நெரிசல் மிகுந்த மின்சார ரயில். கூட்டத்தில் நெருக்கியடித்து நின்றுகொண்டிருக்கும் அப்பா. அவரது தோளில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கும் சிறுவன். அந்தச் சிறுவனின் தோளில் அவனைவிடப் பெரிய கிரிக்கெட் கிட் - இப்படி வினோதமான ஒரு காட்சியை சில ஆண்டுகளுக்கு முன்புவரை மும்பைவாசிகள் பார்த்திருக்கக் கூடும். ஒருவேளை இப்படிப் பயணிக்கும் அப்பாவையும் மகனையும் பார்த்து சிரித்திருக்கவும் கூடும்.
ஆனால் அன்று அப்பாவின் தோளில் ஒடுங்கியடி கிரிக்கெட் கிட்டுடன் தினசரி 3 மணி நேரம் பயணித்த சிறுவன்தான், இன்று ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக சிக்சர்களையும், பவுண்டரிகளையும் விளாசும் 18 வயது இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா. அன்று மகனை தினமும் 3 மணிநேரம் தோளில் தூக்கிச் சுமந்து கிரிக்கெட் பயிற்சிக்கு கொண்டுசென்ற ஒரு தந்தையின் தியாகம்தான் இன்று, ‘ஜூனியர் டெண்டுல்கர்’ என்று எல்லோரும் புகழும் பிரித்வி ஷாவை நமக்கு பெற்றுத் தந்துள்ளது.
எல்லா சிறுவர்களையும் போலத்தான் பிரித்வி ஷாவும் 3 வயதில் பிளாஸ்டிக் பேட் பிடித்து கிரிக்கெட் ஆடினார். ஆனால் அவர் அடித்த ஷாட்கள் அப்போதே சச்சினை ஞாபகப் படுத்துவது போல் இருக்க ஏரியாவில் பிரபலமானார். ‘சச்சினைப் போலவே உன் மகனும் கிரிக்கெட்டில் சிறப்பாக வருவான்’ என்று தெருவில் உள்ளவர்கள் புகழ, சந்தோஷத்தின் உச்சிக்கே போனர் பிரித்வியின் அப்பா பங்கஜ் ஷா. ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நாள் நிலைக்கவில்லை. பிரித்விக்கு 4 வயதாக இருந்தபோதே அவரது தாயார் காலமானார். தன் மனைவி இறந்த துக்கத்தை பங்கஜ் ஷாவால் தாங்க முடியவில்லை.
சோகத்தில் மூழ்கியிருந்த அவரை, ‘அப்பா கிரிக்கெட் விளையாடலாமா?’ என்ற பிரித்வியின் குரல்தான் அவரை மீட்டெடுத்தது. மனைவியின் இழப்பை மறக்க கிரிக்கெட்டை மருந்தாக்க திட்டமிட்டார். தன் வாழ்க்கை லட்சியமே மகனை ஒரு மாபெரும் கிரிக்கெட் வீரனாக உருவாக்குவதுதான் என்ற லட்சியத்துடன் எழுந்தார்.
பிரித்வி ஷா வசிக்கும் மும்பை புறநகர் பகுதியில் அந்நாளில் பெரிய கிரிக்கெட் பயிற்சி மையங்கள் இல்லை. இருக்கும் சில மையங்களும் 4 வயது சிறு குழந்தையான பிரித்வி ஷாவை சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. “அடிபட்டால் என்ன செய்வது? பேட்டைப் பிடிக்கும் அளவுக்கு அவன் உயரமானதும் பார்த்துக்கொள்ளலாம்” என்று எல்லோரும் மறுத்துவிட்டனர். அந்த நேரத்தில்தான் சந்தோஷ் பிங்கல்கர் (Santosh Pingulkar) என்ற பயிற்சியாளரின் கண்களில் பிரித்வி ஷா பட்டார். கார்ப்பரேஷன் மைதானம் ஒன்றில் தன்னை விட வயதில் மூத்த சிறுவர்களின் பந்துகளை அநாயாசமாக பவுண்டரிக்கு விரட்டும் சிறுவன் பிரித்வியின் ஆற்றல் கவரவே, பிரித்வியைப் பற்றி விசாரித்துள்ளார். முறையான பயிற்சி இல்லாமல் பிரித்வி தவிப்பதைக் கேள்விப்பட்டவர், விரார் நகரில் உள்ள தனது பயிற்சி மையத்தில் சேர்க்க ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த பயிற்சி மையத்துக்கு செல்ல தந்தையும் மகனும் தினமும் 2 மணிநேரம் ரயிலில் பயணிக்க வேண்டும்.
