Powered By Blogger

Friday, June 29, 2018

ரொனால்டோவின் வெற்றியும்... மெஸ்ஸியின் துக்கமும்




மகாபாரதப் போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்துகொண்டாலும், முக்கிய போட்டி என்னவோ அர்ஜுனனுக்கும் - கர்ணனுக்கும் இடையில்தான் இருந்தது. அதுபோலத்தான் இந்த உலகக் கோப்பையிலும். நூற்றுக்கணக்கான வீரர்கள் இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கலந்துகொண்டாலும், போர்ர்சுக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோவுக்கும் - அர்ஜென்டினா வீரர் லயொனல் மெஸ்ஸிக்கும் இடையில்தான் முக்கிய போட்டி நடைபெற்று வருகிறது. தங்களில் சிறந்த வீரர் யார் என்பதை நிரூபிக்க இரு வீரர்களும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
இந்த இரு வீரர்களில் உலகக் கோப்பையில் முதலில் களத்தில் இறங்கியவர் ரொனால்டோ. முன்னாள் சாம்பியனான பலம்வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக, குறிப்பாக உலகின் சிறந்த கோல் கீப்பர்களில் ஒருவராக கருதப்படும் டேவிட் டீ குயாவுக்கு எதிராக சோச்சி நகரில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ரொனால்டோவை மட்டுமே நம்பி போர்ச்சுக்கல் களம் இறங்கியது. ஆனால் ரொனால்டோவோ கடுமையான மன உளைச்சலுக்கு மத்தியில் இந்த முதல் போட்டியில் பங்கேற்றார். இதற்கு காரணம் அவருக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கு.
போர்ச்சுக்கல் அணியின் கேப்டனான ரொனால்டோ, ஸ்பெயினின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அவர், முறையாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவர் மீது வரி ஏய்ப்பு வழக்கு தொடர்ந்து ஸ்பெயின் அரசு விசாரணை நடத்தியது. இந்த நிலையில் வருமானவரித் துறையுடன் சமரச தீர்வு காண்பதற்காக 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்த ரொனால்டோ ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. (ஸ்பெயின் நாட்டு சட்டப்படி முதல்முறையாக 2 ஆண்டு தண்டனை பெறுபவர்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
இந்த சம்பவம் நடந்த 2 நாட்களுக்குள் ஸ்பெயின் அணிக்கு எதிராகவே தனது அணியை வழிநடத்த வேண்டிய நிலை ரொனால்டோவுக்கு. இந்த மனச்சோர்வால் ரொனால்டோ மைதானத்தில் பதறி நிற்பாரோ என்று ரசிகர்கள் கலங்கி நிற்க, அதற்கு கொஞ்சம்கூட இடம் கொடுக்காமல் மைதானத்தில் கால்வைத்த விநாடி முதல் சிறுத்தையாய் சீறிப்பாய்ந்தார். 33 வயதான நிலையிலும் ஒரு இளம் வீரனுக்குரிய வேகத்தில் மைதானமெங்கும் வியாபித்து நின்ற ரொனால்டோ, ‘காலா’ ஸ்டைலில் ‘வேங்கையன் மகனாய்’ ஒற்றை ஆளாக ஸ்பெயினை துவைத்தெடுத்தார்.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் ஸ்பெயினின் பாதுகாப்பு வளையத்தை துளைத்து சீறிப்பாய்ந்த ரொனால்டோவை, ஸ்பெயினின் நாச்சோ பெர்னாண்டஸ் தடுக்கி விட போர்ச்சுக்கல்லுக்கு பெனாலிடி கார்னர் கிடைத்தது. இதைப் பயன்படுத்தி முதல் கோலை அடித்த ரொனால்டோ, போர்ச்சுக்கல்லுக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இந்த கோலை அடித்ததும் தன் தாடையை தடவியவாறே மைதானத்தில் ஓடிய ரொனால்டோ, கால்பந்து உலகின் தற்போதைய ஆடு (GOAT) அதாவது எக்காலத்துக்குமான சிறந்த வீரன் ( GREATEST OF ALL TIME) தான்தான் என்பதை சமிக்ஞை மூலம் உலகுக்கு உணர்த்தினார்.
ரொனால்டோவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, ஒட்டுமொத்த ஸ்பெயின் அணியும் வரிந்து கட்டிக்கொண்டு ஆடி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தது. இதைத்தொடர்ந்து 44-வது நிமிடத்தில் ஒரு பீல்டு கோல் அடித்து போர்ச்சுக்கல்லை மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவந்தார் ரொனால்டோ. ஆனால் அதிரடியான ஸ்பெயின் அணியோ அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து 3-2 என முன்னிலை பெற்றது. தனது அணியை தோல்வியின் பிடியில் இருந்து மீட்க மூர்க்கமாய் போராடினார் ரொனால்டோ. ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் முன்னேறும்போது, ஸ்பெயின் வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர். 88-வது நிமிடத்தில் வேகமாய் முன்னேறிய ரொனால்டோவை கோல் எல்லை அருகே ஸ்பெயின் வீரர்கள் தள்ளிவிட 25 யார்ட் (75 அடிகள்) தூரத்தில் இருந்து ஃப்ரீ கிக் அடிக்கும் வாய்ப்பு ரொனால்டோவுக்கு கிடைத்தது.
கோல்கீப்பர் மற்றும் வீரர்களைக் கொண்ட பாதுகாப்புச் சுவரை உடைத்து இம்முறையும் கோல் அடித்த ரொனால்டோ, தனியொருவராய் போராடி ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தார். மேலும் இப்போட்டியில் 3 கோல்களை அடித்ததன் மூலம் தொடர்ந்து 4 உலகக் கோப்பைகளில் கோல்களை அடித்த 4-வது வீரர், உலகக் கோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் சாதனை படைத்த வீரர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்களை அடித்த ஐரோப்பிய வீரர் என்று அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்தார். இந்த போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ரொனால்டோ, “நாங்கள் இந்தத் தொடரில் ஒவ்வொரு போட்டியாளர், அவ்வளவுதான். மற்றபடி நாங்கள் கோப்பையை வெல்வோம் என்றெல்லாம் யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த சூழலில் எனது அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது லட்சியம்” என்று கூறியுள்ளார்.
