இந்தியன் நெ.1
1. கிரிக்கெட் கடவுளும் 100 சதங்களும்
அரசியலில் மகாத்மா காந்தி, இலக்கியத்தில் ரவீந்திரநாத் தாகூர், அறிவியலில் சர்.சி.வி.ராமன், கணிதத்தில் ராமானுஜம் என்று ஒவ்வொரு துறையிலும் இந்தியாவுக்கென்று ஒரு தனிநபர் மிகப்பெரிய அடையாளமாக கருதப்படுகிறார். அந்த வகையில் விளையாட்டு உலகில் இந்தியாவின் மிகப்பெரிய அடையாளமாக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் இந்திய கிரிக்கெட் உலகை ஆட்சி செய்து, 100 சதங்கள் கண்ட முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற சச்சினைப் பற்றி இந்த வாரம் காண்போம்.
மும்பையின் தாதர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி சச்சின் டெண்டுல்கர் பிறந்தார். அவரது தந்தையார் ரமேஷ் டெண்டுல்கர், மகாராஷ்டிராவில் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். பிரபல இசை அமைப்பாளரான சச்சின் தேவ் வர்மனின் தீவிர ரசிகராக ரமேஷ் டெண்டுல்கர் இருந்ததால், அவரது பெயரை தனது செல்ல மகனுக்கு வைத்தார்.
சிறுவயதில் சச்சின் குறும்புத்தனம் மிக்கவராக இருந்தார். தன் பள்ளித் தோழர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டார். கிரிக்கெட் போட்டிகளைவிட டென்னிஸ்தான் ஆரம்பத்தில் அவருக்கு பிடித்த விளையாட்டாக இருந்தது. அதிலும் ஜான் மெக்கன்ரோவின் ஆட்டம் மிகவும் பிடிக்கும். சிறப்பாக ஆடுவதுடன், சக வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவதும் ஜான் மெக்கன்ரோவின் ஸ்டைல். இதனால் அவர் தன்னைப்போலவே இருப்பதாக சச்சின் கருதினார்.
இந்தச் சூழலில் சச்சினை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஒன்றாக, அவருக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க சச்சினின் அண்ணன் அஜித் டெண்டுல்கர் திட்டமிட்டார். மும்பையில் புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்த ரமாகாந்த் அச்ரேக்கரிடம் அவரைச் சேர்த்தார்.
தன்னிடம் பயிற்சிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே சச்சினின் பேட்டிங் ஸ்டைல், அச்ரேக்கருக்கு பிடித்துப் போனது. கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சாரதாஸ்ரம் வித்யாமந்திரில் சேருமாறு அவர் ஆலோசனை கூறினார். சச்சினும் அதை ஏற்று அப்பள்ளிக்கு மாறினார். தினந்தோறும் காலையில் பள்ளிக்கு செல்லும் முன்பும், மாலையில் பள்ளியை விட்டு வந்த பின்பும், சச்சினுக்கு அச்ரேக்கர் பயிற்சி கொடுத்தார். சச்சினுடன் வினோத் காம்பிளி, பிரவீன் ஆம்ரே ஆகியோரும் பயிற்சி பெற்றனர்.
பள்ளி மாணவராக இருந்தபோது, சென்னையில் உள்ள எம்ஆர்எஃப் பவுண்டேஷனில் இணைந்து வேகப்பந்து வீச்சில் பயிற்சி பெற சச்சின் விரும்பினார். ஆனால் அப்போது அங்கு பயிற்சியாளராக இருந்த பிரபல வேகப்பந்து வீச்சாளரான டென்னிஸ் லில்லி, சச்சினுக்கு பந்துவீச்சை விட பேட்டிங்தான் சிறப்பாக வரும் என்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பேட்டிங்கில் கவனம் செலுத்துமாறு கூறி அவரை திருப்பி அனுப்பினார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் புகழ்பெற்றார்.