ஆனால் பங்கஜ் ஷா அசரவில்லை. முதல் கட்டமாக பாரம்பரியமாக தான் செய்துவந்த துணி வியாபாரத்தை விட்டார். கையில் சேமித்து வைத்திருந்த பணத்துடன், மகனின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் கட்டத் தொடங்கினார். காலை 5 மணிக்கு எழுந்து தனக்கும் மகனுக்குமான உணவைச் சமைத்து அவனை எழுப்பி, பயிற்சி மையத்துக்கு ரயிலில் பயணிப்பார். பிரித்வி பயிற்சி செய்யும் நேரத்தில் அங்கிருக்கும் மரத்தடியில் அமர்ந்து அதை ரசிப்பர். கிரிக்கெட் பயிற்சி முடிந்ததும் அருகில் உள்ள பள்ளிக்கு மகனை அழைத்துச் செல்வார். மாலைவரை பள்ளி அருகிலேயே காத்திருந்து மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
பயணத்தைத் தவிர மற்றொரு முக்கிய சவலையும் பிரித்வி ஷா எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அது உயரம். கவாஸ்கர், டெண்டுல்கர் ஆகியோரைப் போன்று பிரித்வி ஷாவும் கொஞ்சம் குள்ளமானவர். இப்போதே அவரது உயரம் 165 செண்டிமீட்டர்தான் என்றால் சிறுவயதில் கேட்க வேண்டுமா என்ன? மிகவும் குள்ளமான அவருக்கு ஏற்ற கிரிக்கெட் கிட்டுகள் கிடைக்கவில்லை. அதனால் கால்கப்பு (பேட்), கிரிக்கெட் மட்டை ஆகியவற்றை வாங்கி அவரது சைசுக்கு ஏற்ற வகையில் வெட்டி பயன்படுத்த வேண்டி இருந்தது. இதில் கால் காப்புகளை பிரித்வியின் சைசுக்கு ஏற்றவாறு வெட்டித் தைப்பதுதான் மிகவும் கடினமாக இருந்தது என்கிறார் அவரது அப்பா.
இப்படி பல சவால்களைக் கடந்து பிரித்வியின் பேட் சாகசங்களைப் படைத்தது. 10 வயதிலேயே 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மும்பை அணியில் இடம்பிடித்த பிரித்விக்கு அன்றிலிருந்து ஏறுமுகம்தான். பல போட்டிகளில் சிறப்பாக ஆடினாலும், இந்திய அளவில் கவனிக்கப்பட்டது 2013-ம் ஆண்டில்தான். அப்போது மும்பையில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ரிஸ்வி ஸ்பிரிங்பீல்ட் பள்ளிக்காக பிரித்வி ஆடினார். இத்தொடரில் செயிண்ட் பிரான்சிஸ் பள்ளிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரே இன்னிங்ஸில் 85 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் உட்பட 546 ரன்களை அவர் விளாசினார். இந்திய அளவில் ஒரு போட்டியில் பேட்ஸ்மேன் எடுத்த மிக அதிகபட்ச ஸ்கோராகும் இது. இந்த ஒரு இன்னிங்ஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகமே அவரை கவனிக்க வைத்தது. மும்பை அணிக்காக பல போட்டிகளில் ஆடும் வாய்ப்பும் அவரைத் தேடி வந்தது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக சில மாதங்களுக்கு முன் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று கோப்பையைப் பெற்றுத்தந்தார் பிரித்வி ஷா. அத்துடன் இந்த தொடரின்போது பயிற்சியாளர் திராவிட்டால் மேலும் மெருகூட்டப்பட்டார். இந்த ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக 1.20 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அவர், 10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட வீரர்களைவிட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் 5 போட்டிகளிலேயே 2 அரைசதங்களுடன் 205 ரன்களைக் குவித்த இவர் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவரது பல ஷாட்டுகள் சச்சினை ஞாபகப்படுத்துவதாக மார்க் வாஹ் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.
ஆனால் எந்த புகழ் போதையும் தலைக்கு ஏறாமல் அமைதியாக இருக்கிறார் பிரித்வி ஷா. “நான் கிரிக்கெட்டில் பெரிய ஆளாகி உலகக் கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை. அதை நிறைவேற்றும் வகையில் ஜூனியர் உலகக் கோப்பையை வாங்கிவிட்டேன். அடுத்த டார்கெட் சீனியர்களுக்கான உலகக் கோப்பைதான்” என்கிறார் பிரித்வி. அவரது லட்சியம் ஜெயிக்கட்டும்.
No comments:
Post a Comment