ரொனால்டோவின் கதை இப்படி இருக்க அவரது போட்டியாளரான லயோனல் மெஸ்ஸியின் கதை வேறு மாதிரியாகப் போனது. முதல் முறையாக உலகக் கோப்பையில் கலந்துகொள்ளும் ஐஸ்லாந்து அணியை முதல் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் 12 யார்ட் தூரத்தில் இருந்து அடிக்கக்கூடிய பெனாலிடி ஷூட்டை மெஸ்ஸி வீணடிக்க, மிகச்சிறிய அணியுடன் டிரா செய்யவேண்டிய கட்டாயம் அர்ஜென்டினாவுக்கு ஏற்பட்டது. இதனால் மெஸ்ஸியின் திறமை குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். “கிளப் கால்பந்தில் சிறப்பாக ஆடும் மெஸ்ஸி, தனது தாய்நாட்டுக்காக எதையும் பெரிதாக சாதிப்பதில்லை” என்பது அவர்களின் புகாராக உள்ளது. ஆனால் மெஸ்ஸியின் ஆதரவாளர்களோ, இது வெறும் ஆரம்பம்தான், போகப் போக மெஸ்ஸி தனது திறமையை நிரூபிப்பார். அர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுக்கொடுப்பார்’ என்கிறார்கள்.
மொத்தத்தில் இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சூற்றில் வெற்றி ரொனால்டோவுக்குதான். தங்கக் காலணிக்கான ரேஸிலும் இப்போதைக்கு அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

புதிய புயல் முகமது சாலா



சர்வதேச கால்பந்து தரவரிசையில் எகிப்து அணியின் இடம் 46-தான். ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டியைப் பொறுத்தவரை அர்ஜென்டினா, பிரேசில், ஜெர்மனி போன்ற பகாசுர அணிகளெல்லாம் எகிப்தைப் பார்த்து பயப்படுகின்றன. கொஞ்சம் அசந்தாலும் எகிப்தால் தங்களை வீழ்த்திவிட முடியும் என்று மிரள்கின்றன. இப்படி ஒரு கருப்புக் குதிரையாய் எகிப்து அணியை எல்லோரும் பார்ப்பதற்கு காரணம் முகமது சாலா.
பொதுவாக ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த வீரர்கள்தான் கால்பந்து உலகில் நட்சத்திரங்களாக ஜொலிப்பார்கள். ஆனால் முதல் முறையாக இந்த கண்டங்களுக்கு வெளியில் இருந்து உலகம் போற்றும் கால்பந்து வீரராக உருவாகி இருக்கிறார் முகமது சாலா. தொழில்முறைப் போட்டிகளில் லிவர்பூல் அணிக்காக தற்போது ஆடிவரும் முகமது சாலா, பிரீமியர் லீக் கால்பந்தில் 44 கோல்களை அடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம், மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோருக்கு போட்டியாகவும் உருவெடுத்துள்ளார். ‘எகிப்தின் ராஜா’ (king of egypt) என்று உலகக் கால்பந்து ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் சாலா, கடுமையான போராட்டத்துக்கு பின்பே இந்த உச்சத்தை அடைந்துள்ளார்.
எகிப்தில் உள்ள கர்பியா என்ற கிராமம்தான் சாலாவின் சொந்த ஊர். 1992-ம் ஆண்டு பிறந்த அவருக்கு சிறு வயதில் இருந்தே கால்பந்தின் மீது தனி பிரியம். விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே ரொனால்டோ, சிடேன் போன்ற வீரர்களின் ஆளுமையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால், இவரது கவனம் முழுக்க கால்பந்தில்தான் இருந்தது. சாலாவின் பெற்றோருக்கு அவரை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் அவரோ, கால்பந்தைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்க மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் பெற்றோரும் சாலாவை, அவரது வழியில் விட்டுவிட முடிவெடுத்தனர்.
கால்பந்தில் ஆர்வம் இருந்தும் சிறுவயதில் சாலாவுக்கு அதைக் கற்றுக்கொடுக்க யாரும் இல்லை. இந்தச் சூழலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகளே சாலாவுக்கு வகுப்பறையானது. சிடேன், ரொனால்டோ, டோட்டி ஆகியோரின் ஆட்ட நுணுக்கங்களைப் பார்த்து மைதானத்தில் அதேபோன்று பந்தை உதைத்து கால்பந்தின் அரிச்சுவடியைக் கற்றார் சாலா.
ஆரம்ப கட்டத்தில் அண்ணனும், தெருவில் உள்ள நண்பர்களும்தான் சாலாவின் கால்பந்து சகாக்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல அவர்களிடம் இருந்து புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்துகொண்டார் சாலா. அதனால் தன்னை விட சிறப்பாக ஆடும் சிறுவர்களைத் தேடிப் போனார். சுற்றுவட்டாரத்தில் எங்கு கால்பந்து போட்டி நடந்தாலும் அதில் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தார். இதனால் மெல்ல மெல்ல உள்ளூரில் அவரது ஆற்றல் வெளிப்படத் தொடங்கியது. எந்த இடத்தில் கால்பந்து போட்டி நடந்தாலும், ‘கூப்பிடு சாலாவை’ என்று மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்றார்.
14 வயதில் கெய்ரோவில் உள்ள பிரபல கால்பந்து கிளப் ஒன்று சாலாவை ஒப்பந்தம் செய்ய முன்வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர், இது தேவைதானா என்று யோசித்தனர். இந்த கிளப்பில் சாலா ஆடவேண்டுமானால் வாரத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்க வேண்டும். அதற்கு 5 பஸ்கள் மாறி 4 மணி நேரம் பயணப்பட வேண்டும். அதேபோல் திரும்பி வரவும் 4 மணிநேரம் பயணப்பட வேண்டும். இதெல்லாம் வேலைக்கு ஆகாது, படிப்பும் கெடும் என்று பெற்றோர் தடுத்தனர். ஆனால் என்ன நடந்தாலும் இந்த கிளப்பில் சேர்ந்தே தீருவது என்பதில் சாலா பிடிவாதமாக இருந்தார். இறுதியில் பெற்றோர் சம்மதிக்க, தினமும் காலையில் 3 மணிநேரம் பள்ளிப்படிப்பு, 8 மணி நேர பஸ் பயணம், 4 மணிநேர கால்பந்து பயிற்சி என்று தினசரி வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
சாலாவின் கடுமையான உழைப்பும், ஆற்றலும் அவருக்கு 19 வயதில் எகிப்து அணியில் இடத்தைப் பெற்றுத் தந்தது. எகிப்து கால்பந்து உலகில் புதுவெள்ளமாய் ஓடிய சாலா ரசிகர்களின் செல்லப்பிள்ளையானார். வெளிநாட்டு கிளப்புகள் அவருக்கு அழைப்பு விடுக்க, சுவிட்சர்லாந்தில் உள்ள பேசல் நகருக்கு இடம் பெயர்ந்தார் அங்கும் சவால்கள் துரத்தின. ஆங்கிலம் தெரியாததாலும், உணவுப் பழக்கங்கள் புதிதாக இருந்ததாலும் திணறிப்போனார் சாலா. ஆனால் எத்தகைய சவால்களையும் சமாளிக்கும் ஆற்றலை கால்பந்தின் மீது அவருக்கு இருந்த ஆசை கொடுத்திருந்தது. கால்பந்து பயிற்சியுடன் ஆங்கிலப் பயிற்சியையும் பெறத் தொடங்கிய சாலா, சில நாட்களில் அங்கிருந்து செல்சியா அணிக்கு இடம்பெயர்ந்தார்.
