Powered By Blogger

Friday, January 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 14-18

 டிசம்பர்  14

டேபிள் டென்னிஸ் வளர்ந்த கதை
டேபிள் டென்னிஸை, டென்னிஸ் விளையாட்டின் தம்பி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரு விளையாட்டுகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. டென்னிஸ் விளையாட்டு பிரபலமாகத் தொடங்கிய நேரத்தில், மழைக்காலத்தில் ஆடுவதற்கு ஏற்ற வகையில் உள் அரங்கில் அதேபோன்ற விளையாட்டு ஒன்றை உருவாக்கும் எண்ணம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் டேபிள் டென்னிஸ். மைதானத்தில் டென்னிஸ் போட்டியை ஆடுவதைப் போலவே  மேஜையின் மீது டென்னிஸ் கோர்ட் அமைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது.  இதற்கு  ‘பிங் பாங்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
1800-களில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெ.ஜேக்ஸ் அண்ட் சன் என்ற நிறுவனம் டேபிள் டென்னிஸ் விளையாட்டை கண்டுபிடித்ததாக சொல்லப்பட்டாலும், 1887-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பார்க்கர் என்பவரும், 1890-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஃபாஸ்டர் என்பவரும் இவ்விளையாட்டை படிப்படியாக வளர்த்து, இதற்கென்று விதிகளை உருவாக்கியுள்ளனர்.  ஆரம்பத்தில் ரப்பர் பந்துகளைக் கொண்டு டேபிள் டென்னிஸ் விளையாடப்பட்டது.  ஆனால் இந்தப் பந்துகள் மேஜையின் மீது பட்டு அதிக உயரத்துக்கு எழும்பியதால் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு கார்க் பந்துகளை வைத்து டேபிள் டென்னிஸ் ஆடியுள்ளனர்.  ஆனால் அவை  மேஜையில் பட்டு எழும்பவே இல்லை. இதைத்தொடர்ந்து செல்லுலாய்ட் பந்துகளை அக்காலத்தில் பயன்படுத்தினர்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஓரளவு புகழ்பெற்ற நிலையில், 1901-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி, முதலாவது  சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி லண்டனில் உள்ள  ராயல் அக்யூரியம் அரங்கில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  
----------------------------------------------------------------------------------------------------------- 
டிசம்பர் 15
மாமா தந்த நம்பிக்கை
கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக விளங்கிய பாய்சங் பூட்டியாவின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 15).
 இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அப்படித்தான் இந்திய கால்பந்துக்கு பாய்சங் பூட்டியா. கால்பந்து விளையாட்டில் இந்திய இளைஞர்களாலும் நிறைய சாதிக்க முடியும் என்ற  நம்பிக்கையை ஊட்டியவர் பாய்சங் பூட்டியா.
  மலைகள் நிறைந்த சிக்கிம் மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில்  பிறந்த  பாய்சங் பூட்டியாவுக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பள்ளிக்காலத்தில் கால்பந்து, பாட்மிண்டன் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் அவர் சிறந்த வீரராக இருந்தார். குறிப்பாக கால்பந்து விளையாட்டில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிப்பை விட்டு தங்கள்  மகன் விளையாட்டிலேயே அதிக ஆர்வத்துடன் இருக்கிறானே என்று அவரது பெற்றோர் கவலைப்பட்டனர்.
 இந்த சூழலில், பூட்டியாவின் மாமாதான் அவரது பெற்றோருக்கு தைரியம் கொடுத்தார். விளையாட்டிலும் பூட்டியாவால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். இந்தச் சூழலில் பூட்டியாவின் 9-வது வயதிலேயே அவருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி, கால்பந்து பயிற்சி அளிக்க முன்வந்தது இந்திய விளையாட்டு ஆணையம். இதைத்தொடர்ந்து பல்வேறு கிளப்புகளுக்காக  ஆடிய பூட்டியா, இந்திய அணியில் தனது 19-வது வயதில் நுழைந்தார்.
 இந்தியாவுக்காக 100 கால்பந்து போட்டிகளுக்கு மேல் ஆடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் பூட்டியா.  கால்பந்து விளையாட்டில் அவர் செய்துள்ள சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சிக்கிமில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்துக்கு பூட்டியாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
டிசம்பர் 16
டென்னிஸ் உலகை ஆண்ட இரட்டையர்கள்
டென்னிஸ் போட்டி என்றாலே அது அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்குமானது. இந்தியர்களால் அதில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.   இந்த மாயையை உடைத்து எறிந்தவர்கள் லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி இரட்டையர்கள்.
 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இந்த இரட்டையர் ஜோடி, தங்கள் வெற்றிப் பயணத்தை 1997-ம் ஆண்டு சென்னையில் தொடங்கியது. அந்த ஆண்டில் முதல் முறையாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற பயஸ் - பூபதி  ஜோடி, அதே ஆண்டில்   6 ஏடிபி டென்னிஸ்  தொடர்களில் வெற்றியை ருசித்தது. அடுத்ததாக 1998-ல் 3 முறை  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் அரை இறுதியை எட்டியது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இந்த ஜோடி 1999-ம்  ஆண்டில் டென்னிஸ் உலகில் உச்சம் தொட்டது. அந்த ஆண்டில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், பட்டம் வென்று, இந்தியர்களாலும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வெல்ல முடியும் என்று நிரூபித்தது. அதன்பிறகு  சில ஆண்டுகளுக்கு டென்னிஸ் உலகில் இவர்களின் ராஜ்ஜியம்தான்.  
டென்னிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த இந்த ஜோடி அடுத்தடுத்து 16 போட்டிகளில் பட்டம் வென்று வெற்றிக்கொடியை பறக்கவிட்டது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஏடிபி போட்டிகள் மட்டுமின்றி, இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெற்று, உலகின் நம்பர் ஒன் ஜோடியாக உருவெடுத்தது.
இந்த நேரத்தில், யாருடைய கண் பட்டதோ, இந்த வெற்றிக் கூட்டணி பிரிந்தது. இனி சேர்ந்து விளையாடுவதில்லை என்று இருவரும் முடிவெடுத்தனர். இந்த ஜோடி பிரிந்தாலும் இவர்கள் தந்த வெற்றிகள் என்றும் நம் நினைவில் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
டிசம்பர்  17

இந்தியாவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளும்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று (டிசம்பர் 17)  தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி ஆடும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.
பொதுவாக டெஸ்ட் போட்டிகள் காலையில் தொடங்கி மாலையில் சூரிய வெளிச்சம் மங்குவதற்குள் முடிந்துவிடும். இப்போட்டிகளில்  சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும்.  அதற்கு நேரெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் மதிய நேரத்தில் தொடங்கி இரவில் முடியும். இதில்  சிவப்பு நிற பந்துகளுக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும்.

இளஞ்சிவப்பு நிறப் பந்துகள், சிவப்பு நிற பந்துகளைவிட அதிக கடினமாக இருப்பதுடன், அதிக அளவில் ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அதே நேரத்தில் இவை அத்தனை எளிதில் கடினத் தன்மையை இழக்காது என்பதால்,  சுழற்பந்து வீச்சாளர்கள்  விக்கெட் எடுப்பது கடினம்.  மேலும் பேட்ஸ்மேன்களுக்கும்  பந்து வருவதை கணிப்பது கடினமாக இருக்கும்.

