ஜனவரி 14
அசாருதீனுடன் மோதிய சித்து
கிரிக்கெட் போட்டிகளில் பொதுவாக, தங்களுக்கு பிடித்த அல்லது ஆடப்போகும் மைதானத்துக்கு ஏற்ற வீரர்களை கேப்டன்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அணியில் இடம்பெறாத வீரர்களுக்கு கேப்டன் மீது சற்று வருத்தம் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் அது சண்டையாகவும் மாறும். அப்படி ஒரு சம்பவம் 1996-ம் ஆண்டு நடந்தது.
1996-ல் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓல்ட் டிராபோர்ட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ஆடும் வீரர்களின் பட்டியலில், தொடக்க ஆட்டக்காரரான நவஜோத் சிங் சித்துவை கேப்டன் அசாருதீன் சேர்க்கவில்லை. இதுபற்றி அவருக்கு தகவலும் தெரிவிக்கவில்லை. மாறாக போட்டியில் ஆடவுள்ள வீரர்களின் பட்டியலை டிரெஸ்ஸிங் ரூமில் எழுதி ஒட்டி வைத்துள்ளார். இந்த பட்டியலை சித்து கவனிக்காததால், தான் அணியில் இருப்பதாகவே நினைத்துள்ளார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற அசாருதீன், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுப்பதாக கூறியதும், உடைமாற்றி பேடைக் கட்டத் தொடங்கியுள்ளார் நவஜோத் சிங் சித்து. அணியின் மற்ற வீரர்கள் சிலர், இதைப் பார்த்து சிரித்துள்ளனர். இந்த நேரத்தில்தான், தான் அணியில் இல்லை என்பது அவருக்கு தெரிந்துள்ளது. மூத்த வீரரான தன்னை அசாருதீன் அவமானப்படுத்தி விட்டதாக கொந்தளித்த சித்து, அணியில் இருந்து விலகி, உடனடியாக இந்தியாவுக்கு விமானம் ஏறினார்.
நிருபர்களிடம் இதுபற்றி கூறிய சித்து, “என் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் இழுக்கு ஏற்படும் ஏற்பட விடமாட்டேன் என்று என் அப்பாவுக்கு உறுதி அளித்துள்ளேன். அதனால் இந்த தொடரில் இனியும் ஆடமாட்டேன்” என்றார்.
அதற்கு பதிலளித்த அசாருதீன், “வீரர்கள் பள்ளிச் சிறுவர்களைப்போல் நடந்துகொள்ள கூடாது. தனிநபர்களைவிட கிரிக்கெட் முக்கியம்” என்றார்.
------------------------------------------------------------------
ஜனவரி 16
ஆற்றில் வீசிய தங்கப்பதக்கம்
குத்துச்சண்டை உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த முகமது அலியின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 17).
தன் வாழ்நாளில் குத்துச்சண்டை களத்தில் மட்டுமின்றி, நிறவெறிக்கு எதிராகவும் கடுமையான போராட்டத்தை முகமது அலி சந்தித்துள்ளார். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக நிலவிய இனவெறியைக் கண்டித்து, ஒலிம்பிக்கில் தான் வாங்கிய தங்கப் பதக்கத்தையே ஆற்றில் தூக்கி எறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1960-ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்தது.
1960-ம் ஆண்டில் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு அமெரிக்காவின் சார்பில் முகமது அலியையும் அனுப்ப அந்நாட்டு அரசு திட்டமிட்டது. இதைக் கேள்விப்பட்ட முகமது அலி, முதலில் ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்க விரும்பவில்லை. விமானத்தில் பயணம் செய்வது அவருக்கு பயத்தைக் கொடுத்ததால், இப்போட்டியில் பங்கேற்க அவர் விரும்பவில்லை. ஆனால் பிறகு நண்பர்களின் வலியுறுத்தலால் அவர் ரோம் நகருக்கு பறந்தார். விமானம் பறந்துகொண்டிருந்த நேரம் முழுவதும், அவர் தன் உடலில் பாராசூட்டைக் கட்டியபடியே இருந்ததாக கூறப்படுகிறது. இப்படி பயத்துடன் ரோம் நகருக்கு பறந்தவர், அங்கு குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வென்றார்.
பதக்கம் வென்று திரும்பிய முகமது அலிக்கு, அமெரிக்காவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்தச் சூழலில், பதக்கம் வென்ற மகிழ்ச்சியைக் கொண்டாட அவர் ஓட்டலுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள், கருப்பினத்தைச் சேர்ந்த முகமது அலிக்கு உணவு பரிமாற மறுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த முகமது அலி, ஓட்டலில் இருந்து வெளியேறினார். கடும் கோபத்துடன் ஓஹியோ ஆற்றுப் பகுதிக்கு சென்றவர், ஒலிம்பிக்கில் தான் வாங்கிய தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசி எறிந்தார். 1975-ம் ஆண்டு எழுதிய சுயசரிதையில் முகமது அலி இதைக் குறிப்பிட்டுள்ளார்.
-------------------------------------------------------------------
ஜனவரி 17
சுசில் குமாரின் வெற்றி ரகசியம்
ஒலிம்பிக்கில் ஒருமுறை பதக்கம் வெல்வதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில், அடுத்தடுத்து 2 ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் சுசில் குமார். 2008-ம் ஆண்டு நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சுசில் குமார், அதற்கு அடுத்ததாக 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். அத்துடன் காமன்வெல்த் போட்டி உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளிலும் பதக்கங்களை அள்ளியுள்ளார்.
மல்யுத்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவிப்பதன் ரகசியத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார் சுசில் குமார்
“ஒரு நல்ல மல்யுத்த வீரருக்கு கட்டுப்பாடு மிகவும் அவசியம். கட்டுப்பாடுடன் இருந்தால்தான் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றிகளைக் குவிக்க முடியும். நான் தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவேன். அதன் பிறகு 5 முதல் 6 மணிநேரம் கடுமையான பயிற்சியை மேற்கொள்வேன்.
காலையில் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தும் நான், மாலையில் பயிற்சியாளருடன் இணைந்து மல்யுத்தம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகளில் ஈடுபடுவேன். இரவு 9.30 மணிக்குள் உணவு அருந்திவிட்டு சிறிதுதூரம் நடந்துவிட்டு தூங்கச் சென்றுவிடுவேன். எந்த அளவுக்கு சீக்கிரம் எழுகிறேனோ, அந்த அளவுக்கு சீக்கிரத்தில் தூங்கவும் சென்றுவிடுவேன். உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள இவை இரண்டும் முக்கியம்.
மல்யுத்த வீரர்கள் தினமும் நிறைய சாப்பிடுவதாக ஒருசிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நாங்கள் மிகவும் அளவாகத்தான் சாப்பிடுகிறோம். தினசரி உணவில் பாதாம் பருப்பு, பால், வெண்ணெய், பழங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்வேன். உடலை கட்டுக்கோப்பாக வைக்க உணவுக் கட்டுப்பாடும் அவசியம்” என்கிறார் சுசில் குமார். மல்யுத்த வீரர்கள் மட்டுமின்றி அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை இது.
------------------------------------------
புத்துணர்ச்சி கொடுத்த சிக்ஸர்கள்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சாதனைகளில் ஒன்று, ஒரே ஓவரில் யுவராஜ் சிங் அடித்த 6 சிக்ஸர்கள். 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில்தான் இந்த அசுர சாதனையை நிகழ்த்தினார் யுவராஜ் சிங்.
2007-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பையில் தோற்றதால், டி20 உலகக் கோப்பைக்கு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை தேர்ந்தெடுத்தது இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு. அணியில் மூத்தவராக இருந்த யுவராஜ் சிங்கை கேப்டனாக்காமல், தோனியை கேப்டனாக்கியது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், இந்த தொடரில் அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடினார் யுவராஜ் சிங். இந்த சூழலில்தான் செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொண்டது.
இப்போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இப்போட்டியின் 18-வது ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களை எடுத்திருந்தது. இந்த நேரத்தில்தான் விஸ்வரூபம் எடுத்தார் யுவராஜ் சிங். ஸ்டூவர்ட் பிராட் வீசிய 19-வது ஓவரில் அடுத்தடுத்து 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் முறையாக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற சாதனையை யுவராஜ் சிங் படைத்தார். அத்துடன் 12 பந்துகளில் அரைசதம் அடித்தும் சாதனை படைத்தார். சர்வதேச அளவில் இன்றுவரை இந்த சாதனையை யாரும் முறியடிக்கவில்லை.
இப்போட்டியில் யுவராஜ் அடித்த சிக்ஸர்கள், இந்திய வீரர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உத்வேகத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் வென்ற இந்திய அணி, 2007-ம் ஆண்டில் நடந்த முதலாவது டி20 உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.
No comments:
Post a Comment