Powered By Blogger

Friday, June 29, 2018

‘சக்டா எக்ஸ்பிரஸ்’ - -ஜுலன் கோஸ்வாமியின் கிரிக்கெட் பயணம்



சிறுவயதில் தபால் தலைகளைச் சேகரிப்பதென்றால் ஜுலன் கோஸ்வாமிக்கு மிகவும் பிடிக்கும். பழங்கால தபால் தலைகள், பல்வேறு நாடுகளின் தபால் தலைகள் என்று தேடிப்பிடித்து ஒரு புத்தகத்தில் ஒட்டிவைப்பார். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவற்றை ஆர்வமாகக் காட்டுவார். ஆனால் இன்று இந்திய அரசே ஜுலன் கோஸ்வாமிக்கு தபால் தலையை வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம் கிரிக்கெட். பெண்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்தி இதுவரை எந்த சர்வதேச வீராங்கனையும் படைக்காத சாதனையைப் படைத்துள்ளார் ஜுலன்.
கொல்கத்தாவில் இருந்து 58 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சக்டாதான் (Chakdah) ஜுலன் கோஸ்வாமியின் சொந்த ஊர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த அவருக்கு டிவி மூலமாகத்தான் கிரிக்கெட் அறிமுகமானது . “அப்போதெல்லாம் விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட் ஆகியவற்றை மட்டும்தான் தூர்தர்சனில் அதிகம் ஒளிபரப்புவார்கள். எங்கள் வீட்டில் அக்கம்பக்கத்தினர் எல்லாம் பெரும் கூட்டமாக சேர்ந்துகொண்டு அந்த ஆட்டங்களைப் பார்ப்பார்கள். கபில்தேவ் விக்கெட் வீழ்த்தினால் வீடே அதிரும். முதலில் எனக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் இல்லாவிட்டாலும், கபில்தேவ் மீது இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. கபில்தேவைப் போல் பந்து வீசுவதாக நினைத்துக்கொண்டு ‘தத்தக்கா பித்தக்கா’ என்று ஓடி பந்தை எறிவேன். வீட்டில் உள்ளவர்கள் சிரிப்பார்கள். அப்படி சின்ன வயதில் கபில்தேவ் மூலம் கிரிக்கெட் ஆசை என் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்துவிட்டது” என்கிறார் ஜுலன்.
ஜுலன் மனதில் கபில்தேவ் போட்ட கிரிக்கெட் விதை, 1987-ல் நடந்த பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டியின்போது முளைவிட்டது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் பால் கேர்ள்களாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளைப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பந்தைப் பொறுக்கிப் போடும் வாய்ப்பு ஜுலனுக்கும் பள்ளி மூலம் கிடைத்தது. சும்மாவே ஆடும் கால்களுக்கு சலங்கையை வேறு கட்டிவிட்டால் கேட்க வேண்டுமா என்ன? ஜுலன் மனதில் கிரிக்கெட் ஆசை கற்பூரமாய் பற்றிக்கொண்டது.
இதைத்தொடர்ந்து ஜுலன் வளர வளர கிரிக்கெட் மீது அவர் கொண்டிருந்த ஆசையும் மரமாய் வளர்ந்தது. 14 வயதில் மற்ற குழந்தைகளெல்லாம் டாக்டராகவும், இஞ்ஜினீயராகவும் ஆசைப்பட, ஜுலன் கொஞ்சம் வித்தியாசமாக வேகப்பந்து வீச்சாளராக ஆசைப்பட்டார். ஆனால் அதற்கு பல தடைகள் இருந்தன. முதல் தடை பெற்றோர்கள். எல்லா பெற்றோரையும் போலவே தங்கள் மகள் விளையாட்டை விட்டு படிப்பில் மட்டும் கெட்டிக்காரியாய் இருந்தால் போதும் என்பதே ஜுலனின் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாய் இருந்தது. அதனால் ஜுலன் கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வதை அவர்கள் முதலில் ஏற்கவில்லை. நீண்ட போராட்டத்துக்கு பிறகு அம்மாவின் ஆதரவைப் பெற்று கிரிக்கெட் பயிற்சிக்கு செல்ல சம்மதம் வாங்கினார் ஜுலன்.
