பேசுவது என்பது தனிக் கலை. பொது இடங்களில் மட்டுமல்ல, வீட்டில்கூட நாம் பேசும்போது, அது சரியாக இருக்குமா என்று யோசித்தே பேசவேண்டும். அதிலும் குறிப்பாக குழந்தைகளிடம் வார்த்தைகளை பார்த்து விட வேண்டும். நாம் பேசும் ஒருசில வார்த்தைகள் அவர்களை காயப்படுத்தவோ, மனநிலையை பாதிக்கவோ வாய்ப்பு உண்டு. அதனால் ஒரு சில விஷயங்களை குழந்தைகளிடம் நாம் சொல்லாமல் இருப்பது நல்லது. அப்படி சொல்லக்கூடாத வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்.
‘எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லை’
குழந்தைகள் ஏதாவது தவறு செய்தாலோ, தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் வாங்கினாலோ உடனடியாக சில பெற்றோர்கள் அவர்களைப் பார்த்து, ‘எனக்கு உன் மீது நம்பிக்கை இல்லை’ ’நீ என்னை மிகவும் ஏமாற்றிவிட்டாய்’ என்பதைப் போன்ற வார்த்தைகளைக் கூறுவார்கள். பெற்றோரைப் பொருத்தவரை அது அவர்கள் மீதான தங்கள் வெறுப்பை காட்டும் சாதாரண சொற்களாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் தன்னம்பிக்கையை அதிரடியாக தகர்க்கும் வார்த்தைகள் இவை.
பொதுவாக ஒரு குழந்தை தன்னம்பிக்கையுடன் வளரவேண்டும் என்றால், அவர்களை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களை நம்புகிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் இருந்தால்தான் அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். மாறாக தங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று பெற்றோர்களே தெரிவித்தால் குழந்தைகள் மனதளவில் நொறுங்கிப் போய்விடுவார்கள். இதனால் அவர்களின் முன்னேற்றம் தடைபட வாய்ப்பு உண்டு. எனவே எந்த காலகட்டத்திலும் அவர்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
‘அவனைப் பார்த்து கற்றுக்கொள்’
ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும், தங்கள் குழந்தையுடன் அதே வகுப்பில் நன்றாக படிக்கும் மற்ற குழந்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது ஒருசில பெற்றோரின் வழக்கம். அப்படி ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு வேளை தங்கள் குழந்தை குறைந்த மதிப்பெண்ணைப் பெற்றிருந்தால் அவ்வளவுதான். “அவனும் உன்னைப் போன்ற பையன்தானே. அவனைப் போல் உன்னால் ஏன் மதிப்பெண் வாங்க முடியவில்லை. எப்படி படிக்க வேண்டும் என்று அவனைப் பார்த்து கற்றுக்கொள்” என்று அந்த சிறுவனுடன் தங்கள் குழந்தையை ஒப்பிட்டு பேச தொடங்கி விடுவார்கள். தேர்வு சமயத்தில்தான் என்றில்லை, ஒவ்வொரு கட்டத்திலும் மற்ற குழந்தைகளுடன் தங்கள் குழந்தையை ஒப்பிடுவது பல பெற்றோரின் வழக்கமாக உள்ளது. இதனால் குழந்தைகள் மனதில் தாழ்வு மனப்பான்மைதான் ஏற்படும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கும். ஒருவரிடம் இருக்கும் திறமை மற்றவருக்கு இருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பிடுவதால் அவர்களிடையே பொறாமையும், தாழ்வு மனப்பான்மையும்தான் ஏற்படும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.
‘உன் அம்மா கொஞ்சம்கூட சரியில்லை’
வீட்டில் பெற்றோர்களுக்குள் சண்டை ஏற்பட்டால், அதனால் அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அதிலும் ஒருசில பெற்றோர் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டால் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி குழந்தைகளிடமே புகார் கூறுவார்கள். ‘உன் அம்மா சரியில்லை. எப்போது பார்த்தாலும் சண்டை போடுகிறார்’ என்பதுபோன்ற புகார்களை சில அப்பாக்களும், ‘உன் அப்பா சரியில்லை. எப்போது பார்த்தாலும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறார்’ என்று சில அம்மாக்களும் குழந்தைகளிடம் புகார் கூறுவது உண்டு. ஆனால் அது குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. ஒவ்வொரு குழந்தைகளும் முதல் ரோல்மாடல் தங்கள் பெற்றோர்கள்தான். இந்நிலையில் அவர்களைப் பற்றியே குழந்தைகளிடம் புகார் பட்டியலை வாசித்தால், அது அவர்களின் மனவளர்ச்சியை கடுமையாக பாதிக்கும். மேலும் இதனால் தங்கள் பெற்றோரைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் குழந்தைகளின் மனதில் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளன.