இக்காலகட்டத்தில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற லார்ட் ஹாரிஸ் ஷீல்ட் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி ஒன்றில் சச்சினும், வினோத் காம்பிளியும் இணைந்து 664 ரன்களை குவிக்க, தேசிய அளவில் கவனம் பெற்றனர். இப்போட்டியில் சச்சின் மட்டும் தனியாக 326 ரன்களைக் குவித்தார். இதைத்தொடர்ந்து தான் ஆடிய போட்டிகளில் எல்லாம் சதங்களை விளாசி, ரசிகர்களின் மனம்கவர்ந்த குட்டிப் பையனாக சச்சின் டெண்டுல்கர் வலம் வந்தார். லார்ட் ஹாரிஸ் ஷீல்ட் கோப்பைக்கான தொடரில் மட்டும் அவர் 1,000 ரன்களுக்கு மேல் விளாசினார். இதைத்தொடர்ந்து பல்வேறு வயதுப் பிரிவுகளிலும் நடந்த போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரின் பேட் வித்தைகள் செய்தது.
1989-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள, 16 வயதேயான சச்சின் டெண்டுல்கருக்கு அதில் இடம் கிடைத்தது. இதன்மூலம் மிக இளம் வயதில் அணியில் இடம்பிடித்த இந்தியர் (16 வயது 205 நாட்கள்) என்ற சாதனையை அவர் படைத்தார். கராச்சியில் நடந்த இத்தொடரின் முதல் போட்டியில் 15 ரன்களை மட்டுமே எடுத்த சச்சின் டெண்டுல்கர், அதில் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஆனால் சியால்கோட்டில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி, சச்சினின் மனவலிமையை எடுத்துக் காட்டியது. இப்போட்டியில் வகார் யூனஸ் வீசிய ஒரு பந்து சச்சினின் மூக்கில் காயத்தை ஏற்படுத்தியது. இதனால் மூக்கில் ரத்தம் வழிந்தபோதிலும், மைதானத்தை விட்டு வெளியேறாமல் மன உறுதியுடன் யூனஸையும் அவரது சகாக்களையும் எதிர்கொண்டார் சச்சின். இத்தொடரைத் தொடர்ந்து பெஷாவரில் நடந்த ஒரு டி20 காட்சிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 18 பந்துகளில் 53 ரன்களை விளாசி அனைவரையும் மலைக்கவைத்தார் சச்சின்.
இதைத்தொடர்ந்து நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சச்சின் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. இத்தொடரில் 29.25 என்ற சராசரியுடன் 117 ரன்களை மட்டுமே அவர் சேர்த்தார். இந்தச் சின்னப் பையனை இனியும் அணியில் வைத்திருக்க வேண்டுமா என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் முணுமுணுத்தனர். ஆனால் தேர்வுக்குழு அவர் மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்தார். இந்த தொடரின்போது மான்செஸ்டர் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 119 ரன்களைக் குவித்த சச்சின், தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் மிகக்குறைந்த வயதில் சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
முதல் சதம் அடிப்பதற்கு 3 தொடர்கள் காத்திருக்க வேண்டியிருந்த சச்சின், அதன் பிறகு ரன்களுக்காக காத்திருக்கவேண்டி வரவில்லை. ரன்கள் தானாக அவரது பேட்டில் இருந்து பொழிந்தது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சரசரவென சதங்களாக குவித்த சச்சின் டெண்டுல்கர், கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனது 100-வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 ரன்களைப் பதிவு செய்த முதல் இந்தியர் என்பதைவிட, இச்சாதனையை புரிந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். சச்சினின் இந்த சாதனையை ஒருவர் முறியடிக்க இன்னும் பல காலம் ஆகும் என்பது இந்தியர்களுக்கே பெருமையளிக்கும் விஷயம்.
-------------------------------------------------------------------------------------------------------------------
2. நெருப்பு பெண்
‘நெருப்போடு விளையாடக் கூடாது’ என்று சொல்வார்கள். ஆனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்மணியான ஹர்ஷினி கனேகருக்கு நெருப்புடன் விளையாடுவதுதான் தொழில். இந்தியாவில் தீயணைப்புத் துறையில் பணிக்குச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமைகொண்ட இவர், பல தீவிபத்துகளின்போது சாகசங்களைச் செய்து ஆபத்தில் இருப்பவர்களின் உயிரை மீட்டுள்ளார். சாகசங்கள் நிறைந்த வேலைகளை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் என்ற மாயையை முறியடித்து நெருப்புடன் மோதி பல சாகசங்களைச் செய்துள்ள ஹர்ஷினி கனேகரைப் பற்றி இந்த வாரம் தெரிந்து கொள்வோம்
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் 1976-ம் ஆண்டு பிறந்தவர் ஹர்ஷினி. நாசிக்கில் உள்ள சிடிஓ மெரி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர், பின்பு மேரி அமிர்தாபாய் டாகா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சாகசங்களை செய்வதில் அதிக விருப்பம் கொண்டவராக ஹர்ஷினி இருந்தார். யாராவது வளர்ந்த பிறகு என்னவாக ஆகப்போகிறாய் என்று கேட்டால் ஹர்ஷினி அளிக்கும் பதில், ‘நான் ராணுவத்தில் சேரப் போகிறேன்” என்பதாகத்தான் இருந்தது.
சிறுவயதில் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச் சிறந்தவராக இருந்தார் ஹர்ஷினி. இந்நிலையில் கல்லூரியில் சேர்ந்த பிறகு, அங்கு என்சிசியில் சேர்ந்து காவல் துறை அல்லது ராணுவத்தில் சேர்வதற்காக பல்வேறு பயிற்சிகளில் ஹர்ஷினி ஈடுபட்டார். அத்துடன் பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளை வென்றார். கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்ற பிறகு, எம்பிஏ படிப்பில் சேர்ந்தார் ஹர்ஷினி. ஆனால் அப்படிப்பு அவருக்கு திருப்தியைத் தரவில்லை. மிடுக்கான உடை அணிந்து ராணுவம் அல்லது போலீஸில் சாகசங்கள் நிறைந்த ஏதாவது ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்று அவரது மனது துடித்தது. இந்த சமயத்தில் நாக்பூரில் உள்ள நேஷனல் ஃபயர் சர்வீஸ் கல்லூரியில் (National FireService College in Nagpur) சேர அவர் விண்ணப்பித்துள்ளார்.
இதுபற்றி கூறும் ஹர்ஷினி, “நாக்பூரில் உள்ள தீயணைப்புத் துறை கல்லூரியைப் பற்றி முதலில் எனக்கு தெரியாது. என் கல்லூரித் தோழி ஒருவர்தான் இப்படி ஒரு கல்லூரி இருப்பதாகவும், அதில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் எனக்கு முதலில் தெரிவித்தார். நான் உடனே அவரிடம், இந்த கல்லூரியில் சேர்ந்தால் காவல் துறையினரைப் போல் மிடுக்காக சீருடை அணிந்து பணியாற்ற முடியுமா எனக் கேட்டேன். அவர் முடியும் என்று கூற உடனடியாக அந்தக் கல்லூரிக்கு விண்ணப்பித்தேன். எனக்கு இந்த தகவலைக் கூறிய தோழியும் என்னுடன் சேர்ந்து விண்ணப்பித்தார். இருவரும் சேர்ந்து இந்த கல்லூரியில் நுழைவுத் தேர்வு எழுதினோம். அதன் முடிவில் எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் என்னுடன் நுழைவுத் தேர்வு எழுதிய என் தோழிக்கு இடம் கிடைக்கவில்லை.
அந்தக் கல்லூரியில் பெண்களில் எனக்கு மட்டுமே இடம் கிடைத்தது. தீயணைப்புத் துறையில் இதுவரை எந்த பெண்ணும் வேலை பார்த்தது இல்லை என்றும், இதுதொடர்பான படிப்பை படிக்கப் போகும் முதல் பெண் நான்தான் என்பதும் அப்போதுதான் எனக்குத் தெரியும். எனக்கு கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாக கூறி கடிதம் வந்த நாளை மறக்கவே முடியாது ” என்கிறார்.
நாக்பூர் தீயணைப்புத் துறை கல்லூரியில் இடம்பிடித்த முதல் மாணவி என்று பெயர் எடுத்த ஹர்ஷினி, இதைத்தொடர்ந்து தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டார். ஆண்களுக்கு நிகராக பயிற்சிகளில் அவர் தீவிரமாக இருந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. துடிப்பாக செயல்பட்ட அவர் பயிற்சியை திறம்பட முடித்தார்.