இதைத்தொடர்ந்து பல கிளப்புகளில் ஆடிய சாலா, கடைசியாக கடந்த ஆண்டு ஜூன் மாதம்தான் லிவர்பூல் அணிக்கு இடம் பெயர்ந்தார். அந்த அணியின் கால்வைத்த நாள்முதல் அதன் நாயகனாக விளங்கிவரும் சாலா, லிவர்பூல் அணிக்காக 44 கோல்களை அடித்து ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களின் கனவு நாயகர்களில் ஒருவரக உருவெடுத்துள்ளார். அதே நேரத்தில் எகிப்து அணிக்காகவும் 30 கோல்களை அடித்துள்ள சாலா, இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோருக்கு சவால் விடும் வகையில் சாதிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இதை முகமது சாலா நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கால்பந்து கடவுள் மெஸ்ஸி




கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சின் எப்படியோ, அப்படித்தான் கால்பந்து ரசிகர்களுக்கு லயோனஸ் மெஸ்ஸி. கால்பந்து மைதானத்தில் தேனீயாய் பறந்து எதிரணியின் கோல் எல்லையைத் தாக்கும் அவர், அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக 61 கோல்கள், பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக 551 கோல்கள் உட்பட நூற்றுக்கணக்கான கோல்களை அடித்துள்ளார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை 5 முறை வென்றுள்ள இவரைப் போன்ற வீரர் தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என்று ஒவ்வொரு அணியும் தவம் கிடக்கிறது.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி, ஆண்டொன்றுக்கு 1,021.34 கோடி ரூபாயை ஈட்டுவதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் கால்பந்து மைதானத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் தலா 20 லட்ச ரூபாயை சம்பளமாகப் பெறுகிறார் மெஸ்ஸி. ஆனால் இந்த அளவுக்கு புகழ்பெற்ற மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளவே பலரும் தயங்கினார்கள் என்றால் நம்ப முடிகிறதா?... ஆனால் அதுதான் உண்மை. அதற்கு காரணம் அவரைப் பாதித்த நோய்.
அர்ஜென்டினாவில் பிரபல புரட்சியாளரான சே குவேரா பிறந்த ரோசாரியோ நகரில்தான் லயோனல் மெஸ்ஸியும் பிறந்தார். ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, உள்ளூர் கால்பந்து அணியான கிராண்டோலியின் பயிற்சியாளராக இருந்தார். இதனால் அவருடன் தினமும் கால்பந்து மைதானத்துக்கு சென்றுவந்த மெஸ்ஸி, நாளடையில் கால்பந்து விளையாட்டால் ஈர்க்கப்பட்டார். மிக விரைவாக கால்பந்து ஆட்டத்தைக் கற்றுக்கொண்ட அவர், 5 வயதிலேயே கிராண்டோலியின் சிறுவர்களுக்கான அணியில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து தீவிர பயிற்சியால் கால்பந்து விளையாட்டை வசமாக்கிக்கொண்ட மெஸ்ஸி, 8 வயதில் நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியில் இடம் பிடித்தார். அடுத்த சில ஆண்டுகளிலேயே தன் அசாத்தியமான திறமையால் அந்த அணியின் கனவு நாயகனாக உருவெடுக்கத் தொடங்கினார். மெஸ்ஸியின் அசாத்திய திறமையால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு மற்ற உள்ளூர் கிளப்புகளால் வெல்ல முடியாத அணியாக நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் உருவெடுத்தது. மெஸ்ஸியின் புகழும் உள்ளூரில் வேகமாக பரவியது.
இந்தச் சூழ்நிலையில்தான் ஹார்மோன் டிபிஷியன்ஸி (harmone deficiency) எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. அவர் வளரவேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. மெஸ்ஸி விளையாடும் கால்பந்து கிளப்பில் பணம் கேட்க, அவர்களும் மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு கிளப்புகளில் மெஸ்ஸிக்காக ஏறி இறங்கினார் அவரது தந்தை. ஆனால் குள்ளமான, வளர்வதற்கு சாத்தியக் கூறுகள் குறைந்த ஒரு வீரருக்காக பணத்தை முதலீடு செய்ய அனைவரும் தயங்கினர். இப்படி ஒரு வீரர் தங்களுக்கு தேவையில்லை என்று தாட்சண்யம் இன்றி கூறினர்.
எல்லோரும் கைவிரித்த நிலையில்தான் பார்சிலோனா கிளப்பில் இருந்து மெஸ்ஸிக்கு ஆதரவுக் கரம் நீண்டது. பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால் அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இது தொடர்பாக உடனே ஒப்பந்தம் போட இரு தரப்பும் முடிவெடுத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அப்போது சரியான காகிதம் கிடைக்கவில்லை. இதனால் அப்போது கையில் கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். (அந்த பேப்பர் நாப்கினை இன்னும் பிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி). இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தந்தையுடன் ஸ்பெயினுக்கு புறப்பட்டார் மெஸ்ஸி. மேஸ்ஸியின் அப்பாவுக்கு அந்த கிளப்பிலேயே ஒரு வேலையும் வழங்கப்பட்டது.
முதல் சில நாட்கள் பார்சிலோனா கிளப்பின் மற்ற இயக்குநர்கள் மெஸ்ஸியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஹார்மோன் குறைபாடு உடைய ஒருவரை தண்டமாக அணியில் சுமப்பதாக அவர்கள் கருதினார்கள். மேலும் முதல் ஒரு வருடத்துக்கு கால்பந்து போட்டிகளில் ஆட மெஸ்ஸிக்கு போதுமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று சூழ்நிலையோடு ஒட்டிப்போக மெஸ்ஸிக்கு பல சங்கடங்கள் இருந்தன. ஆனால் பெரிய கால்பந்து வீரனாக வேண்டும் என்ற கனவுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு சிகிச்சைகளும் நடந்தன. இதன் விளைவாக மற்றவர்களைப் போலவே சராசரி உயரம் பெற்ற மெஸ்ஸி, கால்பந்து உலகில் மற்றவர்களை விட மிக உயர்ந்த இடத்துக்கு செல்லத் தொடங்கினார்.
