Powered By Blogger

Tuesday, February 12, 2019

தொழில்நுட்பத்தின் பிடியிலிருந்து குழந்தைகளை மீட்போம்


 

நிலாவைக் காட்டி குழந்தைகளுக்கு சோறூட்டுவது அந்தக்கால அம்மாக்களின் வழக்கம். ஆனால் இந்த எலக்டிரானிக் காலத்திலோ, பெரும்பாலான அம்மாக்கள் செல்போன்களைக் காட்டித்தான் சோறு ஊட்டுகிறார்கள். குழந்தைகளும் செல்போனில் தெரியும் பிம்பங்களால் ஈர்க்கப்பட்டு அடம் பிடிக்காமல்   சாப்பிடுகிறார்கள்.
உணவு உண்ணும்போது மட்டுமல்ல,  குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும்போதும் பெற்றோர்களுக்கு கைகொடுப்பது செல்போன்கள்தான். இதைக் கையில் கொடுத்தால் போதும் குழந்தைகள் பெரியவர்களை தொந்தரவு செய்யாமல் ஒரு ஓரமாக அமர்ந்து விளையாடத் தொடங்கிவிடுவார்கள்.  இப்படி  கிட்டத்தட்ட குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களாகவே  சில வீடுகளில் செல்போன்கள் உள்ளன.
 இப்படி செல்போன்களில் ஆரம்பிக்கும் தொழில்நுட்பக் கருவிகளின் நட்பு, குழந்தைகள் வளர வளர கம்ப்யூட்டர், வீடியோ கேம் என்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. இதனால் உடல்ரீதியான விளையாட்டுகளில் ஈடுபடாமல் உடல் பருமன், பார்வைக் குறைவு என பல்வேறு பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்.  இப்படி  ஒரு கட்டத்தில்  பெற்றோருக்கு வரமாக இருந்த தொழில்நுட்பக் கருவிகள் காலம் செல்லச் செல்ல சாபமாக மாறி விடுகிறது. தொழில்நுட்பச் சாதனங்களில் பிடியில் சிக்கியுள்ள குழந்தைகளை மீட்க பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.   
குழந்தைகளுக்கு ரோல் மாடலாய் இருங்கள்
 குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் வளர்கின்றன  எனவே அவர்கள்  கம்ப்யூட்டர்செல்போன்ஐபேட் போன்ற தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாக இருக்கக் கூடாது  என்று நீங்கள் விரும்பினால்முதலில் நீங்கள் அவற்றின் பிடியில் இருந்து விடுபடுங்கள்நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கு மேல் இவற்றைப் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியெடுத்து அதன்படி செயல்படுங்கள்இதன்மூலம் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருந்து காட்டுங்கள்அப்படிச் செய்தால்,பெற்றோரைப் போலவே தாங்களும் தொழில்நுட்ப சாதனங்களை அதிகம் சாராமல் இருக்க வேண்டும் என்ற வைராக்கியம் குழந்தைகளுக்கும் ஏற்படும். 
 குழந்தைகளுடன் அதிக நேரத்தைச் செலவிடுங்கள்:
குழந்தைகளின் தனிமைதான் அவர்கள்   தொழில்நுட்பச் சாதனங்களை  நாடிச்செல்ல முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே முடிந்தவரை குழந்தைகளை அதிக நேரம் தனிமையில் வாட விடாதீர்கள். அவர்களுடன் அதிக நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களுக்கு நல்ல புத்தகங்களை படித்துக் காட்டுங்கள்.
மேலும்  குழந்தைகளுடன் சேர்ந்து சமைப்பது, அவர்களுடன் விளையாடுவது, அன்றைய தினம் குழந்தைகள் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதைப் பற்றி விவாதிப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது என்று பயனுள்ள வகையில் நேரத்தைச் செலவிடலாம். இதனால் குழந்தைகளின் மனதும் தொழில்நுட்ப சாதனங்களிடம் இருந்து விடுபடும். பெற்றோர்களும் குழந்தைகளும் சேர்ந்து ஆக்கபூர்வமான பணிகளையும் செய்ய முடியும்.
இன்டர்னெட் இணைப்பை அணைத்து வையுங்கள்
தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவது முழுக்க முழுக்க தவறு என்று கூற முடியாது. தேவையான அளவில் நாளொன்றுக்கு சில மணி நேரம் அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. எனவே உங்கள் குழந்தைகள் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தடுக்காமல் அவர்கள் குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் அவற்றைப் பயன்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகளை விதியுங்கள். குழந்தைகள் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவழிப்பதைக் கட்டுப்படுத்த, வீட்டில் உள்ள இன்டர்னெட் இணைப்பை  பெரும்பகுதி நேரம் அணைத்து வையுங்கள். அல்லது பாஸ்வேர்டை உருவாக்கி நீங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றுங்கள்.  தினமும் 2 மணிநேரத்துக்கு மேல் சமூக வலைதளங்களிலோ, தொழில்நுட்பச் சாதனங்களிலோ நேரத்தைச் செலவழிக்க கூடாது என்பதை வீட்டில் சட்டமாக நிறைவேற்றி அதைக் கடைபிடியுங்கள்.
முடிந்தவரை குழந்தைகளின் படுக்கை அறைக்குள் கம்ப்யூட்டர், தொலைக்காட்சி போன்ற சாதனங்களை வைக்காதீர்கள். இதன்மூலம் பெற்றோர்கள் கவனிக்காத வகையில், அவர்கள் அதனை பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். படுக்கை அறை, சாப்பாட்டு அறை, கார்கள் போன்ற இடங்களில் தொழில்நுட்பச் சாதனங்களை பயன்படுத்தக்  கூடாது என்ற சட்டத்தை வீட்டுக்குள் ஏற்படுத்துங்கள். இதனால் அவற்றைப் பயன்படுத்தும் நேரம் சற்று குறையும்.
குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புங்கள்
தொழில்நுட்ப சாதனங்களை குழந்தைகள் அதிக அளவில் பயன் படுத்துவதைத் தவிர்க்க, அவர்களின் கவனத்தை மற்ற விஷயங்களில் திருப்பிவிட வேண்டும். அந்த நேரத்தில் வீட்டுப் பாடங்களைச் செய்வது, படிப்பது போன்ற விஷயங்களில் குழந்தைகளை திசைதிருப்ப வேண்டும். படிப்பைத் தவிர வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது, அறைகளில் உள்ள பொருட்களை அடுக்குவது, மின்விசிறிகளைத் துடைப்பது, தரையைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனால் அவர்களின் கவனம் திசை திரும்புவதுடன் வீடும் பொலிவு பெறும்.  வீட்டு வேலைகளைச் செய்வதில் குழந்தைகளும் பயிற்சி பெறுவார்கள்
குழந்தைகளுக்கு கூடுதலாக நேரம் இருந்தால் வர இறுதி நாட்களில் ஓவியம், நடனம், நீச்சல் போன்ற புதிய வகுப்புகளில் அவர்களைச் சேர்க்கலாம். இப்படிச் சேர்க்கும்போது இந்த வகுப்புகளில் சேர உங்கள் குழந்தைகள் நிஜமாகவே ஆர்வமாக இருக்கிறார்களா என்பதை தெரிந்துகொண்டு சேர்ப்பது நல்லது..  விடுமுறை நாட்களில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த பூங்காக்கள், மால்கள், திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்றும் தொழில்நுட்பக் கருவிகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசைதிருப்பலாம். உறவினர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்களுடனான குழந்தைகளின் உறவையும்  மேம்படுத்தலாம்.
தூக்கத்தில் கவனம் செலுத்துங்கள்
செல்போன், கம்ப்யூட்டர் போன்ற கருவிகளால்  ஈர்க்கப்பட்டு, அதில் அதிக நேரத்தைச் செலவழிக்கும் குழந்தைகள் அதிக நேரம் தூங்குவதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனை சரிசெய்ய தினமும் 8 மணிநேரமாவது தூங்கியாக வேண்டும் என்ற விதியை குழந்தைகளிடம் அமல்படுத்துங்கள். அதற்காக தினமும் இரவு 9 மணிக்கே அவர்கள் படுக்கச் செல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்துங்கள்.
கம்ப்யூட்டர்கள், செல்போன் திரைகளைத்  தொடர்ந்து பார்ப்பவர்கள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கண்களுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என்று கண் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதை உங்கள் குழந்தைகள் மத்தியில் நடைமுறைப்படுத்துவது நல்லது. அவ்வாறு செய்யாவிட்டால் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை குழந்தைகளிடம் விரிவாக விளக்கி இந்த பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். இதற்கு அவர்கள் சம்மதித்தால் சிறு பரிசுகளை வழங்கி அவர்களை மேலும் ஊக்குவிக்கலாம்.


No comments:

Post a Comment