Powered By Blogger

Friday, January 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 19- 22

 டிசம்பர் 19


திருடுபோன உலகக் கோப்பை
உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நாள் டிசம்பர் 19. 1983-ம் ஆண்டில், இந்த நாளில்தான் பிரேசில் நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த கால்பந்துக்கான உலகக் கோப்பை  திருடப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து தொடங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்  ஜூல்ஸ் ரிமெட்   (Jules Rimet). 1928-ம் ஆண்டில், இவரது தலைமையில் நடந்த பிஃபா அமைப்பின் கூட்டத்தில்தான் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதன் காரணமாக கால்பந்து உலகக் கோப்பைக்கு   ஜூல்ஸ் ரிமெட் கோப்பை என்று பெயரிடப்பட்டது. 18 காரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த உலகக் கோப்பை 3.8 கிலோ எடை கொண்டதாக இருந்தது. உலகக் கோப்பையில் 1958, 1962 மற்றும் 1970 என 3 முறை சாம்பியன் பட்டம் வென்றதால், இந்த உலகக் கோப்பை பிரேசில் நாட்டுக்கு சொந்தமாக வழங்கப்பட்டது.  
தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இந்த உலகக் கோப்பையை கருதிய பிரேசில் அரசு, அதை அருங்காட்சியகத்தில் வைத்திருந்தது. இந்தச் சூழலில் 1983-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி, அருங்காட்சியகத்துக்குள் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த காவலாளியை கட்டிப் போட்டு, உலகக் கோப்பையை திருடிச் சென்றனர். உலகக் கோப்பை திருடுபோனதால், ஒட்டுமொத்த பிரேசிலும் சோகத்தில் ஆழ்ந்தது. எந்தவித சேதமும் இல்லாமல் கோப்பையை ஒப்படைப்பவர்களுக்கு பெரிய அளவில் பரிசளிக்கப்படும் என்று ரியோ டி ஜெனிரோ ஸ்டேட் வங்கி அறிவித்தது.  கோப்பையை மீட்க தங்களுக்கு உதவுமாறு அனைத்து மக்களுக்கும் அரசு வேண்டுகோள் விடுத்தது. ஆனால் கோப்பை மட்டும் கிடைக்கவில்லை. அது தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டதா என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது.
படக்குறிப்பு: ஜூல்ஸ் ரிமெட் கோப்பையுடன் பீலே
---------------------------------------------------------------------------------------------------------------------------

டிசம்பர் 20
அப்பா சொன்ன அறிவுரை
உலகின் வேகமான மனிதர் யார் என்று  கேட்டால், ‘உசேன் பொல்ட்’ என்று விளையாட்டைப் பற்றித் தெரியாதவர்கள்கூட சொல்வார்கள். அந்த அளவுக்கு ஓட்டப் பந்தயத்தில் புகழ்பெற்ற வீரராக உசேன் போல்ட் விளங்குகிறார். ஒலிம்பிக்கில் 8 தங்கப் பதக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட்,  ஆண்டொன்றுக்கு ரூ.73 கோடியை வருமானமாக ஈட்டி வருகிறார்.

ஜமைக்காவில் உள்ள டிரெலவ்னி என்ற ஊரில் பிறந்தவர் உசேன் போல்ட். அவரது பெற்றோரான வெல்லஸ்லியும், ஜெனிபரும் உள்ளூரில் மளிகைக் கடை  நடத்திவந்தனர்.  12 வயது வரையில் ஓட்டத்தில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாதவராகத்தான் உசேன் போல்ட் இருந்துள்ளார். இந்தச் சூழலில்தான் உள்ளூரில் பெரிய ஓட்டப்பந்தய வீரரும் உசேன் போல்ட்டின் நண்பருமான ரிகார்டோ கேட்ஸ் என்பவர் அவரை ஓட்டப் பந்தயத்துக்கு அழைத்தார். போட்டியில் தோற்பவர், வெற்றி பெறுபவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குள் இருந்த  பந்தயம்.   இந்த பந்தயத்தில் உசேன் போல்ட் வெற்றிபெற, ஓட்டப் பந்தயத்தில் தன்னால் வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு உள்ளுரில் நடந்த அனைத்து ஓட்டப் பந்தயங்களிலும் கலந்துகொண்டு அவர் வெற்றி பெற்றுள்ளார்.

ஒருபுறம் ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்று வந்த  உசேன் போல்ட், மறுபுறம் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்தார். அதனால் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் உசேன் போல்டுக்கு சிறு வயதில் இருந்தது. இந்த நிலையில் அவரது தந்தைதான் ஓட்டத்தை தேர்ந்தெடுக்குமாறு கூறியுள்ளார். “கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றால், மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் கிடைக்குமா என்று தெரியாது. அதற்கு சில சிபாரிசுகளும் தேவைப்படும். ஆனால் ஓட்டம் அப்படியல்ல. நீ ஜெயிக்க, ஜெயிக்க முன்னேறிக்கொண்டே இருக்கலாம்” என்று  அவர் அறிவுரை கூறியிருக்கிறார். தந்தையாரின் அந்த அறிவுரைதான் இன்று உசேன் போல்ட்டை தடகள உலகின் சக்ரவர்த்தி ஆக்கியுள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------