பார்சிலோனாவின் யூத் அகாடமியில் சில ஆண்டுகாலம் பயிற்சியில் ஈடுபட்ட மெஸ்ஸி, 2005-ம் ஆண்டில்தான் அந்த கிளப்பின் சீனியர் அணியில் இடம் பிடித்தார். இவர் தடம் பதித்த பிறகு பார்சிலோனா அணி பல போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியது. மெஸ்ஸியின் பரபரப்பான ஆட்டம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.
பார்சிலோனாவுக்காக ஆடிய அதே நேரத்தில், தன் சொந்த நாடான அர்ஜென்டினா அணியிலும் மெஸ்ஸி ஜொலித்தார். அந்நாட்டின் முன்னாள் கால்பந்து ஜாம்பவானான மரடோனாவின் செல்லப்பிள்ளையாக பெயரெடுத்தார். அவரது பயிற்சியால் கூர்தீட்டப்பட்டார். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மரடோனா பயிற்சியாளராகவும், மெஸ்ஸி முன்னணி வீரராகவும் களம் இறங்கினர். இந்த இருவரின் ஜோடியை ‘மெஸ்ஸிடோனா’ என்று பெயரிட்டு உலகமே கொண்டாடியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தர போராடினார். ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்று கோப்பையை தவறவிட்டது அர்ஜெண்டினா. மனமுடைந்து போனார் மெஸ்ஸி. இதைத் தொடர்ந்து கோபா அமெரிக்கா கோப்பையிலும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா தோற்க, விரக்தியின் விளிம்புக்கே சென்றார். இனி சர்வதேச போட்டிகளில் ஆடுவதில்லை என்று துக்கத்துடன் அறிவித்தார்.
ரசிகர்களின் வற்புறுத்தலால் மீண்டும் அணிக்கு திரும்பிய மெஸ்ஸி, தனி ஒருவராக போராடி அர்ஜெண்டினா அணியை உலகக் கோப்பைக்கு தகுதிபெற வைத்துள்ளார். கடந்த 2 முறை விட்டதை இம்முறை எப்படியும் பிடிக்கவேண்டும் என்ற உத்வேகத்துடன் ரஷ்யாவில் கால் பதிக்கிறார் மெஸ்ஸி. அவரது கனவு நனவாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

துக்கத்தை மறக்க கிரிக்கெட் - ஜூனியர் டெண்டுல்கர் வளர்ந்த கதை




நெரிசல் மிகுந்த மின்சார ரயில். கூட்டத்தில் நெருக்கியடித்து நின்றுகொண்டிருக்கும் அப்பா. அவரது தோளில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கும் சிறுவன். அந்தச் சிறுவனின் தோளில் அவனைவிடப் பெரிய கிரிக்கெட் கிட் - இப்படி வினோதமான ஒரு காட்சியை சில ஆண்டுகளுக்கு முன்புவரை மும்பைவாசிகள் பார்த்திருக்கக் கூடும். ஒருவேளை இப்படிப் பயணிக்கும் அப்பாவையும் மகனையும் பார்த்து சிரித்திருக்கவும் கூடும்.
ஆனால் அன்று அப்பாவின் தோளில் ஒடுங்கியடி கிரிக்கெட் கிட்டுடன் தினசரி 3 மணி நேரம் பயணித்த சிறுவன்தான், இன்று ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசும் 18 வயது இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா. அன்று மகனை தினமும் 3 மணிநேரம் தோளில் தூக்கிச் சுமந்து கிரிக்கெட் பயிற்சிக்கு கொண்டுசென்ற ஒரு தந்தையின் தியாகம்தான் இன்று, ‘ஜூனியர் டெண்டுல்கர்’ என்று எல்லோரும் புகழும் பிரித்வி ஷாவை நமக்கு பெற்றுத் தந்துள்ளது.
எல்லா சிறுவர்களையும் போலத்தான் பிரித்வி ஷாவும் 3 வயதில் பிளாஸ்டிக் பேட் பிடித்து கிரிக்கெட் ஆடினார். ஆனால் அவர் அடித்த ஷாட்கள் அப்போதே சச்சினை ஞாபகப் படுத்துவது போல் இருக்க ஏரியாவில் பிரபலமானார். ‘சச்சினைப் போலவே உன் மகனும் கிரிக்கெட்டில் சிறப்பாக வருவான்’ என்று தெருவில் உள்ளவர்கள் புகழ, சந்தோஷத்தின் உச்சிக்கே போனர் பிரித்வியின் அப்பா பங்கஜ் ஷா. ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. பிரித்விக்கு 4 வயதாக இருந்தபோதே அவரது தாயார் காலமானார். தன் மனைவி இறந்த துக்கத்தை பங்கஜ் ஷாவால் தாங்க முடியவில்லை.
சோகத்தில் மூழ்கியிருந்த அவரை, ‘அப்பா கிரிக்கெட் விளையாடலாமா?’ என்ற பிரித்வியின் குரல்தான் அவரை மீட்டெடுத்தது. மனைவியின் இழப்பை மறக்க கிரிக்கெட்டை மருந்தாக்க திட்டமிட்டார். தன் வாழ்க்கை லட்சியமே மகனை ஒரு மாபெரும் கிரிக்கெட் வீரனாக உருவாக்குவதுதான் என்ற லட்சியத்துடன் எழுந்தார்.
பிரித்வி ஷா வசிக்கும் மும்பை புறநகர் பகுதியில் அந்நாளில் பெரிய கிரிக்கெட் பயிற்சி மையங்கள் இல்லை. இருக்கும் சில மையங்களும் 4 வயது சிறு குழந்தையான பிரித்வி ஷாவை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. “அடிபட்டால் என்ன செய்வது? பேட்டைப் பிடிக்கும் அளவுக்கு அவன் உயரமானதும் பார்த்துக்கொள்ளலாம்” என்று எல்லோரும் மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில்தான் சந்தோஷ் பிங்கல்கர் (Santosh Pingulkar) என்ற பயிற்சியாளரின் கண்களில் பிரித்வி ஷா பட்டார். கார்ப்பரேஷன் மைதானம் ஒன்றில் தன்னை விட வயதில் மூத்த சிறுவர்களின் பந்துகளை அநாயாசமாக பவுண்டரிக்கு விரட்டும் சிறுவன் பிரித்வியின் ஆற்றல் கவரவே, பிரித்வியைப் பற்றி விசாரித்துள்ளார். முறையான பயிற்சி இல்லாமல் பிரித்வி தவிப்பதைக் கேள்விப்பட்டவர், விரார் நகரில் உள்ள தனது பயிற்சி மையத்தில் சேர்க்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த பயிற்சி மையத்துக்கு செல்ல தந்தையும் மகனும் தினமும் 2 மணிநேரம் ரயிலில் பயணிக்க வேண்டும்.
