ஜனவரி 10
வறுமையை வென்ற மீராபாய் சானு
இந்தியாவின் ஏழ்மை மிகுந்த மாநிலங்களில் ஒன்று மணிப்பூர் என்றால் அந்த மாநிலத்தின் மிக ஏழ்மையான குடும்பங்களில் ஒன்று சாய்கோம் கிரிடி மீடியுடையது. அவருக்கு கடைக்குட்டியாய் பிறந்த மகள்தான் பல சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பளுதூக்கும் போட்டியில் பதக்கங்களை அள்ளித்தரும் மீராபாய் சானு. இந்தியாவுக்காக போட்டிகளில் அதிக அளவு எடையைத் தூக்கும் மீராபாய் சானு, சிறுவயதில் தங்கள் வீட்டின் வறுமையால் காட்டில் இருந்து விறகுக் கட்டைகளைத் தூக்கி வந்துள்ளார்.
இதுபற்றி கூறும் அவரது அண்ணன் சனதோம்பா, “வீட்டில் ஏழ்மை குடியிருந்ததால் அதை ஈடுகட்ட ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பை ஏற்றோம். நிதிநிலையை சீரமைக்க அம்மா சிறிய அளவில் ஒரு பெட்டிக் கடையை நடத்தினார். வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளியுள்ள காட்டில் இருந்து தினமும் விறகுக் கட்டைகளை சுமந்துவரும் பொறுப்பு எனக்கும் சானுவுக்கும் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதே என்னைவிட 4 வயது சிறியவளான சானு என்னைவிட அதிக கிலோ விறகுக் கட்டைகளை சுமந்து வருவாள். இன்று அவள் அதிக எடையைத் தூக்குவதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்கிறார்.
வறுமை நிறைந்த சிறுபிராயத்தில், மீராபாயை பளுதுக்கும் போட்டிக்கு கவர்ந்திழுத்தவர் குஞ்சராணி தேவி. மணிப்பூரைச் சேர்ந்த இவர், பளுதூக்கும் போட்டியில் சாதனைகளைப் படைக்க, அதைப் பார்த்து மீராபாய் சானுவுக்கும் இதே விளையாட்டில் ஆர்வம் பிறந்தது. கால்பந்து வீரரான அவரது அண்ணன் சனதோம்பாவும் அதற்கு ஆதரவளித்தார். ஆனால் பயிற்சி மையமோ அவரது வீட்டில் இருந்து 60 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. இதற்காக தினமும் ரயிலில் பயணிக்க வேண்டி இருந்தது.
தன் ஆரம்ப நாட்களைப் பற்றி கூறும் மீராபாய் சானு, “பயிற்சி மையத்தில் சேர்ந்ததும் நான் தினசரி சாப்பிட வேண்டிய உணவுகளின் டயட் பட்டியலைக் கொடுத்தார்கள். தினசரி அரை லிட்டர் பால், குறிப்பிட்ட அளவு கறி சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்தபடி வாரம் ஒருமுறை எனக்கு தரமான உணவு தரவே என் குடும்பத்தினர் தங்கள் தேவைகளைக் குறைத்து தியாகம் செய்யவேண்டி இருந்தது” என்கிறார். ஆனால் இந்த வறுமையால் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. அனைத்தையும் வென்றவர் இன்று இந்தியாவின் தங்க மங்கையாக மின்னுகிறார்.
---------------------------------
ஜனவரி 11
இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர்
கிரிக்கெட்டில் இந்தியாவின் பேட்டிங் பெருஞ்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 11). இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில் (குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில்) ராகுல் டிராவிட் ஆடிய காலகட்டத்தில், அவரை அவுட் ஆக்க எதிரணியினர் மிகவும் சிரமப்பட்டனர். இதனாலேயே அவர் இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்டார். இந்தியாவுக்காக 164 டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் 10,889 ரன்களையும் ராகுல் டிராவிட் குவித்துள்ளார்.
ராகுல் டிராவிட் வளர்ந்தது பெங்களூருவாக இருந்தாலும், அவர் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். ராகுல் டிராவிட்டின் அப்பா சரத், கிளப் கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்துள்ளார். அடிக்கடி அவர் ஆடும் போட்டிகளை நேரில் காணச் சென்ற வகையில், ராகுல் டிராவிட்டையும் கிரிக்கெட் ஆசை தொற்றிக் கொண்டுள்ளது. டிராவிட்டுக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர். சிறுவயதில் ஒருமுறை தனக்கு மிகவும் பிடித்த சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தை நேரில் காண்பதற்காக பெங்களூரு கிரிக்கெட் மைதானத்துக்கு சென்றுள்ளார் டிராவிட். ஆனால் துரதிருஷ்டவசமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அந்தப் போட்டியில் கவாஸ்கர் முதல் பந்திலேயே அவுட் ஆக ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளார்.
பொதுவாகவே ராகுல் டிராவிட் என்றால் மிகவும் மெதுவாக பேட்டிங் செய்பவர், அதிரடியான ஷாட்களை அடிக்காதவர் என்ற ஒரு கருத்து உள்ளது. ஆனால் 2003-ம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெறும் 22 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.
வீரராக கிரிக்கெட் போட்டியில் இந்து ஓய்வு பெற்றாலும், ஒரு பயிற்சியாளராக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக பொறுப்பு வகித்து பல இளம் பேட்ஸ்மேன்களை டிராவிட் உருவாக்கி வருகிறார். ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், சுப்மான் கில் என்று அவரிடம் பயிற்சி பெற்ற பல வீரர்கள் இன்று இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
-------------------------------------------------
ஜனவரி 12
குழந்தைகளின் காதலர்
டென்னிஸ் உலகின் இப்போதைய நம்பர் ஒன் நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச். செர்பிய வீரரான இவர், இதுவரை 17 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
நம்ம ஊர் டெண்டுல்கர் எப்படி சிறுவயது குழந்தையாக இருந்தபோதே கிரிக்கெட் பேட் பிடித்தாரோ, அதேபோல் 4 வயதிலேயே டென்னிஸ் ராக்கெட்டை பிடிக்க தொடங்கிவிட்டார் ஜோகோவிச். சிறுவயதில் ஜோகோவிச்சின் வீட்டைச் சுற்றி பல டென்னிஸ் பயிற்சி மையங்கள் இருந்ததால், அவருக்கு சிறு வயதிலேயே இவ்விளையாட்டின் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 வயதிலேயே ஜோகோவிச்சுக்கு டென்னிஸ் ராக்கெட்டை வாங்கி பரிசளித்துள்ளார் அவரது அப்பா. இதன்பிறகு அவரது 6-வது வயதில் ஜெலீனா ஜெனிக் என்ற முன்னாள் டென்னிஸ் நட்சத்திரத்திடம் பயிற்சி பெற அனுப்பியுள்ளார். ஜோகோவிச்சுக்கு முன்னதாக மோனிகா செலஸுக்கு ஜெலீனா ஜெனிக் பயிற்சி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெலீனாவிடம் 6 ஆண்டுகள் பயிற்சி பெற்ற ஜோகோவிச், அதன் பிறகு ஜூனியர் டென்னிஸ் போட்டிகளிலும், பின்னர் மூத்தவர்களுக்கான டென்னிஸ் போட்டிகளிலும் வெற்றிகளைக் குவித்துள்ளார்.
டென்னிஸைப் போலவே, பல மொழிகளைப் பேசுவதிலும் ஜோகோவிச் வல்லவர். தனது தாய்மொழியான செர்பியன் மொழியைப் போலவே, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளையும் ஜோகோவிச் நன்றாகப் பேசுவார். டென்னிஸ் விளையாட்டில் ஜோகோவிச்சுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும், அவருக்கு பிடித்த டென்னிஸ் வீரர் பீட் சாம்ப்ராஸ்.
டென்னிஸ் விளையாட்டுக்கு அடுத்தபடியாக ஜோகோவிச்சுக்கு அதிகம் பிடித்த விஷயம் குழந்தைகள். 2007-ம் ஆண்டில் தொடங்கிய ‘நோவாக் ஜோகோவிச் அறக்கட்டளை என்ற அமைப்பின் பெயரில், போரினால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார். ஒருமுறை டென்னிச் போட்டியில் வென்றபோது தனக்கு கிடைத்த மொத்த பரிசுப் பணத்தையும் அவர்களின் நலனுக்காக நன்கொடையாகக் கொடுத்தார்.
--------------------------------
ஜனவரி 13
நிறைவேறிய தந்தையின் கனவு
சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்தவர் சதீஷ்குமார் சிவலிங்கம். இன்றைக்கு பல்வேறு போட்டிகளில் சதீஷ்குமார் பதக்கங்களை குவிக்கிறார் என்றால் அதற்கு முதல் காரணம் அவரது அப்பா சிவலிங்கம்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சிவலிங்கம், கடும் போராட்டங்களுக்கு மத்தியில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி வரை முன்னேறினார். ஆனால் அடுத்த கட்டத்துக்கு அவரால் முன்னேற முடியவில்லை. இந்த நிலையில் சிறுவயதில் பள்ளியில் நடந்த பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க விரும்புவதாக சிவலிங்கத்திடம், அவரது மகன் சதீஷ்குமார் கூறியதும் மகிழ்ச்சி அடைந்தார். சுமார் ஒரு வாரம் பயிற்சி அளித்தார். அந்த ஒரு வார பயிற்சியிலேயே தன் முதல் போட்டியில் 40 கிலோ எடையைத் தூக்கி அசத்தியுள்ளார் சதீஷ்குமார். இதனால் மகிழ்ச்சியடைந்த சிவலிங்கம், சதீஷ்குமாரை அருகில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தார். அத்துடன் தானும் பயிற்சி கொடுத்துள்ளார்.
படிப்படியாக வளர்ந்து தேசிய அளவில் பதக்கங்களை வென்ற சதீஷ்குமாருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்ததுடன் பாட்டியாலாவில் தங்கி பயிற்சி பெற வாய்ப்பும் கிடைத்தது. பொதுவாக பலரும் விளையாட்டு கோட்டாவில் வேலை கிடைத்ததுடன் விளையாட்டை விட்டுவிடுவார்கள். ஆனால் சதீஷ்குமார் அப்படிச் செய்யவில்லை. தன் குடும்பத்தைக்கூட மறந்து பயிற்சி மையமே கதியென்று கிடந்தார். இப்படி குடும்பத்தையும் மறந்து கடுமையாக பயிற்சி பெற்றதன் பலன்தான், காமன்வெல்த் போட்டி உட்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களாக வாங்கிக் குவிக்கிறார் சதீஷ்குமார். அத்துடன் தன் தந்தையின் கனவையும் நிறைவேற்றி வருகிறார்.
No comments:
Post a Comment