மழைக்காலம் என்றாலே மனதுக்கு மகிழ்ச்சிதான். சிலுசிலுவென அடிக்கும் காற்று, ஹோவென்ற இரைச்சலுடன் பெய்யும் பெருமழை, குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை, இதமான சாறல், எங்கெங்கும் பரவிக் கிடக்கும் பசுமை என்று மனதைக் கொள்ளைகொள்ளும் பல விஷயங்கள் மழைக்காலத்தை இனிமையாக்குகின்றன.
இப்படி இனிமையான பல விஷயங்களைத் தரும் மழைக்காலத்துக்கு கொடூரமான மற்றொரு முகமும் உண்டு. சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு என எண்ணற்ற நோய்கள் மக்களைத் தாக்குவதும் இந்தக் காலத்தில்தான். மனிதர்களைப் போலவே கொசுக்களுக்கும் இந்த மழைக்காலம் பிடிக்குமோ என்னவோ, கட்டுப்பாடின்றி எல்லா இடங்களிலும் நுழைந்து மழைக்காலத்தில் அவை மனிதர்களைக் கலங்கடிக்கின்றன. கொசுக்கள்தான் இப்படியென்றால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற நோய்களைப் பரப்பும் கிருமிகளும் அதைவிட தீவிரமாக மனிதர்களை தாக்குகின்றன. இதனால் பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சூழலில் மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
வைட்டமின் சி அவசியம்
மழைக்காலங்களின்போது குழந்தைகளுக்கு சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தைகளுக்கு சளிப் பிரச்சினை ஏற்படாமல் இருக்க, அதற்கு எதிர்ப்பு சக்தியளிக்கும் உணவுகளையும், பழங்களையும் மழைக்காலத்தின் தொடக்கம் முதலே அவர்களுக்கு வழங்குவது நல்லது. குறிப்பாக வைட்டமின் சி அதிகம் உள்ள சிட்ரஸ் பழங்களின் சாறுகள் மற்றும் பால் ஆகியவற்றை குழந்தைகளுக்கு அதிகம் வழங்கவேண்டும். மேலும் தினமும் அவர்களுக்கு வழங்கும் உணவுகளில் இஞ்சி, பூண்டு, துளசி ஆகியவற்றை சிறிதளவாவது கலந்து கொடுப்பது சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் அவர்களை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
குழந்தைகள் விளையாடச் சென்றால்...
மழைக்காலங்களில் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவது நல்லதல்ல. ஆனால் மழைக்காலம் பொதுவாக 3 மாதங்கள் வரை நீடிக்கும். இக்காலம் முழுவதும் வெளியில் சென்று விளையாடக் கூடாது என்று சொன்னால் எந்தக் குழந்தைதான் ஒப்புக்கொள்ளும்? வெளியில் போய் ஆடவேண்டும் என்று நிச்சயமாக அடம் பிடிக்கும். பெற்றோர்களாலும் ஒரு கட்டத்துக்கு மேல் குழந்தைகளை கட்டுப்படுத்த முடியாது. இதுபோன்ற சூழலில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. மேலும் குழந்தைகள் விளையாடச் செல்லும்போது அவர்கள் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். விளையாடச் செல்லும்போது, உடலில் பெரும்பாலான இடங்களை மறைக்கும்படியான ஆடைகளை அணிவிக்க வேண்டும்.