இப்படி சில சிக்கல்கள் இருப்பதால்தான் இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் தவிர்த்து வந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பே பகலிரவு டெஸ்ட் போட்டிகள்  ஆரம்பித்தாலும், இந்திய அணி இதைச் சற்று தள்ளியே வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக வைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்தது. இப்போட்டியில் இந்தியா வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி தந்த நம்பிக்கையால், இந்தியா இன்று ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.
---------------------------------------------------------

  டிசம்பர் 18
நண்பன் செய்த தியாகம்
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இன்று அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு இணையாக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.   கால்பந்து போட்டிகளில்  700-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள ரொனால்டோவின் ஆண்டு வருமானம் ரூ.516 கோடி. உலக வரைபடத்தில் சிறு புள்ளியாகத் தெரியும் போர்ச்சுக்கல் நாட்டை கால்பந்து விளையாட்டில் வல்லரசாக மாற்றிய பெருமையும் ரொனால்டோவுக்கு உண்டு.

  ரொனால்டோவின் அப்பாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனை ஒரு நடிகராக மிகவும் பிடிக்கும். அதனால் 1985-ம் ஆண்டில் தனக்கு மகன் பிறந்தபோது ரீகனின்  பெயரை அடிப்படையாக வைத்து  மகனுக்கு ரொனால்டோ என்று பெயரிட்டார். சிறு வயதில் பள்ளிக்கு செல்வதென்றால் ரொனால்டோவுக்கு கொஞ்சமும் பிடிக்காது.  முன்கோபமும் அதிகம்.  ஒருமுறை ஆசிரியர் தன்னை அவமரியாதையாக நடத்தியதால், அவர் மீது நாற்காலியை வீசியுள்ளார். அதனால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரொனால்டோ, கால்பந்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சிறுவயதில், லிஸ்பனில் உள்ள கால்பந்து அகாடமி ஒன்றில் சேர ரொனால்டோவும், அவரது நண்பர் ஆல்பர்ட் ஃபாண்டிரோவும் விண்ணப்பித்துள்ளனர். இதில் ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், ஆல்பர்டுக்கு இடம் கிடைத்துள்ளது. தன்னைவிட ரொனால்டோதான் சிறந்த வீரர் என்பதில் உறுதியாக இருந்த ஆல்பர்ட், அகாடமியைச் சேர்ந்தவர்களிடம் சென்று, தனக்கு பதிலாக ரொனால்டோவை அகாடமியில் சேர்க்குமாறு கூறியுள்ளார். அன்றைய தினம் ஆல்பர்ட் தனக்காக தியாகம் செய்யாவிட்டால், தன்னால் இத்தனை பெரிய கால்பந்து வீரனாக வந்திருக்க முடியாது என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார் ரொனால்டோ. இதற்கு பிரதி உபகாரமாக ஆல்பர்ட்டுக்கு வீடு, கார் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த ரொனால்டோ, நிறைய பணத்தையும் கொடுத்துள்ளார்.

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 23-26

 டிசம்பர் 23

கால்பந்தும் 10-ம் எண் ஜெர்ஸியும்
கால்பந்து விளையாட்டில் வீரர்களை தூரத்தில் இருந்து அடையாளம் காண ரசிகர்களுக்கு உதவுபவை, அவர்கள்  அணியும் ஜெர்ஸிகளின் (மேல்சட்டை) எண்கள். கால்பந்து விளையாட்டைப் போலவே, இந்த ஜெர்ஸிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.    அதிலும் பீலே, மரடோனா, பிளாட்டினி, மெஸ்சி உள்ளிட்டவர்கள் அணியும் 10-ம் எண் கொண்ட ஜெர்ஸிக்கள் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவை.
ஆரம்ப காலகட்டத்தில் கால்பந்து போட்டிகளில் ஆடும் வீரர்களின் ஜெர்ஸிகளுக்கு எண் கிடையாது. இந்த வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியாதான். 1911-ம் ஆண்டில் சிட்னி லீசார்ட் மற்றும் எச்எம்எஸ் பவர்ஃபுல் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில்தான்  முதன்முதலாக பிரத்யேக எண்களைக் கொண்ட ஜெர்ஸிகளை வீரர்கள் அணியத் தொடங்கினார்கள். அதன்பிறகு 1923-ல் அர்ஜென்டினாவும், 1924-ல் அமெரிக்காவும், 1928-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தும் வீரர்களின் எண்களைக் குறிக்கும் ஜெர்ஸிகளை அறிமுகப்படுத்தின.
கால்பந்து போட்டிகளின்போது வீரர்களின் பெயர்களை வைத்து அணியின் பயிற்சியாளர் திட்டங்களை வகுப்பது அத்தனை எளிதாக இருக்காது என்பதால், அவர்கள் ஆடும் நிலைக்கு ஏற்ப பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டன.  குறிப்பாக கோல்கீப்பருக்கு 1-ம் எண்ணும், தற்காப்பு ஆட்டக்காரர்களுக்கு அதற்கடுத்த எண்களும், தாக்குதல் ஆட்டக்காரர்களுக்கு அதற்கு அடுத்தகட்ட எண்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில்  எதிராளியின் கோல் எல்லைக்குள் நுழைந்து தாக்கும் வீரருக்கு ஒவ்வொரு அணியும் 10-ம் எண் ஜெர்ஸியை வழங்கியது.
இந்த வகையில் பீலே, மரடோனா, மெஸ்ஸி ஆகியோர் எதிரணியை தாக்கும் முன்கள  வீரர் எனும் பொறுப்பை ஏற்றதால்,  அவர்களுக்கு 10-ம் எண் கொண்ட ஜெர்ஸிகள் வழங்கப்பட்டன.  அதிக கோல்களை அடிக்கும் வாய்ப்பு, இந்த எண்கொண்ட ஜெர்ஸியை அணியும் வீரர்களுக்கு இருப்பதால் கால்பந்தில் நட்சத்திர அந்தஸ்தைக் கொண்ட ஜெர்ஸியாக 10-ம் எண் ஜெர்ஸி உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 24
ஈட்டியில் எட்டிய சாதனை
ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு எட்டாமல் இருந்த தங்கப் பதக்கத்தை எட்ட வைத்தவர் என்ற பெருமை நீரஜ் சோப்ராவுக்கு உண்டு. 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, 2017-ம் ஆண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்த  பெருமை நீரஜ் சோப்ராவுக்கு உண்டு. இந்த தங்க மகனின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 24).
