கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சின் எப்படியோ, அப்படித்தான் கால்பந்து ரசிகர்களுக்கு லயோனஸ் மெஸ்ஸி. கால்பந்து மைதானத்தில் தேனீயாய் பறந்து எதிரணியின் கோல் எல்லையைத் தாக்கும் அவர், அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக 61 கோல்கள், பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக 551 கோல்கள் உட்பட நூற்றுக்கணக்கான கோல்களை அடித்துள்ளார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை 5 முறை வென்றுள்ள இவரைப் போன்ற வீரர் தங்களுக்கு கிடைக்க மாட்டாரா என்று ஒவ்வொரு அணியும் தவம் கிடக்கிறது.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி, ஆண்டொன்றுக்கு 1,021.34 கோடி ரூபாயை ஈட்டுவதாக கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால் கால்பந்து மைதானத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் தலா 20 லட்ச ரூபாயை சம்பளமாகப் பெறுகிறார் மெஸ்ஸி. ஆனால் இந்த அளவுக்கு புகழ்பெற்ற மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளவே பலரும் தயங்கினார்கள் என்றால் நம்ப முடிகிறதா?... ஆனால் அதுதான் உண்மை. அதற்கு காரணம் அவரைப் பாதித்த நோய்.
அர்ஜென்டினாவில் பிரபல புரட்சியாளரான சே குவேரா பிறந்த ரோசாரியோ நகரில்தான் லயோனல் மெஸ்ஸியும் பிறந்தார். ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, உள்ளூர் கால்பந்து அணியான கிராண்டோலியின் பயிற்சியாளராக இருந்தார். இதனால் அவருடன் தினமும் கால்பந்து மைதானத்துக்கு சென்றுவந்த மெஸ்ஸி, நாளடையில் கால்பந்து விளையாட்டால் ஈர்க்கப்பட்டார். மிக விரைவாக கால்பந்து ஆட்டத்தைக் கற்றுக்கொண்ட அவர், 5 வயதிலேயே கிராண்டோலியின் சிறுவர்களுக்கான அணியில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து தீவிர பயிற்சியால் கால்பந்து விளையாட்டை வசமாக்கிக்கொண்ட மெஸ்ஸி, 8 வயதில் நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியில் இடம் பிடித்தார். அடுத்த சில ஆண்டுகளிலேயே தன் அசாத்தியமான திறமையால் அந்த அணியின் கனவு நாயகனாக உருவெடுக்கத் தொடங்கினார். மெஸ்ஸியின் அசாத்திய திறமையால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு மற்ற உள்ளூர் கிளப்புகளால் வெல்ல முடியாத அணியாக நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் உருவெடுத்தது. மெஸ்ஸியின் புகழும் உள்ளூரில் வேகமாக பரவியது.
இந்தச் சூழ்நிலையில்தான் ஹார்மோன் டிபிஷியன்ஸி (harmone deficiency) எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியை பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. அவர் வளரவேண்டுமானால் தினமும் ஒரு ஊசியைப் போடவேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். ஆனால் மெஸ்ஸியின் தந்தையிடம் காசு இல்லை. மெஸ்ஸி விளையாடும் கால்பந்து கிளப்பில் பணம் கேட்க, அவர்களும் மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு கிளப்புகளில் மெஸ்ஸிக்காக ஏறி இறங்கினார் அவரது தந்தை. ஆனால் குள்ளமான, வளர்வதற்கு சாத்தியக் கூறுகள் குறைந்த ஒரு வீரருக்காக பணத்தை முதலீடு செய்ய அனைவரும் தயங்கினர். இப்படி ஒரு வீரர் தங்களுக்கு தேவையில்லை என்று தாட்சண்யம் இன்றி கூறினர்.