ஆனால் பங்கஜ் ஷா அசரவில்லை. முதல் கட்டமாக பாரம்பரியமாக தான் செய்துவந்த துணி வியாபாரத்தை விட்டார். கையில் சேமித்து வைத்திருந்த பணத்துடன், மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் கட்டத் தொடங்கினார். காலை 5 மணிக்கு எழுந்து தனக்கும் மகனுக்குமான உணவைச் சமைத்து அவனை எழுப்பி, பயிற்சி மையத்துக்கு ரயிலில் பயணிப்பார். பிரித்வி பயிற்சி செய்யும் நேரத்தில் அங்கிருக்கும் மரத்தடியில் அமர்ந்து அதை ரசிப்பர். கிரிக்கெட் பயிற்சி முடிந்ததும் அருகில் உள்ள பள்ளிக்கு மகனை அழைத்துச் செல்வார். மாலைவரை பள்ளி அருகிலேயே காத்திருந்து மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
பயணத்தைத் தவிர மற்றொரு முக்கிய சவலையும் பிரித்வி ஷா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அது உயரம். கவாஸ்கர், டெண்டுல்கர் ஆகியோரைப் போன்று பிரித்வி ஷாவும் கொஞ்சம் குள்ளமானவர். இப்போதே அவரது உயரம் 165 செண்டிமீட்டர்தான் என்றால் சிறுவயதில் கேட்க வேண்டுமா என்ன? மிகவும் குள்ளமான அவருக்கு ஏற்ற கிரிக்கெட் கிட்டுகள் கிடைக்கவில்லை. அதனால் கால்கப்பு (பேட்), கிரிக்கெட் மட்டை ஆகியவற்றை வாங்கி அவரது சைசுக்கு ஏற்ற வகையில் வெட்டி பயன்படுத்த வேண்டி இருந்தது. இதில் கால் காப்புகளை பிரித்வியின் சைசுக்கு ஏற்றவாறு வெட்டித் தைப்பதுதான் மிகவும் கடினமாக இருந்தது என்கிறார் அவரது அப்பா.
இப்படி பல சவால்களைக் கடந்து பிரித்வியின் பேட் சாகசங்களைப் படைத்தது. 10 வயதிலேயே 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம்பிடித்த பிரித்விக்கு அன்றிலிருந்து ஏறுமுகம்தான். பல போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், இந்திய அளவில் கவனிக்கப்பட்டது 2013-ம் ஆண்டில்தான். அப்போது மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் பள்ளிக்காக பிரித்வி ஆடினார். இத்தொடரில் செயிண்ட் பிரான்சிஸ் பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 85 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உட்பட 546 ரன்களை அவர் விளாசினார். இந்திய அளவில் ஒரு போட்டியில் பேட்ஸ்மேன் எடுத்த மிக அதிகபட்ச ஸ்கோராகும் இது. இந்த ஒரு இன்னிங்ஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகமே அவரை கவனிக்க வைத்தது. மும்பை அணிக்காக பல போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கோப்பையைப் பெற்றுத்தந்தார் பிரித்வி ஷா. அத்துடன் இந்த தொடரின்போது பயிற்சியாளர் திராவிட்டால் மேலும் மெருகூட்டப்பட்டார். இந்த ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக 1.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர், 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரர்களைவிட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் 5 போட்டிகளிலேயே 2 அரைசதங்களுடன் 205 ரன்களைக் குவித்த இவர் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவரது பல ஷாட்டுகள் சச்சினை ஞாபகப்படுத்துவதாக மார்க் வாஹ் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
ஆனால் எந்த புகழ் போதையும் தலைக்கு ஏறாமல் அமைதியாக இருக்கிறார் பிரித்வி ஷா. “நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாகி உலகக் கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. அதை நிறைவேற்றும் வகையில் ஜூனியர் உலகக் கோப்பையை வாங்கிவிட்டேன். அடுத்த டார்கெட் சீனியர்களுக்கான உலகக் கோப்பைதான்” என்கிறார் பிரித்வி. அவரது லட்சியம் ஜெயிக்கட்டும்.

‘சக்டா எக்ஸ்பிரஸ்’ - -ஜுலன் கோஸ்வாமியின் கிரிக்கெட் பயணம்



சிறுவயதில் தபால் தலைகளைச் சேகரிப்பதென்றால் ஜுலன் கோஸ்வாமிக்கு மிகவும் பிடிக்கும். பழங்கால தபால் தலைகள், பல்வேறு நாடுகளின் தபால் தலைகள் என்று தேடிப்பிடித்து ஒரு புத்தகத்தில் ஒட்டிவைப்பார். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவற்றை ஆர்வமாகக் காட்டுவார். ஆனால் இன்று இந்திய அரசே ஜுலன் கோஸ்வாமிக்கு தபால் தலையை வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம் கிரிக்கெட். பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி இதுவரை எந்த சர்வதேச வீராங்கனையும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளார் ஜுலன்.
கொல்கத்தாவில் இருந்து 58 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சக்டாதான் (Chakdah) ஜுலன் கோஸ்வாமியின் சொந்த ஊர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த அவருக்கு டிவி மூலமாகத்தான் கிரிக்கெட் அறிமுகமானது . “அப்போதெல்லாம் விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றை மட்டும்தான் தூர்தர்சனில் அதிகம் ஒளிபரப்புவார்கள். எங்கள் வீட்டில் அக்கம்பக்கத்தினர் எல்லாம் பெரும் கூட்டமாக சேர்ந்துகொண்டு அந்த ஆட்டங்களைப் பார்ப்பார்கள். கபில்தேவ் விக்கெட் வீழ்த்தினால் வீடே அதிரும். முதலில் எனக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், கபில்தேவ் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. கபில்தேவைப் போல் பந்து வீசுவதாக நினைத்துக்கொண்டு ‘தத்தக்கா பித்தக்கா’ என்று ஓடி பந்தை எறிவேன். வீட்டில் உள்ளவர்கள் சிரிப்பார்கள். அப்படி சின்ன வயதில் கபில்தேவ் மூலம் கிரிக்கெட் ஆசை என் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டது” என்கிறார் ஜுலன்.
ஜுலன் மனதில் கபில்தேவ் போட்ட கிரிக்கெட் விதை, 1987-ல் நடந்த பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டியின்போது முளைவிட்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் பால் கேர்ள்களாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பந்தைப் பொறுக்கிப் போடும் வாய்ப்பு ஜுலனுக்கும் பள்ளி மூலம் கிடைத்தது. சும்மாவே ஆடும் கால்களுக்கு சலங்கையை வேறு கட்டிவிட்டால் கேட்க வேண்டுமா என்ன? ஜுலன் மனதில் கிரிக்கெட் ஆசை கற்பூரமாய் பற்றிக்கொண்டது.