டிசம்பர் 21
படிப்பை விட்டுக்கொடுக்காத ஸ்ரீகாந்த்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த 2 முறையும் இந்திய அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய  ஒரே நபர் ஸ்ரீகாந்த். 1983-ம் ஆண்டு ஒரு தொடக்க ஆட்டக்காரராக இந்திய அணியின் வெற்றிக்கு அஸ்திவாரமாக இருந்த ஸ்ரீகாந்த், 2011-ம் ஆண்டு அணியின் தேர்வாளராக இருந்து, வெற்றிபெற தகுதியான நபர்களை அணியில் சேர்த்தார். இப்படி 2 முறை இந்திய அணி கோப்பையை வெல்லக் காரணமாய் இருந்த ஸ்ரீகாந்தின் பிறந்தாள் இன்று (டிசம்பர் 21).

ஸ்ரீகாந்தைப் பொறுத்தவரை, சிறுவயதில் அவர் முதலில் படிப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தார். பொழுதுபோக்குக்காக மட்டுமே ஆரம்ப காலகட்டங்களில் கிரிக்கெட் ஆடியுள்ளார். கிண்டி பொறியியல் கல்லூரியில் எலக்டிரிகல் இஞ்ஜினீயரிங் படிக்கும் காலத்தில், ஒரு சிறந்த இஞ்ஜினீயர் ஆகவேண்டும் என்பது மட்டும்தான் அவரது கனவாக இருந்துள்ளது. அவரது குடும்பத்தினரும் அதைத்தான் விரும்பியுள்ளனர்.

ஆனால் கல்லூரி காலத்தில் அவர் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் செய்த விதம் தேர்வாளர்களைக் கவர, தமிழக கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில் தேர்வு காலத்திலோ, தேர்வுக்கு ஒரு மாதம் முன்னதாகவோ கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார் ஸ்ரீகாந்த்.
இப்படி படிப்பே முக்கியம் என்று இருந்தாலும் ஸ்ரீகாந்தின்  அதிரடியான பேட்டிங், 1981-ம் ஆண்டில் அவரை இந்திய அணிக்கு இழுத்துள்ளது. அன்றிலிருந்து, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற 1992-ம் ஆண்டுவரை ஒருநாள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விலங்கியுள்ளார் ஸ்ரீகாந்த். ஒருநாள் கிரிக்கெட்டில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர், ஆரம்ப காலத்தில் ஆட்டநாயகன் விருதுகளை அதிகம் வாங்கிய வீரர் என்று பல பெருமைகள் ஸ்ரீகாந்துக்கு உண்டு.
--------------------------------------------============-----------------------------------------------------------
டிசம்பர் 22
சச்சின் டெண்டுல்கரின் நம்பிக்கைகள்
கிரிக்கெட் கடவுள் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி எத்தனை இக்கட்டான நிலையில் இருந்தாலும் தனது உறுதியான பேட்டிங்கால் சச்சின் டெண்டுல்கர் அணியை மீட்டெடுப்பார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. ஆனால் இப்படி எல்லோரும் நம்பும் சச்சின் டெண்டுல்கருக்கும் தனிப்பட்ட  சில நம்பிக்கைகள் இருந்தது உண்டு.

எப்போது பேட்டிங் செய்யக் கிளம்பினாலும், முதலில் தனது இடது காலில் பேடைக் கட்டிக்கொள்வது சச்சினின் வழக்கம். அதன் பிறகுதான் வலது காலில் பேடைக் கட்டுவார். அப்படி கட்டினால்தான் தன்னால் அதிக ரன்களைக் குவிக்க முடியும் என்று கிரிக்கெட் ஆடும் காலம் முழுவதும் அவர் நம்பினார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக சச்சின் டெண்டுல்கர் இருந்தாலும், போட்டியின் முதல் பந்தை சந்திப்பது தனக்கு அதிர்ஷ்டமில்லை என்பது சச்சினின் நம்பிக்கையாக இருந்தது. இதனால் எப்போதும் தன்னுடன் ஆட வரும் பேட்ஸ்மேனைத்தான் முதல் பந்தை எதிர்கொள்ளச் செய்வார்.  

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது, சேதமாகி இருந்த தனது அதிர்ஷ்ட பேட்டை பழுதுபார்த்து எடுத்துவந்தார் சச்சின் டெண்டுல்கர். அவர் நினைத்திருந்தால், எத்தனையோ புதிய பேட்களை வாங்கியிருக்கலாம். ஆனால் சேதமாகி இருந்த தனது ராசியான பேட்தான் தனக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித்தரும் என்று சச்சின் உறுதியாக நம்பினார். அவர் நம்பியதைப் போலவே 2011-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பட்டம் வென்றது.

கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஓட்டலில் இருந்து மைதானத்துக்கு பேருந்தில் செல்லும்போது, பேருந்தின் இடதுபுறத்தில் உள்ள முதல் வரிசையின் ஜன்னலோர இருக்கையில்தான் அமர்ந்து செல்வார். சச்சின். இதுவும் அவரது நம்பிக்கைகளில் ஒன்றாக இருந்தது.  

No comments:

Post a Comment