மழைத் தண்ணீரில் விளையாடும்போது கிருமிகள் அவர்களைத் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருப்பதால், விளையாடி முடித்து வந்ததும் வெந்நீரில் அவர்களைக் குளிக்க வைப்பது நல்லது. இல்லாவிட்டால் குறைந்தபட்சம் கைகளையாவது சோப்பு போட்டு கழுவவைக்க வேண்டும். சளி, ஜுரம் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதால், முடிந்தவரை மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு சிறு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தெருவோர உணவுகள் வேண்டாம்
மழைக்காலத்தில் சூடாக ஏதாவது சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த எண்ணம் சற்று அதிகமாகவே தோன்றும். இதன் காரணமாக தெருவோரங்களில் உள்ள பஜ்ஜி, போண்டா மற்றும் சுண்டல் கடைகளிலும், பானி பூரி, பேல் பூரி போன்ற சாட் உணவுகளை விற்கும் கடைகளிலும் கூட்டம் அலைமோதும். ஆனால் மழைக்காலத்தில் இத்தகைய தெருவோர கடைகளில் சாப்பிடுவது குழந்தைகளுக்கு தீங்கை ஏற்படுத்தும். தூய நீரில் செய்யப்படாத இந்த உணவுகள், எந்த அளவுக்கு சுவையாக இருக்குமோ, அதே அளவுக்கு வயிற்று வலி, காய்ச்சல் போன்ற நோய்களையும் கொண்டுவரும். எனவே குழந்தைகளை மழை நேரத்தில் அக்கடைகளில் சாப்பிட விடாதீர்கள்.
அதற்கு பதிலாக வீட்டிலேயே குழந்தைகளுக்கு பிடிக்கும் நொறுக்குத் தீனிகளை செய்து கொடுங்கள். இதனால் தாய்மார்களுக்கு சற்று கூடுதல் வேலைப் பளு கூடும் என்றாலும், பிற்பாடு குழந்தைகளுக்கு நோய் வந்து டாக்டர், மருத்துவமனை என்று அலைவதை விட இது மேலானது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
உடைகளில் கவனம் தேவை
குழந்தைகளுக்கு குளிர் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக ஒருசில பெற்றோர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடைகளை அவர்களுக்கு அணிவிப்பார்கள். அதற்கு மேல் ஸ்வெட்டர்களையும் அணிவிப்பார்கள். இது தவறான விஷயமாகும். இப்படி அளவுக்கு அதிகமான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அவர்கள் உடல் அதிக சூடாகி வியர்வை வரும். அதிக வியர்வை வருவதாலும் குழந்தைகளுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே அதிக வெப்பம் தரும் வகையில் பல ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிப்பதற்கு பதிலாக கதகதப்பான ஏதாவது ஒரு ஆடையை மட்டும் அவர்களுக்கு அணிவிப்பது நல்லது. குழந்தைகள் மழையில் நனைந்தால், அவர்களின் உடைகளை உடனடியாக மாற்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு சளி பிடிப்பதற்கான வய்ப்புகள் அதிகரிக்கும்.
அடிக்கடி தண்ணீர் கொடுங்கள்
பொதுவாக மழைக்காலங்களில் அதிக தாகம் எடுக்காது. இதனால் நாம் குடிக்கும் தண்ணீரின் அளவு குறைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்காவிட்டால், அவர்களின் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களை கட்டாயப்படுத்தியாவது அடிக்கடி தண்ணீர் குடிக்க வையுங்கள். அந்த தண்ணீரையும் நன்றாக காய்ச்சி குடிக்கவையுங்கள். வெளியிடங்களுக்கு குழந்தைகளுடன் செல்ல நேர்ந்தால் அவர்களுக்கான கொதிக்கவைத்த தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்துச் செல்லுங்கள். கிருமிகள் இருக்கலாம் என்பதால் வெளியிடங்களில் தண்ணீரையோ, குளிர்பானங்களையோ குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
நோய்களில் இருந்து காக்க
கொசுக்களால் பரவும் மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு போன்ற நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்குள் கொசுக்கள் வராமல் தடுக்க, கொசு விரட்டிகளை பயன்படுத்துவது நல்லது. அழுக்குத் துணிகளை வீட்டில் சேர்த்து வைக்காமல் இருத்தல், குப்பை கூளங்களை உடனடியாக அப்புறப்படுத்துதல் ஆகியவற்றிலும் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
போதுமான முன் எச்சரிக்கையுடன் இருந்தால் இந்த மழைக்காலத்தை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
No comments:
Post a Comment