Powered By Blogger

Friday, June 29, 2018

கூரை வீடு டூ ஹாக்கி கேப்டன் - ராணி ராம்பால்




மழைக்காலத்தில் ஒழுகும் கூரை வீடு, குதிரை வண்டி ஓட்டும் தந்தை, சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பம், பெண்களை தனியாக வெளியே அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தும் சமூகம் - இப்படி சிறு வயதில் பல தடைகளைக் கடந்து இன்று இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டனாக உயர்ந்து நிற்கிறார் ராணி ராம்பால். மழையில் ஒழுகாத ஓட்டு வீட்டை தன் குடும்பத்துக்காக கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சின்னஞ்சிறு (6 )வயதில் அவர் மனதில் கண்ட கனவுதான் இன்று இத்தனை உயரத்துக்கு ராணியை அழைத்துச் சென்றுள்ளது.
“ஹரியாணாவில் உள்ள ஷாஹாபாத்தான் எனது ஊர். (Shahabad) எங்கள் ஊரில் ஹாக்கி விளையாட்டு மிகவும் பிரபலம். அங்குள்ள பலர் ஹாக்கி போட்டிகளில் ஆடி, இந்தியன் ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்து கைநிறைய சம்பாதித்தார்கள். அதுபோல் நாமும் ஹாக்கியில் பங்கேற்று ரயில்வேயில் வேலைக்கு சேரவேண்டும். அந்தப் பணத்தை வைத்து வீட்டைக் கட்ட வேண்டும் என்று அந்தச் சிறு வயதிலேயே ஆசைப்பட்டேன். என் வீட்டுக்கு அருகில் ஹாக்கி அகாடமி நடத்திவரும் பல்தேவ் சிங்கிடம் (Baldev Singh) கனவுகளைக் கூறினேன். அப்போது எனக்கு 6 வயது என்பதால் சேர்க்க தயங்கினார்.
‘இன்னும் கொஞ்சம் வயது ஆகட்டும். அதன் பிறகு சேர்த்துக்கொள்கிறேன்’ என்றார். சில நாட்கள் கழித்து மீண்டும் சென்றேன். அப்போதும் அவர் என்னைச் சேர்க்கவில்லை. என்னைச் சேர்த்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்தேன். அந்த வயதிலேயே நான் உறுதியாக இருந்தது அவருக்கு பிடித்துப்போக, அகாடமியில் எனக்கு இடம் கிடைத்தது” என்று தன் முன்கதையைக் கூறுகிறார் ராணி ராம்பால்.
பல்தேவ் சிங் அவரைச் சேர்த்துக்கொண்டாலும் ராணி ஹாக்கி கற்றுக்கொள்வதை அவரது ஊர்மக்கள் எதிர்த்தார்கள். ராணியின் தந்தையிடம் “நம் கிராமத்தில் துப்பட்டா இல்லாமல் பெண்களை வெளியில் அனுப்புவதில்லை. நீயோ உன் மகளை ஹாக்கி ஆட அனுப்புவதாக கூறுகிறாய். அரைக்கால் சட்டையுடன் ஆடும் அந்த விளையாட்டு ஒழுக்கமான நம் ஊர் பெண்களுக்கு தேவைதானா?” என்று கேட்டனர். ஆனால் ராணியின் தந்தை அந்த கேள்விகளை புறம் தள்ளினார். மகளின் விருப்பப்படி, ஹாக்கி பயிற்சி மையத்தில் சேர்த்தார்.
ஹாக்கி பயிற்சியில் சேருவதற்கான அனுமதியை மட்டும்தான் அவரால் கொடுக்க முடிந்தது. அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுக்கவோ, சத்தான உணவுகளைக் கொடுக்கவோ அவரால் முடியவில்லை. ஆனால் ராணியின் மன உறுதியைக் கண்டு அவருக்கு உதவ பயிற்சியாளர் பல்தேவ் சிங் முன்வந்தார். சொந்தமாக ஒரு ஹாக்கி மட்டையை, ராணிக்கு வாங்கித்தந்த பல்தேவ், விளையாட்டுக்கான சீருடையையும் வாங்கிக்கொடுத்தார்.
தினசரி காலை 5 மணிக்கு ரணிக்கு ஹாக்கி பயிற்சி நடக்கும். ஒருநாள் ராணி சற்று தாமதமாக பயிற்சிக்கு சென்றுள்ளார். பல்தேவ் சிங்குக்கு கோபம் வந்தது. “நாளைமுதல் பயிற்சியில் நீ பங்கேற்க வேண்டுமானால் 200 ரூபாய் அபராதமாக செலுத்தவேண்டும்” என்று கண்டிப்புடன் கூறினார்.
