Powered By Blogger

Friday, January 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 10-13

 டிசம்பர்  10

அண்ணன் காட்டிய வழியில்
கபில்தேவின் காலத்துக்குப் பிறகு அமைதியான தென்றலாய் இருந்த இந்திய கிரிக்கெட் அணியை ஆக்ரோஷமான புயலாய் மாற்றியவர் சவுரவ் கங்குலி.  அவர்  கேப்டனாவதற்கு முன் மற்ற அணி வீரர்கள்தான் இந்திய வீரர்களை கிண்டலடித்து பேட்டிங் செய்யும்போது உசுப்பேற்றுவார்கள் (ஸ்லெட்ஜிங்)  இதன்மூலம் அவர்களின் கவனத்தை திசை திருப்புவார்கள். ஆனால் அவர்கள்  பேட்டிங் செய்யும்போது நமது வீரர்கள் அமைதியாய் இருப்பார்கள். ஆனால் கங்குலி கேப்டனாக வந்த  பிறகு நிலைமை தலைகீழானது. ‘முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்’ என்ற  கொள்கையைக் கொண்ட கங்குலி,  எதிரணிகளின்  வழியிலேயே சென்று  அவர்களை  உசுப்பேற்றி ஆட்டமிழக்கச் செய்தார்.   அதனால் இந்திய அணி அதிக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது.

கேப்டனாக மட்டுமின்றி தனது ஆக்ரோஷமான ஆட்டத்தாலும், சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் முக்கியமானவராக  உருவெடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்ததுடன் 100-க்கும் அதிகமான விக்கெட்களையும் கங்குலி வீழ்த்தியுள்ளார்.கங்குலியைத் தவிர   காலிஸ், சச்சின், ஜெயசூர்யா, தில்ஷன் ஆகிய 4 வீரர்களே இச்சாதனையை செய்துள்ளனர்.

  சிறுவயதில் கங்குலிக்கு கிரிக்கெட் பிடிக்காது. இருந்தாலும் தந்தை மற்றும் அண்ணனின் வற்புறுத்தலாலும், கிரிக்கெட் முகாமுக்கு செல்லும் நேரத்தில் படிப்பில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பதாலும் 10-ம் வகுப்புக்கு பிறகு  கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினார்.  கங்குலி வலதுகை பழக்கம் உடையவர். ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் இடது கையைப் பயன்படுத்துவார். இதற்கு காரணம் அவரது அண்ணன் ஸ்னேஹசீஷ். வங்கதேச மாநில அணியின் கிரிக்கெட் வீரராக இருந்த அவர் இடதுகை பேட்ஸ்மேன். அவரைப் பார்த்து கிரிக்கெட் ஆடக் கற்றுக் கொண்டதால் கங்குலியும் இடதுகை பேட்ஸ்மேனாக மாறினார்.
--------
டிசம்பர் 11
தொலைக்காட்சி நிலையத்தை வியக்கவைத்த ஆனந்த்

இந்தியாவில் மையம் கொண்டு உலகம் முழுவதும் சுழன்றடித்த செஸ் புயலான விஸ்வநாதன் ஆனந்த்தின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 11).  2000, 2007, 2008, 2010 மற்றும்  2012-ம் ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியன்ஷிப்பை வென்று  இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் விஸ்வநாதன் ஆனந்த். இதற்காக பல்வேறு விருதுகளை இந்திய அரசு அவருக்கு வழங்கியுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்த், இத்தனை பட்டங்களையும், விருதுகளையும் வெல்வதற்கு அடித்தளமிட்டவர் அவரது தாய் சுசீலா. 6 வயதிலேயே ஆனந்த்துக்கு  செஸ் விளையாட்டின் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்தும், ஓய்வு நேரங்களில் அவருடன் செஸ் விளையாடியும் தன் மகனின் ஆற்றலை  வளர்த்தார்.  பொழுதுபோக்குக்காக  செஸ் ஆடுவதைவிட, ஒரு சாம்பியனாக வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆனந்த் செஸ் ஆட்டங்களில் ஆடுவதை உணர்ந்துகொண்ட அவர், அது தொடர்பான புத்தகங்களை வாங்கிக் கொடுத்தும், செஸ் கிளப்புகளில் ஆடவைத்தும்  உற்சாகப்படுத்தினார்.