பயிற்சி மையத்தின் வடிவத்தில் அடுத்த சவால் காத்திருந்தது. இப்போது இருப்பதைப் போல ஊருக்கு பயிற்சி மையமெல்லாம் அப்போது இல்லை. ஜுலனின் சொந்த ஊரில் இருந்து 58 கிலோ மீட்டர் தூரத்தில் கொல்கத்தாவில் பயிற்சி மையம் இருந்தது. வாரத்துக்கு 3 நாட்கள் பயிற்சி. காலை 7.30 மணிக்கு பயிற்சி மையத்தில் இருக்க வேண்டுமானால் காலை 5.30க்கு ஜுலன் ரயிலைப் பிடிக்க வேண்டும். பிறகு பஸ்ஸைப் பிடித்து நீண்ட அலைச்சலுக்கு பிறகுதான் பயிற்சி மையத்தை அடைய முடியும். கிரிக்கெட் மீதுள்ள ஆசையால் அதற்கும் ஜுலன் தயாரானார்.
அப்பகுதியில் உள்ள மற்ற பெண் குழந்தைகளுக்கு ஜுலனைப் போன்று கிரிக்கெட் ஆர்வம் இல்லாதது அவருக்கு மூன்றாவது சவாலாக இருந்தது. இதைச் சந்திக்க, ஆண் குழந்தைகளுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட முடிவெடுத்தார் ஜுலன். தொடக்கத்தில் அவர்களுக்கு நிகராக ஜுலனால் ஆட முடியவில்லை. என்னதான் வேகமாக ஓடிவந்து பந்தைப் போட்டாலும், ஒரு பூவை வீசுவதைப் போல் அவர் பந்து வீசியதால் மற்றவர்கள் கேலி செய்தார்கள். ஆனால் அதையும் கடந்து ஜுலன் அவர்களுடன் தொடர்ந்து கிரிக்கெட் ஆடினார்.
ஆனால் அவர்களின் கிண்டலெல்லாம் சில நாட்களுக்குத்தான். பயிற்சி மையத்தில் பட்டை தீட்டப்பட்ட பின்னர், ஜுலனின் பந்துவீச்சு வேகத்தைக் கண்டு உள்ளூர் சிறுவர்கள் அரண்டு போனார்கள். ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ என்று செல்லப் பெயர் வைக்கும் அளவுக்கு அவரது பந்துவீச்சு ஆக்ரோஷமாக மாறியது.
உள்ளூர் கிரிக்கெட்டைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் என்று கடந்து 19 வயதில் இந்திய அணியில் இடம் பிடித்தார் ஜுலன் கோஸ்வாமி. 2002-ம் ஆண்டு சென்னையில் உள்ள குரு நானக் கல்லூரி மைதானத்தில்தான் ஜுலன் எக்ஸ்பிரஸ் எனும் ‘சக்டா எக்ஸ்பிரஸ்’ சர்வதேச கிரிக்கெட்டில் வேகமெடுத்தது. இப்போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனையான கரோலின் அட்கின்ஸின் விக்கெட்டை வீழ்த்தி தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார் ஜுலன் கோஸ்வாமி.
அன்றிலிருந்து இன்று வரை மகளிர் கிரிக்கெட் உலகில் முடிசூடா ராணியாக, பேட்டிங் வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் ஜுலன் கோஸ்வாமி. 16 ஆண்டுகளில் 169 ஒருநாள் போட்டிகளில் 203 விக்கெட்களை வீழ்த்திய ஜுலன் கோஸ்வாமி இன்னும் 120 கிலோமீட்டர் வேகத்துக்கு குறையாமல் பந்துவீசி எதிரணி வீராங்கனைகளைத் திணறடிக்கிறார். 10 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்களையும், 64 டி 20 போட்டிகளில் 55 விக்கெட்களையும் வீழ்த்தி பெண்கள் நம்பர் ஒன் பந்துவீச்சாளராகத் திகழ்கிறார் ஜுலன் கோஸ்வாமி.
ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருது, அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, இவவை எல்லாவற்றுக்கும் மேலாக தபால் தலை வெளியீடு என்று பல கவுரவங்கள் ஜுலனைத் தேடி வந்துள்ளன. ஆனால் இன்னும் அவர் திருப்தியடையவில்லை. இந்திய கிரிக்கெட்டுக்காக தன் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும் என்பதே அவரது ஆசை. அதற்காகவே இன்னும் திருமணம்கூட செய்துகொள்ளாமல் இருக்கிறார்.
“நான் கிரிக்கெட்டை காதலிக்கிறேன். அதுவும் எனக்கு தேவையான புகழைக் கொடுத்துவிட்டது. எனக்கும் கிரிக்கெட்டுக்கும் நடுவில் யாரும் வருவதை விரும்பவில்லை அதற்காகவே திருமணத்தைக்கூட தள்ளிப் போடுகிறேன். என் முழு நேரத்தையும் கிர்க்க்கெட்டுக்காக மட்டும் ஒதுக்க விரும்புகிறேன். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுதான் திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பேன்” என்கிறார் ஜுலன் கோஸ்வாமி. எந்த வெற்றிக்கு பின்பும் இதுபோன்ற தியாகங்கள் நிச்சயம் இருக்கும்.

No comments:

Post a Comment