Powered By Blogger

Friday, January 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 27-ஜனவரி 1

 டிசம்பர் - 27

ஒற்றைக்காலில் நிற்கும் நடுவர்
விளையாட்டு வீரர்களுக்கு இணையாக நடுவர்களாலும் ரசிகர்களைக் கவர முடியும் என்பதை நிரூபித்தவரான கிரிக்கெட் நடுவர்  டேவிட் ஷெப்பேர்டின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 27).  கிரிக்கெட் போட்டிகளின்போது பேட்ஸ்மேன்கள் பவுண்டரி அடித்தால்,  விரல்களால் நாட்டியமாடியவாறு   கைகளை  அசைக்கும் ஷெப்பேர்டின் பாணியை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
1940-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள டெவோன் எனும் ஊரில் பிறந்த டேவிட் ஷெப்பேர்ட், 1983-ம் ஆண்டுமுதல் 2003-ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். இதில் 6 உலகக் கோப்பை தொடர்களும் அடங்கும். தனது காலகட்டத்தில் நூற்றுக்கணக்கான போட்டிகளில் நடுவராக இருந்துள்ள டேவிட் ஷெப்பேர்ட், தவறான முறையில் அவுட் கொடுத்ததாக எந்த வீரரும் புகார் கூறியதில்லை. அந்த அளவுக்கு துல்லியமான முடிவுகளை அவர் மைதானத்தில் எடுத்துள்ளார்.
 பேட்டிங் செய்யும் அணிகள் 111, 222, 333, 444 என்று ஒரே எண் கொண்ட ரன்களை எடுக்கும்போதெல்லாம் ஒற்றைக்காலில் மைதானத்தில் நிற்பது இவரது மற்றொரு பாணி. இதுபற்றி கேட்டபோது அந்த எண்கள் அதிர்ஷ்டமிலாதவை என்று கருதியதால், தான் அவ்வாறு நின்றதாக கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் ஆட வருவதற்கு முன்பு, இங்கிலாந்தில் உள்ள குளூகேஸ்டர்ஷயர் அணிக்காக முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் டேவிட் ஷெப்பேர்ட் ஆடியுள்ளார். முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 10,672 ரன்களையும்  குவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, பேட்டிங்குக்கான பயிற்சி மையத்தை தொடங்கவே டேவிட் ஷெப்பேர்ட் முதலில் நினைத்துள்ளார். ஆனால் இந்த நேரத்தில் அவரைச் சந்தித்த நண்பர் ஒருவர், “கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தை ரசிக்க ஏற்ற இடம், நடுவர்கள்  நிற்கும் இடம்தான். அங்கிருந்துதான் வீரர்களின் ஒவ்வொரு ஷாட்டையும் அருகில் இருந்து ரசிக்க முடியும்” என்று கூறியுள்ளார். இதனாலேயே கிரிக்கெட் ரசிகரான டேவிட் ஷெப்பேர்ட், நடுவராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------
டிசம்பர் 28
இந்திய விளையாட்டின் சூப்பர் மேன்
இந்திய விளையாட்டுத் துறையின் சூப்பர் மேன் என்று எம்.ஜே.கோபாலனைச் சொல்லலாம். ஒரே நேரத்தில் இந்திய ஹாக்கி அணியிலும், இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்ற பெருமை அவருடையது. இப்படி ஒரே நேரத்தில் 2 விளையாட்டுகளுக்கான அணியிலும் இடம்பெற்ற அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
1909-ம் ஆண்டு தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொரப்பாக்கத்தில்  எம்.ஜே.கோபாலன் (மொரப்பாக்கம் ஜோஸ்யம் கோபாலன்) பிறந்தார்.   கோபாலனுக்கு சிறு வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர், சென்னை திருவல்லிக்கேணிக்கு இடம்பெயர்ந்தனர்.  சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் மற்றும் ஹாக்கி போட்டிகளில் கோபாலன் வல்லவராக இருந்தார்.