ஹரியாணாவில் உள்ள காண்டிரா கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாக நீரஜ் சோப்ரா பிறந்தார். நீரஜ்ஜின் பாட்டிக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்பதால், எந்த நேரமும் ஏதாவது பலகாரங்களைச் செய்து அவருக்கு கொடுத்துவந்தார். இதனால் சிறு வயதிலேயே நீரஜ் சோப்ராவின் உடல் எடை கூடியது. 11 வயதில் 80 கிலோ எடைகொண்ட சிறுவனாக  நீரஜ் வளர்ந்தார்.
இந்நிலையில்   எடையைக் குறைப்பதற்காக தினமும் மைதானத்தில் நீரஜ்ஜை ஓடச் செய்வார் அவரது தந்தை சதீஷ் குமார். ஒரு நாள் அப்படி ஓடிக்கொண்டு இருந்தபோது பானிபட்டைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீரரான  ஜெய்வீர். நீரஜ்ஜின் உடல் வாகு ஈட்டி எற்வதற்கு ஏற்றதாய் இருந்ததால் அவருக்கு பயிற்சி அளிக்க விரும்பினார். அவரின் தந்தையிடம் இதற்கு ஒப்புதல் கேட்க, அவரும் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய்வீரின் மேற்பார்வையில் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா, உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை பல வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஈட்டி எறியும் போட்டிகளில் மிகவும் வல்லவரான, 100 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை எறிந்தவரான உவே ஹான், தற்போது நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவரது மேற்பார்வையில் வரும் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 25
லார்ட்ஸ் மைதானத்தில் பழிவாங்கிய கங்குலி
கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக யாராவது செயல்பட்டால், அப்படிச் செய்தவர்களுக்கு அவர்களின் வழியிலேயே பதில் சொல்வது முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பாணி. அதனாலேயே அவர் தாதா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கங்குலியின் அதிரடிக்கு உதாரணமாக லார்ட்ஸ் மைதானத்தில், அவர் தன் சட்டையைக் கழற்றி சுற்றியதைச் சொல்லலாம்.
2002-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மும்பையின் வாங்கடே மைதானத்தில் இந்த தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது.  இந்திய அணி ஒரு ஓவரில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழலில்  கடைசி ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப், வெற்றிக்குத் தேவையான ரன்களைக் கொடுக்காமல் இந்தியாவைத் தோற்கடித்தார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வாங்கடே மைதானத்தில் தன் சட்டையை கழற்றி சுழற்றினார்.
பிளிண்டாஃபின் இந்தச் செயல் இந்தியாவுக்கு அவமானம் என்று கருதிய கங்குலி, அதற்கு பழிவாங்கக் காத்திருந்தார்.  அதே ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில்,  இங்கிலாந்தை இந்தியா வெற்றிகொள்ள அதே ஆவேசத்துடன் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. இங்கிலாந்துக்காரர்களால் இதை ஜீரணிக்கை முடியவில்லை.
 “கிரிக்கெட்டின் மெக்காவாக நாங்கள் கருதும், லார்ட்ஸ் மைதானத்தில், மரியாதை இல்லாமல் எப்படி சட்டையைக் கழற்றலாம்?” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜெப்ரி பாய்காட்  கங்குலியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கங்குலி, “உங்களுக்கு வேண்டுமானால் லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்காவாக இருக்கலாம். ஆனால்   மும்பை மைதானம்தான்  எங்களின் கிரிக்கெட் மெக்கா” என்றார்.
---------------------------------------------------------
 டிசம்பர் 26
தூக்கத்தை இழந்து சாதித்த சிந்து
பேட்மிண்டனில் இந்தியாவின் புகழை ஒலிம்பிக் வரை  பறக்கவிட்டவர் பி.வி.சிந்து.  இன்றைய தினம் சாய்னா நெவாலைவிட இந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக பி.வி.சிந்துதான் திகழ்கிறார். ஆனால் இதே சிந்து, சாய்னாவுக்காக ஒரு காலத்தில் விட்டுக் கொடுக்கவும் வேண்டிவந்துள்ளது.  
சிறுவயதில் பாட்மிண்டனில் தனது கவனம் பதிய காரணமாக இருந்த கோபிசந்திடமே பயிற்சி பெற சிந்து விரும்பினார். இதைத்தொடர்ந்து சிந்துவுக்கு 10 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் கோபிசந்தை அணுகினர்.  அவரது பயிற்சி மையம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கச்சி பவுளி என்ற இடத்தில் அமைந்திருந்தது.
“நான் இப்போது சாய்னா நெவால் என்ற பெண்ணுக்கு தினமும் காலை 6.30 மணி முதல் பயிற்சியளித்து வருகிறேன். அதனால் அந்த நேரத்தில் பயிற்சி அளிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் உங்கள் மகளை காலை 4.30 மணிக்கு அழைத்து வரலாம். நான் தினமும் 2 மணிநேரம் பயிற்சி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் கோபிசந்த்.
சிந்துவின் வீடு இருந்தது செகந்திராபாதில். அங்கிருந்து கச்சி பவுளிக்கு வர அவர் 27 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டும். காலை 4.30க்கு பயிற்சிக்கு வரவேண்டுமென்றால் 3 மணிக்கே எழுந்து தயாராக வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் மகளால் தினந்தோறும் பயிற்சிக்கு வர முடியுமா என்று சிந்துவின் பெற்றோர் தயங்கினர். ஆனால் சிந்துவோ, தன்னால் முடியும் என்று துணிந்து நின்றார். பல மாதங்கள் காலை 3 மணிக்கே எழுந்து 27 கிலோமீட்டர்கள் தூரம் பயணம் செய்து பயிற்சிக்கு வந்தார்.  இப்படி கடும் சவாலை மீறி  பயிற்சிபெற்ற சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, தன் குருநாதர் கோபிசந்துக்கு  சாய்னாவை விட அதிக கவுரவம் பெற்றுத் தந்தார்.

