Powered By Blogger

Friday, January 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - டிசம்பர் 23-26

 டிசம்பர் 23

கால்பந்தும் 10-ம் எண் ஜெர்ஸியும்
கால்பந்து விளையாட்டில் வீரர்களை தூரத்தில் இருந்து அடையாளம் காண ரசிகர்களுக்கு உதவுபவை, அவர்கள்  அணியும் ஜெர்ஸிகளின் (மேல்சட்டை) எண்கள். கால்பந்து விளையாட்டைப் போலவே, இந்த ஜெர்ஸிகளும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.    அதிலும் பீலே, மரடோனா, பிளாட்டினி, மெஸ்சி உள்ளிட்டவர்கள் அணியும் 10-ம் எண் கொண்ட ஜெர்ஸிக்கள் ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்றவை.
ஆரம்ப காலகட்டத்தில் கால்பந்து போட்டிகளில் ஆடும் வீரர்களின் ஜெர்ஸிகளுக்கு எண் கிடையாது. இந்த வழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியது ஆஸ்திரேலியாதான். 1911-ம் ஆண்டில் சிட்னி லீசார்ட் மற்றும் எச்எம்எஸ் பவர்ஃபுல் அணிகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில்தான்  முதன்முதலாக பிரத்யேக எண்களைக் கொண்ட ஜெர்ஸிகளை வீரர்கள் அணியத் தொடங்கினார்கள். அதன்பிறகு 1923-ல் அர்ஜென்டினாவும், 1924-ல் அமெரிக்காவும், 1928-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தும் வீரர்களின் எண்களைக் குறிக்கும் ஜெர்ஸிகளை அறிமுகப்படுத்தின.
கால்பந்து போட்டிகளின்போது வீரர்களின் பெயர்களை வைத்து அணியின் பயிற்சியாளர் திட்டங்களை வகுப்பது அத்தனை எளிதாக இருக்காது என்பதால், அவர்கள் ஆடும் நிலைக்கு ஏற்ப பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டன.  குறிப்பாக கோல்கீப்பருக்கு 1-ம் எண்ணும், தற்காப்பு ஆட்டக்காரர்களுக்கு அதற்கடுத்த எண்களும், தாக்குதல் ஆட்டக்காரர்களுக்கு அதற்கு அடுத்தகட்ட எண்களும் வழங்கப்பட்டன. அந்த வகையில்  எதிராளியின் கோல் எல்லைக்குள் நுழைந்து தாக்கும் வீரருக்கு ஒவ்வொரு அணியும் 10-ம் எண் ஜெர்ஸியை வழங்கியது.
இந்த வகையில் பீலே, மரடோனா, மெஸ்ஸி ஆகியோர் எதிரணியை தாக்கும் முன்கள  வீரர் எனும் பொறுப்பை ஏற்றதால்,  அவர்களுக்கு 10-ம் எண் கொண்ட ஜெர்ஸிகள் வழங்கப்பட்டன.  அதிக கோல்களை அடிக்கும் வாய்ப்பு, இந்த எண்கொண்ட ஜெர்ஸியை அணியும் வீரர்களுக்கு இருப்பதால் கால்பந்தில் நட்சத்திர அந்தஸ்தைக் கொண்ட ஜெர்ஸியாக 10-ம் எண் ஜெர்ஸி உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 24
ஈட்டியில் எட்டிய சாதனை
ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு எட்டாமல் இருந்த தங்கப் பதக்கத்தை எட்ட வைத்தவர் என்ற பெருமை நீரஜ் சோப்ராவுக்கு உண்டு. 2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, 2017-ம் ஆண்டில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2016-ல் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டி, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவித்த  பெருமை நீரஜ் சோப்ராவுக்கு உண்டு. இந்த தங்க மகனின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 24).
ஹரியாணாவில் உள்ள காண்டிரா கிராமத்தில் ஒரு விவசாயியின் மகனாக நீரஜ் சோப்ரா பிறந்தார். நீரஜ்ஜின் பாட்டிக்கு அவரை மிகவும் பிடிக்கும் என்பதால், எந்த நேரமும் ஏதாவது பலகாரங்களைச் செய்து அவருக்கு கொடுத்துவந்தார். இதனால் சிறு வயதிலேயே நீரஜ் சோப்ராவின் உடல் எடை கூடியது. 11 வயதில் 80 கிலோ எடைகொண்ட சிறுவனாக  நீரஜ் வளர்ந்தார்.
இந்நிலையில்   எடையைக் குறைப்பதற்காக தினமும் மைதானத்தில் நீரஜ்ஜை ஓடச் செய்வார் அவரது தந்தை சதீஷ் குமார். ஒரு நாள் அப்படி ஓடிக்கொண்டு இருந்தபோது பானிபட்டைச் சேர்ந்த ஈட்டி எறியும் வீரரான  ஜெய்வீர். நீரஜ்ஜின் உடல் வாகு ஈட்டி எற்வதற்கு ஏற்றதாய் இருந்ததால் அவருக்கு பயிற்சி அளிக்க விரும்பினார். அவரின் தந்தையிடம் இதற்கு ஒப்புதல் கேட்க, அவரும் சம்மதித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜெய்வீரின் மேற்பார்வையில் பயிற்சி பெற்ற நீரஜ் சோப்ரா, உள்ளூர் முதல் சர்வதேச போட்டிகள் வரை பல வெற்றிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஈட்டி எறியும் போட்டிகளில் மிகவும் வல்லவரான, 100 மீட்டர் தூரத்துக்கு மேல் ஈட்டியை எறிந்தவரான உவே ஹான், தற்போது நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவரது மேற்பார்வையில் வரும் ஒலிம்பிக்கில் நீரஜ் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்ப்போம்.