ஆனந்தின் தந்தை விஸ்வநாதன், தென்னக ரயில்வேயில் தலைமை மெக்கானிக்கல் இஞ்ஜினீயராக இருந்தார். 1978-ம் ஆண்டு அவர் பணி நிமித்தமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவுக்கு  குடும்பத்துடன் இடம்பெயர வேண்டியிருந்தது. இந்த காலகட்டத்தில், மணிலா தொலைக்காட்சியில்  செஸ் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதியில், செஸ் ஆட்டம் தொடர்பான புதிர் கேள்வி ஒன்றைக் கேட்பார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு செஸ் தொடர்பான புத்தகங்களை பரிசளிப்பார்கள். ஒவ்வொரு நாளும் அந்தப் புதிர்களை விடுவித்து பரிசுகளை வென்று வந்துள்ளார் ஆனந்த்.
ஒரே நபராக ஆனந்த் தொடர்ந்து பரிசுகளை  வென்றுவர,  ஒரு நாள்  அவரை தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைத்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், “இங்குள்ள புத்தக பரிசுகளை எல்லாம் எப்படியும் நீதான் வெல்லப் போகிறாய். அதனால் இன்றைக்கு நீயே உனக்குத் தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்”என்று கூறிவிட்டார்களாம்.
--------------------------------------------------------------------------------------
டிசம்பர் 12
சிக்சர் மன்னனின் பிறந்த நாள்
2007-ல் நடந்த  டி20 உலகக் கோப்பை, 2011-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். குறிப்பாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அவர் அடித்த   6 சிக்சர்களை, கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கவே  முடியாது. அந்த சிக்சர் மன்னனின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12).

 40 டெஸ்ட்களில்  1,900 ரன்கள், 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ரன்கள், 58 டி20 போட்டிகளில் 1,177 ரன்கள் என்று ரன் மழையால்  ரசிகர்களை நனைத்தவர் யுவராஜ் சிங்.  பந்துவீச்சிலும் மாயாஜாலம் செய்தவர்.   யுவராஜின் அப்பா யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர்தான்.    ஹரியாணாவைச் சேர்ந்த கபில்தேவும், யோக்ராஜ் சிங்கும்  ஒரே சமயத்தில் வாய்ப்புதேடி கிரிக்கெட் வாரியத்தின் கதவுகளைத் தட்டினர்.  இருவரில் ஒருவருக்குதான் எதிர்காலம் என்றிருந்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கபில்தேவ் புகழின் உச்சிக்கு சென்றார். யோக்ராஜோ, 1981-ல் இந்திய அணிக்காக ஆடுவதற்கு கிடைத்த வாய்ப்பில் ஒரே விக்கெட்டை மட்டும் எடுத்ததால்,  அணியில் மீண்டும் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டார்.


இதனால்  துவண்டுபோன  யோக்ராஜ் சிங், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டார். நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து டிரிக்கரை அழுத்தும் தருணம்,  மகன் யுவராஜ் சிங்கின் முகம் அவரது மனதில் தோன்றி மறைந்துள்ளது.  தன்னால் முடியாததை மகனை வைத்து சாதிக்க வேண்டும் என்று உறுதி எடுத்த யோக்ராஜ், தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு யுவராஜுக்கு பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். தந்தைக்கு ஏற்ற தனயனாக இருந்த யுவராஜ் சிங்கும் , அவரது ஆசையை நிறைவேற்றினார்.
--------------------------------------
டிசம்பர்  13
ஒலிம்பிக்கில் பெண்கள் நுழைந்த கதை

ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பட்டையைக் கிளப்பி வருவதைப் பார்த்து வருகிறோம். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அவர்களுக்கு  அனுமதி கொடுக்கவே  நீண்ட காலம் ஆனது என்பது உங்களுக்கு தெரியுமா?

பண்டைய காலத்தில் ஒலிம்பிக் கொடிகட்டிப் பறந்தபோதே, இதில் ஆட பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அவர்களால் வளர்க்கப்பட்ட குதிரைகள் மட்டும் குதிரையேற்ற போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. அப்போதுகூட பெண்களால் வளர்க்கப்பட்ட குதிரைகள் வெற்றி பெற்றால், அவர்கள் நேரடியாக மேடைக்கு சென்று பதக்கத்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் இருந்தது.

1896-ல் நவீன ஒலிம்பிக் போட்டி, ஏதென்ஸ் நகரில் தொடங்கியபோதுகூட பெண்களுக்கான பிரிவில் போட்டிகள் ஏதும் நடத்தப்படவில்லை. பெண்களின் போட்டியில் சுவாரஸ்யம் இருக்காது என்று ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் கருதியதே இதற்கு காரணம்.  1900-ல் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் பங்கேற்க முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதும்கூட டென்னிஸ்,  கோல்ஃப் போன்ற சில  போட்டிகளில் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 1928-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான பிரிவில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் தடகள போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் போலந்தைச் சேர்ந்த ஹலினா கொனோபாகா என்ற வீராங்கனை  வட்டு எரியும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்கில் அவர் குண்டு எறியும் போட்டியிலும் பங்கேற்றார். இதே ஒலிம்பிக் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீராங்கனைகள் பலர் பந்தய தூரத்தை எட்ட முடியாமல் துவண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.
படக்குறிப்பு: ஹலினா கொனேபாகா

No comments:

Post a Comment