‘உன்னால் இதைச் செய்ய முடியாது’
சில சமயங்களில் தங்களால் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்ய குழந்தைகள் முயற்சிக்கும். உதாரணமாக சைக்கிள் ஓட்ட முயல்வது, யாருடைய உதவியுமின்றி கனமான பொருட்களைத் தூக்கிச் செல்வது போன்ற வேலைகளைச் செய்ய குழந்தைகள் முயற்சிக்கும். இதுபோன்ற சமயங்களில் நம்மால் முடிந்தவரை அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். இதனால் பொருட்சேதம் ஏற்பட்டாலோ, அல்லது அவர்களுக்கேகூட அடிபட்டாலோ அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. ‘அடுத்த முறை முயற்சி செய்தால் உன்னால் இதைச் சரியாக செய்ய முடியும்’ என்று நம்பிக்கை வார்த்தைகளை சொல்ல வேண்டும்.
அப்படிச் செய்தால் ஒரு சில முயற்சிகளுக்கு பிறகாவது அந்த வேலையை அவர்கள் சரியாக செய்து முடிப்பார்கள். மாறாக, ‘உன்னால் இதைச் செய்ய முடியாது’ என்றோ,’இப்படிச் செய்தால் உனக்கு அடிபட்டு விடும்’ என்றோ கூறி அவர்களின் தன்னம்பிக்கையை கெடுக்கக்கூடாது. இப்படி செய்வதால் புதிதாக எந்த முயற்சியையும் அவர்கள் செய்யாமல் விட்டு விட வாய்ப்புகள் உண்டு.
‘இதுக்கு மேல எதுவும் பேசாத’
நல்ல பெற்றோர்கள் குழந்தைகளிடம் எப்போதும் நட்பாக இருக்கவேண்டும். அவர்களிடம் மனம்விட்டு பேசவேண்டு. பள்ளியில் தினமும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் பெற்றோர்கள் நமக்குத் துணையாக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் ஆழமாக ஏற்படும். தங்களின் பிரச்சினைகளைப் பற்றி அவர்களும் மனம் விட்டு பேசுவார்கள். ஆனால் சில பெற்றோர்களோ, குழந்தைகள் மீது உச்சகட்ட கோபம் வரும்போது, குழந்தைகளின் விளக்கத்தைக்கூட முழுமையாக கேட்காமல், “இதுக்கு மேல எதுவும் பேசாத” என்று கூறி அடக்குவார்கள். இதனால் குழந்தைகள் தங்கள் தரப்பு நியாயத்தை முழுமையாக பகிர்ந்துகொள்ள முடியாமல் மனதுக்குள்ளேயே போட்டு புழுங்குவார்கள். இதனால் அவர்களின் மனம் காயப்படுவதுடன் பெற்றோர்களுடனான அவர்களின் நட்பும் பதிக்கப்படலாம்.
‘சீக்கிரம் முடி’
குழந்தைகள் சாப்பிடும்போதோ, படிக்கும்போதோ அல்லது ஏதாவது வேலையைச் செய்யும்போதோ, ‘சீக்கிரம் முடி’ என்று சொல்லி அவர்களை அவசரப்படுத்த கூடாது. இதனால் அவர்களுக்கு பதற்றம் ஏற்படும். அதனால் அவர்களால் எதையும் சரியாக செய்துமுடிக்க முடியாது. குறிப்பாக சாப்பிடும்போதோ அல்லது படிக்கும்போதோ இப்படி அவசரப்படுத்தினால் அந்த காரியத்தை அவர்களால் சரியாக செய்து முடிக்க முடியாது. பிறகும் அதற்காகவும் குழந்தைகளை திட்டவேண்டிய நிலை ஏற்படும். இதனால் பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே மனக்கசப்புகள் ஏற்படவும் வாய்ப்பு ஒண்டு.
No comments:
Post a Comment