Powered By Blogger

Friday, January 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - ஜனவரி 5 - 9

 ஜனவரி 5

ஒற்றைக் கண் புலி
 21 வயதிலேயே  இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று, மிக இளம் வயதில் அணித் தலைவரான  இந்தியர் என்ற சாதனையைப் படைத்த மன்சூர் அலிகான் பட்டோடியின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 5).
செல்வச் செழிப்புமிக்க பட்டோடி ராஜகுடும்பத்தில் 1941-ம் ஆண்டில் பிறந்த மன்சூர் அலிகான், இளவயதில் மிகவும் வசதியான வாழ்க்கையை வாழ்ந்தார். 150 அறைகள், மைதானங்கள் குதிரை லாயங்கள் கொண்ட அவரது அரண்மனையில் 100-க்கும் மேற்பட்ட வேலைக்காரர்கள் இருந்தனர். இதில் மன்சூர் அலிகான் பட்டோடியை கவனிப்பதற்கென்றே 8 வேலைக்காரர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அலிகார் மற்றும் டேராடூனில் பள்ளிப் படிப்பை முடித்த பட்டோடி, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
படிக்கும் காலத்திலேயே கிரிக்கெட் ஆர்வம் கொண்டவராக விளங்கிய பட்டோடி, 1957-ம் ஆண்டுமுதல் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்தார். 1961-ம் ஆண்டில் ஜூலை மாதம்  நடந்த ஒரு விபத்தில், பட்டோடி தனது ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். இதைத்தொடர்ந்து அவரால் மீண்டும்  கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியாது என்றுதான் பலரும் கருதினர். ஆனால் தனது தன்னம்பிக்கையால் அதைப் பொய்யாக்கிய பட்டோடி,  அதே ஆண்டில் டிசம்பர் மாதம் இந்தியாவுக்காக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடினார்.
இந்தியாவுக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய பட்டோடி, ஒரு கண்ணை வைத்துக்கொண்டே 2,793 ரன்களைக் குவித்தார். கிரிக்கெட் உலகில் டைகர் என செல்லமாக அழைக்கப்பட்ட பட்டோடி 2011-ம் ஆண்டு காலமானார்.  கண்களின் முக்கியத்துவத்தை அறிந்தவராக இருந்ததால், இறப்புக்கு பிறகு தனது ஒரு கண்ணை தானமாக வழங்க வேண்டும் என்று அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.
----------------------------------
ஜனவரி 6
தேர்வுக்காக காத்திருந்த கபில்தேவ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பையை பெற்றுத்தந்த ஆல்ரவுண்ட் நாயகன் கபில்தேவின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 6). இந்த நாளில் இந்திய கிரிக்கெட் அணியில் நுழைய அவர் பட்ட பாட்டைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
 1970-களின் இறுதிக்காலத்தில் ஹரியாணா அணிக்காக உள்ளூர் போட்டிகளில் கபில்தேவ் சிறப்பாக பந்துவீசி வந்துள்ளார். ஆனால் இப்படி சிறப்பாக பந்துவீசியும், இந்திய அணிக்குள்  இடம்பிடிக்க முடியவில்லை.  இந்த சூழ்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்கா செல்லும்  இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பையில் நடப்பதைக் கேள்விப்பட்டு அங்கு  சென்றுள்ளார் கபில்தேவ்.
இந்திய அணியின் அப்போதைய தேர்வுக்குழு தலைவரான ராஜ்சிங் துங்கர்பூரின் வீட்டைக் கண்டுபிடித்து, அவர் முன் போய் நின்றார்.  அந்தச் சமயத்தில் துங்கர்பூர்  தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருந்தார். “அவசரமாக வெளியில் செல்கிறேன். வந்த பிறகு பேசலாம்” என்று கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றார்.  
