Powered By Blogger

Friday, January 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 14-18

 டிசம்பர்  14

டேபிள் டென்னிஸ் வளர்ந்த கதை
டேபிள் டென்னிஸை, டென்னிஸ் விளையாட்டின் தம்பி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இரு விளையாட்டுகளுக்கும் இடையே ஒற்றுமை உள்ளது. டென்னிஸ் விளையாட்டு பிரபலமாகத் தொடங்கிய நேரத்தில், மழைக்காலத்தில் ஆடுவதற்கு ஏற்ற வகையில் உள் அரங்கில் அதேபோன்ற விளையாட்டு ஒன்றை உருவாக்கும் எண்ணம் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்வத்தால் உருவாக்கப்பட்ட விளையாட்டுதான் டேபிள் டென்னிஸ். மைதானத்தில் டென்னிஸ் போட்டியை ஆடுவதைப் போலவே  மேஜையின் மீது டென்னிஸ் கோர்ட் அமைத்து இவ்விளையாட்டு ஆடப்படுகிறது.  இதற்கு  ‘பிங் பாங்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு.
1800-களில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெ.ஜேக்ஸ் அண்ட் சன் என்ற நிறுவனம் டேபிள் டென்னிஸ் விளையாட்டை கண்டுபிடித்ததாக சொல்லப்பட்டாலும், 1887-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பார்க்கர் என்பவரும், 1890-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் ஃபாஸ்டர் என்பவரும் இவ்விளையாட்டை படிப்படியாக வளர்த்து, இதற்கென்று விதிகளை உருவாக்கியுள்ளனர்.  ஆரம்பத்தில் ரப்பர் பந்துகளைக் கொண்டு டேபிள் டென்னிஸ் விளையாடப்பட்டது.  ஆனால் இந்தப் பந்துகள் மேஜையின் மீது பட்டு அதிக உயரத்துக்கு எழும்பியதால் வீரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு கார்க் பந்துகளை வைத்து டேபிள் டென்னிஸ் ஆடியுள்ளனர்.  ஆனால் அவை  மேஜையில் பட்டு எழும்பவே இல்லை. இதைத்தொடர்ந்து செல்லுலாய்ட் பந்துகளை அக்காலத்தில் பயன்படுத்தினர்.
டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஓரளவு புகழ்பெற்ற நிலையில், 1901-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி, முதலாவது  சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி லண்டனில் உள்ள  ராயல் அக்யூரியம் அரங்கில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  
----------------------------------------------------------------------------------------------------------- 
டிசம்பர் 15
மாமா தந்த நம்பிக்கை
கால்பந்து விளையாட்டில் இந்தியாவின் நம்பர் 1 வீரராக விளங்கிய பாய்சங் பூட்டியாவின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 15).
 இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் எப்படியோ, அப்படித்தான் இந்திய கால்பந்துக்கு பாய்சங் பூட்டியா. கால்பந்து விளையாட்டில் இந்திய இளைஞர்களாலும் நிறைய சாதிக்க முடியும் என்ற  நம்பிக்கையை ஊட்டியவர் பாய்சங் பூட்டியா.
  மலைகள் நிறைந்த சிக்கிம் மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில்  பிறந்த  பாய்சங் பூட்டியாவுக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம். பள்ளிக்காலத்தில் கால்பந்து, பாட்மிண்டன் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் அவர் சிறந்த வீரராக இருந்தார். குறிப்பாக கால்பந்து விளையாட்டில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிப்பை விட்டு தங்கள்  மகன் விளையாட்டிலேயே அதிக ஆர்வத்துடன் இருக்கிறானே என்று அவரது பெற்றோர் கவலைப்பட்டனர்.