விளையாட்டாய் சில கதைகல் - ஜனவரி 10-13

 ஜனவரி 10

வறுமையை வென்ற மீராபாய் சானு
இந்தியாவின் ஏழ்மை மிகுந்த மாநிலங்களில் ஒன்று மணிப்பூர் என்றால் அந்த மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று சாய்கோம் கிரிடி மீடியுடையது. அவருக்கு கடைக்குட்டியாய் பிறந்த மகள்தான் பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை அள்ளித்தரும் மீராபாய் சானு. இந்தியாவுக்காக போட்டிகளில் அதிக அளவு எடையைத் தூக்கும் மீராபாய் சானு, சிறுவயதில் தங்கள் வீட்டின் வறுமையால் காட்டில் இருந்து விறகுக் கட்டைகளைத் தூக்கி வந்துள்ளார்.
இதுபற்றி கூறும் அவரது அண்ணன் சனதோம்பா, “வீட்டில் ஏழ்மை குடியிருந்ததால் அதை ஈடுகட்ட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றோம். நிதிநிலையை சீரமைக்க அம்மா சிறிய அளவில் ஒரு பெட்டிக் கடையை நடத்தினார். வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் சானுவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான சானு என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள்.  இன்று அவள் அதிக எடையைத் தூக்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.
 வறுமை நிறைந்த சிறுபிராயத்தில்,  மீராபாயை பளுதுக்கும் போட்டிக்கு கவர்ந்திழுத்தவர் குஞ்சராணி தேவி. மணிப்பூரைச் சேர்ந்த இவர், பளுதூக்கும் போட்டியில் சாதனைகளைப் படைக்க, அதைப் பார்த்து மீராபாய் சானுவுக்கும் இதே விளையாட்டில் ஆர்வம் பிறந்தது. கால்பந்து வீரரான அவரது அண்ணன் சனதோம்பாவும் அதற்கு ஆதரவளித்தார். ஆனால் பயிற்சி மையமோ அவரது வீட்டில் இருந்து 60 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. இதற்காக தினமும் ரயிலில் பயணிக்க வேண்டி இருந்தது.
தன் ஆரம்ப நாட்களைப் பற்றி கூறும் மீராபாய் சானு, “பயிற்சி மையத்தில் சேர்ந்ததும் நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது” என்கிறார். ஆனால் இந்த வறுமையால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. அனைத்தையும் வென்றவர் இன்று இந்தியாவின் தங்க மங்கையாக மின்னுகிறார்.
---------------------------------
ஜனவரி 11
இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்
கிரிக்கெட்டில் இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 11). இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில் (குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில்) ராகுல் டிராவிட் ஆடிய காலகட்டத்தில், அவரை அவுட் ஆக்க எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். இதனாலேயே அவர் இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவுக்காக 164 டெஸ்ட் போட்டிகளில்   13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களையும் ராகுல் டிராவிட் குவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் வளர்ந்தது பெங்களூருவாக இருந்தாலும், அவர் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் அப்பா சரத், கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்துள்ளார். அடிக்கடி அவர் ஆடும் போட்டிகளை நேரில் காணச் சென்ற வகையில், ராகுல் டிராவிட்டையும் கிரிக்கெட் ஆசை தொற்றிக் கொண்டுள்ளது. டிராவிட்டுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். சிறுவயதில் ஒருமுறை தனக்கு மிகவும் பிடித்த சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக பெங்களூரு கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றுள்ளார் டிராவிட். ஆனால் துரதிருஷ்டவசமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்தப் போட்டியில் கவாஸ்கர் முதல் பந்திலேயே அவுட் ஆக ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
பொதுவாகவே ராகுல் டிராவிட் என்றால் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்பவர், அதிரடியான ஷாட்களை அடிக்காதவர் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் 2003-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெறும் 22 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.  
 வீரராக கிரிக்கெட் போட்டியில் இந்து ஓய்வு பெற்றாலும், ஒரு பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பொறுப்பு வகித்து பல இளம் பேட்ஸ்மேன்களை டிராவிட் உருவாக்கி வருகிறார். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சுப்மான் கில் என்று அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் இன்று இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
-------------------------------------------------
ஜனவரி 12
குழந்தைகளின் காதலர்
டென்னிஸ் உலகின் இப்போதைய நம்பர் ஒன் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச். செர்பிய வீரரான இவர், இதுவரை 17  கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  
நம்ம ஊர் டெண்டுல்கர் எப்படி சிறுவயது குழந்தையாக இருந்தபோதே கிரிக்கெட் பேட் பிடித்தாரோ, அதேபோல் 4 வயதிலேயே டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்க தொடங்கிவிட்டார் ஜோகோவிச். சிறுவயதில் ஜோகோவிச்சின் வீட்டைச் சுற்றி பல டென்னிஸ் பயிற்சி மையங்கள் இருந்ததால், அவருக்கு சிறு வயதிலேயே இவ்விளையாட்டின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வயதிலேயே ஜோகோவிச்சுக்கு  டென்னிஸ் ராக்கெட்டை வாங்கி பரிசளித்துள்ளார் அவரது அப்பா. இதன்பிறகு அவரது 6-வது வயதில் ஜெலீனா ஜெனிக் என்ற முன்னாள் டென்னிஸ் நட்சத்திரத்திடம் பயிற்சி பெற அனுப்பியுள்ளார். ஜோகோவிச்சுக்கு முன்னதாக மோனிகா செலஸுக்கு ஜெலீனா ஜெனிக் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெலீனாவிடம் 6 ஆண்டுகள் பயிற்சி பெற்ற ஜோகோவிச், அதன் பிறகு ஜூனியர் டென்னிஸ் போட்டிகளிலும், பின்னர் மூத்தவர்களுக்கான டென்னிஸ் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துள்ளார்.
டென்னிஸைப் போலவே, பல மொழிகளைப் பேசுவதிலும் ஜோகோவிச் வல்லவர். தனது தாய்மொழியான செர்பியன் மொழியைப் போலவே, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளையும்  ஜோகோவிச் நன்றாகப் பேசுவார்.  டென்னிஸ் விளையாட்டில் ஜோகோவிச்சுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும், அவருக்கு பிடித்த டென்னிஸ் வீரர் பீட் சாம்ப்ராஸ்.
டென்னிஸ் விளையாட்டுக்கு அடுத்தபடியாக ஜோகோவிச்சுக்கு அதிகம் பிடித்த விஷயம் குழந்தைகள். 2007-ம் ஆண்டில் தொடங்கிய ‘நோவாக் ஜோகோவிச் அறக்கட்டளை என்ற அமைப்பின் பெயரில், போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார். ஒருமுறை டென்னிச் போட்டியில் வென்றபோது தனக்கு கிடைத்த மொத்த பரிசுப் பணத்தையும் அவர்களின் நலனுக்காக நன்கொடையாகக் கொடுத்தார்.
--------------------------------
ஜனவரி 13
நிறைவேறிய தந்தையின் கனவு
 சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று  இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். இன்றைக்கு பல்வேறு  போட்டிகளில் சதீஷ்குமார் பதக்கங்களை குவிக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவரது அப்பா சிவலிங்கம்.  
  ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிவலிங்கம், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி வரை முன்னேறினார். ஆனால் அடுத்த கட்டத்துக்கு அவரால் முன்னேற முடியவில்லை. இந்த நிலையில்   சிறுவயதில் பள்ளியில் நடந்த பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க விரும்புவதாக சிவலிங்கத்திடம், அவரது மகன் சதீஷ்குமார் கூறியதும் மகிழ்ச்சி அடைந்தார். சுமார் ஒரு வாரம் பயிற்சி அளித்தார். அந்த ஒரு வார பயிற்சியிலேயே தன் முதல் போட்டியில் 40 கிலோ எடையைத் தூக்கி அசத்தியுள்ளார் சதீஷ்குமார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவலிங்கம், சதீஷ்குமாரை அருகில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தார். அத்துடன்  தானும் பயிற்சி கொடுத்துள்ளார்.
படிப்படியாக வளர்ந்து தேசிய அளவில் பதக்கங்களை வென்ற சதீஷ்குமாருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்ததுடன் பாட்டியாலாவில் தங்கி பயிற்சி பெற வாய்ப்பும் கிடைத்தது. பொதுவாக பலரும் விளையாட்டு கோட்டாவில் வேலை கிடைத்ததுடன் விளையாட்டை விட்டுவிடுவார்கள். ஆனால் சதீஷ்குமார் அப்படிச் செய்யவில்லை. தன் குடும்பத்தைக்கூட மறந்து பயிற்சி மையமே கதியென்று கிடந்தார்.  இப்படி குடும்பத்தையும் மறந்து கடுமையாக பயிற்சி பெற்றதன் பலன்தான், காமன்வெல்த் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களாக வாங்கிக் குவிக்கிறார் சதீஷ்குமார்.  அத்துடன் தன் தந்தையின் கனவையும் நிறைவேற்றி வருகிறார்.