மதியத்தில் வீட்டை விட்டு கிளம்பிய துங்கர்பூர், அணியை தேர்வு செய்துவிட்டு இரவு வெகு நேரம் கழித்துதான் வந்தார். வாசலில் அவருக்காக அப்போதும் கபில்தேவ் காத்திருந்தார்.  கபில்தேவைப் பற்றியும், அவரது பந்துவீசும் திறனைப் பற்றியும்  ஏற்கெனவே அறிந்திருந்த துங்கர்பூரின் மனதை, அவர் தனக்காக பல மணிநேரம் சாலையில் காத்திருந்த சம்பவம் உருக்கியது.   உடனடியாக கிரிக்கெட் வாரிய தலைவருக்கு போன் போட்டு, ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணியினருடன் கபில்தேவின் பெயரையும் சேர்க்கச் சொன்னார். இப்படி போராடி அணிக்குள் இடம்பிடித்த கபில்தேவ், இந்த தொடரில் சிறப்பாக ஆட, அடுத்ததாக பாகிஸ்தான் செல்லும் அதிகாரபூர்வ டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டார். 1978-ம் ஆண்டில் நடந்த இந்த தொடரில் தன் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் கபில்தேவ் மிரட்ட, அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்தார்.
-----------------------------------------------------------------
நவம்பர் 7
இந்திய மல்யுத்தத்தின் முன்னோடி
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளித்தரும் விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்திய வரலாற்றைப் பொறுத்தவரை மல்யுத்தம், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே புகழ்பெற்ற விளையாட்டாக இருந்துள்ளது.   பீமன்,  ஜராசந்தன், துரியோதனன் போன்ற இதிகாச புருஷர்கள் மல்யுத்தத்தில் சிறந்து விளங்கியதாக கூறப்படுகிறது.
இப்படி பண்டைய காலத்தில் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருந்த மல்யுத்தத்தை மீண்டும் இந்தியாவில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை  ஜதீந்திர சரண் குஹோவைச் சேரும். 1892-ம் ஆண்டில் கொல்கத்தா நகரில் மல்யுத்த வீரர்களைக் கொண்ட பரம்பரையில் ஜதீந்திர சரண் குஹோ பிறந்தார். ஜதீந்திராவை அவரது  அப்பா  ராம் சரண்,  ‘கோபர்’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியதால், பின்னாளில் அனைவராலும் அவர்  ‘கோபர் குஹோ’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.
சிறுவயதில் மல்யுத்தத்தில் ஆர்வம் இல்லாதவராகத்தான் கோபர் குஹோ இருந்துள்ளார். பின்னாளில் அவரது குடும்பத்தினர், தங்கள் பரம்பரைக்கு புகழ்பெற்றுத் தந்த மல்யுத்தத்தில் கோபரும் பயிற்சி பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதனால் 15 வயது முதல் தனது மாமாவான கேத்ராசரணிடம் கோபர் பயிற்சி பெறத் தொடங்கினார்.
நீண்டகால பயிற்சியைத் தொடர்ந்து 1919-ம் ஆண்டுமுதல் தொழில்முறை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்ற கோபர் குஹோ, வெற்றி மீது வெற்றியைக் குவித்தார். எல்லாவற்றுக்கும் உச்சமாக 1921-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலக லைட் ஹெவிவெயிட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் மட்டுமின்றி முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.
கோபர் குஹோவின் இந்த வெற்றி இந்தியர்களிடையே, குறிப்பாக வடமாநில இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. கோபர் குஹோவும், தனக்கென்று புதிய பாணி மல்யுத்தத்தை உருவாக்கி அதில்  இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இதனாலேயே இந்திய மல்யுத்தத்தின் முன்னோடியாக  அவர் கருதப்படுகிறார்.
---------------------------------------
ஜனவரி 8
சத்யனின் ஒலிம்பிக் கனவு
இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரரான சத்யன் ஞானசேகரனின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 8).
