ஜனவரி 1
அனாதை இல்லத்தில் இருந்து ஆசிய விளையாட்டுக்கு…
இன்றைய காலகட்டத்தில் சர்வதேச போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் பல பதக்கங்களை வென்று வருகிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்று டிங்கோ சிங்கை சொல்லலாம். 1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் வென்ற தங்கப் பதக்கம்தான் இந்தியாவின் பல குத்துச்சண்டை வீரர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த நம்பிக்கையைக் கொடுத்த டிங்கோ சிங்கின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 1).
குத்துச்சண்டை களத்தைப் போலவே, தனது வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்தவர் டிங்கோ சிங். மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டிங்கோ சிங். வறுமை காரணமாக டிங்கோ சிங்கின் பெற்றோரால், அவரை வளர்க்க முடியவில்லை. இதனால் சிறு வயதிலேயே அவரை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளனர். போஷாக்கான ஆகாரங்கள் ஏதும் இல்லாமலேயே அங்கு வளர்ந்தார் டிங்கோ சிங்.
அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த காலத்தில், அங்குள்ள மாணவர்கள் மத்தியில் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இந்தக் கட்டத்தில் தன்னை நிரூபிக்க குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டார் டிங்கோ சிங். இதுதான் பின்னாளில் அவர் ஒரு பிரபல குத்துச்சண்டை வீரராக விதையாக இருந்தது. அங்கிருந்து தேசிய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்த டிங்கோ சிங், பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். 1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பின்னர் கடுமையாக போராடி அணியில் இடம்பெற்ற அவர், இதில் தங்கப் பதக்கம் வென்றார். பின்னாளில் இந்திய கடற்படையிலும் சேர்ந்து தேச சேவையில் ஈடுபட்டார்.
குத்துச்சண்டை களங்களில் இந்தியாவுக்காக போராடிவந்த இவர், இப்போது புற்று நோயுடன் போராடி வருகிறார். குத்துச்சண்டை களத்தைப் போலவே இந்த களத்திலும் அவர் வாகை சூடட்டும்.
ஜனவரி 2
ஒலிம்பிக்கும் கிரிக்கெட் போட்டியும்
2028-ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டையும் ஒரு ஆட்டமாக சேர்ப்பதற்கான முயற்சிகள் தற்போது நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில்கூட இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நவீன ஒலிம்பிக்கின் தொடக்க காலத்தில் 1900-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றிருந்தது பலருக்கும் தெரியாது.
இந்த ஒலிம்பிக் போட்டியில் இங்கிலாந்தும், தற்போது கிரிக்கெட்டில் அதிகம் ஈடுபாடு காட்டாத பிரான்சும் மட்டுமே மோதியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அணிகளும் இதில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த 2 அணிகளும் கழன்றுகொண்டன. இப்போட்டியில் இங்கிலாந்து அணி கலந்துகொண்டாலும், அதன் முன்னணி டெஸ்ட் வீரர்கள் யாரும் அணியில் இடம்பெறவில்லை. மாறாக கவுண்டி கிரிக்கெட்டில் ஆடிவந்த வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து அணி உருவாக்கப்பட்டது.
இங்கிலாந்து – பிரான்ஸ் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 19 மற்றும் 20-ம் தேதிகளில் நடந்துள்ளன. இத்தனைக்கும் முழுத் தகுதியுள்ள கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டியை நடத்தாமல், சைக்கிள் பந்தயங்களை நடத்தும் மைதானத்தில் இப்போட்டியை நடத்தியுள்ளனர்.
தற்போது உள்ளதைப் போல் 11 வீரர்களைக் கொண்ட அணிகளாக இல்லாமல், 12 வீரர்களைக் கொண்ட அணிகளாக இங்கிலாந்தும், பிரான்சும் களத்தில் குதித்துள்ளன. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 117 ரன்களையும், பிரான்ஸ் 78 ரன்களையும் குவித்துள்ளன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் என ஆட்டத்தை டிக்ளேர் செய்ய, அடுத்து ஆடிய பிரான்ஸ் 26 ரன்களில் மொத்தமாக சுருண்டுள்ளது. இப்படியாக மொத்தம் 366 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து அணி தங்கம் வென்றது.
ஜனவ்ரி 3
பந்தய கார்களின் காதலர்
பார்முலா 1 கார் பந்தயம் என்றதும் நம் நினைவுக்கு வரும் பெயர் மைக்கேல் ஷுமேக்கர். 1994, 1995, 2000, 2001, 2002, 2003, 2004 என 7 ஆண்டுகள் பார்முலா 1 கார் பந்தயத்தில் வெற்றிக் கோப்பையை வசமாக்கியவர் மைக்கேல் ஷுமேக்கர்.
ஜெர்மனியில் உள்ள ஹர்ட் நகரில் 1969-ம் ஆண்டு பிறந்த ஷுமேக்கருக்கு சிறுவயது முதலே கார் பந்தயத்தில் காதலை ஏற்படுத்தியவர்கள் அவரது பெற்றோர். ஷுமேக்கருக்கு 6 வயதாக இருக்கும்போதே, சிறு குழந்தைகளுக்கான கார்ட்டிங் பந்தயத்தில் அவரை பங்கேற்கச் செய்து, அறிமுகப்படுத்தி உள்ளனர். அன்று தொடங்கிய கார் காதல், அவரை பல உச்சங்களுக்கு அழைத்துச் சென்றது.
