டிசம்பர் - 6
ஹிட்லரைக் கவர்ந்த தியான் சந்த்
கிரிக்கெட் விளையாட்டுக்கு பிராட்மேன், கால்பந்துக்கு பீலே போன்று ஹாக்கி விளையாட்டின் பிதாமகனாக கருதப்படுபவர் இந்திய வீரரான தியான் சந்த். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29-ம் தேதியைத்தான் இந்திய அரசு தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறது. அந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தியான் சந்த்.
1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் பெற முக்கிய காரணமாக இருந்தவர் தியான் சந்த். இத்தொடரில் மட்டும் அவர் 14 கோல்களை அடித்தார். 1935-ம் ஆண்டு அடிலெய்ட் நகரில் இவர் ஆடிய ஹாக்கி போட்டி ஒன்றை பார்க்கவந்த டான் பிராட்மேன், “கிரிக்கெட்டில் ரன்களைக் குவிக்கும் வேகத்தில் தியான் சந்த் கோல்களை அடிக்கிறார்” என்று புகழ்ந்தார்.
தான் விளையாடும் போட்டிகளிலெல்லாம் கோல் மழை பொழிந்துவந்த தியான் சந்த், ஒரு போட்டியில் மட்டும் கோல் அடிக்கவில்லை. இப்போட்டி முடிந்ததும் நடுவரிடம் சென்ற தியான் சந்த், “கோல் போஸ்ட்களின் அகலம் சில அங்குலங்கள் குறைவாக உள்ளன” என்று புகார் செய்தார். தான் கோல் அடிக்க முடியாததால்தான் தியான் சந்த் இப்படி புகார் செய்கிறார் என்று நடுவர் முதலில் நினைத்தார். ஆனால் பிறகு கோல்போஸ்டை அளந்து பார்த்தபோது நிஜமாகவே அதன் அகலம் சற்று குறைவாக இருந்துள்ளது. இந்த அளவுக்கு ஹாக்கி விளையாட்டைப் பற்றி மட்டுமின்றி, ஹாக்கி மைதானத்தைப் பற்றியும் நுட்பமாக அறிந்தவராக தியான் சந்த் இருந்துள்ளார்.
பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் தியான் சந்தின் ஆற்றலைப் பார்த்து வியந்த ஹிட்லர், அவர் ஜெர்மனிக்கு வந்தால் அந்நாட்டு குடியுரிமை வழங்கி, ஜெர்மன் ராணுவத்தில் மரியாதைக்குரிய பதவியையும் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆனால் தியான் சந்த் அதை ஏற்காமல் இந்தியாவிலேயே தங்கிவிட்டார்.
------------------------------------------------------
டிசம்பர் - 7
தடைகளைக் கடந்துவந்த கால்பந்து
உலகிலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்ற பெருமை கால்பந்து விளையாட்டுக்கு உண்டு. ரசிகர்களின் எண்ணிக்கையைப் போன்றே தோற்றத்திலும் முதன்மையானது கால்பந்து விளையாட்டு. கற்காலத்திலேயே, அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கும் முன்பே மெசோஅமெரிக்கன் கலாச்சாரத்தில் (Mesoamerican cultures) கால்பந்து விளையாட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அக்காலத்தில் உருண்டையான கற்களை வைத்து கால்பந்து போட்டிகளை ஆடியுள்ளனர். கல்லால் ஆன இந்தப் பந்துகள் சூரியனை குறிப்பதாக கருதப்பட்டது. அதேபோல் போட்டியில் தோற்கும் அணியின் கேப்டனை நரபலியிடும் வழக்கமும் அக்காலத்தில் இருந்ததாக வரலாற்று சான்றுகள் குறிப்பிடுகின்றன.
ஆசியாவில் தோலால் செய்யப்பட்ட பந்துகளால் கால்பந்து போட்டிகளில் ஆடும் வழக்கம் முதலில் சீனாவில் தோன்றி, அங்கிருந்து ஜப்பானுக்கு பரவியுள்ளது. அதே நேரத்தில் தோலால் செய்யப்பட்ட பந்தில் முடிகளை நிரப்பி கிரேக்க நாட்டவர்கள் கால்பந்து போட்டிகளில் ஆடியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ரோமானியர்களும் இங்கிலாந்து நாட்டினரும் கால்பந்து விளையாட்டை ஆடத் தொடங்கியுள்ளனர். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆடப்பட்டு வந்த கால்பந்து விளையாட்டு, கிபி 12-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவலாக ஆடப்பட்டது.
ஆரம்ப காலகட்டத்தில் கால்பந்து விளையாட்டில் கால்களுடன் கைகளும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இக்காலகட்டத்தில் எதிரணி வீரர்களைக் கையால் தள்ளிவிடுவது வழக்கமாக இருந்ததால் கால்பந்து, வன்முறை ஆட்டமாக கருதப்பட்டது. இதன் காரணமாக 1314-ம் ஆண்டில் இங்கிலாந்து மன்னராக இருந்த இரண்டாம் எட்வர்ட், இவ்விளையாட்டை தடை செய்துள்ளார். அவருக்கு பிறகு வந்த இங்கிலாந்து மன்னர்களும் கால்பந்தை தடைசெய்ய, 15-ம் நூற்றாண்டில்தான் மீண்டும் அங்கு கால்பந்துக்கு களம் கிடைத்துள்ளது. 19-ம் நூற்றாண்டில் கால்பந்து விளையாட்டில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு, மேக்கப் செய்த ஹீரோயினைப் போல், புதிய பளபளப்புடன் உலகைக் கவரத் தொடங்கியது கால்பந்து விளையாட்டு.