சென்னையில் உள்ள மத்தியதர குடும்பம் ஒன்றில் பிறந்த சத்யனுக்கு, டேபிள் டென்னிஸ் விளையாட்டு பிடித்துப் போக முக்கிய காரணம் அதன் வேகம். மேஜையின் இருபுறமும் வீரர்கள் துள்ளிக் குதித்தபடி ‘பட் – படார்’ என்று  மின்னல் வேகத்தில் பந்தை திருப்பியடிப்பதை பார்த்த சத்யன், சிறு வயதிலேயே தானும் ஒரு டேபிள் டென்னிச் வீரனாகத்தான் உருவாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.
ஆனால் டேபிள் டென்னிஸ்,  இந்தியாவில் புகழ்பெற்ற விளையாட்டாக இல்லாததால், இதில் தங்கள் மகனால் புகழ்பெற முடியுமா என்று அவரது பெற்றோர் யோசித்துள்ளனர். ஆனால் டேபிள் டென்னிஸில்தான்  தனது எதிர்காலம் என்பதில் சத்யன் பிடிவாதமாக இருக்க, வேறு வழியின்றி அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் டேபிள் டென்னிஸில் பெரிதாக சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்ததால் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இப்படி ஒருபுறம் தனக்காக டேபிள் டென்னிஸ், மறுபுறம் பெற்றோருக்காக படிப்பு என்று சத்யனின் சிறுவயது தொடர்ந்துள்ளது.
 ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக சென்றுகொண்டிருந்த  சத்யனின் பயணம், 2016-ம் ஆண்டில் பெல்ஜியம் ஓபன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து வேகமெடுத்தது. இதைத்தொடர்ந்து பல டேபிள் டென்னிஸ் தொடர்களில் பதக்கம் வென்ற சத்யன், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு முதல் 30 வீரர்களுக்குள் இடம்பிடித்த சத்யன், இச்சாதனையை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். இப்போது ஒலிம்ப்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்லும் ஆசையுடன் பயிற்சிபெற்று வருகிறார். அவரது ஆசை நிறைவேறட்டும்.
---------------------------------
ஜனவரி 9
இந்தியாவின் புதிய தங்க மங்கை
பி.டி.உஷாவுக்குப் பிறகு ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் கொடியை தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் ஹிமா தாஸின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 9).  
ஹிமா தாஸின் அப்பா ரொஞ்சித் தாஸ் ஒரு ஏழை விவசாயி.  மேற்கொண்டு வருமானம் ஈட்ட உள்ளூர் கால்பந்து அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.  அவருடன் தினமும் பயிற்சிக்கு சென்றதால் ஹிமா தாஸும் கால்பந்து வீராங்கனையாக உருவெடுத்தார்.
 இந்த நிலையில்தான் சம்சுல் ஹக் என்ற ஆசிரியர்,  உள்ளூர் கால்பந்து போட்டியில் ஹிமா தாஸ் வேகமாக ஓடுவதைப் பார்த்துள்ளார்.   ‘இந்த அளவுக்கு வேகமாக ஓடும் பெண்ணுக்கு பயிற்சி அளித்தால், ஓட்டப் பந்தயத்தில் இன்னும் சிறப்பாக வருவாரே’ என்ற எண்ணத்தில் ஹிமாவை மாநில தடகள சங்க நிர்வாகிகளிடம் அழைத்துச் சென்றார். அங்கு ஹிமாவை ஓடவைத்து அவர்கள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை ஓட்டத்தில் ஹிமா ஓடுவதைப் பார்த்த பயிற்சியாளரான நிப்பான் தாஸின் முகத்தில் மலர்ச்சி ஏற்பட்டது.
இத்தனை நாட்களாக அவரைப் போன்ற வீராங்கனைக்காகத்தானே காத்திருந்தோம் என்ற எண்ணத்தில் அவரை வாரி அணைத்துக்கொண்டார். ஹிமா தாஸை குவாஹாட்டியில் உள்ள பயிற்சி மையத்துக்கு அழைத்துச் சென்று பயிற்சி கொடுக்க முன்வந்தார்.
முதலில் ஹிமாவின் பெற்றோர்  இதற்கு சம்மதிக்கவில்லை.  ஆனால் பயிற்சியாளர் நீண்ட விவாதத்துக்கு பிறகு அவர்களை சம்மதிக்க வைத்தார்.அன்றிலிருந்து ஹிமா தாஸின் வாழ்க்கை மாறியது.  உள்ளூரில் சேறும் சகதியும் நிறைந்த மைதானத்தில் பயிற்சி பெற்ற அவர், குவாஹாட்டியில் விளையாட்டு ஆணையத்தின் நேரடி பராமரிப்பில் உள்ள உயர்தர சின்தடிக் டிராக்கில் பயிற்சி பெறத் தொடங்கினார். அந்தப் பயிற்சியின் விளைவாக இன்று சர்வதேச ஓட்டப் பந்தயங்களில் இந்தியாவுக்காக பதக்கங்களைக் குவித்து வருகிறார்.

No comments:

Post a Comment