------------------------------------------------------------------------------------------------
டிசம்பர் 25
லார்ட்ஸ் மைதானத்தில் பழிவாங்கிய கங்குலி
கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக யாராவது செயல்பட்டால், அப்படிச் செய்தவர்களுக்கு அவர்களின் வழியிலேயே பதில் சொல்வது முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் பாணி. அதனாலேயே அவர் தாதா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். கங்குலியின் அதிரடிக்கு உதாரணமாக லார்ட்ஸ் மைதானத்தில், அவர் தன் சட்டையைக் கழற்றி சுற்றியதைச் சொல்லலாம்.
2002-ம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மும்பையின் வாங்கடே மைதானத்தில் இந்த தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்தது.  இந்திய அணி ஒரு ஓவரில் 11 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற சூழலில்  கடைசி ஓவரை வீசிய இங்கிலாந்து வீரர் பிளிண்டாஃப், வெற்றிக்குத் தேவையான ரன்களைக் கொடுக்காமல் இந்தியாவைத் தோற்கடித்தார். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வாங்கடே மைதானத்தில் தன் சட்டையை கழற்றி சுழற்றினார்.
பிளிண்டாஃபின் இந்தச் செயல் இந்தியாவுக்கு அவமானம் என்று கருதிய கங்குலி, அதற்கு பழிவாங்கக் காத்திருந்தார்.  அதே ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த நாட்வெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டியில்,  இங்கிலாந்தை இந்தியா வெற்றிகொள்ள அதே ஆவேசத்துடன் தன் சட்டையைக் கழற்றி சுழற்றினார் கங்குலி. இங்கிலாந்துக்காரர்களால் இதை ஜீரணிக்கை முடியவில்லை.
 “கிரிக்கெட்டின் மெக்காவாக நாங்கள் கருதும், லார்ட்ஸ் மைதானத்தில், மரியாதை இல்லாமல் எப்படி சட்டையைக் கழற்றலாம்?” என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜெப்ரி பாய்காட்  கங்குலியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கங்குலி, “உங்களுக்கு வேண்டுமானால் லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்காவாக இருக்கலாம். ஆனால்   மும்பை மைதானம்தான்  எங்களின் கிரிக்கெட் மெக்கா” என்றார்.
---------------------------------------------------------
 டிசம்பர் 26
தூக்கத்தை இழந்து சாதித்த சிந்து
பேட்மிண்டனில் இந்தியாவின் புகழை ஒலிம்பிக் வரை  பறக்கவிட்டவர் பி.வி.சிந்து.  இன்றைய தினம் சாய்னா நெவாலைவிட இந்தியாவின் முன்னணி நட்சத்திரமாக பி.வி.சிந்துதான் திகழ்கிறார். ஆனால் இதே சிந்து, சாய்னாவுக்காக ஒரு காலத்தில் விட்டுக் கொடுக்கவும் வேண்டிவந்துள்ளது.  
சிறுவயதில் பாட்மிண்டனில் தனது கவனம் பதிய காரணமாக இருந்த கோபிசந்திடமே பயிற்சி பெற சிந்து விரும்பினார். இதைத்தொடர்ந்து சிந்துவுக்கு 10 வயதாக இருந்தபோது அவரது பெற்றோர் கோபிசந்தை அணுகினர்.  அவரது பயிற்சி மையம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கச்சி பவுளி என்ற இடத்தில் அமைந்திருந்தது.
“நான் இப்போது சாய்னா நெவால் என்ற பெண்ணுக்கு தினமும் காலை 6.30 மணி முதல் பயிற்சியளித்து வருகிறேன். அதனால் அந்த நேரத்தில் பயிற்சி அளிக்க முடியாது. நீங்கள் விரும்பினால் உங்கள் மகளை காலை 4.30 மணிக்கு அழைத்து வரலாம். நான் தினமும் 2 மணிநேரம் பயிற்சி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார் கோபிசந்த்.
சிந்துவின் வீடு இருந்தது செகந்திராபாதில். அங்கிருந்து கச்சி பவுளிக்கு வர அவர் 27 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யவேண்டும். காலை 4.30க்கு பயிற்சிக்கு வரவேண்டுமென்றால் 3 மணிக்கே எழுந்து தயாராக வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் மகளால் தினந்தோறும் பயிற்சிக்கு வர முடியுமா என்று சிந்துவின் பெற்றோர் தயங்கினர். ஆனால் சிந்துவோ, தன்னால் முடியும் என்று துணிந்து நின்றார். பல மாதங்கள் காலை 3 மணிக்கே எழுந்து 27 கிலோமீட்டர்கள் தூரம் பயணம் செய்து பயிற்சிக்கு வந்தார்.  இப்படி கடும் சவாலை மீறி  பயிற்சிபெற்ற சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, தன் குருநாதர் கோபிசந்துக்கு  சாய்னாவை விட அதிக கவுரவம் பெற்றுத் தந்தார்.

No comments:

Post a Comment