 இந்த சூழலில், பூட்டியாவின் மாமாதான் அவரது பெற்றோருக்கு தைரியம் கொடுத்தார். விளையாட்டிலும் பூட்டியாவால் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். இந்தச் சூழலில் பூட்டியாவின் 9-வது வயதிலேயே அவருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி, கால்பந்து பயிற்சி அளிக்க முன்வந்தது இந்திய விளையாட்டு ஆணையம். இதைத்தொடர்ந்து பல்வேறு கிளப்புகளுக்காக  ஆடிய பூட்டியா, இந்திய அணியில் தனது 19-வது வயதில் நுழைந்தார்.
 இந்தியாவுக்காக 100 கால்பந்து போட்டிகளுக்கு மேல் ஆடிய வீரர் என்ற பெருமையைப் பெற்றவர் பூட்டியா.  கால்பந்து விளையாட்டில் அவர் செய்துள்ள சாதனைகளை கவுரவிக்கும் வகையில் சிக்கிமில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்துக்கு பூட்டியாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
டிசம்பர் 16
டென்னிஸ் உலகை ஆண்ட இரட்டையர்கள்
டென்னிஸ் போட்டி என்றாலே அது அமெரிக்கர்களுக்கும், ஐரோப்பியர்களுக்குமானது. இந்தியர்களால் அதில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாது என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது.   இந்த மாயையை உடைத்து எறிந்தவர்கள் லியாண்டர் பயஸ் – மகேஷ் பூபதி இரட்டையர்கள்.
 ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட இந்த இரட்டையர் ஜோடி, தங்கள் வெற்றிப் பயணத்தை 1997-ம் ஆண்டு சென்னையில் தொடங்கியது. அந்த ஆண்டில் முதல் முறையாக சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற பயஸ் - பூபதி  ஜோடி, அதே ஆண்டில்   6 ஏடிபி டென்னிஸ்  தொடர்களில் வெற்றியை ருசித்தது. அடுத்ததாக 1998-ல் 3 முறை  கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளின் அரை இறுதியை எட்டியது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இந்த ஜோடி 1999-ம்  ஆண்டில் டென்னிஸ் உலகில் உச்சம் தொட்டது. அந்த ஆண்டில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், பட்டம் வென்று, இந்தியர்களாலும் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வெல்ல முடியும் என்று நிரூபித்தது. அதன்பிறகு  சில ஆண்டுகளுக்கு டென்னிஸ் உலகில் இவர்களின் ராஜ்ஜியம்தான்.  
டென்னிஸ் உலகில் கொடிகட்டிப் பறந்த இந்த ஜோடி அடுத்தடுத்து 16 போட்டிகளில் பட்டம் வென்று வெற்றிக்கொடியை பறக்கவிட்டது. கிராண்ட் ஸ்லாம் போட்டிகள் மற்றும் ஏடிபி போட்டிகள் மட்டுமின்றி, இந்தியாவுக்காக ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் வெற்றி பெற்று, உலகின் நம்பர் ஒன் ஜோடியாக உருவெடுத்தது.
இந்த நேரத்தில், யாருடைய கண் பட்டதோ, இந்த வெற்றிக் கூட்டணி பிரிந்தது. இனி சேர்ந்து விளையாடுவதில்லை என்று இருவரும் முடிவெடுத்தனர். இந்த ஜோடி பிரிந்தாலும் இவர்கள் தந்த வெற்றிகள் என்றும் நம் நினைவில் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
டிசம்பர்  17