விளையாட்டாய் சில கதைகள் - ஜனவரி 5 - 9

 ஜனவரி 5

ஒற்றைக் கண் புலி
 21 வயதிலேயே  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று, மிக இளம் வயதில் அணித் தலைவரான  இந்தியர் என்ற சாதனையைப் படைத்த மன்சூர் அலிகான் பட்டோடியின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 5).
செல்வச் செழிப்புமிக்க பட்டோடி ராஜகுடும்பத்தில் 1941-ம் ஆண்டில் பிறந்த மன்சூர் அலிகான், இளவயதில் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார். 150 அறைகள், மைதானங்கள் குதிரை லாயங்கள் கொண்ட அவரது அரண்மனையில் 100-க்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள் இருந்தனர். இதில் மன்சூர் அலிகான் பட்டோடியை கவனிப்பதற்கென்றே 8 வேலைக்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அலிகார் மற்றும் டேராடூனில் பள்ளிப் படிப்பை முடித்த பட்டோடி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
படிக்கும் காலத்திலேயே கிரிக்கெட் ஆர்வம் கொண்டவராக விளங்கிய பட்டோடி, 1957-ம் ஆண்டுமுதல் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார். 1961-ம் ஆண்டில் ஜூலை மாதம்  நடந்த ஒரு விபத்தில், பட்டோடி தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். இதைத்தொடர்ந்து அவரால் மீண்டும்  கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் தனது தன்னம்பிக்கையால் அதைப் பொய்யாக்கிய பட்டோடி,  அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடினார்.
இந்தியாவுக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பட்டோடி, ஒரு கண்ணை வைத்துக்கொண்டே 2,793 ரன்களைக் குவித்தார். கிரிக்கெட் உலகில் டைகர் என செல்லமாக அழைக்கப்பட்ட பட்டோடி 2011-ம் ஆண்டு காலமானார்.  கண்களின் முக்கியத்துவத்தை அறிந்தவராக இருந்ததால், இறப்புக்கு பிறகு தனது ஒரு கண்ணை தானமாக வழங்க வேண்டும் என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.
----------------------------------
ஜனவரி 6
தேர்வுக்காக காத்திருந்த கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை பெற்றுத்தந்த ஆல்ரவுண்ட் நாயகன் கபில்தேவின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 6). இந்த நாளில் இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய அவர் பட்ட பாட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
 1970-களின் இறுதிக்காலத்தில் ஹரியாணா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கபில்தேவ் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். ஆனால் இப்படி சிறப்பாக பந்துவீசியும், இந்திய அணிக்குள்  இடம்பிடிக்க முடியவில்லை.  இந்த சூழ்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும்  இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நடப்பதைக் கேள்விப்பட்டு அங்கு  சென்றுள்ளார் கபில்தேவ்.
இந்திய அணியின் அப்போதைய தேர்வுக்குழு தலைவரான ராஜ்சிங் துங்கர்பூரின் வீட்டைக் கண்டுபிடித்து, அவர் முன் போய் நின்றார்.  அந்தச் சமயத்தில் துங்கர்பூர்  தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருந்தார். “அவசரமாக வெளியில் செல்கிறேன். வந்த பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.  
மதியத்தில் வீட்டை விட்டு கிளம்பிய துங்கர்பூர், அணியை தேர்வு செய்துவிட்டு இரவு வெகு நேரம் கழித்துதான் வந்தார். வாசலில் அவருக்காக அப்போதும் கபில்தேவ் காத்திருந்தார்.  கபில்தேவைப் பற்றியும், அவரது பந்துவீசும் திறனைப் பற்றியும்  ஏற்கெனவே அறிந்திருந்த துங்கர்பூரின் மனதை, அவர் தனக்காக பல மணிநேரம் சாலையில் காத்திருந்த சம்பவம் உருக்கியது.   உடனடியாக கிரிக்கெட் வாரிய தலைவருக்கு போன் போட்டு, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியினருடன் கபில்தேவின் பெயரையும் சேர்க்கச் சொன்னார். இப்படி போராடி அணிக்குள் இடம்பிடித்த கபில்தேவ், இந்த தொடரில் சிறப்பாக ஆட, அடுத்ததாக பாகிஸ்தான் செல்லும் அதிகாரபூர்வ டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். 1978-ம் ஆண்டில் நடந்த இந்த தொடரில் தன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் கபில்தேவ் மிரட்ட, அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார்.
-----------------------------------------------------------------
நவம்பர் 7
இந்திய மல்யுத்தத்தின் முன்னோடி
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளித்தரும் விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை மல்யுத்தம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ்பெற்ற விளையாட்டாக இருந்துள்ளது.   பீமன்,  ஜராசந்தன், துரியோதனன் போன்ற இதிகாச புருஷர்கள் மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதாக கூறப்படுகிறது.
இப்படி பண்டைய காலத்தில் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருந்த மல்யுத்தத்தை மீண்டும் இந்தியாவில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை  ஜதீந்திர சரண் குஹோவைச் சேரும். 1892-ம் ஆண்டில் கொல்கத்தா நகரில் மல்யுத்த வீரர்களைக் கொண்ட பரம்பரையில் ஜதீந்திர சரண் குஹோ பிறந்தார். ஜதீந்திராவை அவரது  அப்பா  ராம் சரண்,  ‘கோபர்’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியதால், பின்னாளில் அனைவராலும் அவர்  ‘கோபர் குஹோ’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
சிறுவயதில் மல்யுத்தத்தில் ஆர்வம் இல்லாதவராகத்தான் கோபர் குஹோ இருந்துள்ளார். பின்னாளில் அவரது குடும்பத்தினர், தங்கள் பரம்பரைக்கு புகழ்பெற்றுத் தந்த மல்யுத்தத்தில் கோபரும் பயிற்சி பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனால் 15 வயது முதல் தனது மாமாவான கேத்ராசரணிடம் கோபர் பயிற்சி பெறத் தொடங்கினார்.
நீண்டகால பயிற்சியைத் தொடர்ந்து 1919-ம் ஆண்டுமுதல் தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற கோபர் குஹோ, வெற்றி மீது வெற்றியைக் குவித்தார். எல்லாவற்றுக்கும் உச்சமாக 1921-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக லைட் ஹெவிவெயிட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.
கோபர் குஹோவின் இந்த வெற்றி இந்தியர்களிடையே, குறிப்பாக வடமாநில இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. கோபர் குஹோவும், தனக்கென்று புதிய பாணி மல்யுத்தத்தை உருவாக்கி அதில்  இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இதனாலேயே இந்திய மல்யுத்தத்தின் முன்னோடியாக  அவர் கருதப்படுகிறார்.
---------------------------------------
ஜனவரி 8
சத்யனின் ஒலிம்பிக் கனவு
இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரனின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 8).
சென்னையில் உள்ள மத்தியதர குடும்பம் ஒன்றில் பிறந்த சத்யனுக்கு, டேபிள் டென்னிஸ் விளையாட்டு பிடித்துப் போக முக்கிய காரணம் அதன் வேகம். மேஜையின் இருபுறமும் வீரர்கள் துள்ளிக் குதித்தபடி ‘பட் – படார்’ என்று  மின்னல் வேகத்தில் பந்தை திருப்பியடிப்பதை பார்த்த சத்யன், சிறு வயதிலேயே தானும் ஒரு டேபிள் டென்னிச் வீரனாகத்தான் உருவாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஆனால் டேபிள் டென்னிஸ்,  இந்தியாவில் புகழ்பெற்ற விளையாட்டாக இல்லாததால், இதில் தங்கள் மகனால் புகழ்பெற முடியுமா என்று அவரது பெற்றோர் யோசித்துள்ளனர். ஆனால் டேபிள் டென்னிஸில்தான்  தனது எதிர்காலம் என்பதில் சத்யன் பிடிவாதமாக இருக்க, வேறு வழியின்றி அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் டேபிள் டென்னிஸில் பெரிதாக சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்ததால் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இப்படி ஒருபுறம் தனக்காக டேபிள் டென்னிஸ், மறுபுறம் பெற்றோருக்காக படிப்பு என்று சத்யனின் சிறுவயது தொடர்ந்துள்ளது.
 ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக சென்றுகொண்டிருந்த  சத்யனின் பயணம், 2016-ம் ஆண்டில் பெல்ஜியம் ஓபன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து வேகமெடுத்தது. இதைத்தொடர்ந்து பல டேபிள் டென்னிஸ் தொடர்களில் பதக்கம் வென்ற சத்யன், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதல் 30 வீரர்களுக்குள் இடம்பிடித்த சத்யன், இச்சாதனையை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இப்போது ஒலிம்ப்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் ஆசையுடன் பயிற்சிபெற்று வருகிறார். அவரது ஆசை நிறைவேறட்டும்.
---------------------------------
ஜனவரி 9
இந்தியாவின் புதிய தங்க மங்கை
பி.டி.உஷாவுக்குப் பிறகு ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கொடியை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஹிமா தாஸின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 9).  
ஹிமா தாஸின் அப்பா ரொஞ்சித் தாஸ் ஒரு ஏழை விவசாயி.  மேற்கொண்டு வருமானம் ஈட்ட உள்ளூர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.  அவருடன் தினமும் பயிற்சிக்கு சென்றதால் ஹிமா தாஸும் கால்பந்து வீராங்கனையாக உருவெடுத்தார்.
 இந்த நிலையில்தான் சம்சுல் ஹக் என்ற ஆசிரியர்,  உள்ளூர் கால்பந்து போட்டியில் ஹிமா தாஸ் வேகமாக ஓடுவதைப் பார்த்துள்ளார்.   ‘இந்த அளவுக்கு வேகமாக ஓடும் பெண்ணுக்கு பயிற்சி அளித்தால், ஓட்டப் பந்தயத்தில் இன்னும் சிறப்பாக வருவாரே’ என்ற எண்ணத்தில் ஹிமாவை மாநில தடகள சங்க நிர்வாகிகளிடம் அழைத்துச் சென்றார். அங்கு ஹிமாவை ஓடவைத்து அவர்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை ஓட்டத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளரான நிப்பான் தாஸின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.
இத்தனை நாட்களாக அவரைப் போன்ற வீராங்கனைக்காகத்தானே காத்திருந்தோம் என்ற எண்ணத்தில் அவரை வாரி அணைத்துக்கொண்டார். ஹிமா தாஸை குவாஹாட்டியில் உள்ள பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க முன்வந்தார்.
முதலில் ஹிமாவின் பெற்றோர்  இதற்கு சம்மதிக்கவில்லை.  ஆனால் பயிற்சியாளர் நீண்ட விவாதத்துக்கு பிறகு அவர்களை சம்மதிக்க வைத்தார்.அன்றிலிருந்து ஹிமா தாஸின் வாழ்க்கை மாறியது.  உள்ளூரில் சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற அவர், குவாஹாட்டியில் விளையாட்டு ஆணையத்தின் நேரடி பராமரிப்பில் உள்ள உயர்தர சின்தடிக் டிராக்கில் பயிற்சி பெறத் தொடங்கினார். அந்தப் பயிற்சியின் விளைவாக இன்று சர்வதேச ஓட்டப் பந்தயங்களில் இந்தியாவுக்காக பதக்கங்களைக் குவித்து வருகிறார்.