எல்லோரும் கைவிரித்த நிலையில்தான் பார்சிலோனா கிளப்பில் இருந்து மெஸ்ஸிக்கு ஆதரவுக் கரம் நீண்டது. பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநரான கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். ஆனால் அப்படிச் செய்ய வேண்டுமானால் ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக ஆடவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இது தொடர்பாக உடனே ஒப்பந்தம் போட இரு தரப்பும் முடிவெடுத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அப்போது சரியான காகிதம் கிடைக்கவில்லை. இதனால் அப்போது கையில் கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். (அந்த பேப்பர் நாப்கினை இன்னும் பிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி). இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தந்தையுடன் ஸ்பெயினுக்கு புறப்பட்டார் மெஸ்ஸி. மேஸ்ஸியின் அப்பாவுக்கு அந்த கிளப்பிலேயே ஒரு வேலையும் வழங்கப்பட்டது.
முதல் சில நாட்கள் பார்சிலோனா கிளப்பின் மற்ற இயக்குநர்கள் மெஸ்ஸியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஹார்மோன் குறைபாடு உடைய ஒருவரை தண்டமாக அணியில் சுமப்பதாக அவர்கள் கருதினார்கள். மேலும் முதல் ஒரு வருடத்துக்கு கால்பந்து போட்டிகளில் ஆட மெஸ்ஸிக்கு போதுமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. புதிய இடம், புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று சூழ்நிலையோடு ஒட்டிப்போக மெஸ்ஸிக்கு பல சங்கடங்கள் இருந்தன. ஆனால் பெரிய கால்பந்து வீரனாக வேண்டும் என்ற கனவுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டார். இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு சிகிச்சைகளும் நடந்தன. இதன் விளைவாக மற்றவர்களைப் போலவே சராசரி உயரம் பெற்ற மெஸ்ஸி, கால்பந்து உலகில் மற்றவர்களை விட மிக உயர்ந்த இடத்துக்கு செல்லத் தொடங்கினார்.
பார்சிலோனாவின் யூத் அகாடமியில் சில ஆண்டுகாலம் பயிற்சியில் ஈடுபட்ட மெஸ்ஸி, 2005-ம் ஆண்டில்தான் அந்த கிளப்பின் சீனியர் அணியில் இடம் பிடித்தார். இவர் தடம் பதித்த பிறகு பார்சிலோனா அணி பல போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியது. மெஸ்ஸியின் பரபரப்பான ஆட்டம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தது.
பார்சிலோனாவுக்காக ஆடிய அதே நேரத்தில், தன் சொந்த நாடான அர்ஜென்டினா அணியிலும் மெஸ்ஸி ஜொலித்தார். அந்நாட்டின் முன்னாள் கால்பந்து ஜாம்பவானான மரடோனாவின் செல்லப்பிள்ளையாக பெயரெடுத்தார். அவரது பயிற்சியால் கூர்தீட்டப்பட்டார். 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மரடோனா பயிற்சியாளராகவும், மெஸ்ஸி முன்னணி வீரராகவும் களம் இறங்கினர். இந்த இருவரின் ஜோடியை ‘மெஸ்ஸிடோனா’ என்று பெயரிட்டு உலகமே கொண்டாடியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தர போராடினார். ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்று கோப்பையை தவறவிட்டது அர்ஜெண்டினா. மனமுடைந்து போனார் மெஸ்ஸி. இதைத் தொடர்ந்து கோபா அமெரிக்கா கோப்பையிலும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா தோற்க, விரக்தியின் விளிம்புக்கே சென்றார். இனி சர்வதேச போட்டிகளில் ஆடுவதில்லை என்று துக்கத்துடன் அறிவித்தார்.
ரசிகர்களின் வற்புறுத்தலால் மீண்டும் அணிக்கு திரும்பிய மெஸ்ஸி, தனி ஒருவராக போராடி அர்ஜெண்டினா அணியை உலகக் கோப்பைக்கு தகுதிபெற வைத்துள்ளார். கடந்த 2 முறை விட்டதை இம்முறை எப்படியும் பிடிக்கவேண்டும் என்ற உத்வேகத்துடன் ரஷ்யாவில் கால் பதிக்கிறார் மெஸ்ஸி. அவரது கனவு நனவாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments:
Post a Comment