இந்தியாவும் பகலிரவு டெஸ்ட் போட்டிகளும்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று (டிசம்பர் 17)  தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி ஆடும் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.
பொதுவாக டெஸ்ட் போட்டிகள் காலையில் தொடங்கி மாலையில் சூரிய வெளிச்சம் மங்குவதற்குள் முடிந்துவிடும். இப்போட்டிகளில்  சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும்.  அதற்கு நேரெதிராக பகலிரவு டெஸ்ட் போட்டிகள் மதிய நேரத்தில் தொடங்கி இரவில் முடியும். இதில்  சிவப்பு நிற பந்துகளுக்கு பதிலாக இளஞ்சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும்.

இளஞ்சிவப்பு நிறப் பந்துகள், சிவப்பு நிற பந்துகளைவிட அதிக கடினமாக இருப்பதுடன், அதிக அளவில் ஸ்விங் ஆகி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அதே நேரத்தில் இவை அத்தனை எளிதில் கடினத் தன்மையை இழக்காது என்பதால்,  சுழற்பந்து வீச்சாளர்கள்  விக்கெட் எடுப்பது கடினம்.  மேலும் பேட்ஸ்மேன்களுக்கும்  பந்து வருவதை கணிப்பது கடினமாக இருக்கும்.

இப்படி சில சிக்கல்கள் இருப்பதால்தான் இந்திய அணி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் தவிர்த்து வந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்பே பகலிரவு டெஸ்ட் போட்டிகள்  ஆரம்பித்தாலும், இந்திய அணி இதைச் சற்று தள்ளியே வைத்திருந்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், முதல் முறையாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை பகலிரவு ஆட்டமாக வைத்துக்கொள்ள இந்தியா சம்மதித்தது. இப்போட்டியில் இந்தியா வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி தந்த நம்பிக்கையால், இந்தியா இன்று ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறது.
---------------------------------------------------------

  டிசம்பர் 18
நண்பன் செய்த தியாகம்
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இன்று அர்ஜென்டினாவின் மெஸ்ஸிக்கு இணையாக கருதப்படுபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.   கால்பந்து போட்டிகளில்  700-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள ரொனால்டோவின் ஆண்டு வருமானம் ரூ.516 கோடி. உலக வரைபடத்தில் சிறு புள்ளியாகத் தெரியும் போர்ச்சுக்கல் நாட்டை கால்பந்து விளையாட்டில் வல்லரசாக மாற்றிய பெருமையும் ரொனால்டோவுக்கு உண்டு.

  ரொனால்டோவின் அப்பாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனை ஒரு நடிகராக மிகவும் பிடிக்கும். அதனால் 1985-ம் ஆண்டில் தனக்கு மகன் பிறந்தபோது ரீகனின்  பெயரை அடிப்படையாக வைத்து  மகனுக்கு ரொனால்டோ என்று பெயரிட்டார். சிறு வயதில் பள்ளிக்கு செல்வதென்றால் ரொனால்டோவுக்கு கொஞ்சமும் பிடிக்காது.  முன்கோபமும் அதிகம்.  ஒருமுறை ஆசிரியர் தன்னை அவமரியாதையாக நடத்தியதால், அவர் மீது நாற்காலியை வீசியுள்ளார். அதனால் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட ரொனால்டோ, கால்பந்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார்.

சிறுவயதில், லிஸ்பனில் உள்ள கால்பந்து அகாடமி ஒன்றில் சேர ரொனால்டோவும், அவரது நண்பர் ஆல்பர்ட் ஃபாண்டிரோவும் விண்ணப்பித்துள்ளனர். இதில் ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்படாத நிலையில், ஆல்பர்டுக்கு இடம் கிடைத்துள்ளது. தன்னைவிட ரொனால்டோதான் சிறந்த வீரர் என்பதில் உறுதியாக இருந்த ஆல்பர்ட், அகாடமியைச் சேர்ந்தவர்களிடம் சென்று, தனக்கு பதிலாக ரொனால்டோவை அகாடமியில் சேர்க்குமாறு கூறியுள்ளார். அன்றைய தினம் ஆல்பர்ட் தனக்காக தியாகம் செய்யாவிட்டால், தன்னால் இத்தனை பெரிய கால்பந்து வீரனாக வந்திருக்க முடியாது என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார் ரொனால்டோ. இதற்கு பிரதி உபகாரமாக ஆல்பர்ட்டுக்கு வீடு, கார் ஆகியவற்றை வாங்கிக் கொடுத்த ரொனால்டோ, நிறைய பணத்தையும் கொடுத்துள்ளார்.

No comments:

Post a Comment