----------------------------
டிசம்பர் 8
லாலாவுக்காக நடந்த கலாட்டா
இந்திய கிரிக்கெட் வரலாற்றில், தனி மனிதத் துதிபாடல் கலாச்சாரத்தைத் தொடங்கி வைத்தவர் லாலா அமர்நாத். தனக்காக பந்த் நடத்தும் அளவுக்கு இந்தியாவில் ரசிகர்களைப் பெற்றிருந்தார் லாலா அமர்நாத்.
1936-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்தது. இந்த சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக லாலா அமர்நாத் இருந்தாலும், அவரை விடுத்து விஜயநகரம் மகராஜ்குமாருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருந்தது. இருவருக்கும் இடையில் அவ்வளவாக நட்பு இல்லை. லாலாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த புகழால் பொறாமையில் இருந்தார் மகராஜ்குமார்.
இந்த சூழலில் லார்ட்ஸ் மைதானத்தில், இங்கிலாந்து - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் 4-வது பேட்ஸ்மேனாக ஆடவேண்டிய லாலா அமர்நாத்தை 7-வது பேட்ஸ்மேனாக ஆடவைத்தார் மகராஜ்குமார். இதனால் கோபமடைந்த லாலா அமர்நாத், காலில் அணிந்திருந்த பேடைக் கழற்றி கேப்டன் மீது வீசினார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த தகவல் தெரிந்ததும் இந்தியாவில் உள்ள கிரிகெட் ரசிகர்கள் கொந்தளித்தனர். மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இதைக் கண்டித்து பந்த் நடந்ததாக கூறப்படுகிறது. லாலா இந்தியாவுக்கு வரும் நாளில் அவரை வரவேற்க துறைமுகத்தில் பெரும் கூட்டம் கூடியது. லாலாவும் ரசிகர்களும் சந்தித்துக்கொண்டால், கலவரம் வெடிக்குமோ என்ற அச்சத்தால் ஆங்கிலேய அரசு, துறைமுகத்தின் வெளியிலேயே கப்பலை நிறுத்தி சிறு படகில் லாலாவை ஏற்றி ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. ரசிகர்களையும், நிருபர்களையும் சந்திக்க முடியாதபடி சில நாட்களுக்கு அவர் தனி இடத்தில் வைக்கப்பட்டார்.
-----------------------------------
டிசம்பர் 9
பதக்கம் வெல்லாவிட்டால் தண்டனை
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பொதுவாக அனைத்து வீரர்களும் ஆடுவார்கள். அதேநேரத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும் அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்று பயிற்சியைத் தொடர்வார்கள்.
ஆனால் இதெல்லாம் மற்ற நாட்டு வீரர்களுக்குத்தான். வடகொரிய வீரர்களைப் பொறுத்தவரை தாங்கள் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற நிர்பந்தமான மனநிலையுடன்தான் போட்டிகளில் பங்கேற்பார்கள். வெற்றி பெறாமல் நாட்டுக்குத் திரும்பினால் கடுமையான தண்டனை கிடைக்குமே என்ற அச்சமே இதற்கு காரணம்.
ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டி போன்றவற்றில் ஆடும் வீரர்களுக்கு மற்ற நாடுகளில் உள்ளதைப் போலவே பல்வேறு வசதிகளை வட கொரிய அரசும் செய்து கொடுக்கும். ஆனால் அவர்கள் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பினால் அவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது அந்நாட்டு அரசின் குணம்.
உதாரணமாக கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வட கொரியா சார்பாக 31 வீரர்கள் கலந்துகொண்டனர். குறைந்தது 12 பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் அந்நாட்டின் அதிபரான கிம் ஜங்-உங். ஆனால் 7 வீரர்கள்தான் பதக்கங்களை வென்றனர். இதனால் கடுப்பான கிம், அவர்களுக்கு வழங்கப்பட்ட வசதியான வீடுகளில் இருந்து காலி செய்யச் சொல்லி, வசதி குறைந்த வீடுகளுக்கு மாற்றியுள்ளார். அத்துடன் நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட கடுமையான இடங்களில் 2 ஆண்டுகள் வேலை பார்க்குமாறு பணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு ஆடம்பர வீடுகள், கூடுதல் ரேஷன், கார்கள் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கியுள்ளார் கிம்.
என்னதான் பரிசுகளை வாரி வழங்கினாலும், அடுத்த முறை தோற்றால், தங்களுக்கும் தண்டனை கிடைக்குமோ என்ற அச்சத்தில்தான் எப்போதும் அந்நாட்டு வீரர்கள் உள்ளனர்.
No comments:
Post a Comment