விளையாட்டாய் சில கதைகள் - ஜனவரி 1-4

 ஜனவரி 1

அனாதை இல்லத்தில் இருந்து ஆசிய விளையாட்டுக்கு…
இன்றைய காலகட்டத்தில் சர்வதேச போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் பல பதக்கங்களை வென்று வருகிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்று டிங்கோ சிங்கை சொல்லலாம். 1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் வென்ற தங்கப் பதக்கம்தான் இந்தியாவின்  பல குத்துச்சண்டை வீரர்களுக்கு  நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த நம்பிக்கையைக் கொடுத்த டிங்கோ சிங்கின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 1).
குத்துச்சண்டை களத்தைப் போலவே, தனது வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்தவர் டிங்கோ சிங். மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டிங்கோ சிங். வறுமை காரணமாக டிங்கோ சிங்கின் பெற்றோரால், அவரை வளர்க்க முடியவில்லை. இதனால் சிறு வயதிலேயே அவரை ஒரு அனாதை இல்லத்தில்  சேர்த்துள்ளனர். போஷாக்கான ஆகாரங்கள் ஏதும் இல்லாமலேயே அங்கு வளர்ந்தார் டிங்கோ சிங்.
அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த காலத்தில், அங்குள்ள மாணவர்கள் மத்தியில் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இந்தக் கட்டத்தில் தன்னை நிரூபிக்க குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டார் டிங்கோ சிங். இதுதான் பின்னாளில் அவர் ஒரு பிரபல குத்துச்சண்டை வீரராக விதையாக இருந்தது. அங்கிருந்து தேசிய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்த டிங்கோ சிங், பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். 1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பின்னர் கடுமையாக போராடி அணியில் இடம்பெற்ற அவர், இதில் தங்கப் பதக்கம் வென்றார். பின்னாளில் இந்திய கடற்படையிலும் சேர்ந்து தேச சேவையில் ஈடுபட்டார்.
குத்துச்சண்டை களங்களில் இந்தியாவுக்காக போராடிவந்த இவர், இப்போது புற்று நோயுடன் போராடி வருகிறார். குத்துச்சண்டை களத்தைப் போலவே இந்த களத்திலும் அவர் வாகை சூடட்டும்.

ஜனவரி 2
ஒலிம்பிக்கும் கிரிக்கெட் போட்டியும்
2028-ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் ஒரு ஆட்டமாக சேர்ப்பதற்கான  முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில்கூட இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நவீன ஒலிம்பிக்கின் தொடக்க காலத்தில் 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது  பலருக்கும் தெரியாது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்தும், தற்போது கிரிக்கெட்டில் அதிகம் ஈடுபாடு காட்டாத பிரான்சும் மட்டுமே மோதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும் இதில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த 2 அணிகளும் கழன்றுகொண்டன. இப்போட்டியில் இங்கிலாந்து அணி கலந்துகொண்டாலும், அதன் முன்னணி டெஸ்ட் வீரர்கள் யாரும்  அணியில் இடம்பெறவில்லை. மாறாக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவந்த வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து அணி உருவாக்கப்பட்டது.
 இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்துள்ளன. இத்தனைக்கும் முழுத் தகுதியுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியை நடத்தாமல், சைக்கிள் பந்தயங்களை நடத்தும் மைதானத்தில் இப்போட்டியை நடத்தியுள்ளனர்.  
தற்போது உள்ளதைப் போல் 11 வீரர்களைக் கொண்ட அணிகளாக இல்லாமல், 12 வீரர்களைக் கொண்ட அணிகளாக இங்கிலாந்தும், பிரான்சும் களத்தில் குதித்துள்ளன. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 117 ரன்களையும், பிரான்ஸ் 78 ரன்களையும் குவித்துள்ளன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என ஆட்டத்தை டிக்ளேர் செய்ய, அடுத்து ஆடிய பிரான்ஸ் 26 ரன்களில் மொத்தமாக சுருண்டுள்ளது. இப்படியாக   மொத்தம் 366 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து அணி தங்கம் வென்றது.
ஜனவ்ரி 3
பந்தய கார்களின் காதலர்
பார்முலா 1 கார் பந்தயம் என்றதும் நம் நினைவுக்கு வரும் பெயர் மைக்கேல் ஷுமேக்கர். 1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 என 7 ஆண்டுகள் பார்முலா 1 கார் பந்தயத்தில் வெற்றிக் கோப்பையை வசமாக்கியவர் மைக்கேல் ஷுமேக்கர்.
ஜெர்மனியில் உள்ள ஹர்ட் நகரில் 1969-ம் ஆண்டு பிறந்த ஷுமேக்கருக்கு சிறுவயது முதலே கார் பந்தயத்தில் காதலை ஏற்படுத்தியவர்கள் அவரது பெற்றோர். ஷுமேக்கருக்கு 6 வயதாக இருக்கும்போதே, சிறு குழந்தைகளுக்கான கார்ட்டிங் பந்தயத்தில் அவரை பங்கேற்கச் செய்து, அறிமுகப்படுத்தி உள்ளனர். அன்று தொடங்கிய கார் காதல், அவரை பல உச்சங்களுக்கு அழைத்துச் சென்றது.
பந்தயக் கார்களின் காதலராக இருந்த ஷுமேக்கர், ஒருபோதும் சொகுசுக் கார்களை விரும்பியதில்லை. அவற்ற ஓட்ட அவர் அதிக ஆர்வம் காட்டியதில்லை. மாறாக எளிமையான வகை பியட் கார்களையே அவர் விரும்பினார்.
 எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கவும் வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட ஷுமேக்கர், ஒருமுறை ஒரே செக்கில் 10 மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்தார்.
பொதுவாக பந்தய வீரர்கள் மழைக்காலத்தை விரும்புவதில்லை. இந்த சமயத்தில் கார் பந்தயம் நடந்தால், டயர்கள் வழுக்கிச் சென்று விபத்து ஏற்படுமோ என அவர்கள் பயப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாக மழைக்காலத்தில் பந்தயத்தில் ஈடுபடுவதை ஷுமேக்கர் விரும்பினார். இப்பந்தயங்களில் வெற்றியும் பெற்றார். அதனால் அவரை ‘ரெயின் மாஸ்டர்’ என்றும்,  ‘ரெயின் கிங்’ என்றும்  ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.  
 ஆபத்தான கார் பந்தயங்களை சுலபமாக கையாண்ட ஷுமேக்கர், 2013-ம் ஆண்டு    ஆல்ப்ஸ் மலைப்பகுதியில்  பனிச்சறுக்கு விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டு, கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அதில்ருந்து அவர் கொஞ்சம் மீண்டாலும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
 ---------------------------------------------------------------
ஜனவரி 4
ஒலிம்பிக்கில்  வென்ற தங்கமகன்
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்த முதல் இந்தியர் என்ற பெருமை அபினவ் பிந்திராவுக்கு உள்ளது.  
 1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி டேராடூனில் பிறந்த அபினவ் பிந்திராவுக்கு மற்ற வீரர்களுக்கு கிடைக்காத ஒரு வசதி இருந்தது. அது பணவசதி. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் புழங்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக அவரது தந்தை இருந்தார். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலின் மீது ஆர்வமாக இருந்த அபினவுக்கு அவரது தந்தை ஒரு பொம்மைத் துப்பாக்கியை பரிசளிக்க, அதிலேயே குறிபார்த்து சுடத் தொடங்கினார். அப்போதுதான் தன் மகனுக்கு ஆர்வத்துடன் திறமையும் இருக்கிறது என்பதை அவரது தந்தை உணர்ந்தார்.

