கள் சந்தித்ததாகச் சொல்லும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை கண்டுபிடித்த பிறகே, அவர்களை நெடுநேரம் வீட்டில் தனியாக விட்டுச் செல்லும் முடிவுக்கு பெற்றோர்கள் வரவேண்டும்.
வீட்டிலிருந்து செல்லும்போது, எத்தனை மணிக்கு வீட்டுக்கு திரும்பி வருவோம் என்ற தகவலை துல்லியமாக குழந்தைகளிடம் சொல்லிவைக்க வேண்டும். மேலும் திரும்பி வரும்வரை குழந்தைகள் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி வைப்பது நல்லது. அத்துடன் வெளியில் எத்தனை முக்கியமான வேலைகள் இருந்தாலும் அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தைகளை தொடர்புகொண்டு அவர்கள் சவுகரியமாக இருக்கிறார்களா என்பதை சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.
கட்டுப்பாட்டை வலியுறுத்துங்கள்
வீட்டில் தாங்கள் மட்டும் தனியாக இருக்கப் போவதாக தெரிந்துகொண்டாலே குழந்தைகளுக்கு சுதந்திரச் சிறகுகள் முளைத்துவிடும். இஷ்டத்துக்கு ஓடியாடி விளையாடலாம், டிவி பார்க்கலாம், கம்ப்யூட்டரில் விளையாடலாம் என்று அவர்கள் அதீத உற்சாகமடைவார்கள். எனவே தனியாக இருக்கும்போதும் வீட்டின் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதில்லை என்ற உறுதிமொழியை அவர்களிடம் இருந்து பெறவேண்டும். குறிப்பாக யாரும் இல்லாத நேரத்தில் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவந்து கும்மாளமிடக்கூடாது, அவசியமில்லாத அறைகளை திறக்கக் கூடாது, படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுபோன்ற கட்டுப்பாடுகளில் உறுதியாக இருக்க அவர்களை வலியுறுத்த வேண்டும்.
குழந்தைகள் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வீட்டில் மறைத்து வைத்துவிட்டுச் செல்லவும். உதாரணமாக மருந்துகள், கத்தி போன்ற கூரான ஆயுதங்கள், புகையிலைப் பொருட்கள், தீப்பெட்டி போன்ற பொருட்களை குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்துவிட்டுச் செல்வது நல்லது.
தனிமையை போக்க செல்லப் பிராணிகள்
செல்லப் பிராணிகள் குழந்தைகளுக்கு ஏற்ற நண்பர்களாக இருப்பார்கள் என்பதால் குழந்தைகளை அடிக்கடி வீட்டில் தனியாக விட்டுவிட்டுச் செல்லும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு துணையாக நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை வளர்ப்பது நல்லது. இதனால் குழந்தைகளின் தனிமையும், மன இறுக்கமும் குறைய வாய்ப்பு உள்ளது.
வீட்டில் தனியாக இருக்கும்போது அனைத்து கதவுகளையும், மூடி வைத்திருக்க வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு சொல்லி வையுங்கள். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புதிதாக யாரும் வந்தால் கதவைத் திறக்கக் கூடாது. கதவை மூடியவாறே உள்ளே இருந்துகொண்டு வந்திருப்பது யார் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். வந்திருப்பவர் வீட்டில் யாரும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு கதவைத் திறக்க முற்பட்டால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தொடர்புகொண்டு எப்படி உதவிக்காக அழைக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். அதுபோல் விளையாடும்போது காயம் பட்டாலோ, திடீரென்று நெருப்பு ஏற்பட்டாலோ, என்ன செய்ய வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களைத் தயார்படுத்த வேண்டும்.
உணவுகளை இருப்பு வையுங்கள்
குழந்தைகளுக்கு தேவையான உணவுகள், அவர்களுக்கான மருந்துகள் ஆகியவற்றை வீட்டில் இருப்பு வைத்துவிட்டு செல்லவேண்டும். இரவில் எந்த நேரமும் மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் வீட்டில் எமர்ஜென்ஸி லாம்ப்களை சார்ஜ் செய்துவிட்டு அது இருக்கும் இடத்தை குழந்தைகளிடம் தெளிவாக விளக்கிவிட்டு செல்லவும். அதுபோல் அவசர உதவிக்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும் ஓரிடத்தில் எழுதி வைத்துவிட்டு செல்லவும்.
No comments:
Post a Comment