இளம் வயதில் 1930-ம் ஆண்டு மெட்ராஸ் அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த அவர், தனது ஆற்றலால் 1933-34-ம் ஆண்டு சீசனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட தேர்வு செய்யப்பட்டார். கொல்கத்தாவில் நடந்த இப்போட்டியில் அவர் 39 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தியாவின் முதலாவது ரஞ்சி கோப்பை தொடரின் முதலாவது பந்தை வீசிய பெருமையும் இவருக்கு உண்டு. ஹாக்கி விளையாட்டிலும் சிறந்தவரான இவர்  இந்திய அணிக்காக 39 ஹாக்கி போட்டிகளில் ஆடியுள்ளார்.
1936-ம் ஆண்டு பெர்லின் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஹாக்கி அணிக்கு கோபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணியிலும் அவர் தேர்வானார். ஹாக்கியை விட கிரிக்கெட்டை அதிகம் விரும்பிய கோபாலன், ஒலிம்பிக் போட்டிக்கு செல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த தொடரில் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இந்தியாவுக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடியபோதிலும், 78 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற அவர், 2,916 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் தனது பந்துவீச்சால் 194 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
-------------------------------------------------------
டிசம்பர் 29
கபில்தேவுக்கு முட்டுக்கொடுத்த கிர்மானி
தோனிக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி கண்ட மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் சையத் கிர்மானியின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 29).
ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான சையத் கிர்மானி, சென்னையில் பிறந்து பிற்காலத்தில் பெங்களூருவில் செட்டில் ஆனவர். இந்திய அணிக்கு 1971-ம் ஆண்டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டாலும், முதல் போட்டியில் இந்தியாவுக்காக ஆடும் வாய்ப்பு இவருக்கு 1976-ம் ஆண்டில்தான் கிடைத்துள்ளது. அதுவரை அப்போதைய விக்கெட் கீப்பரான பரூக் இஞ்ஜினீயருக்கு சப்ஸ்டிடியூட்டாகவே அணியில் வைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் இதைப்பற்றியெல்லாம் கிர்மானி கவலைப்படவில்லை. இதற்கு காரணம் தூக்கம். இந்திய அணியில் தூக்கப்பிரியராக கருதப்பட்ட கிர்மானி, அணி பரபரப்பாய் பேட்டிங் செய்யும்போதும் குறட்டை விட்டு தூங்குவாராம். தன்னுடைய புத்தகம் ஒன்றில் இதுபற்றி குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், “இங்கிலாந்து தொடரின்போது ஒரு நாள் அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஆலன் நாட்  எப்படி  கீப்பிங் செய்கிறார் என்பதை கவனிக்குமாறு அணியின் மேனேஜர் ராம் பிரகாஷ் மெஹ்ரா, கிர்மானியிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் அந்தப் பக்கம் நகர்ந்ததும் கிர்மானி டிரெஸ்ஸிங் ரூமில் தூங்கச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மேனேஜர், கிர்மானி எங்கே என்று கேட்க, ‘சைட் ஸ்கிரீன் அருகில் நின்று அவர் ஆலன் நாட்டின் கீப்பிங்கை படித்துக்கொண்டு இருக்கிறார்’ என்று சொல்லி காப்பாற்றினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
  இந்தியாவுக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் 2,759 ரன்களையும், 49 ஒருநாள் போட்டிகளில்  373 ரன்களையும் அவர் குவித்துள்ளார். உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே க்கு எதிராக கபில்தேவ் 175 ரன்கள் குவித்த ஆட்டத்தில் அவருடன் 6-வது விக்கெட் ஜோடியாக 126 ரன்களுக்கு முட்டுக்கொடுத்து நின்றவர் கிர்மானி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 126 ரன்களில் கிர்மானி எடுத்த ரன்கள் 24.      
------------------------------------------------------------------
டிசம்பர் 30
முகமது அலியின் வாரிசு
குத்துச்சண்டை போட்டிகளில், அப்பாவுக்கு தான் ஒன்றும் குறைந்தவரில்லை என்பதை நிரூபித்த லைலா அலியின் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 30). குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய முகமது அலியின் மகள்தான் லைலா அலி.  உலக சூப்பர்  மிடில்வெயிட் சாம்பியன் பட்டம் உள்ளிட்ட பல போட்டிகளில் பட்டம் வென்றவரான லைலா அலி, தான் பங்கேற்ற 24 போட்டிகளில் ஒன்றில்கூட எதிராளியிடம் தோற்றதில்லை.