ஒரு துப்பாக்கி சுடும் வீரரின் முக்கிய தேவைகளில் ஒன்று நல்ல கண் பார்வை. அப்போதுதான் அவரால் நன்றாக குறிபார்த்து சுட முடியும் ஆனால் அபினவ் பிந்திராவுக்கு சிறுவயதிலேயே பார்வையில் குறைபாடு இருந்தது.   ‘மைனஸ் 4’ பார்வை குறைபாடு கொண்ட சூழலில்தான், தான் ஒரு துப்பாக்கி சுடும் வீரனாக விரும்புவதாக தன் தந்தையிடம்  அபினவ் பிந்திரா கூறியுள்ளார்.
தன் மகனுக்கு துல்லியமான பார்வை இல்லை என்றாலும் அவர் விரும்பியதைச் செய்து முடிக்க அபினவின் தந்தை அபிஜித் பிந்திரா உறுதுணையாக இருந்தார்.  துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததுடன், வீட்டிலேயே அவன் பயிற்சிபெற வசதியாக ஒரு சிறிய பயிற்சி மையத்தையும் அமைத்துக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அமித் பட்டாசார்ஜீ, லெப்டினென்ட் கர்னல் தில்லான் ஆகியோரிடம் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார் அபினவ் பிந்திரா. கேட்டதை வாங்கிக் கொடுக்கும் அப்பா, சிறப்பாக வழிகாட்டும் குருநாதர்கள் என்று கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அபினவ் பிந்திரா துப்பாக்கி சுடும் பிரிவில் சிறகடித்து பறந்தார்.


அன்று தந்தை கொடுத்த ஊக்கம்தான் நமக்கு அபினவ் பிந்திரா என்ற துப்பாக்கி சுடும் நாயகனைத் தந்தது. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமே வெல்லாமல் இருந்த இந்தியாவின் ஏக்கமும் தீர்ந்தது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஏர் ரைபிள் பிரிவில் அவர் வென்ற தங்கப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற ஒரே தங்கப் பதக்கம்.