இதைத்தொடர்ந்து ஜுலன் வளர வளர கிரிக்கெட் மீது அவர் கொண்டிருந்த ஆசையும் மரமாய் வளர்ந்தது. 14 வயதில் மற்ற குழந்தைகளெல்லாம் டாக்டராகவும், இஞ்ஜினீயராகவும் ஆசைப்பட, ஜுலன் கொஞ்சம் வித்தியாசமாக வேகப்பந்து வீச்சாளராக ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு பல தடைகள் இருந்தன. முதல் தடை பெற்றோர்கள். எல்லா பெற்றோரையும் போலவே தங்கள் மகள் விளையாட்டை விட்டு படிப்பில் மட்டும் கெட்டிக்காரியாய் இருந்தால் போதும் என்பதே ஜுலனின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. அதனால் ஜுலன் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வதை அவர்கள் முதலில் ஏற்கவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு அம்மாவின் ஆதரவைப் பெற்று கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல சம்மதம் வாங்கினார் ஜுலன்.
பயிற்சி மையத்தின் வடிவத்தில் அடுத்த சவால் காத்திருந்தது. இப்போது இருப்பதைப் போல ஊருக்கு பயிற்சி மையமெல்லாம் அப்போது இல்லை. ஜுலனின் சொந்த ஊரில் இருந்து 58 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்கத்தாவில் பயிற்சி மையம் இருந்தது. வாரத்துக்கு 3 நாட்கள் பயிற்சி. காலை 7.30 மணிக்கு பயிற்சி மையத்தில் இருக்க வேண்டுமானால் காலை 5.30க்கு ஜுலன் ரயிலைப் பிடிக்க வேண்டும். பிறகு பஸ்ஸைப் பிடித்து நீண்ட அலைச்சலுக்கு பிறகுதான் பயிற்சி மையத்தை அடைய முடியும். கிரிக்கெட் மீதுள்ள ஆசையால் அதற்கும் ஜுலன் தயாரானார்.
அப்பகுதியில் உள்ள மற்ற பெண் குழந்தைகளுக்கு ஜுலனைப் போன்று கிரிக்கெட் ஆர்வம் இல்லாதது அவருக்கு மூன்றாவது சவாலாக இருந்தது. இதைச் சந்திக்க, ஆண் குழந்தைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட முடிவெடுத்தார் ஜுலன். தொடக்கத்தில் அவர்களுக்கு நிகராக ஜுலனால் ஆட முடியவில்லை. என்னதான் வேகமாக ஓடிவந்து பந்தைப் போட்டாலும், ஒரு பூவை வீசுவதைப் போல் அவர் பந்து வீசியதால் மற்றவர்கள் கேலி செய்தார்கள். ஆனால் அதையும் கடந்து ஜுலன் அவர்களுடன் தொடர்ந்து கிரிக்கெட் ஆடினார்.
ஆனால் அவர்களின் கிண்டலெல்லாம் சில நாட்களுக்குத்தான். பயிற்சி மையத்தில் பட்டை தீட்டப்பட்ட பின்னர், ஜுலனின் பந்துவீச்சு வேகத்தைக் கண்டு உள்ளூர் சிறுவர்கள் அரண்டு போனார்கள். ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்று செல்லப் பெயர் வைக்கும் அளவுக்கு அவரது பந்துவீச்சு ஆக்ரோஷமாக மாறியது.
உள்ளூர் கிரிக்கெட்டைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் என்று கடந்து 19 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தார் ஜுலன் கோஸ்வாமி. 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரி மைதானத்தில்தான் ஜுலன் எக்ஸ்பிரஸ் எனும் ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ சர்வதேச கிரிக்கெட்டில் வேகமெடுத்தது. இப்போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனையான கரோலின் அட்கின்ஸின் விக்கெட்டை வீழ்த்தி தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் ஜுலன் கோஸ்வாமி.
அன்றிலிருந்து இன்று வரை மகளிர் கிரிக்கெட் உலகில் முடிசூடா ராணியாக, பேட்டிங் வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் ஜுலன் கோஸ்வாமி. 16 ஆண்டுகளில் 169 ஒருநாள் போட்டிகளில் 203 விக்கெட்களை வீழ்த்திய ஜுலன் கோஸ்வாமி இன்னும் 120 கிலோமீட்டர் வேகத்துக்கு குறையாமல் பந்துவீசி எதிரணி வீராங்கனைகளைத் திணறடிக்கிறார். 10 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்களையும், 64 டி 20 போட்டிகளில் 55 விக்கெட்களையும் வீழ்த்தி பெண்கள் நம்பர் ஒன் பந்துவீச்சாளராகத் திகழ்கிறார் ஜுலன் கோஸ்வாமி.
ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது, அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, இவவை எல்லாவற்றுக்கும் மேலாக தபால் தலை வெளியீடு என்று பல கவுரவங்கள் ஜுலனைத் தேடி வந்துள்ளன. ஆனால் இன்னும் அவர் திருப்தியடையவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்காக தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை. அதற்காகவே இன்னும் திருமணம்கூட செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
“நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். அதுவும் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துவிட்டது. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் நடுவில் யாரும் வருவதை விரும்பவில்லை அதற்காகவே திருமணத்தைக்கூட தள்ளிப் போடுகிறேன். என் முழு நேரத்தையும் கிர்க்க்கெட்டுக்காக மட்டும் ஒதுக்க விரும்புகிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுதான் திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பேன்” என்கிறார் ஜுலன் கோஸ்வாமி. எந்த வெற்றிக்கு பின்பும் இதுபோன்ற தியாகங்கள் நிச்சயம் இருக்கும்.

கூரை வீடு டூ ஹாக்கி கேப்டன் - ராணி ராம்பால்




மழைக்காலத்தில் ஒழுகும் கூரை வீடு, குதிரை வண்டி ஓட்டும் தந்தை, சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம், பெண்களை தனியாக வெளியே அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தும் சமூகம் - இப்படி சிறு வயதில் பல தடைகளைக் கடந்து இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார் ராணி ராம்பால். மழையில் ஒழுகாத ஓட்டு வீட்டை தன் குடும்பத்துக்காக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சின்னஞ்சிறு (6 )வயதில் அவர் மனதில் கண்ட கனவுதான் இன்று இத்தனை உயரத்துக்கு ராணியை அழைத்துச் சென்றுள்ளது.
“ஹரியாணாவில் உள்ள ஷாஹாபாத்தான் எனது ஊர். (Shahabad) எங்கள் ஊரில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரபலம். அங்குள்ள பலர் ஹாக்கி போட்டிகளில் ஆடி, இந்தியன் ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்து கைநிறைய சம்பாதித்தார்கள். அதுபோல் நாமும் ஹாக்கியில் பங்கேற்று ரயில்வேயில் வேலைக்கு சேரவேண்டும். அந்தப் பணத்தை வைத்து வீட்டைக் கட்ட வேண்டும் என்று அந்தச் சிறு வயதிலேயே ஆசைப்பட்டேன். என் வீட்டுக்கு அருகில் ஹாக்கி அகாடமி நடத்திவரும் பல்தேவ் சிங்கிடம் (Baldev Singh) கனவுகளைக் கூறினேன். அப்போது எனக்கு 6 வயது என்பதால் சேர்க்க தயங்கினார்.
‘இன்னும் கொஞ்சம் வயது ஆகட்டும். அதன் பிறகு சேர்த்துக்கொள்கிறேன்’ என்றார். சில நாட்கள் கழித்து மீண்டும் சென்றேன். அப்போதும் அவர் என்னைச் சேர்க்கவில்லை. என்னைச் சேர்த்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்தேன். அந்த வயதிலேயே நான் உறுதியாக இருந்தது அவருக்கு பிடித்துப்போக, அகாடமியில் எனக்கு இடம் கிடைத்தது” என்று தன் முன்கதையைக் கூறுகிறார் ராணி ராம்பால்.
பல்தேவ் சிங் அவரைச் சேர்த்துக்கொண்டாலும் ராணி ஹாக்கி கற்றுக்கொள்வதை அவரது ஊர்மக்கள் எதிர்த்தார்கள். ராணியின் தந்தையிடம் “நம் கிராமத்தில் துப்பட்டா இல்லாமல் பெண்களை வெளியில் அனுப்புவதில்லை. நீயோ உன் மகளை ஹாக்கி ஆட அனுப்புவதாக கூறுகிறாய். அரைக்கால் சட்டையுடன் ஆடும் அந்த விளையாட்டு ஒழுக்கமான நம் ஊர் பெண்களுக்கு தேவைதானா?” என்று கேட்டனர். ஆனால் ராணியின் தந்தை அந்த கேள்விகளை புறம் தள்ளினார். மகளின் விருப்பப்படி, ஹாக்கி பயிற்சி மையத்தில் சேர்த்தார்.
ஹாக்கி பயிற்சியில் சேருவதற்கான அனுமதியை மட்டும்தான் அவரால் கொடுக்க முடிந்தது. அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுக்கவோ, சத்தான உணவுகளைக் கொடுக்கவோ அவரால் முடியவில்லை. ஆனால் ராணியின் மன உறுதியைக் கண்டு அவருக்கு உதவ பயிற்சியாளர் பல்தேவ் சிங் முன்வந்தார். சொந்தமாக ஒரு ஹாக்கி மட்டையை, ராணிக்கு வாங்கித்தந்த பல்தேவ், விளையாட்டுக்கான சீருடையையும் வாங்கிக்கொடுத்தார்.
தினசரி காலை 5 மணிக்கு ரணிக்கு ஹாக்கி பயிற்சி நடக்கும். ஒருநாள் ராணி சற்று தாமதமாக பயிற்சிக்கு சென்றுள்ளார். பல்தேவ் சிங்குக்கு கோபம் வந்தது. “நாளைமுதல் பயிற்சியில் நீ பங்கேற்க வேண்டுமானால் 200 ரூபாய் அபராதமாக செலுத்தவேண்டும்” என்று கண்டிப்புடன் கூறினார்.
குதிரை வண்டிக்காரரின் குடும்பத்தில் ஏது அவ்வளவு பணம். இருக்கும் பணத்தையெல்லாம் சேர்த்து ஒரு 100 ரூபாயை ராணியிடம் கொடுத்தனுப்பினார்கள். அடுத்தநாள் பயிற்சியாளரிடம் தன் குடும்ப கஷ்டத்தை விளக்கிய ராணி, 100 ரூபாயை நீட்டியுள்ளார். பல்தேவ் சிங்கின் கண்கள் கலங்கின. அந்தப் பணத்தை ராணியிடமே திரும்பக் கொடுத்த அவர், தன்னிடம் இருந்த 100 ரூபாயையும் அவருக்கு கொடுத்துள்ளார்.
மேலும் ராணியிடம், “இன்றுமுதல் உனக்கான பயிற்சியை தீவிரப்படுத்தப் போகிறேன். இதனால் ஒன்று நீ இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீராங்கனையாக உருவெடுப்பாய். அல்லது என் பயிற்சியின் கடுமையை தங்காமல் ஹாக்கி விளையாட்டை விட்டே போய்விடுவாய்” என்று கூறி பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். அன்று அவர் சொன்னதில் முதல் விஷயம் நடந்தது. இந்தியாவின் முன்னணி ஹாக்கி வீராங்கனைகளில் ஒருவராக ராணி உருவெடுத்தார். மாவட்ட, மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளில் படிப்படியாக முன்னேறி 15 வயதிலேயே இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தார். மிகச்சிறிய வயதில் ஹாக்கி அணியில் இடம்பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். முதல் தொடரிலேயே சிறப்பாக ஆடி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றார். அத்தொடரில் பெற்ற முதல் சம்பளத்தில் அவர் செய்த செலவு, ஒழுகும் தன் வீட்டு கூரைக்கு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைப் பொருத்தியதுதான். மேலும் 2010-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் 7 கோல்களை அடித்த அவர் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார். படிப்படியாய் முன்னேறி, இந்திய அணியின் கேப்டனானார்.
கடந்த ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பைக்கான ஹாக்கி தொடரை வென்றது. அதன் மூலம் உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது. தற்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கும் இவரது தலைமையிலேயே இந்திய அணி அனுப்பப்படுகிறது. எந்த கிராமத்தில் ராணி ஹாக்கி விளையாட எதிர்ப்பு தெரிவித்தார்களோ, அதே கிராமத்தில் இருந்து இன்று ராணியைப் பின்பற்றி 4 ஹாக்கி வீராங்கனைகள் உருவாகி உள்ளனர். மேலும் கடந்த 5-ம் ம்தேதி இந்திய அணிக்காக 200 போட்டிகளில் ஆடிய சாதனையையும் ராணி ராம்பால் படைத்துள்ளார். அவருக்கு பயிற்சியளித்த பல்தேவ் சிங்குக்கு சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.