குதிரை வண்டிக்காரரின் குடும்பத்தில் ஏது அவ்வளவு பணம். இருக்கும் பணத்தையெல்லாம் சேர்த்து ஒரு 100 ரூபாயை ராணியிடம் கொடுத்தனுப்பினார்கள். அடுத்தநாள் பயிற்சியாளரிடம் தன் குடும்ப கஷ்டத்தை விளக்கிய ராணி, 100 ரூபாயை நீட்டியுள்ளார். பல்தேவ் சிங்கின் கண்கள் கலங்கின. அந்தப் பணத்தை ராணியிடமே திரும்பக் கொடுத்த அவர், தன்னிடம் இருந்த 100 ரூபாயையும் அவருக்கு கொடுத்துள்ளார்.
மேலும் ராணியிடம், “இன்றுமுதல் உனக்கான பயிற்சியை தீவிரப்படுத்தப் போகிறேன். இதனால் ஒன்று நீ இந்தியாவின் மிகச்சிறந்த ஹாக்கி வீராங்கனையாக உருவெடுப்பாய். அல்லது என் பயிற்சியின் கடுமையை தங்காமல் ஹாக்கி விளையாட்டை விட்டே போய்விடுவாய்” என்று கூறி பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளார். அன்று அவர் சொன்னதில் முதல் விஷயம் நடந்தது. இந்தியாவின் முன்னணி ஹாக்கி வீராங்கனைகளில் ஒருவராக ராணி உருவெடுத்தார். மாவட்ட, மாநிலங்களுக்கு இடையிலான போட்டிகளில் படிப்படியாக முன்னேறி 15 வயதிலேயே இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்தார். மிகச்சிறிய வயதில் ஹாக்கி அணியில் இடம்பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். முதல் தொடரிலேயே சிறப்பாக ஆடி சிறந்த வீராங்கனைக்கான விருதையும் பெற்றார். அத்தொடரில் பெற்ற முதல் சம்பளத்தில் அவர் செய்த செலவு, ஒழுகும் தன் வீட்டு கூரைக்கு ஆஸ்பெஸ்டாஸ் தகடுகளைப் பொருத்தியதுதான். மேலும் 2010-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியில் 7 கோல்களை அடித்த அவர் சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார். படிப்படியாய் முன்னேறி, இந்திய அணியின் கேப்டனானார்.
கடந்த ஆண்டு இவரது தலைமையில் இந்திய அணி ஆசிய கோப்பைக்கான ஹாக்கி தொடரை வென்றது. அதன் மூலம் உலகக் கோப்பைக்கும் தகுதி பெற்றது. தற்போது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கும் இவரது தலைமையிலேயே இந்திய அணி அனுப்பப்படுகிறது. எந்த கிராமத்தில் ராணி ஹாக்கி விளையாட எதிர்ப்பு தெரிவித்தார்களோ, அதே கிராமத்தில் இருந்து இன்று ராணியைப் பின்பற்றி 4 ஹாக்கி வீராங்கனைகள் உருவாகி உள்ளனர். மேலும் கடந்த 5-ம் ம்தேதி இந்திய அணிக்காக 200 போட்டிகளில் ஆடிய சாதனையையும் ராணி ராம்பால் படைத்துள்ளார். அவருக்கு பயிற்சியளித்த பல்தேவ் சிங்குக்கு சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.
ராணி ராம்பாலின் முதல் கனவு, சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டவேண்டும் என்பது. போட்டிகளின்போது தனக்கு கிடைத்த பரிசுத் தொகைகளை சேர்த்து வைத்த அவர், சில மாதங்களுக்கு முன் அந்த கனவை நிறைவேற்றி விட்டார். அவரது அடுத்த கனவு, ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது. தன் கனவுகளை நிறைவேற்றக் கடுமையாக போராடும் ராணி ராம்பால், இதையும் நிச்சயம் நிறைவேற்றுவார்.

No comments:

Post a Comment