பந்தயக் கார்களின் காதலராக இருந்த ஷுமேக்கர், ஒருபோதும் சொகுசுக் கார்களை விரும்பியதில்லை. அவற்ற ஓட்ட அவர் அதிக ஆர்வம் காட்டியதில்லை. மாறாக எளிமையான வகை பியட் கார்களையே அவர் விரும்பினார்.
எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்கிறோமோ, அந்த அளவுக்கு மற்றவர்களுக்கு கொடுக்கவும் வேண்டும் என்பதை கொள்கையாக கொண்ட ஷுமேக்கர், ஒருமுறை ஒரே செக்கில் 10 மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுத்தார்.
பொதுவாக பந்தய வீரர்கள் மழைக்காலத்தை விரும்புவதில்லை. இந்த சமயத்தில் கார் பந்தயம் நடந்தால், டயர்கள் வழுக்கிச் சென்று விபத்து ஏற்படுமோ என அவர்கள் பயப்படுவதே இதற்கு காரணம். ஆனால் இதற்கெல்லாம் நேர்மாறாக மழைக்காலத்தில் பந்தயத்தில் ஈடுபடுவதை ஷுமேக்கர் விரும்பினார். இப்பந்தயங்களில் வெற்றியும் பெற்றார். அதனால் அவரை ‘ரெயின் மாஸ்டர்’ என்றும், ‘ரெயின் கிங்’ என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர்.
ஆபத்தான கார் பந்தயங்களை சுலபமாக கையாண்ட ஷுமேக்கர், 2013-ம் ஆண்டு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாடும்போது ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டு, கோமா நிலைக்கு சென்றார். பின்னர் அதில்ருந்து அவர் கொஞ்சம் மீண்டாலும் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
---------------------------------------------------------------
ஜனவரி 4
ஒலிம்பிக்கில் வென்ற தங்கமகன்
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றுகொடுத்த முதல் இந்தியர் என்ற பெருமை அபினவ் பிந்திராவுக்கு உள்ளது.
1982-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி டேராடூனில் பிறந்த அபினவ் பிந்திராவுக்கு மற்ற வீரர்களுக்கு கிடைக்காத ஒரு வசதி இருந்தது. அது பணவசதி. ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் புழங்கும் ஒரு வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளராக அவரது தந்தை இருந்தார். சிறு வயதில் இருந்தே துப்பாக்கி சுடுதலின் மீது ஆர்வமாக இருந்த அபினவுக்கு அவரது தந்தை ஒரு பொம்மைத் துப்பாக்கியை பரிசளிக்க, அதிலேயே குறிபார்த்து சுடத் தொடங்கினார். அப்போதுதான் தன் மகனுக்கு ஆர்வத்துடன் திறமையும் இருக்கிறது என்பதை அவரது தந்தை உணர்ந்தார்.
ஒரு துப்பாக்கி சுடும் வீரரின் முக்கிய தேவைகளில் ஒன்று நல்ல கண் பார்வை. அப்போதுதான் அவரால் நன்றாக குறிபார்த்து சுட முடியும் ஆனால் அபினவ் பிந்திராவுக்கு சிறுவயதிலேயே பார்வையில் குறைபாடு இருந்தது. ‘மைனஸ் 4’ பார்வை குறைபாடு கொண்ட சூழலில்தான், தான் ஒரு துப்பாக்கி சுடும் வீரனாக விரும்புவதாக தன் தந்தையிடம் அபினவ் பிந்திரா கூறியுள்ளார்.
தன் மகனுக்கு துல்லியமான பார்வை இல்லை என்றாலும் அவர் விரும்பியதைச் செய்து முடிக்க அபினவின் தந்தை அபிஜித் பிந்திரா உறுதுணையாக இருந்தார். துப்பாக்கி வாங்கிக் கொடுத்ததுடன், வீட்டிலேயே அவன் பயிற்சிபெற வசதியாக ஒரு சிறிய பயிற்சி மையத்தையும் அமைத்துக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அமித் பட்டாசார்ஜீ, லெப்டினென்ட் கர்னல் தில்லான் ஆகியோரிடம் பயிற்சிக்காக அனுப்பப்பட்டார் அபினவ் பிந்திரா. கேட்டதை வாங்கிக் கொடுக்கும் அப்பா, சிறப்பாக வழிகாட்டும் குருநாதர்கள் என்று கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட அபினவ் பிந்திரா துப்பாக்கி சுடும் பிரிவில் சிறகடித்து பறந்தார்.
அன்று தந்தை கொடுத்த ஊக்கம்தான் நமக்கு அபினவ் பிந்திரா என்ற துப்பாக்கி சுடும் நாயகனைத் தந்தது. ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கமே வெல்லாமல் இருந்த இந்தியாவின் ஏக்கமும் தீர்ந்தது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் ஏர் ரைபிள் பிரிவில் அவர் வென்ற தங்கப் பதக்கம்தான் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா வென்ற ஒரே தங்கப் பதக்கம்.
No comments:
Post a Comment