ராணி ராம்பாலின் முதல் கனவு, சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்பது. போட்டிகளின்போது தனக்கு கிடைத்த பரிசுத் தொகைகளை சேர்த்து வைத்த அவர், சில மாதங்களுக்கு முன் அந்த கனவை நிறைவேற்றி விட்டார். அவரது அடுத்த கனவு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது. தன் கனவுகளை நிறைவேற்றக் கடுமையாக போராடும் ராணி ராம்பால், இதையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.

புஜாரா - இந்தியாவின் இரண்டாம் பெருஞ்சுவர்


இது கோலியின் யுகம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவர் புயலாய் வீச, உலகமே அவரை கொண்டாடி வருகிறது. ஆனால் அந்தக் கொண்டாட்டங்களின் நடுவில், டெஸ்ட் போட்டிகளில் சத்தமில்லாமல் சாதித்து வருகிறார் சேதேஷ்வர் புஜாரா. இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள புஜாரா, குவித்த ரன்கள் 4,396. (இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில வேகமாக 4,000 ரன்களைக் கடந்த 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சேவக், கவாஸ்கர் ஆகியோர் மட்டுமே இவருக்கு முன்னதாக இந்த சாதனையை படைத்துள்ளனர்.) சராசரி ரன்கள் 52.96 மேலும் இந்தியாவிலேயே ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக இரட்டை சதம் (12) அடித்த வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.
சேதேஷ்வர் புஜராவின் தந்தை அரவிந்த் புஜாராவும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். சவுராஷ்டிரா அணிக்காக 6 போட்டிகளில் ஆடி 172 ரன்களை எடுத்துள்ள அவரால், அதற்கு மேல் கிரிக்கெட்டில் சிறகடித்து பறக்க முடியவில்லை. கிரிக்கெட்டுக்கும் தனக்குமான தொடர்பு அவ்வளவுதான் என்று அரவிந்த் புஜாரா நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில்தான் மழலை மாறாத தனது 4 வயது மகன் கிரிக்கெட் விளையாடியதைப் பார்க்க நேர்ந்தது. இரண்டு அடிகள் கொண்ட பிளாஸ்டிக் பேட்டை அவன் பிடித்திருந்த லாவகமும், பந்துகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த வனது பார்வையும், அரவிந்த் புஜராவின் மனதில் நம்பிக்கையை விதைத்தது.
தன்னால் முடியாததை மகன் சாதிப்பான் என்று நம்பிய அரவிந்த் புஜார, அன்றிலிருந்து மகனுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். அருகில் உள்ள ரயில்வே மைதானத்துக்கு சேதேஷ்வர் புஜரவை அழைத்துச் செல்லும் அவர், தினமும் காலையில் 60 பந்துகள், மாலையில் 60 பந்துகள் வீதம் அவருக்கு வீசி பேட்டிங் பயிற்சியைத் தொடங்கினார்.
இப்படியே சில ஆண்டுகள் சென்றுள்ளது. புஜாராவுக்கு 11 வயது நிறைவடைந்த பிறகு, அவருக்கு உரிய பயிற்சியை அளிக்க விரும்பி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான கார்சன் காவ்ரியிடம் அழைத்துச் சென்றுள்ளார். புஜாராவின் பேட்டிங் ஸ்டைலும், பந்துகளுக்கு உரிய மரியாதை கொடுக்கும் ஆற்றலும் காவ்ரிக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது பரிந்துரையின் பேரில் மும்பை மாடுங்கா பகுதியில் ரவி தாக்கர் என்பவர் நடத்திவரும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைப்பற்றி குறிப்பிடும் ரவி தாக்கர், “11 வயது சிறுவனாக புஜாரவை என்னிடம் அழைத்து வந்தார்கள். அடுத்த 2 நாட்கள் என்னிடம் உள்ள திறமையான் பந்து வீச்சாளர்களை அவனுக்கு பந்து வீசச் செய்தேன். அப்போது வேகப்பந்து மற்றும் சுழற்பந்துகளை புஜாரா லாவகமாக கையாண்டது, எனக்கு அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது. அவருக்கு கற்றுக்கொடுக்க ஏதும் இல்லை என்றபோதிலும் என்னால் முடிந்தவரை அவரது பேட்டிங்கை மெருகூட்டினேன்” என்கிறார்.
ரவி தாக்கரிடம் பயிற்சி பெறத் தொடங்கியதில் இருந்து புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் கண்டது. 14 மற்றும் வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் ஆடி தேர்வாளர்களைக் கவர்ந்த அவர், 2005-ம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார். இதைத்தொடர்ந்து 2006-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் புஜாரா 6 இன்னிங்ஸ்களில் 349 ரன்களைக் குவித்தார். ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்களிலும் சிரப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேர்வுக் குழுவினரின் கவனத்தைக் கவர்ந்தார்.
2010-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரக இந்தியா ஆடிய டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமனார் சேதேஷ்வர் புஜரா. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இவர் 4 ரன்களை மட்டுமே எடுத்தபோதிலும், 2-வது இன்னிங்ஸில் 72 ரன்களைச் சேர்த்தார். அவரது ஆட்ட முறை, ராகுல் திராவிட்டின் ஆட்ட முறையைப் போன்றே இருந்ததால், திராவிஉட் ஓய்வுபெற்ற பிறகு, டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் ஒரு புறம் நங்கூரம் பாய்ச்சி நின்று விக்கெட் விழாமல் தடுக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.
தனக்கு எது சரிப்பட்டு வரும், எது சரிப்பட்டு வரது என்பதை நன்றாக உணர்ந்துகொண்ட வீரர் புஜாரா. அதிரடியான ஆட்டம் தனக்கு வராது என்பதாலேயே ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. அதற்கெல்லம் சேர்த்து டெஸ்ட் போட்டிகளில் வெளுத்து வாங்குகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் படைத்துவரும் சாதனைகளைப் பற்றிக் கேட்டால், “சாதனைகளை என் கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன். அவை என்னை மேலும் சிறப்பாக ஆடத் தூண்டுகின்றன. கிளப்புக்காக ஆடினாலும், என் மாநிலத்துக்காக ஆடினாலும், இந்தியாவுக்காக ஆடினாலும், என் மனதில் இருக்கும் லட்சியம் ஒன்றே ஒன்றுதான். எதிரணி வீரர்களுக்கு என் விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுக்க கூடாது. அதற்காக அவர்களை கடுமையாக போராட வைக்க வேண்டும் என்பதே என் லட்சியம்” என்கிறார் புஜாரா. வரவிருக்கும் தொடர்களிலும் இந்த போராட்ட குணத்தை புஜாரா வெளிப்படுத்தட்டும்.