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 27-ஜனவரி 1

 டிசம்பர் - 27

ஒற்றைக்காலில் நிற்கும் நடுவர்
விளையாட்டு வீரர்களுக்கு இணையாக நடுவர்களாலும் ரசிகர்களைக் கவர முடியும் என்பதை நிரூபித்தவரான கிரிக்கெட் நடுவர்  டேவிட் ஷெப்பேர்டின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 27).  கிரிக்கெட் போட்டிகளின்போது பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தால்,  விரல்களால் நாட்டியமாடியவாறு   கைகளை  அசைக்கும் ஷெப்பேர்டின் பாணியை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
1940-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள டெவோன் எனும் ஊரில் பிறந்த டேவிட் ஷெப்பேர்ட், 1983-ம் ஆண்டுமுதல் 2003-ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். இதில் 6 உலகக் கோப்பை தொடர்களும் அடங்கும். தனது காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான போட்டிகளில் நடுவராக இருந்துள்ள டேவிட் ஷெப்பேர்ட், தவறான முறையில் அவுட் கொடுத்ததாக எந்த வீரரும் புகார் கூறியதில்லை. அந்த அளவுக்கு துல்லியமான முடிவுகளை அவர் மைதானத்தில் எடுத்துள்ளார்.
 பேட்டிங் செய்யும் அணிகள் 111, 222, 333, 444 என்று ஒரே எண் கொண்ட ரன்களை எடுக்கும்போதெல்லாம் ஒற்றைக்காலில் மைதானத்தில் நிற்பது இவரது மற்றொரு பாணி. இதுபற்றி கேட்டபோது அந்த எண்கள் அதிர்ஷ்டமிலாதவை என்று கருதியதால், தான் அவ்வாறு நின்றதாக கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் ஆட வருவதற்கு முன்பு, இங்கிலாந்தில் உள்ள குளூகேஸ்டர்ஷயர் அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் ஷெப்பேர்ட் ஆடியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 10,672 ரன்களையும்  குவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பேட்டிங்குக்கான பயிற்சி மையத்தை தொடங்கவே டேவிட் ஷெப்பேர்ட் முதலில் நினைத்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில் அவரைச் சந்தித்த நண்பர் ஒருவர், “கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தை ரசிக்க ஏற்ற இடம், நடுவர்கள்  நிற்கும் இடம்தான். அங்கிருந்துதான் வீரர்களின் ஒவ்வொரு ஷாட்டையும் அருகில் இருந்து ரசிக்க முடியும்” என்று கூறியுள்ளார். இதனாலேயே கிரிக்கெட் ரசிகரான டேவிட் ஷெப்பேர்ட், நடுவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------
டிசம்பர் 28
இந்திய விளையாட்டின் சூப்பர் மேன்
இந்திய விளையாட்டுத் துறையின் சூப்பர் மேன் என்று எம்.ஜே.கோபாலனைச் சொல்லலாம். ஒரே நேரத்தில் இந்திய ஹாக்கி அணியிலும், இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்ற பெருமை அவருடையது. இப்படி ஒரே நேரத்தில் 2 விளையாட்டுகளுக்கான அணியிலும் இடம்பெற்ற அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
1909-ம் ஆண்டு தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொரப்பாக்கத்தில்  எம்.ஜே.கோபாலன் (மொரப்பாக்கம் ஜோஸ்யம் கோபாலன்) பிறந்தார்.   கோபாலனுக்கு சிறு வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர், சென்னை திருவல்லிக்கேணிக்கு இடம்பெயர்ந்தனர்.  சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளில் கோபாலன் வல்லவராக இருந்தார்.
இளம் வயதில் 1930-ம் ஆண்டு மெட்ராஸ் அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், தனது ஆற்றலால் 1933-34-ம் ஆண்டு சீசனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட தேர்வு செய்யப்பட்டார். கொல்கத்தாவில் நடந்த இப்போட்டியில் அவர் 39 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியாவின் முதலாவது ரஞ்சி கோப்பை தொடரின் முதலாவது பந்தை வீசிய பெருமையும் இவருக்கு உண்டு. ஹாக்கி விளையாட்டிலும் சிறந்தவரான இவர்  இந்திய அணிக்காக 39 ஹாக்கி போட்டிகளில் ஆடியுள்ளார்.
1936-ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஹாக்கி அணிக்கு கோபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் தேர்வானார். ஹாக்கியை விட கிரிக்கெட்டை அதிகம் விரும்பிய கோபாலன், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த தொடரில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இந்தியாவுக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியபோதிலும், 78 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அவர், 2,916 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் தனது பந்துவீச்சால் 194 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
-------------------------------------------------------
டிசம்பர் 29
கபில்தேவுக்கு முட்டுக்கொடுத்த கிர்மானி
தோனிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் சையத் கிர்மானியின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 29).
ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான சையத் கிர்மானி, சென்னையில் பிறந்து பிற்காலத்தில் பெங்களூருவில் செட்டில் ஆனவர். இந்திய அணிக்கு 1971-ம் ஆண்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முதல் போட்டியில் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பு இவருக்கு 1976-ம் ஆண்டில்தான் கிடைத்துள்ளது. அதுவரை அப்போதைய விக்கெட் கீப்பரான பரூக் இஞ்ஜினீயருக்கு சப்ஸ்டிடியூட்டாகவே அணியில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கிர்மானி கவலைப்படவில்லை. இதற்கு காரணம் தூக்கம். இந்திய அணியில் தூக்கப்பிரியராக கருதப்பட்ட கிர்மானி, அணி பரபரப்பாய் பேட்டிங் செய்யும்போதும் குறட்டை விட்டு தூங்குவாராம். தன்னுடைய புத்தகம் ஒன்றில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், “இங்கிலாந்து தொடரின்போது ஒரு நாள் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஆலன் நாட்  எப்படி  கீப்பிங் செய்கிறார் என்பதை கவனிக்குமாறு அணியின் மேனேஜர் ராம் பிரகாஷ் மெஹ்ரா, கிர்மானியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததும் கிர்மானி டிரெஸ்ஸிங் ரூமில் தூங்கச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மேனேஜர், கிர்மானி எங்கே என்று கேட்க, ‘சைட் ஸ்கிரீன் அருகில் நின்று அவர் ஆலன் நாட்டின் கீப்பிங்கை படித்துக்கொண்டு இருக்கிறார்’ என்று சொல்லி காப்பாற்றினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
  இந்தியாவுக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் 2,759 ரன்களையும், 49 ஒருநாள் போட்டிகளில்  373 ரன்களையும் அவர் குவித்துள்ளார். உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே க்கு எதிராக கபில்தேவ் 175 ரன்கள் குவித்த ஆட்டத்தில் அவருடன் 6-வது விக்கெட் ஜோடியாக 126 ரன்களுக்கு முட்டுக்கொடுத்து நின்றவர் கிர்மானி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 126 ரன்களில் கிர்மானி எடுத்த ரன்கள் 24.      
------------------------------------------------------------------
டிசம்பர் 30
முகமது அலியின் வாரிசு
குத்துச்சண்டை போட்டிகளில், அப்பாவுக்கு தான் ஒன்றும் குறைந்தவரில்லை என்பதை நிரூபித்த லைலா அலியின் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 30). குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய முகமது அலியின் மகள்தான் லைலா அலி.  உலக சூப்பர்  மிடில்வெயிட் சாம்பியன் பட்டம் உள்ளிட்ட பல போட்டிகளில் பட்டம் வென்றவரான லைலா அலி, தான் பங்கேற்ற 24 போட்டிகளில் ஒன்றில்கூட எதிராளியிடம் தோற்றதில்லை.
தான் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தாலும், தனது  மகள் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவதை ஒருபோதும் முகமது அலி விரும்பியதில்லை. சவால்கள்  நிறைந்த அந்தத் துறைக்கு தனது மகள் லைலா பொருத்தமற்றவர் என்றுதான் முகமது அலி கருதியிருந்தார். முதல் போட்டியில் லைலா வென்ற பிறகுதான் இந்த கருத்தை முகமது அலி மாற்றிக்கொண்டார்.
இதுபற்றி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் லைலா அலி கூறியிருப்பதாவது:
ஆரம்பத்தில் என் அப்பாவுக்கு தெரியாமல் நான் ரகசியமாகத்தான் குத்துச் சண்டையை கற்று வந்தேன். சில நாட்களுக்கு பின் அவர் அதுபற்றி தெரிந்துகொண்டார். இருந்தாலும் ஏதும் சொல்லவில்லை. ஆனால் நான் தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக திட்டமிடுவதைப் பற்றிக்  கேள்விப்பட்டதும், அவர் கவலையானார்.   ‘குத்துச் சண்டை களத்தில் உன்னை யாராவது நாக் அவுட் செய்தால் என்ன செய்வாய்’ என்று கேட்டார். அதற்கு நான், ‘அப்படி நாக் அவுட் செய்தாலும் உங்களைப் போல் மீண்டு வருவேன்’ என்று கூறினேன். இதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
  1999-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, என் முதல் குத்துச்சண்டை போட்டியில் நான் கலந்துகொண்டபோது, அப்போட்டியைக் காண அவர் வந்திருந்தார். நான் வெற்றி பெற்றதும், டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தவர், என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவரது பெருமிதத்தின் அளவை அந்த அணைப்பு உணர்த்தியது.
இவ்வாறு லைலா அலி கூறியுள்ளார்.
-----------------------------------------------------
டிசம்பர் 31
2020-ல் கிடைத்த நாயகன்
கரோனா வைரஸின் தாக்கத்தால் 2020-ம் ஆண்டில் மிகவும் பாதிக்கப்பட்ட துறை என்று விளையாட்டுத் துறையைக் கூறலாம். ஒலிம்பிக் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரை பல போட்டிகள் இந்த ஆண்டில் கரோனாவால் தடைபட்டன. அதனாலேயே  இந்த ஆண்டில் விளையாட்டுத்  துறையில் அதிக நாயகர்களும் உருவாகவில்லை.

ஆனால் இதையெல்லாம் கடந்து, இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் நாயகன் நடராஜன். இந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக யார்க்கர் மேல் யார்க்கர்களை வீசிய நடராஜன், இதனாலேயே ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட, அங்கும் சோடை போகாமல் விக்கெட்களை அள்ளி இந்தியாவின் வெற்றிக்கு துணைபுரிந்துள்ளார்.
தமிழகத்தில் சேலத்தை அடுத்துள்ள சின்னப்பம்பட்டிதான்  நடராஜனின் சொந்த ஊர். அப்பா தங்கராசு தறி வேலை பார்ப்பவர்.  அம்மா சாந்தா, தெருவோரத்தில் கோழிக்கடை வைத்திருந்தார்.  நடராஜனுக்கு   3 தங்கைகள், ஒரு தம்பி.   நடராஜனுக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது கனவு. வீட்டில் உள்ளவர்களோ, அவர்  படித்து முடித்து ஏதாவது வேலைக்கு சென்று  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்கள்.  இந்தச் சூழலில் உள்ளூர் கிரிக்கெட் கிளப்பை நடத்திவரும்,  ஜெயப்பிரகாஷ் என்பவர் நடராஜனுக்கு உதவ முன்வர, அவரது வாழ்க்கை பயணம் பிஎஸ்எல்வி ராக்கெட் போல் ஜிவ்வென வேகமெடுத்தது.
காயங்கள், தடைகள் என பல விஷயங்களைக் கடந்து வாழ்க்கையில் சாதித்துள்ளார் நடராஜன். பெருநகரங்கள் மட்டுமின்றி சிறு  கிராமங்களில் இருந்தும் நாயகர்களாக உயர்ந்தெழ முடியும் என்பதை நிரூபித்த நடராஜன், 2021-ல் மேலும் சாதிப்பார் என்று நம்புவோம்.