தான் ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்தாலும், தனது  மகள் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாவதை ஒருபோதும் முகமது அலி விரும்பியதில்லை. சவால்கள்  நிறைந்த அந்தத் துறைக்கு தனது மகள் லைலா பொருத்தமற்றவர் என்றுதான் முகமது அலி கருதியிருந்தார். முதல் போட்டியில் லைலா வென்ற பிறகுதான் இந்த கருத்தை முகமது அலி மாற்றிக்கொண்டார்.
இதுபற்றி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் லைலா அலி கூறியிருப்பதாவது:
ஆரம்பத்தில் என் அப்பாவுக்கு தெரியாமல் நான் ரகசியமாகத்தான் குத்துச் சண்டையை கற்று வந்தேன். சில நாட்களுக்கு பின் அவர் அதுபற்றி தெரிந்துகொண்டார். இருந்தாலும் ஏதும் சொல்லவில்லை. ஆனால் நான் தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையாக திட்டமிடுவதைப் பற்றிக்  கேள்விப்பட்டதும், அவர் கவலையானார்.   ‘குத்துச் சண்டை களத்தில் உன்னை யாராவது நாக் அவுட் செய்தால் என்ன செய்வாய்’ என்று கேட்டார். அதற்கு நான், ‘அப்படி நாக் அவுட் செய்தாலும் உங்களைப் போல் மீண்டு வருவேன்’ என்று கூறினேன். இதற்கு அவர் பதில் ஏதும் சொல்லவில்லை.
  1999-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி, என் முதல் குத்துச்சண்டை போட்டியில் நான் கலந்துகொண்டபோது, அப்போட்டியைக் காண அவர் வந்திருந்தார். நான் வெற்றி பெற்றதும், டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தவர், என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார். அவரது பெருமிதத்தின் அளவை அந்த அணைப்பு உணர்த்தியது.
இவ்வாறு லைலா அலி கூறியுள்ளார்.
-----------------------------------------------------
டிசம்பர் 31
2020-ல் கிடைத்த நாயகன்
கரோனா வைரஸின் தாக்கத்தால் 2020-ம் ஆண்டில் மிகவும் பாதிக்கப்பட்ட துறை என்று விளையாட்டுத் துறையைக் கூறலாம். ஒலிம்பிக் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரை பல போட்டிகள் இந்த ஆண்டில் கரோனாவால் தடைபட்டன. அதனாலேயே  இந்த ஆண்டில் விளையாட்டுத்  துறையில் அதிக நாயகர்களும் உருவாகவில்லை.

ஆனால் இதையெல்லாம் கடந்து, இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த சூப்பர் நாயகன் நடராஜன். இந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக யார்க்கர் மேல் யார்க்கர்களை வீசிய நடராஜன், இதனாலேயே ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட, அங்கும் சோடை போகாமல் விக்கெட்களை அள்ளி இந்தியாவின் வெற்றிக்கு துணைபுரிந்துள்ளார்.
தமிழகத்தில் சேலத்தை அடுத்துள்ள சின்னப்பம்பட்டிதான்  நடராஜனின் சொந்த ஊர். அப்பா தங்கராசு தறி வேலை பார்ப்பவர்.  அம்மா சாந்தா, தெருவோரத்தில் கோழிக்கடை வைத்திருந்தார்.  நடராஜனுக்கு   3 தங்கைகள், ஒரு தம்பி.   நடராஜனுக்கு சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்பது கனவு. வீட்டில் உள்ளவர்களோ, அவர்  படித்து முடித்து ஏதாவது வேலைக்கு சென்று  குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினார்கள்.  இந்தச் சூழலில் உள்ளூர் கிரிக்கெட் கிளப்பை நடத்திவரும்,  ஜெயப்பிரகாஷ் என்பவர் நடராஜனுக்கு உதவ முன்வர, அவரது வாழ்க்கை பயணம் பிஎஸ்எல்வி ராக்கெட் போல் ஜிவ்வென வேகமெடுத்தது.
காயங்கள், தடைகள் என பல விஷயங்களைக் கடந்து வாழ்க்கையில் சாதித்துள்ளார் நடராஜன். பெருநகரங்கள் மட்டுமின்றி சிறு  கிராமங்களில் இருந்தும் நாயகர்களாக உயர்ந்தெழ முடியும் என்பதை நிரூபித்த நடராஜன், 2021-ல் மேலும் சாதிப்பார் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment