1.லஞ்சம் கொடுக்கமாட்டேன்
சர்வதேச கிரிக்கெட்டில் தென்றலாய் இருந்த இந்திய அணி, இன்று புயலாக மாறி மற்ற அணிகளைத் துவைத்து எடுக்கிறது. தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என ஒரு காலத்தில் வெல்ல முடியாமல் இருந்த நாடுகளைக்கூட விரட்டியடிக்கிறது. இந்த கிரிக்கெட் புயலின் கண்ணாக இருந்து எதிரணிகளை மிரட்டிவருகிறார் விராட் கோலி.
இந்திய கிரிக்கெட்டின் சண்டைக் கோழி என்று விராட் கோலியை சொல்லலாம். அவருக்கு முன்னால் இந்திய அணியை வழிநடத்தி வந்தவர்கள் (கங்குலியைத் தவிர) சாந்த சொரூபியாகவே இருந்தார்கள். எதிரணி வீரர்கள் நம் வீரர்களை ‘ஸ்லெட்ஜிங்’ செய்து உசுப்பேற்றினாலும் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். ஆனால் இன்று, “நம்மில் ஒருவரைச் சீண்டினாலும், ஒட்டுமொத்த எதிரணியையும் பதிலுக்கு சீண்ட வேண்டும்” என்ற புதிய யுத்த முறையைக் கொண்டுவந்துள்ளார் கோலி. கொஞ்சம் கங்குலி, கொஞ்சம் ரிக்கி பாண்டிங் என்று சண்டைக்கார கேப்டன்களின் கலவையாக நிற்கிறார். அத்துடன் பேட்டிங்கிலும் சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறார். கடந்த வாரம் 23 ஆயிரம் ரன்களை மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கிரிக்கெட் சக்ரவர்த்தியாக வலம்வரும் கோலியின் வாழ்க்கையில், சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வெறியை அவருக்குள் ஏற்படுத்திய விஷயம் லஞ்சம். அடிப்படை தேவை முதல் விளையாட்டு வரை எல்லாவற்றிலும் ஊறிக்கிடக்கும் லஞ்சம், ஒரு காலகட்டத்தில் விராட் கோலியின் வாழ்க்கையிலும் தலை நீட்டியது. அதைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன், விராட் கோலியின் நதி மூலத்தை தெரிந்துகொள்வோம்...
1988-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி டெல்லியில் உள்ள பஞ்சாப் குடும்பத்தில் விராட் கோலி பிறந்தார். அவரது அப்பா பிரேம் கோலி, ஒரு வழக்கறிஞர். கோலியுடன் சேர்த்து அவருக்கு 3 குழந்தைகள். அதில் விகாஸ் கோலியும், பாவனாவும் விராக் கோலிக்கு மூத்தவர்கள்.
கடைக்குட்டி என்பதால், செல்லமாக வளர்க்கப்பட்டார் விராட் கோலி. சச்சினைப் போன்று சிறு வயதிலேயே பேட்டும் கையுமாக இருந்துள்ளார். அந்தக் காலத்தில் கோலி எதிர்கொண்ட முதல் பந்துவீச்சாளர், அவரது அப்பா பிரேம் கோலி. தினமும் பணியை முடித்து வீட்டுக்கு வரும் பிரேம் கோலி, மகனுக்கு சிறிது நேரம் பந்து வீசுவார். அவர் பேட்டிங் செய்யும் ஸ்டைலைப் பார்த்து ரசிப்பார்.
“சிறுவயதில் நான் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்கவில்லை. கிரிக்கெட்தான் என்னைத் தேர்ந்தெடுத்தது. எனக்கு நினைவு தெரிந்து நான் விளையாடிய ஒரே ஆட்டம் கிரிக்கெட் மட்டும்தான். என் அப்பா, அண்ணன், நண்பர்கள் என்று பலரிடமும் கிரிக்கெட் ஆடியுள்ளேன். வீட்டில் பணக் கஷ்டம் இருந்த சூழலிலும் அந்தக் காலத்திலேயே ரூ.1,000 விலையுள்ள பேட் ஒன்றை எனக்கு அப்பா வாங்கித் தந்தார். எனக்கு நினைவு தெரிந்து என் 6 வயதுமுதல் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்தும் ஆடியும் வருகிறேன்” என்று இதைப்பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கோலி.
கிரிக்கெட் ரசிகராக இருந்த பிரேம் கோலிக்கு, தனது மகனையும் ஒரு கிரிக்கெட் வீரனாக்க ஆசை. இதை நிறைவேற்ற மேற்கு டெல்லியில் உள்ள கிரிக்கெட் பயிற்சி முகாமில் 9 வயதிலேயே விராட் கோலியைச் சேர்த்துள்ளார். அன்றிலிருந்து விராட் கோலியின் வரலாற்றில் அவரது தந்தைக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளார் பயிற்சியாளர் சுரேஷ் பத்ரா. இன்றைய தினம் விராட் கோலி சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அனாயாசமாக அடிக்கிறார் என்றால், அதற்கெல்லாம் மூலகாரணமாய் இருந்தவர் சுரேஷ் பத்ராதான். கிரிக்கெட்டின் அரிச்சுவடிகளை விராட் கோலிக்கு கற்றுக்கொடுத்த பத்ரா, கொஞ்சம் கொஞ்சமாக அவரை மெருகேற்றினார். அவரைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தில் ராஜ்குமார் சர்மா என்பவரிடம் கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார் விராட் கோலி.
இந்த இருவர் தந்த பயிற்சியால், அக்காலகட்டத்தில் டெல்லியில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் எல்லாம் விராட் கோலியின் பேட் பேசியது. அவர் ஆடும் அணி நிச்சயம் வெற்றிபெறும் என்ற சூழல் உருவானது. இந்த காலகட்டத்தில்தான் அவரது வாழ்க்கையில் லஞ்சம் பந்து வீசியது. ரஞ்சி போட்டிக்கான டெல்லி அணியில் கோலியை ஆடவைக்க லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று கிரிக்கெட் புரோக்கர்கள் சிலர் கொதித்துப் போய்விட்டார் பிரேம் கோலி.
லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு அவருக்கு வசதி இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதைக் கொடுக்க மனம் இல்லை என்பதே முக்கியமானதாக இருந்தது. தனது மகன் எதையும் போராடித்தான் அடைய வேண்டும். அப்போதுதான் அதன் அருமை மகனுக்கு தெரியும் என்று உறுதியாய் நம்பினார் பிரேம் கோலி.
“லஞ்சம் கொடுத்துதான் என் மகனுக்கு அணியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், அந்த இடம் அவனுக்கு தேவையில்லை” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதனால் கோலியின் வாய்ப்பு தட்டிப் போனது. தந்தையின் பிடிவாதத்தால் தன் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், துவண்டு போனார் விராட் கோலி. அதற்காக 3 நாட்கள் தந்தையிடம் பேசாமல், ஒழுங்காகச் சாப்பிடாமல் அழுதிருக்கிறார். இந்த கட்டத்தில் நேர்மையாக ஆடி அணியில் இடம்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அவரது தந்தை எடுத்துக்கூற சமாதானம் ஆகியுள்ளார்.
தந்தை கூறிய வழியில் கடுமையாக உழைத்த விராட் கோலியை கிரிக்கெட் ஏமாற்றவில்லை. 2006-ம் ஆண்டில் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போட்டியில் 10 ரன்களை மட்டுமே எடுத்தபோதிலும் அடுத்தடுத்த ஆட்டங்களில் சிறப்பாக ஆடி இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.
இந்த கட்டத்தில்தான் தன் வாழ்க்கையின் மிக முக்கியமான ஆட்டத்தில் கர்நாடகாவுக்கு எதிராக ஆடினார். ரஞ்சி கோப்பையின் முக்கிய ஆட்டங்களில் ஒன்றான இதில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி, 446 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி, அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்த சூழலில் அணியை பாலோ ஆனில் இருந்து மீட்க தனிநபராக போராடினார் கோலி.
2006-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி ஆட்டத்தின் இறுதியில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை எடுத்திருந்தது. தனிநபராய் போராடிய கோலி, 40 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்த நாள் ஆட்டத்தில் எப்படி பேட்டிங் செய்வது என்ற யோசனையுடன் தூங்கச் சென்ற விராட் கோலியை, நள்ளிரவில் ஒரு திடுக்கிடும் செய்தி எழுப்பியது. விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையைப் பற்றி பெரிய அளவில் கனவு கண்டவரான அவரது அப்பா பிரேம் கோலி மாரடைப்பால் காலமானார் என்பதே அந்த செய்தி.
------------------------------------------------------------------
அத்தியாயம் 2
2.வீர உரையும் உலகக் கோப்பையும்
பிரேம் கோலியின் மறைவு கோலியை எந்த அளவுக்கு பாதித்ததோ, அதே அளவுக்கு டெல்லி வீரர்களையும் பாதித்தது. தங்கள் சக ஆட்டக்காரரின் அப்பா மறைந்தது ஒரு பக்கம் அவர்களை சோகமாக்க, முந்தைய தினம் அவுட் ஆகாமல் ஆடிக்கொண்டு இருந்த விராட் கோலி, தந்தையின் மறைவால் ஆட வரமாட்டார் என்ற நினைப்பு அதை இன்னும் அதிகப்படுத்தியது.
கோலி இல்லாமல் ஆட்டத்தைத் தொடர, கேப்டன் மிதுன் மனாஸ் திட்டமிட்டுக் கொண்டிருக்க, ஆட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பாக யாரும் எதிர்பாராத வகையில் மைதானத்துக்கு வந்தார் விராட் கோலி. தந்தை மறைந்து சில மணிநேரங்களே ஆகியுள்ள நிலையிலும், அந்த சோகத்தை மூட்டை கட்டிவைத்து டெல்லி அணிக்காக பேட்டைப் பிடித்தார்.
முந்தைய நாளில் விட்ட இடத்தில் இருந்து (40 ரன்கள்) ஆட்டத்தைத் தொடர்ந்த விராட் கோலி 90 ரன்களைக் குவிக்க, டெல்லி அணி 308 ரன்களுடன் பாலோ ஆனைத் தவிர்த்தது. பொதுவாக பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனால் பெவிலியனுக்குத்தான் திரும்புவார்கள். ஆனால் அன்றைய தினம் 90 ரன்களில் அவுட் ஆனதும், விராட் கோலி மைதானத்தில் இருந்து வெளியேறி, தன் தந்தையாருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய இடுகாட்டுக்குச் சென்றார். இளகிய மனம் படைத்த இந்திய ரசிகர்களின் மனதை இது உருக்கியது.
இந்த சம்பவத்தைப் பற்றி பின்னாளில் செய்தியாளர்களிடம் பேசிய அவரது அம்மா, “தன் தந்தையை இழந்த இரவு, விராட் கோலியை மாற்றியது. ஒரு பக்கம் துக்கம் மனதை அழுத்தினாலும், மறுபுறம் வைராக்கியம் கொண்ட ஒரு கிரிக்கெட் வீரராக அன்றுதான் அவர் மாறினார். அடுத்த நாள் காலையில் தன் சோகத்தை மனதுக்குள் புதைத்துக்கொண்டு மைதானத்துக்கு சென்றார். என் மகன் எந்த அளவுக்கு மன உறுதி கொண்டவர் என்பதை எனக்கு உணர்த்திய நாள் அது. அணிக்காக ஆடாமல் பெஞ்ச்சில் அமர்வதை கோலி எப்போதும் விரும்பமாட்டார். அன்றைய தினமும் அவர் அதைத்தான் செய்தார். இதைத் தொடர்ந்து நடந்த போட்டிகளிலும் அவர் வைராக்கியத்துடன் ஆடினார். தன் தந்தையின் கனவுகளை தோளில் சுமக்கும் கோலி, இன்றுவரை அதற்காக போராடிக்கொண்டு இருக்கிறார்” என்றார்.
2006-ம் ஆண்டைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டிலும் விராட் கோலி சீராக வளர்ந்தார். தேசிய அளவிலான டி20 போட்டிகளில் முதல் முறையாக ஆடிய கோலி 35.80 என்ற சராசரியுடன் 179 ரன்களைக் குவித்தார். இது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் கோலிக்கு இடம்பிடித்துக் கொடுத்தது. இந்த அணிக்காக இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடந்த தொடர்களில், கோலியின் காட்டில் ரன்மழை பொழிய கேப்டன் பதவி தேடி வந்தது. 2008-ம் ஆண்டில் மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார்.
“என் வாழ்நாளில் இந்திய டெஸ்ட் அணி, ஒருநாள் மற்றும் டி20 அணி, ஆர்சிபி அணி என்று பல அணிகளுக்கான கேப்டன் பதவிகள் என்னைத் தேடி வந்திருக்கின்றன. பல ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளையும் நான் பெற்றுள்ளேன். ஆனால் அதற்கெல்லாம் மூல காரணமாக நான் கருதுவது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணிக்கு தலைமை தாங்க எனக்குக் கிடைத்த வாய்ப்புதான்” என்று இதைப்பற்றி பின்னொரு காலத்தில் கூறியிருக்கிறார் விராட் கோலி.
மணிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, அபினவ் முகுந்த், சவுரப் திவாரி, பிரதீப் சங்வான், சித்தார்த் கவுல் உள்ளிட்ட வீரர்களைக் கொண்ட இந்திய அணி கோலியின் கீழ் 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. 2007-ம் ஆண்டில் நடந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா பெற்ற வெற்றியால் உற்சாகத்தில் இருந்த இந்த இளம்படை, உலகக் கோப்பையில் தங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி ஆடியது.
இத்தொடரில் விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உட்பட 235 ரன்களைக் குவித்து நட்சத்திரமாக ஜொலித்தார். அவரைவிட சிறப்பாக ஆடிய மற்றொரு இந்திய வீரரான தன்மய் ஸ்ரீவத்சவா 262 ரன்களை (பிற்காலத்தில் அவரால் ஜொலிக்க முடியவில்லை) குவித்தார். மற்ற வீரர்களும் சிறப்பாக ஆட, லீக் ஆட்டங்களில் அடுத்தடுத்து வென்ற இந்திய அணி, அரை இறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்தை வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அங்கே இந்தியாவுக்காக தென் ஆப்பிரிக்கா காத்திருந்தது.
1983-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது நடந்த அதே சம்பவங்கள் இந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்திலும் நடைபெற்றன. வலிமையான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்த இந்திய அணி 45.4 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் சோர்ந்துபோக, கோலிக்குள் தூங்கிக்கொண்டிருந்த சண்டைக்கோழி விழித்தெழுந்தது. இன்னிங்ஸ் இடைவேளைக்கு பிறகு மைதானத்தில் நுழையும் முன் சக வீரர்களை அழைத்த கோலி, 1983-ல் கபில்தேவ் பேசியதைப் போல் பேசினார்.
“இது நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆட்டம். நம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல, நாம் கடக்க வேண்டிய கடைசி தடைக்கல் இது. இதில் வென்றால் நம்மில் சிலருக்கு இந்திய அணியில்கூட இடம் கிடைக்கும். அதனால் நமக்குள் இருக்கும் போர்க்குணத்தை வெளிப்படுத்துவோம். கடைசி பந்துவரை போராடுவோம்” என்று விராட் கோலி முழங்க, வீரர்களுகளிடையே உற்சாகம் கரைபுரண்டது. அதே வேகத்தில் மைதானத்தில் நுழைந்து தென் ஆப்பிரிக்க அணியை தாக்கினர்.
17 ரன்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்களை வீழ்த்த மழை குறுக்கிட்டது. பின்னர் 25 ஓவர் கொண்டதாக சுருக்கப்பட்ட ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற 116 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கோலியின் வியூகங்களால் தென் ஆப்பிரிக்க அணியால் 8 விக்கெட்டுக்கு 103 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணியும் உலகக் கோப்பையை முத்தமிட்டது.
--------------------------------------------------------------------
3. கோலியை நிராகரித்த டெல்லி
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு பட்டம் பெற்றுத் தந்ததால் விராட் கோலியின் கிரிக்கெட் கிராஃப் ஏறியது. இந்த கோப்பையை வென்ற சில நாட்களில் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் நடைபெற்றது.
விராட் கோலி டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால், டெல்லி டேர்டெவில்ஸ் அணி அவரை அதிக விலைக்கு வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி அணியோ, விராட் கோலி மீது ஆர்வம் காட்டவில்லை. வீரேந்தர் ஷேவக், கவுதம் காம்பீர், டிவில்லியர்ஸ், ஷிகர் தவன் என்று நன்றாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அணியில் நிறைய இருப்பதாக நினைத்த அணி நிர்வாகம், ஏலத்தில் கோலியை சட்டை செய்யவில்லை. மாறாக அப்போதைய இளம் பந்துவீச்சாளரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவருமான பிரதீப் சங்வானை வாங்கியது.
இந்தச் சூழலில் விராட் கோலி மீது நம்பிக்கை வைத்து, மிகக் குறைந்த விலையான 12 லட்ச ரூபாய்க்கு விராட் கோலியை வாங்கியது பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ். இந்த காலகட்டத்தில் தோனிக்கு சிஎஸ்கே அணி நிர்ணயித்த விலை 6 கோடி ரூபாய். தனக்குக் கிடைத்த தொகை சிறிதாக இருந்தாலும், கோலி அதற்காக கவலைப்படவில்லை. அவரது நோக்கமெல்லாம் பெரிய தொகைக்கு ஏற்றதாக தன்னை தயார்படுத்திக்கொள்வதில் இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.
ராகுல் திராவிட் தலைமையில், அனில் கும்ப்ளே, மார்க் பவுச்சர், ஜாக் கல்லிஸ் போன்ற நட்சத்திரங்களைக் கொண்ட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில், விராட் கோலியை முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. அதற்கு ஏற்றாற்போல் அவரது ஆட்டமும் சோபிக்கவில்லை. முதலாவது ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் ஆடிய விராட் கோலி மொத்தமாகவே 165 ரன்களைத்தான் எடுத்தார்.
இதேபோல் இந்தியாவுக்காக 2008-ம் ஆண்டில் முதல் முறையாக ஆடிய ஒருநாள் போட்டியிலும் (இலங்கை அணிக்கு எதிராக) கோலியால் 12 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இளையோர் கிரிக்கெட்டில் பெரிய நட்சத்திரமாக இருக்கும் தான், மூத்தவர்களுடன் ஆட இன்னும் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தார் கோலி. தன்னிடம் உள்ள குறைகள் என்ன என்று ஆராயத் தொடங்கினார். அந்தக் காலத்தில் கோலி சாப்பாட்டுப் பிரியராக இருந்தார். அதிலும் அசைவ உணவுகளை ஒரு பிடி பிடிப்பார். அதனாலேயே கொழுக் மொழுக்கென்று குண்டாக இருப்பார். அந்த உடல் அமைப்புதான் தனக்கு முக்கிய எதிரி என்று அறிந்துகொண்டார் விராட் கோலி.
அடுத்த நாள்முதல் உடல் நலனில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அள்ளி அள்ளி சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்ட கோலி, கிள்ளிச் சாப்பிட ஆரம்பித்தார். உடற்பயிற்சி கூடத்தில் நிறைய நேரத்தை செலவிட்டார். இதன் விளைவாக அவரது உடல் எடை குறையத் தொடங்கியது. அதே நேரத்தில் ஆசை ஆசையாக சாப்பிட்டு, வாட்ட சாட்டமாக இருந்துவந்த தனது மகன் சாப்பாட்டை குறைத்ததும், மெலிந்து வருவதும் கோலியின் அம்மா சரோஜ் கோலிக்கு கவலையை ஏற்படுத்தியது.
மகன் கோலியை பழையபடி சாப்பிடவைத்து எப்படியாவது குண்டாக்க வேண்டும் என்று நினைத்த சரோஜ் கோலி, சமையலில் கற்ற மொத்த வித்தைகளையும் பயன்படுத்தினார். தினந்தோரும் டைனிங் டேபிளில் கோலிக்கு பிடித்த விஷயங்களாக சமைத்து அடுக்கினார். கோலிக்கு அதுவே அக்னிப் பரீட்சையானது. தனக்குப் பிடித்த உணவுகள் ஒரு பக்கம், கிரிக்கெட் வாழ்க்கை மறுபக்கம் என எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் தவித்தார்.
உணவை விட கிரிக்கெட் மீதான காதல் அதிகமாக இருந்ததால், அம்மா சமைத்த அருமையான உணவுகளைத் தவிர்த்தார். இது அவரது அம்மாவின் கவலையை மேலும் அதிகப்படுத்தியது. “என்ன ஆச்சுன்னே தெரியல. கோலி இப்ப முன்ன மாதிரி சாப்பிடறதே இல்ல. கன்னமெல்லாம் ஒட்டிப் போயிருக்கு. எப்ப பார்த்தாலும் கிரிக்கெட்.. கிரிக்கெட்னு உடம்பைக் கெடுத்துக்கிறான்” என்று பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பினார்.
இதுபற்றி சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விராட் கோலி, “நான் டயட்டில் இருப்பது தெரியாமல் என் அம்மா எப்போதும் நான் சரியாகச் சாப்பிடுவதில்லை என புகார் கூறிக்கொண்டே இருப்பார். அத்துடன் என் கன்னங்கள் ஒட்டிப்போய் கிடப்பதாகவும், நான் மெலிந்துவிட்டதாகவும் குறைபட்டுக் கொள்வார். அம்மாக்களுக்கு எப்போதும் தங்கள் குழந்தைகள் கொழுக் மொழுக்கென்று இருக்க வேண்டும். என் அம்மாவும் அப்படித்தான் விரும்பினார். நான் எடை குறைந்து ஸ்லிம்மாக இருப்பது என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு புரியவைக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன்” என்கிறார்
வெறும் உணவுக் கட்டுப்பாடு மட்டுமின்றி காலை மாலை என தினமும் இரு வேளைகளில் சுமார் ஒன்றரை மணிநேரம் தீவிர உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார் விராட் கோலி. இதன் பயனாக அவரது உடல் ஸ்லிம்மானது.
உடம்பைச் சரி செய்தபிறகு பேட்டிங்கைச் சரிசெய்வதில் விராட் கோலியின் கவனம் சென்றது. இந்தச் சூழலில் விராட் கோலிக்கு உதவ சச்சின் முன்வந்தார். இளம் வீரராக துடிப்புடன் இருந்த விராட் கோலிக்கு உபயோகமாக சில டிப்ஸ்களை சச்சின் டெண்டுல்கர் வழங்க, அதை சிக்கென பிடித்துக்குக்கொண்டார் சிக்கூ (விராட் கோலியின் செல்லப் பெயர்).
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உடல் ரீதியாகவும், பேட்டிங் ரீதியாகவும் மேம்படுத்திக்கொண்ட விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை முழுமையாக நிரூபிக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்தார். 2009-ல் நடந்த இலங்கைத் தொடரில் அந்த வாய்ப்பு தேடி வந்தது.
-----------------------------------------------------------------------------------------------------
விராட் கோலி -4
கோலியின் முதல் சதம்
இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் வரிசை 2009-ல் வலுவாக இருந்தது. சச்சின், சேவக், காம்பீர், யுவராஜ் சிங், தோனி, ரெய்னா ஆகியோர் முதல் 6 இடங்களில் உறுதியாய் இருக்க, இவர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே மற்றவர்களுக்கு வாய்ப்பு என்ற நிலை அப்போது இருந்தது. அந்த இடத்தைப் பிடிக்க யூசுப் பதான், உத்தப்பா, ரோஹித் சர்மா என்று பலரும் வரிசை கட்டிக்கொண்டு நின்றிருந்தனர். கிட்டத்தட்ட மியூசிக்கல் சேர் போன்ற நிலை. இப்படிப்பட்ட சூழலில் இந்திய பேட்டிங் வரிசை என்ற சக்கர வியூகத்துக்குள் கோலி நுழைய ஒரு வாய்ப்பு கிடைத்தது.
2009-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி கொல்கத்தாவில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடந்த ஒருநாள் போட்டியில்தான் கோலிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இப்போட்டியில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, 23 ரன்களுக்குள் சேவக், சச்சின் ஆகியோரின் விக்கெட்களை இழக்க, காம்பீருடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.
அணியில் தனது இடத்தை தக்கவைக்க இதைவிட வேறு சந்த்தர்ப்பம் கிடைக்காது என்ற எண்ணத்தில் காம்பீருடன் சேர்ந்து கடுமையாகப் போராடினார் விராட் கோலி. 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் கோலி 107 ரன்களைக் குவிக்க, மறுபுறம் 150 ரன்களைச் சேர்த்தார் காம்பீர். இப்போட்டியின் ஆட்ட நாயகனாக கவுதம் காம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டபோதிலும் 21 வயதிலேயே சதம் அடித்த விராட் கோலியின் மீது பலரது கவனமும் திரும்பியது. முக்கியமாக இவரை வைத்து போட்டிகளில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை கேப்டன் தோனிக்கு ஏற்பட்டது.
அன்றிலிருந்து 14 பேரைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களில் ஒருவராக விராட் கோலி இடம்பெறத் தொடங்கினார். முக்கிய வீரர்களான 6 பேட்ஸ்மேன்களில் யாருக்காவது ஓய்வு தேவைப்பட்டால், அந்த இடத்தில் விராட் கோலி களமிறக்கப்பட்டார். அதே நேரத்தில் இந்த காலகட்டத்தில் யுவராஜ் சிங் அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்பட, அந்த வாய்ப்புகள் விராட் கோலியை வந்தடைந்தன.
இந்திய அணியில் இடம்பிடித்தாலும் 2009 மற்றும் 2010-ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலியால் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. ஆனாலும் அந்த அணி விராட் கோலியை நம்பியது. “இவனுக்குள்ள என்னமோ இருக்குது. எதிர்காலத்துல பெரிய ஆளா வருவாண்டா” என்ற நம்பிக்கையில் அடுத்த ஏலத்திலும் விராட் கோலியைத் தக்கவைத்துக்கொண்டது.
இப்படி ஒருபுறம் இந்திய அணிக்கு உள்ளேயும், வெளியேயுமாய் இருந்த கோலி, மறுபுறம் ஐபிஎல்லில் பெங்களூரு அணியின் நிரந்தர அங்கமாகிப் போனார். இந்தச் சூழலில் அவரது வாழ்க்கையை மாற்றும் வகையில் 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரை சச்சின், சேவாக், காம்பீர், யுவராஜ் சிங் ஆகியோரின் பங்களிப்புதான் அதிகம் இருந்தது. இவர்கள் நால்வரும் இந்த தொடரில் 350 ரன்களுக்கு மேல் குவிக்க, விராட் கோலி மொத்தமாகவே 9 ஆட்டங்களில் 282 ரன்களைத்தான் எடுத்தார். இருப்பினும் அவர் இந்த தொடரில் கவனிக்கப்படும் நபராக மாறினார். இதற்கு காரணம் இலங்கை அணிக்கு எதிரான இறுதிப் போட்டி.
மிக முக்கியமான இப்போட்டியில், முதலில் ஆடிய இலங்கை 274 ரன்களைக் குவிக்க, அடுத்து ஆடிய இந்தியா 31 ரன்களில் சேவாக், சச்சின் ஆகியோரின் விக்கெட்களை இழந்தது. ஆபத்தான இந்த கட்டத்தில் காம்பீருக்கு கோலி தோள் கொடுத்தார். இப்போட்டியில் கோலி 35 ரன்களை மட்டுமே எடுத்தாலும் காம்பீருடன் சேர்ந்து 3-வது விக்கெட் ஜோடியாக 83 ரன்களைச் சேர்த்தது இந்தியாவை மீட்டது. இதைத்தொடர்ந்து ஆடவந்த கேப்டன் தோனி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இம்முறை இந்தியா உலகக் கோப்பையை வென்றதை அனைத்து வீரர்களும் உற்சாகமாக கொண்டாடினர். பொதுவாக தனது உணர்ச்சிகளைக் காட்டாத சச்சின் டெண்டுல்கர்கூட அன்றைய தினம் உணர்ச்சிப் பிழம்பாக காட்சியளித்தார். ஆனால் கோலி மட்டும் அதிக உற்சாகமடையவில்லை. ஒரு சாதாரண வெற்றிக்கான ரியாக்ஷனே அவரது முகத்தில் இருந்தது.
பிற்காலத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள விராட் கோலி, “உலகக் கோப்பையை வெல்வதன் மகத்துவம் அப்போது எனக்கு தெரியவில்லை. சச்சின் போன்ற வீரர்களின் நெடுநாளைய கனவாக உலகக் கோப்பை இருந்ததால் அவர்களால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அதேபோல் 1983-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா வெல்லும் உலகக் கோப்பை என்பதால் ரசிகர்களும் உணர்ச்சிப் பிழம்பாக இருந்தனர். ஆனால் எனக்கு அப்போது அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. மற்றவர்கள் உணர்ச்சிப் பெருக்கில் அழுதபோது, இதற்கு ஏன் அழுகிறார்கள் என்றுகூட யோசித்தேன்” என்கிறார்.
இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடித் தீர்ப்பதற்குள் இந்திய அணியை ஒரு அதிர்ச்சி தாக்கியது. இத்தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு மூலகாரணமாய் இருந்த யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் என்பதே அந்த அதிர்ச்சி செய்தி. அதே நேரத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக யுவராஜ் சிங் செல்ல, அவரது இடம் விராட் கோலிக்கு நிரந்தரமானது.
-----------------------------------------------------------
அத்தியாயம் -5
அதிவேக வளர்ச்சியும் நடுவிரல் சர்ச்சையும்
சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் வாழ்க்கையில் ஒளிவீசத் தொடங்கியது 2011 மற்றும் 2012-ம் ஆண்டுகளில்தான். இந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் கோலியின் பக்கம் காற்று வீசத் தொடங்கியது.
கோலியின் பக்கம் காற்று வீசுவதற்கு முக்கிய காரணமாக இருந்த விஷயம், அப்போது அணிக்குள் இருந்த சில கருத்து மோதல்கள். இந்திய கிரிக்கெட் அணிக்கு என்னதான் தன்னிகரில்லாத தலைவராக அப்போது தோனி இருந்தாலும், அவருக்கு சில சிக்கல்கள் இருந்தன. 2011-ம் ஆண்டுவரை அவரைச் சுற்றிலும் மூத்த வீரர்கள் இருந்தனர். சச்சின் டெண்டுல்கர், லக்ஷ்மண், வீரேந்தர் சேவக், கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், ஜாஹிர் கான், ஹர்பஜன் சிங் என்று அணியில் இருந்த மூத்த வீரர்களை கையாள்வதை சிக்கலான விஷயமாக தோனி நினைத்திருந்தார். அவர்களை விடுத்து, தான் சொன்னதைக் கேட்கும், தனக்கு விசுவாசமான ஒரு அணியை உருவாக்குவது அவரது முக்கிய நோக்கமாக இருந்தது.
2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றதும், தனது கரம் வலுப்பட, அதற்கான காய்களை நகர்த்தத் தொடங்கினார் தோனி. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அப்போதைய நிர்வாகிகளும் அவருக்கு உறுதுணையாக இருந்தனர். சச்சின் டெண்டுல்கருக்கு தன்னைவிட ரசிகர் கூட்டம் என்பதால் அவர் மீது மட்டும் தோனி கைவைக்கவில்லை. ஆனால் சேவாக்கையும், காம்பீரையும் மாற்றுவதற்கு நேரம் பார்த்திருந்தார். அதே நேரத்தில் அப்போதைய அதிரடி ஆட்டக்காரர்களான காம்பீர் - சேவாக் இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தோனிக்கு எதிராக இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் செய்தியாளர் சந்திப்புகளில் இருவரும் தோனிக்கு எதிராக சில கருத்துகளை கூறிக்கொண்டு இருந்தார்கள்.
இதனால் இனியும் பொறுமை காக்க முடியாது என்று அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்யத் தொடங்கினார் தோனி. இந்த காலகட்டத்தில் சச்சின், சேவாக், காம்பீர் ஆகியோரைவிட கோலி அதிக ரன்களைக் குவிக்க, தோனியின் கவனம் அவர் மீது சென்றது. முற்றிலும் இளையவர்களைக் கொண்ட தனது புதிய படையின் தளபதியாக அவரைக் கூர்தீட்டத் தொடங்கினார் தோனி. இந்திய கிரிக்கெட்டின் ‘தல’ தோனி என்றால் அவரது ‘தளபதி’யாக கோலி உருவெடுத்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2011-ம் ஆண்டில் 1,381 ரன்களையும், 2012-ல் 1,026 ரன்களையும் குவித்தார். கோலி தந்த பலத்தால் ஒருநாள் போட்டிகளில் சச்சின், சேவாக், காம்பீர் ஆகிய மூத்த வீரர்களில் யாராவது இருவருக்கு மட்டுமே வாய்ப்பளிக்க முடியும் என்று அறிவித்தார் கேப்டன் தோனி. இதில் பல சமயங்களில் காம்பீர் வெளியே அமர வைக்கப்பட்டார்.
“ஒரு பேட்ஸ்மேன் என்றால் அவர் சும்மா வந்து செல்பவராக இருக்கக் கூடாது. அவரைப் பார்த்தாலே எதிரணியின் பந்துவீச்சாளர்களின் வயிற்றில் புளியைக் கரைக்க வேண்டும். அந்த பேட்ஸ்மேனை எப்படி அவுட் ஆக்குவது என்று மூளையைக் கசக்கவேண்டும். அவரது விக்கெட் வீழ்ந்ததை திருவிழாபோல் எதிரணியினர் கொண்டாடும் வகையில் இருக்க வேண்டும் என்பது என் கருத்து. 2010-ம் ஆண்டுவரை எனக்கு இந்த மரியாதை கிடைக்கவில்லை. ஆனால் 2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கு பிறகு நான் எதிர்பார்த்தது நடந்தது. என் மீது எதிரணியினருக்கு மரியாதை வரத் தொடங்கியது” என்று இந்த ஆண்டுகளைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் விராட் கோலி.
எதிரணியினர் மட்டுமின்றி கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கும் இந்த காலகட்டத்தில் கோலி மீது மரியாதை பிறந்தது. 2012-ம் ஆண்டு நடந்த செய்தியாளர் சந்திப்பில், “சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் என்ற உங்களின் சாதனையை யாராவது முறியடிக்க முடியும் என்று கருதுகிறீர்களா?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர், “இந்திய அணியில் இப்போது உள்ள இளம் வீரர்களான ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் நினைத்தால், நிச்சயமாக இந்த சாதனையை முறியடிக்க முடியும். அதிலும் விராட் கோலி இப்போது வேகமாக சதங்களைக் குவிக்கும்போது அவர் மீதான நம்பிக்கை அதிகமாக உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் விராட் கோலி, அதிவேகமாக 7 சதங்களை அடித்ததே இந்த புகழுரைக்கும், சச்சினின் எதிர்பார்ப்புக்கும் காரணமாய் அமைந்தது.
அதே நேரத்தில் அணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஒன்றாக ஷிகர் தவன், ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோரை அணிக்குள் இழுத்தார் தோனி. காம்பீர், சேவாக் ஆகியோரால் மாறி மாறி அலங்கரிக்கப்பட்ட துணை கேப்டன் பதவி விராட் கோலியின் தலையை அலங்கரித்தது.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் டாக்கா நகரில் நடந்த ஆசிய கோப்பைக்கான ஒருநாள் போட்டித் தொடரில் இந்திய அணியில் இருந்து சேவாக் நீக்கப்பட துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் கோலி. செய்தியாளர்களிடம் இதை அறிவித்த தேர்வுக்குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “இந்திய அணிக்கான எதிர்கால கேப்டனை உருவாக்கும் வகையில் விராட் கோலியை துணை கேப்டனாக நியமித்துள்ளோம்” என்றார். தேர்வுக்குழு தலைவர் மற்றும் கேப்டனின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 148 பந்துகளில் 183 ரன்களைக் குவித்தார் கோலி. அவரது அதிரடி ஆட்டத்தால், அன்றைய தினம் பாகிஸ்தான் நிர்ணயித்த 330 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா எளிதாக எட்டியது.
எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருந்த இந்த காலகட்டத்தில் கோலிக்கே உரிய முன்கோப குணத்தால் அவர் சர்ச்சையிலும் சிக்கினார். குறிப்பாக சிட்னி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கோலியை வெறுப்பேற்ற பதிலுக்கு அவர் நடுவிரலைக் காட்டியது சர்ச்சையானது. அவரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதைத்தொடர்ந்து போட்டி நடுவரான ரஞ்சன் மடுகல்லே கோலியை விசாரணைக்கு அழைத்தார். என்ன நடக்குமோ என்ற பதற்றத்துடன் அடுத்த நாள் விசாரணைக்குச் சென்றார் கோலி.
-----------------------------------------------------------
6. கோலி கொடுத்த குருதட்சிணை
இலங்கை அணிக்காக 1980-களில் 21 டெஸ்ட் போட்டிகளிலும், 63 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியவர் ரஞ்சன் மடுகல்லே. கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, போட்டி நடுவராக செயல்பட்டு வந்தார். கண்டிப்புக்கு பெயர்போனவராக இருந்த அவரிடம் இருந்து விசாரணைக்கான அழைப்பு வந்ததும் கொஞ்சம் கலங்கிப்போனார் கோலி. விசாரணையின்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தோனி உள்ளிட்ட மூத்த வீரர்கள் முன்தினம் இரவில் அவருக்கு வகுப்பு எடுத்தனர்.
அடுத்த நாள் காலையில் விசாரணைக்கு வந்த கோலியிடம், “கிரிக்கெட்டுக்கு மூலாதாரமாக விளங்கும் ரசிகர்களைப் பார்த்து நடுவிரல் காட்டியது தவறுதானே?” என்று கேள்வி எழுப்பினார் ரஞ்சன் மடுகல்லே.
அதற்கு கோலி, “ரசிகர்கள் அளவுக்கு மீறி இந்திய அணியைக் கிண்டலடித்தனர். அதானால் கோபத்தில் ஒருகணம் என்னை மறந்து அப்படி செய்துவிட்டேன். நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறேன்” என்றார்.
போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோக்களை பார்வையிட்ட ரஞ்சன் மடுகல்லே, நடந்த விஷயத்தில் ரசிகர்களுக்கும் பங்கு இருப்பதை உணர்ந்துகொண்டார். ரசிகர்கள் விராட் கோலியைத் தூண்டியது உண்மை என்பதை அறிந்துகொண்டதாலும், கோலி முதல் முறையாக இதுபோன்ற ஒரு தவறை செய்திருந்தார் என்பதாலும் அவரை எச்சரிக்கை செய்வதுடன் மன்னித்து விட்டார். விராட் கோலியின் மனபாரம் குறைந்தது. இதுபற்றி பின்னாளில் செய்தியாளர்களிடம் கூறிய அவர், “என் அனுபவமின்மையை கருத்தில்கொண்டும், ரசிகர்களும் நான் செய்த தவறுக்கு காரணம் என்பதாலும் ரஞ்சன் மடுகல்லே என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரத்தில் என்னை எச்சரிக்கை செய்து ஜெண்டில்மேனாக நடந்துகொண்டார்” என்றார்.
ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகும் ஐபிஎல் தொடரின்போது வாங்கடே மைதானத்தில் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டது, கவுதம் காம்பீருடன் சண்டை போட்டது என்று கோலி மீது சர்ச்சைகள் தொடர்ந்தன. ஆனால் அவரது பேட்டில் இருந்து மின்னல் வேகத்தில் ரன்கள் பறந்த காரணத்தால் ரசிகர்கள் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
இந்த நேரத்தில் 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியின் இனிப்பு மறையும் முன்பே 2013-ம் ஆண்டில் நடந்த உலகக் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு அடுத்த கோப்பையை பெற்றுத்தந்தார் தோனி. உலகக் கோப்பை வென்றபோது அணியில் இருந்த முக்கிய வீரர்கள் பலரும் இல்லாமல், ஷிகர் தவன், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் என்று இளம் படையை வைத்து அவர் இந்தக் கோப்பையை வென்றார். தோனியின் துணை கேப்டனாக இருந்து இந்த தொடரிலும் கோலி முக்கிய பங்கு வகித்தார்.
2013 மற்றும் 2014-ம் ஆண்டின் தொடக்கத்திலும் கோலியின் ராஜ்ஜியம் தொடர்ந்தது. வெற்றி மீது வெற்றி தன்னை தேடிவந்த சமயத்தில், அதற்கு காரணமான தனது முதல் குருநாதர் ராஜ்குமார் சர்மாவின் நினைப்பு அவருக்கு வந்தது. தனக்கு கிரிக்கெட்டின் அரிச்சுவடியைக் கற்றுத்தந்த ராஜ்குமார் சர்மாவுக்கு ஏதாவது குருதட்சிணை கொடுக்க விராட் கோலி விரும்பினார். அதற்காக 2014-ம் ஆண்டு ஆசிரியர் தினத்தை தேர்ந்தெடுத்தார். அன்றைய தினம், தான் டெல்லியில் இருக்க முடியாமல் இருந்த சூழ்நிலையிலும் தனது சார்பாக அண்ணன் விகாஸ் கோலியை பயிற்சியாளரின் வீட்டுக்கு அனுப்பினார்.
ஆசிரியர் தினத்தன்று காலையில், விராட் கோலியின் அண்ணன் தன் வீட்டுக் கதவை தட்டியபோது ராஜ்குமார் சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன விஷயம்” என்று ராஜ்குமார் கேட்க, விகாஸ் எதையும் சொல்லாமல், தன் கையில் இருந்த செல்போனை ராஜ்குமாரிடம் கொடுத்தார். செல்போனின் மறுமுனையில் இருந்த விராட் கோலி, “ஆசிரியர் தின வாழ்த்துகள் சார்..” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவரது கையில் ஒரு சாவியைத் திணித்தார் விகாஸ் கோலி. அப்போதும் ராஜ்குமார் சர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
இந்த சமயத்தில் ராஜ்குமார் சர்மாவை, அவரது வீட்டுக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனார் விகாஸ் கோலி. அங்கு புத்தம் புதிய ஸ்கோடா ராபிட் கார் நின்றுகொண்டு இருந்தது.
“இந்த காரின் சாவியைத்தான் நான் உங்களுக்குக் கொடுத்தேன். கோலி இதை உங்களுக்கு பரிசாக கொடுக்குமாறு கூறியிருக்கிறார்” என்று விகாஸ் கோலி சொல்ல, ராஜ்குமார் சர்மாவின் கண்கள் நிறைந்தன. உயர உயர பறந்தாலும், தன்னை மறக்காமல் இருக்கும் சீடன் கோலியை மனதுக்குள் வாழ்த்தினார். இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ள ராஜ்குமார் சர்மா, “கோலியின் பரிசைவிட, அவன் என்னை இன்னும் மறக்காமல் ஞாபகம் வைத்துள்ளான் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்தது” என்கிறார்.
2014-ல் ஏற்பட்ட சரிவு
எப்படிப்பட்ட சிறந்த கிரிக்கெட் வீரருக்கும் ஒரு சரிவு இருக்கும். அப்பட்ட ஒரு சரிவுக்காலம் விராட் கோலிக்கும் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டில் மற்ற ஆண்டுகளைப்போல் அவரால் ஒரு கட்டத்தில் ரன்களைக் குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த ஆண்டில் இங்கிலாந்து தொடரில் மிக மோசமான முறையில் பேட்டிங் செய்தார். இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆண்டர்சனின் நிரந்தர இரையாகவே மாறினார்.
இந்த டெஸ்ட் தொடரில் 5 போட்டிகளில் ஆடிய விராட் கோலி மொத்தமாகவே 134 ரன்களைத்தான் குவித்தார். இந்த தொடரில் அவர் எடுத்த சராசரி ரன்களே 13.40தான். 1, 8, 25, 0, 39, 28, 0, 7, 6 என ஒவ்வொரு இன்னிங்ஸிலும் குறைந்த ரன்களில் ஆட்டம் இழந்தார். கோலியின் கதை அத்தோடு முடிந்தது என்று பலரும் பெட் கட்டினார்கள். அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல் எழுப்பினர். ஆனால் இம்முறையும் கேப்டன் தோனி, அவருக்கு துணையாக இருந்தார். இதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்படாமல் அவரது தலை தப்பியது.
தலை தப்பினாலும் தன்னால் ரன்களைக் குவிக்க முடியாதது கோலிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. அதை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். சச்சினிடம் ஆலோசனை கேட்டார். பேட்டிங் பயிற்சியின்போது பல மணிநேரம் அவருடன் இருந்து சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார் சச்சின். விராட் கோலியும் தன் பேட்டிங் பயிற்சிக்கான நேரத்தை இரட்டிப்பாக்கினார்.
இங்கிலாந்தில் விட்டதற்கெல்லாம் சேர்த்து ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் வெளுத்து வாங்கினார். இத்தொடரில் 86.50 என்ற சராசரியுடன் ட்க்ஹன் பேட்டிங் திறமையை நிரூபித்தார். பேட்டிங்கில் விராட் கோலி நடத்திய வேள்வி வெற்றியில் முடிய, கேப்டன் பதவி அவரைத் தேடிவந்தது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் கோலியின் வாழ்க்கையில் மற்றொரு வசந்ததும் வீசியது. அந்த வசந்தத்தின் பெயர் அனுஷ்கா சர்மா.
--------------------------------------------------------------------------
அத்தியாயம் 7
அனுஷ்கா என்றொரு தேவதை
பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக கிரிக்கெட் வீரர்களும், அவர்களின் காதல்களும் உள்ளன. அந்தக் காலத்தில் பட்டோடி தொடங்கி, கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், தோனி, ஹர்பஜன் சிங் என்று இந்திய கிரிக்கெட் வீரர்களில் சுமார் 75 சதவீதம் பேர் காதல் திருமணம்தான் செய்துள்ளனர். இந்த மன்மதன் அம்பு விராட் கோலியையும் விட்டு வைக்கவில்லை.
பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கரைப் பின்பற்றிய விராட் கோலி, காதல் விஷயத்தில் முன்னாள் கேப்டனான பட்டோடியை பின்பற்றினார். அவரைப் போலவே ஆரம்ப காலகட்டங்களில் அடுத்தடுத்து பல பெண்களுடன் சேர்த்து கோலி கிசுகிசுக்கப்பட்டார். தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்த சாக்ஷி அகர்வால், மாடல் அழகியான சாரா ஜேன் தியாஸ், தென்னிந்திய நடிகைகளான சஞ்சனா கல்ராணி, தமன்னா பாட்டியா என்று பலருடன் விராட் கோலி சுற்றிக்கொண்டு இருப்பதாகவும், அவர்களைக் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இந்த கிசுகிசுக்களெல்லாம் சில மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.
இந்த காலகட்டத்தில் பிரேசில் நாட்டு மாடல் அழகியும், நடிகையுமான இசபெல் லீட்டியுடன் சுமார் 2 ஆண்டுகள் நட்பில் இருந்தார் விராட் கோலி. ஒரு சில இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவந்த இசபெல் லீட்டியை விராட் கோலி திருமணம் செய்துகொள்ளப்போவதாக பல பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. அதற்கு ஏற்றார்போல் அவர்களும் பல இடங்களில் இணைந்து காணப்பட்டனர். இருவரும் இணைந்து சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றாதக்கூட செய்திகள் வெளியானது. இந்த சூழலில் 2013-ம் ஆண்டில், இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
இந்தச் சூழலில்தான் 2013-ம் ஆண்டில் ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதற்காக சென்றபோது அனுஷ்காவை முதல் முறையாக சந்தித்துள்ளார் விராட் கோலி. அது ஒரு ஷாம்பூ விளம்பரம். படப்பிடிப்புக்கு முதலில் சென்ற விராட் கோலி, அங்கு இருந்தவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்து சிரித்துக்கொண்டிருந்தார். இந்த சமயத்தில் காரில் படப்பிடிப்பு தளத்தில் வந்து இறங்கியுள்ளார் அனுஷ்கா சர்மா.
பாலிவுட் நடிகைகளில் கொஞ்சம் உயரமான நடிகை என்று அனுஷ்காவைச் சொல்லலாம். அன்றைய தினம் படப்பிடிப்புக்கு வந்தபோது உயரமான ஹீல்ஸ் கொண்ட காலணியை அனுஷ்கா அணிந்திருந்ததால், இன்னும் உயரமாகத் தெரிந்தார். அதே நேரத்தில் விராட் கோலி அத்தனை உயரமானவர் கிடையாது. அனுஷ்காவைவிட ஒருசில அங்குலங்கள்தான் உயரமாக இருப்பார். காரில் இருந்து அனுஷ்கா இறங்கியதும், முதலில் அவரது உயரத்தைத்தான் கோலி கவனித்துள்ளார்.
ஏற்கெனவே உயரமான பெண்ணாக இருந்த அனுஷ்கா, மிகப்பெரிய ஹீல்ஸ்களையும் அணிந்து இருந்ததால், இன்னும் உயரமாக தெரிந்தார். அதனால் அவருக்குப் பக்கத்தில் தான் நின்றால் குள்ளமாக தெரிவோமோ என்று விராட் கோலிக்கு பட்டுள்ளது. இதனால் அப்போதை ஜாலி மூடில், “இதைவிட உயரமான ஹீல்ஸ் செருப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா?” என்று அனுஷ்கா சர்மாவிடம் கேட்டுள்ளார் விராட் கோலி. ஆனால் அவர் எதற்காக அப்படி கேட்கிறார் என்று அனுஷ்காவுக்கு புரியவில்லை. “என்ன கேட்டீர்கள்” என்று திரும்பக் கேட்டுள்ளார். முதல் சந்திப்பிலேயே அனுஷ்காவை கிண்டலடித்து விட்டோமோ என்று நினைத்த கோலி, “ஒன்றுமில்லை, சும்மா ஜோக்குக்காக சொன்னேன்” என்று பேச்சை மாற்றியுள்ளார். பின்னாளில் தினேஷ் கார்த்திக்குக்கு அளித்த பேட்டி ஒன்றில் இத்தகவலைச் சொல்லியுள்ளார் விராட் கோலி.
அன்றைய ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் ஜாலியாக கோலி பழகிய விதம் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்துப் போனது. விராட் கோலி, அனுஷ்கா ஆகிய இருவருமே மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு தங்கள் துறையில் முன்னுக்கு வந்தவர்கள். விராட் கோலியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கிய 2008-ம் ஆண்டில்தான் அனுஷ்காவின் திரையுலகப் பயணமும் தொடங்கியுள்ளது. இப்படி பல விஷயங்களில் தங்களுக்குள் ஒற்றுமை இருந்ததால் இருவருக்கும் இடையே ஈர்ப்பு ஏற்பட்டது. ஒன்றாக சேர்ந்து வெளியில் சுற்றத் தொடங்கினார்.
2014-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பியதும், அனுஷ்காவின் வீட்டுக்கு விராட் கோலி சென்றது மிகப்பெரிய செய்தியானது. இதைத்தொடர்ந்து நியூஸிலாந்துக்கு இந்திய அணி ஆடச் சென்றபோது, விராட் கோலியை உற்சாகப்படுத்துவதற்காக அனுஷ்கா சர்மாவும் நியூஸிலாந்துக்கு சென்றார். இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றபோதும் அனுஷ்கா அங்கு சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள டார்லிங் ஹார்பரில் நடந்த நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக பங்கேற்றது பலரது புருவங்களை உயர்த்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து, யுவராஜ் சிங்கின் திருமணம் என பல இடங்களுக்கு ஒன்றாகச் சென்று, ‘ஆமாம் நாங்கள் காதலிக்கிறோம்’ என்பதை இவர்கள் சொல்லாமல் சொன்னார்கள். 2014-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் சதமடித்த கோலி, மைதானத்தில் அனுஷ்கா இருந்த இடம் நோக்கி ஒரு ‘பிளையிங் கிஸ்’ பறக்கவிட்டு தனது காதலை பகிரங்கப்படுத்தினார்.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்த காதலுக்கு திருஷ்டிப் பரிகாரமாக ஆங்காங்கே சில சிக்கல்களும் எழுந்தன. 2015-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதிப் போட்டியைக் காண அனுஷ்காவும் சென்றிருந்தார். இப்போட்டியில் விராட் கோலி குறைந்த ரன்களில் ஆட்டம் இழக்க, ரசிகர்கள் வரிசையில் இருந்துகொண்டு விராட் கோலியின் கவனத்தை அனுஷ்கா திசை திருப்பியதே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
2016-ம் ஆண்டு மும்பையில் நடந்த டி20 உலகக் கோப்பையிலும் இது மீண்டும் நடந்தது. இப்போட்டியைக் காண அனுஷ்கா செல்ல, குறைந்த ரன்களில் அவுட் ஆனார் கோலி. இதைத்தொடர்ந்து அனுஷ்காவையும் கோலியையும் பலரும் விமர்சித்தனர். சமூக வலைதளங்களில் அனுஷ்கா ட்ரோல் செய்யப்பட்டார். இதைப் பார்த்து பொங்கி எழுந்தார் கோலி.
------------------------------------------------------------
8- இத்தாலியில் நடந்த திருமணம்
கிரிக்கெட் போட்டிளில் தான் சொதப்பினால், அதற்காக அனுஷ்காவை சில ரசிகர்கள் திட்டுவதை விராட் கோலியால் ஏற்க முடியவில்லை. இந்நிலையில் அனுஷ்கா ராசியில்லாதவர் என்றும், அவர் ஆட்டத்தைப் பார்க்க வரும் நாளில் விராட் கோலியால் ரன் எடுக்க முடிவதில்லை என்றும் சிலர் கூற பொங்கி எழுந்தார் விராட் கோலி. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் ஒரு பதிவையும் வெளியிட்டார்.
“நான் ரன்கள் அடிக்காததையும் , அனுஷ்கா கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருவதையும் தொடர்புபடுத்தி விமர்சிப்பவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன். அனுஷ்காவைப் பொறுத்தவரை என்னை உற்சாகப்படுத்தத்தான் வந்துள்ளார். நேர்மறையான எண்ணங்களைத்தான் அவர் எனக்கு கொடுத்துள்ளார். உங்கள் தங்கையையோ அல்லது காதலியையையோ இப்படி யாராவது விமர்சித்தால் அவர்கள் எப்படி கவலைப்படுவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். அவருக்கு உரிய மரியாதையை கொடுங்கள்” என்று அந்தப் பதிவில் விராட் கோலி குறிப்பிட்டிருந்தார். கிர்க்கெட் வீரனாக மட்டுமின்றி, ஒரு நல்ல காதலனாகவும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை இதன்மூலம் கோலி நிரூபித்தார்.
இந்த நிலையில் யாருடைய கண் பட்டதாலோ, 2016-ம் ஆண்டில் அவர்களின் காதலில் சிறிய விரிசல் விழுந்தது. ஜோடிப் புறாக்களாக சுற்றித் திரிந்த இருவரும், சில காலம் நேரில் சந்திப்பதைக்கூட தவித்தனர். இந்த காலகட்டத்தில் விராட் கோலி சமூக வலைதளங்களில், ‘என் இதயம் நொறுங்கிக் கிடக்கிறது’ என்று பதிவிட்டார். மற்ற காதல்களைப் போல இந்தக் காதலையும் கோலி முறித்துக்கொண்டார் என்றுகூட சிலர் பேசிக்கொண்டனர். ஆனால் அந்தப் பிரிவு நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை. அவர்களின் காதல் மீண்டும் துளிர்விட்டது.
இந்தச் சூழலில் கோலி - அனுஷ்காவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இத்தாலியில் உள்ள டஸ்கனி என்ற இடத்தில் டிசம்பர் 11-ம் தேதி, வெளியாட்கள் யாரும் இல்லாமல் உறவினர்களை மட்டும் வைத்து அனுஷ்காவைத் திருமணம் செய்துகொண்டார் கோலி. அவர் நினைத்திருந்தால் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்திருக்கலாம். ஆனால் தனது திருமணத்தை தனிப்பட்ட விஷயமாகக் கருதிய விராட் கோலி, நெருங்கிய உறவினர்களான 42 பேரை மட்டும் வைத்து திருமணத்தை முடித்துக்கொண்டார். அதன்பிறகு இந்தியாவில் நண்பர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
இந்த காலகட்டத்தில் காதலிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் விராட் கோலி பெற்ற வெற்றிகள், அவரது கிரிக்கெட் வாழ்க்கையிலும் தொடர்ந்தது. சர்வதேசப் போட்டிகளில் அவர் தொடர்ந்து ரன்களைக் குவித்தார். ஆரம்பத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி, பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டார். எந்த தோனியின் தலைமையில், விராட் கோலி நட்சத்திர வீரராக வளர்ந்தாரோ, அதே தோனிக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக இருந்தார்.
கும்ப்ளேவுடன் ஒரு மோதல்
பதவி வந்தபோதும் கோலி ஆணவத்தால் ஆடவில்லை. மைதானத்தில் தோனி இருக்கும்போது அவருக்கு உரிய மரியாதையை கொடுத்தார். தோனியும் தன் நிலையை உணர்ந்து, அவர் கேட்டால் மட்டும் ஆலோசனைகளை சொல்லிவந்தார். ஆனால் பயிற்சியாளர் கும்ப்ளே அதற்கு நேர் எதிராக செயல்பட்டார்.
சச்சின் டெண்டுல்கரின் காலத்திலேயே கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்தவர் அனில் கும்ப்ளே. கிரிக்கெட்டில் தனக்கென்று சில திட்டமிடல்கள் அவருக்கு இருந்தன. அந்த திட்டங்களை மைதானத்தில் செயல்படுத்த நினைத்தார். போட்டிக்காக மைதானத்தில் நுழையும் முன் அங்கு எப்படியெல்லாம் திட்டமிட வேண்டும், யாரையெல்லாம் பந்துவீச அழைக்கவேண்டும் என்று கோலிக்கு வகுப்பெடுத்தார். ஆனால் கோலிக்கு அது பிடிக்கவில்லை.
மைதானத்துக்கு வெளியில் கும்ப்ளே சொன்னதற்கெல்லாம் தலையாட்டிய கோலி, மைதானத்துக்குள் தனக்கு எது சரியென்று பட்டதோ, அதை மட்டும் செய்தார். இது கும்ப்ளேவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மைதானத்தில் அணியை வழிநடத்துவது ஒரு கேப்டனின் வேலை என்பதில் கோலி பிடிவாதமாய் இருக்க, அப்படியென்றால் பயிற்சியாளராக தான் எதற்கு என்ற கேள்வியில் கும்ப்ளே இருந்தார்.
இந்த காலகட்டத்தில் பயிற்சி விஷயத்தில் கும்ப்ளே கராறாக இருந்தது சில மூத்த வீரர்களுக்கும் பிடிக்கவில்லை. இதனால் அவர்களும் கோலியுடன் சேர்ந்துகொண்டார்கள். ஒரு தலைமை ஆசிரியரைப்போல் கும்ப்ளே நடந்துகொள்வதாக கிரிக்கெட் வாரியத்தில் புகார் அளித்தனர். மேலும் அணிக்குள் நடக்கும் விவாதங்களைப் பற்றி தனக்கு நெருக்கமான செய்தியாளர்களுக்கு கும்ப்ளே வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதாக கோலி புகார் கூறினார். கும்ப்ளே சொன்னபடி வீரர்களை அணியில் சேர்க்க சில சமயங்களில் மறுத்தார்
இப்படி கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் இடையே இறுக்கமான சூழல் நிலவிய காலத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்தியா தோற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய இந்திய அணி, 158 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதில் கோலி எடுத்த ரன்கள் 5.
சாம்பியன்ஸ் கோப்பையில் தோற்றதைத் தொடர்ந்து பயிற்சியாளர் பொறுப்பில் தொடரப் போவது இல்லை என்று அனில் கும்ப்ளே தெரிவித்தார். மேலும் தான் பயிற்சியாளராக இருப்பது அணியில் சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு எழுதினார். இப்படி அவர் மறைமுகமாக குற்றம் சாட்டியது விராட் கோலி மீதுதான் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் கோலியா - கும்ப்ளேவா என்ற கேள்வி எழுந்தபோது கிரிக்கெட் வாரியம் கோலியுடன் நின்றது.
கும்ப்ளேவுக்கு பதில் பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண், சேவாக் உள்ளிட்ட பலரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. இருப்பினும் கடைசியில் இந்தப் பதவியில் ரவி சாஸ்திரி அமர்த்தப்பட்டார். இதற்கு முன்பு அணியின் இயக்குநராக இருந்தபோது விராட் கோலியுடன் ரவி சாஸ்திரிக்கு நல்ல உறவு இருந்ததே இதற்கு காரணம். கிரிக்கெட் வாரியம் நினைத்தபடியே கோலி தனது இஷ்டம்போல் அணியை வழிநடத்த பக்கபலமாய் இருந்தார் ரவி சாஸ்திரி. இந்த ஜோடி கிரிக்கெட் போட்டிகளில் மாயம் செய்யத் தொடங்கியது.
------------------------------------------------------------------
9 - கோலியின் கேப்டன் காலம்
கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, போர்க்களமாக இருந்தாலும் சரி, ஒரு படைக்கு ஒரு தளபதிதான் இருக்க வேண்டும். 2 தளபதிகள் இருந்தால் குழப்பம்தான் ஏற்படும். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கோலியும், பயிற்சியாளராக கும்ப்ளேவும் இருந்தபோது இதுதான் நடந்தது. அணியின் வெற்றிக்கு இருவரும் தனித்தனி திட்டங்களை வகுத்தனர். அந்த திட்டங்களின்படி அணியை வழிநடத்த விரும்பினர். ஒருவரின் திட்டம் மற்றவருக்கு பிடிக்காமல் போன கட்டத்தில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அணிக்குள் குழப்பங்கள் ஏற்பட்டன. இத்தகைய சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து கும்ப்ளே விலக அப்பொறுப்பில் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
கும்ப்ளேவுடன் ஒப்பிடும்போது கிரிக்கெட் விளையாட்டில் ரவி சாஸ்திரி பெரிய சாதனையாளர் இல்லை. அதனாலேயே அவருக்கு ஈகோவும் இல்லை. தான் சொன்னபடிதான் அணியை வழிநடத்த வேண்டும் என்று எந்தக் கட்டத்திலும் விராட் கோலியை அவர் நிப்பந்திக்கவில்லை. அவரை இஷ்டப்படி செயல்பட விட்டார். ஏதாவது ஒரு கட்டத்தில் நிலைமை கைமீறிப் போனால் மட்டும் கோலியின் உதவினார்.
இந்த சுதந்திரம் விராட் கோலிக்கு மகிழ்ச்சியையும், உத்வேகத்தையும் கொடுத்தது. தனக்கு ஏற்ற வகையில் அணியை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதலாவதாக வீரர்கள் அனைவரும் ‘பிட்’டாக உடலை வைத்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தோனியின் காலத்திலேயே இதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுதான் என்றாலும், கோலி அதை மேலும் கடுமையாக அமல்படுத்தினார். ‘யோயோ டெஸ்ட்’டில் வெற்றி பெறாத வீரர்கள் யாரும் அணியில் இடம்பிடிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தினார்.
“அது என்ன யோயோ டெஸ்ட்?” என்ற கேள்வி பலருக்கும் எழலாம். பிரதமர் நரேந்திர மோடிக்குக்கூட இந்த கேள்வி எழுந்துள்ளது. ஒருமுறை தன்னைச் சந்தித்த விராட் கோலியிடம் இதுபற்றி கேள்வி எழுப்பியுள்ளார் நரேந்திர மோடி. அப்போது அவரிடம் இதுபற்றி விளக்கமாக பதில் அளித்துள்ளார் கோலி.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளரான ஜென்ஸ் பாங்க்ஸ்போ என்பவர்தான் இந்த ‘யோயோ டெஸ்ட்’ சோதனை முறையை உருவாக்கினார். இதன்படி 20 மீட்டர்கள் இடைவெளியில் 2 கூம்புகள் வைக்கப்பட்டிருக்கும். பயிற்சியாளர் விசில் அடித்ததும், வீரர்கள் 2 கூம்புகளுக்கும் இடையே மாறி மாறி ஓடவேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் தூரத்தை ஓடிக் கடக்காவிட்டால் அவர்கள் தேர்ச்சி பெற மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடம் 15 விநாடிகளுக்குள் இந்த 2 கூம்புகளுக்கும் இடையே 2 கிலோமீட்டர்கள் தூரம் ஓடவேண்டும். மற்ற வீரர்கள் இதே தூரத்தை 8.30 நிமிடங்களில் கடக்க வேண்டும்.
இந்த யோயோ டெஸ்ட்டில் வெற்றிபெற வேண்டுமானால் வீரர்கள் தங்கள் உடல் நிலையை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி வைக்காமல் போன ரெய்னா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், பேட்ஸ்மேன் நிதீஷ் ராணா, சுழற்பந்து வீச்சாளர் ராகுல் திவாட்டியா, ஜெய்தேவ் உனட்கட், சித்தார்த் கவுல் ஆகியோர் ஒருமுறை இத்தேர்வில் தோற்று, மீண்டும் உடலை பிட்டாக்கி இதில் தேர்ச்சி பெறவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இதனால் துடிப்பான, இளைமையான, பிட்டான படையாக கோலியின் கிரிக்கெட் படை உருவானது.
அதே நேரத்தில் கங்குலியையும், கோலியையும் போல இளம் வீரர்களை ஊக்குவிக்கும் பணிகளிலும் விராட் கோலி ஈடுபட்டார். கே.எல்.ராகுல், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், ரிஷப் பந்த் என்று கோலியால் சர்வதேச கிரிக்கெட்டில் பட்டை தீட்டப்பட்டவர்கள் ஏராளம். இதில் ஒரு கட்டத்தில் கே.எல்.ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் சொதப்ப, அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்தன. ஆனால் இந்த சோதனையான காலகட்டத்திலும், கே.எல்.ராகுலுக்கு விராட் கோலி பக்கபலமாக இருந்தார்.
இந்த காலகட்டத்தில் கோலிக்கு நிகராக ரோஹித் சர்மாவின் வளர்ச்சி இருந்தது. இந்திய கிரிக்கெட்டில் கோலிக்கு முன்பே இந்தியாவுக்காக களம் இறங்கியவர் ரோஹித் சர்மா. விராட் கோலிக்கு முன்னதாக, அடுத்த சச்சின் என்று இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டதும் அவருக்குத்தான். ஆனால் தொடக்க காலகட்டத்தில் அடுத்தடுத்து சில போட்டிகளில் சொதப்பியதால், அந்த இளவரசுப் பட்டம் விராட் கோலியிடம் சென்றது. 2013-ம் ஆண்டில் தொடக்க ஆட்டக்காரராக மாறிய பிறகு, ரோஹித்தும் வேகமாக முன்னேற, கோலிக்கு இணையாக அவருக்கும் ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
ஐபிஎல்லில் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்ற பிறகு 4 முறை அந்த அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார். அதேபோல் ஒருநாள் போட்டிகளில் 3 இரட்டைச் சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்தார். கேப்டனாக இந்தியாவுக்கு ஆசிய கோப்பையையும் வென்று கொடுத்தார். இதனால் எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் அஜித் போல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோலி - ரோஹித் சர்மா என்று பிரிந்தனர். இதனால் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றம் உருவானது.
இதனை வலுப்படுத்தும் விதமாக கடந்த 2020-ம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்கு முதலில் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்படவில்லை. காயம் காரணமாக அவரை தேர்வு செய்யவில்லை என்று தேர்வாளர்கள் கூறிய நிலையில், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கோலியிடம் செய்தியாளர்கள் கேட்க, ரோஹித் சர்மாவின் காயம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என்றார். தனது அணியில் ஆடும் வீரருக்கு என்ன நடந்தது என்றுகூட கேப்டனுக்கு தெரியாதா என்ற விமர்சனம் எழுந்தது.
அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் வீரர்களை வைத்து ரோஹித் சர்மா அணிக்குள் அரசியல் செய்வதாக அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இருவருக்கும் இடையே நட்புப் பாலம் அமைக்கும் முயற்ச்சியில் ரவி சாஸ்த்ரி ஈடுபட்டார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்து தொடருக்கு முன்பிருந்த ‘பயோ பபிள்’ காலத்தில் இருவரையும் அழைத்து சாஸ்திரி சமாதானம் செய்ததார். அதன் பிறகு இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாக ஒரு தோற்றம் எழுந்தது. அல்லது நெருக்கமாக இருப்பதைபோல் இருவரும் ரசிகர்களிடம் காட்டிக்கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை உலகக் கோப்பையை 2 முறை வென்றாலும், சேனா (SENA) என்று அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்திய அணி அதிக வெற்றிகளைப் பெற்றதில்லை. ஆனால் தான் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் அதை மாற்றி எழுதிய கோலி, பல வெற்றிகளைப் பெற்றார். ஆசிய கேப்டன்களிலேயே சேனா நாடுகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒரு கேப்டனாக இத்தனை பெருமைகளைப் பெற்றாலும், ஒரு சுமை கோலியின் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது. 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதத்தைக்கூட அடிக்க முடியவில்லை என்பதே அந்தச் சுமை. அதை எப்படி சரிசெய்வது என்று கோலி யோசிக்கத் தொடங்கினார்.
--------------------------------------------------------------------------------------
10 - பயிற்சியாளரின் கவலையும் கோலியின் பதிலும்!
விராட் கோலியைப் பொறுத்தவரை, கடந்த 2 ஆண்டுகள் அவருக்கு சோதனைக் காலமாகவே இருந்துள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன்பு, “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 சதங்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை யார் முறியடிப்பார்?” என்று கேட்டால், எந்த கிரிக்கெட் ரசிகரும் கொஞ்சம்கூட யோசிக்காமல் விராட் கோலியின் பெயரைச் சொல்வார்கள். அந்த அளவுக்கு சரசரவென்று சதங்களாக அடித்துத் தள்ளினார் விராட் கோலி.
ஆனால் யாருடைய கண் பட்டதோ, கடந்த 2019-ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பின்னர் விராட் கோலியால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதம் அடிக்க முடியாமல் போனது. அவரது பேட்டில் இருந்து சதத்தைப் பார்த்து 50 இன்னிங்ஸ்களுக்கு மேல் ஆகிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலியால் முறியடிக்க முடியாதோ என்ற சந்தேகம் எழத் தொடங்கியது.
அதைப்பற்றி விராட் கோலி கவலைப்படாவிட்டாலும், அவரது இளவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கவலைப்பட்டார். கடந்த இங்கிலாந்து தொடரின்போது, தொலைபேசியில் விராட் கோலியுடன் பேரிய ராஜ்குமார் சர்மா, தனது கவலையை தெரிவித்துள்ளார். ஆனால் விராட் கோலி அதைப்பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. மாறாக, இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி வெற்றிகளைக் குவிப்பதைப் பற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். தன்னைவிட அணியின் வெற்றியைப் பெரிதாக நினைக்கும் தனது சிஷ்யன் கோலியைப் பற்றி பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜ்குமார் சர்மா.
அதேநேரத்தில் தனது பேட்டிங்கின் தரம் குறைந்துபோவதைப் பற்றியும் யோசிக்கத் தொடங்கினார் விராட் கோலி. இந்த நேரத்தில் டெஸ்ட், ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகள் ஆகியவற்றில் தொடர்ந்து கேப்டன் பொறுப்பை ஏற்பது தனது பேட்டிங்கை பாதிக்கிறதோ என்று அவர் நினைத்தார். அதில் ஓரளவு உண்மையும் இருந்தது.
சச்சின் காட்டிய வழியில்
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற மற்ற அணிகள் எல்லாம் டெஸ்ட் போட்டிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்று பணிகளைப் பிரித்துக் கொடுக்க, இந்தியா மட்டும் விராட் கோலி மீது முழு சுமையையும் இறக்கி வைத்துள்ளது. இங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவங்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கும் அவர்தான் கேப்டன்.
இந்திய அணியை சர்வதேச அளவில் சுமந்தது போதாதென்று, ஐபிஎல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியையும் சேர்த்து சுமக்கிறார். இப்படி சதா சர்வ காலமும் கேப்டன் பொறுப்பை ஏற்பதால், அணியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டு இருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார் விராட் கோலி. இதனால் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த அவரால் முடியவில்லை.
இப்படி ஒரு நிலை, முன்பு சச்சின் டெண்டுல்கருக்கும் ஏற்பட்டிருந்தது. 1996-ம் ஆண்டுமுதல் 2000 இந்திய அணிக்கு சச்சின் கேப்டனாக இருந்துள்ளார். ஆனால் இந்த காலகட்டத்தில், அவரது பேட்டிங் பாதிக்கப்பட, துணிச்சலாக கேப்டன் பதவியை உதறியிருக்கிறார் சச்சின்.
பேட்டிங்கில் சச்சினின் வாரிசான கோலி, பதவியை உதறுவதிலும் சச்சினைப் பின்பற்ற திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து டி20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாய் அறிவித்தார். அத்துடன் ஐபிஎல்லில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார். தற்போதைய சூழலில் அவரது பணிச்சுமை குறைந்துள்ளதால், பேட்டிங் பழையபடி மெருகேறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கோலியின் மறுபக்கம்
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், தங்கள் பிற்கால வாழ்க்கைகாக வேறு ஏதாவது தொழிலையும் செய்வார்கள். அந்த வகையில் கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக தனக்கு மிகவும் பிடித்த பிட்னெஸ் சார்ந்த தொழிலையும் விராட் கோலி நடத்தி வருகிறார். ‘சிசெல்’ என்ற பெயரில் நாட்டில் பல்வேறு இடங்களில் உடற்பயிற்சிக் கூடங்களை அவர் நடத்துகிறார். மிக விரைவில் நாடு முழுவதும் 75 இடங்களில் இந்த உடற்பயிற்சி கூடங்களை விரிவுபடுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் ‘ராங்’ (Wrogn) என்ற பெயரில் ஃபேஷன் துறையிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
விளையாட்டுத் துறை சார்ந்த தொழில்களிலும் ஆர்வம் செலுத்திவரும் விராட் கோலி, சர்வதேச பிரீமியர் டென்னிஸ் லீக்கில் ‘யுஏஇ ராயல்ஸ்’ அணியையும், புரோ ரெஸ்ட்லிங் லீகில் ‘பெங்களூரு யோதாஸ்’ அணியையும் வாங்கி நடத்தி வருகிறார்.
‘கோல்டன் டிராகன்’, ‘சாமுராய் வீரன்’ உள்ளிட்ட 4 உருவங்களை தன் உடலில் பச்சை குத்தி வைத்துள்ளார் விராட் கோலி. இவை தனக்கு அதிர்ஷ்டத்தை தேடித் தரும் என்பது அவரது நம்பிக்கை.
சைவத்துக்கு மாற்றிய காயம்
உணவு விஷயத்தில் சைவம்தான் அவரது சாய்ஸாக இருக்கிறது. இதுபற்றி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள விராட் கோலி, “ஒரு காலத்தில் நான் அசைவத்தை விரும்பி சாப்பிடுவேன். ஆனால், இப்போது சைவ உணவுக்கு மாறிவிட்டேன். 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தின்போது என் கழுத்து எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதன் பக்கவிளைவாக கை சுண்டுவிரலில் மரப்புத்தன்மை ஏற்பட்டு பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. இதுதொடர்பாக மருத்துவர்களை அணுகியபோது, அவர்கள் எனக்கு சிகிச்சை அளித்ததுடன், அசைவ உணவு சாப்பிடுவதை விட்டுவிட்டால் இதுபோன்ற பிரச்சினைகள் மேற்கொண்டு வராமல் தடுக்கலாம் என்றனர். அதனால் நான் அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்க்கிறேன். எப்போதாவது மட்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் முடிசூடா மன்னனாக இருந்து கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், வீட்டில் வேலையாட்களை வைத்துக்கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார் விராட் கோலி. வீட்டு வேலைகளை மனைவி அனுஷ்காவுடன் பகிர்ந்துகொள்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளாராம். அத்துடன் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை, கணவன் - மனைவி இருவரும் இணைந்து கவனித்து வருகின்றனர். இந்த எளிமை அவருக்கு இன்னும் பல வெற்றிகளை பெற்றுத் தரட்டும்.
- நிறைந்தது
No comments:
Post a Comment