இதுபற்றி கூறும் ஹர்ஷினி, “கல்லூரியில் சேர்ந்தது முதல் பயிற்சியை முடிக்கும் நாள்வரை நான் ஒரு நாள்கூட தாமதமாக செல்லவில்லை. அப்படி சென்றால், பெண்களே இப்படித்தான் என்று நினைத்து விடுவார்களோ என்று நான் பயந்ததே இதற்கு காரணம். அதேநேரத்தில் எத்தனை கடுமையான பயிற்சிகளை செய்யச் சொன்னாலும் தட்டாமல் செய்து முடித்தேன். ஒரு பெண் என்பதால் சில பயிற்சிகளில் இருந்து விலக்கு அளிக்குமாறு கூறி சலுகைகளை கேட்கவில்லை. கனமான தண்ணீர் பைப்புகளை சுமந்து செல்வது, உயரமான கட்டிடங்களின் மீது ஏறுவது, தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது என அனைத்து கடுமையான பயிற்சிகளையும் முகம் சுளிக்காமல் செய்தேன். இதன்மூலம் பெண்களாலும் ஆண்களுக்கு நிகராக எல்லா வேலைகளையும் செய்ய முடியும் என்று நிரூபித்தேன். பெண்களின் கவுரவத்தை காத்தேன்” என்கிறார்.
2002-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தவர், 2006-ம் ஆண்டில் படிப்பை முடித்து குஜராத்தில் உள்ள மெஷானா ஃபயர் ஸ்டேஷனில் பணிக்குச் சேர்ந்தார். இதன்மூலம் தீயணைப்புத் துறையில் பணிக்குச் சேர்ந்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அப்பகுதியில் தனது பணிக்காலத்தில் 3 தீயணைப்பு நிலையங்களுக்கு தலைவராகவும் அவர் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து 2010-ம் ஆண்டு மும்பைக்கு அவர் பணி மாறுதல் செய்யப்பட்டார்.
தீயணைப்புத் துறையில் பணியாற்றுவதுடன் பைக்கில் நீண்டதூரம் சாகசப் பயணம் செய்வதிலும் ஹர்ஷினிக்கு ஆர்வம் அதிகம். லடாக், கார்கில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தனது பைக்கிலேயே பயணம் செய்துள்ள ஹர்ஷினி, தன்னைப் போலவே பைக் சாகசப் பயண வீரரை காதலித்து மணம் புரிந்துள்ளார்.
ஆண்களின் உலகமான தீயணைப்புத் துறையில் வேலைக்கு சேர்ந்து சாதனை படைத்துள்ள ஹர்ஷினி, தன்னைப் போன்ற பெண்களுக்கு கூற விரும்பும் அறிவுரை ஒன்றே ஒன்றுதான். “நீங்கள் தைரியமாக கனவு காணுங்கள். ராணுவம், காவல்துறை, விண்வெளிப் பயணம் என்று எந்த இலக்கை வேண்டுமானாலும் அடையத் துணியுங்கள். இவை ஆண்களுக்கான துறையாயிற்றே என்று எந்த சூழ்நிலையிலும் நினைக்காமல் தீவிரமாக முயற்சி செய்யுங்கள். உங்கள் கனவை நிச்சயம் நிறைவேற்ற முடியும்” என்பதே அந்த அறிவுரை. வாழ்க்கையில் வென்றவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
-----------------------------------------------------------
3. இந்திய இலக்கியத்தின் பிதாமகன்
இந்தியா, வங்கதேசம், இலங்கை என்று 3 நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர், காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற பட்டத்தைக் கொடுத்தவர், மாற்றுக் கல்வியை போதிக்கும் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவியவர், சாந்தினிகேதனை தோற்றுவித்தவர், வங்கதேசத்தில் ஓவியக் கலைக்கு புத்துணர்வு கொடுத்தவர் என்று பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் ரவீந்திரநாத் தாகூர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் தாகூரைச் சேரும். தன் கவிதைகள் மூலம் இந்திய இலக்கியத்தின் பெருமையை சர்வதேச அரங்கில் உயர்த்திய தலைமகனான ரவீந்திரநாத் தாகூரைப் பற்றி இந்த வாரம் தெரிந்துகொள்வோம்.
1861-ம் ஆண்டு மே 7-ம் தேதி கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார். அவரது தந்தையார் பெயர் தேவேந்திரநாத் தாகூர், தாயார் சாரதா தேவி. சிறுவயதிலேயே தாயாரை இழந்ததால், வீட்டு வேலைக்காரர்களால் வளர்க்கப்பட்டார் ரவீந்திரநாத் தாகூர். அவரது தந்தை பெரும் செல்வந்தர் என்பதாலும், தாய் இல்லாத பிள்ளை என்ற பரிதாபம் காரணமாகவும் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டார் தாகூர். படிப்பதற்காக பள்ளிக்கு செல்லவேண்டிய அவசியம்கூட அவருக்கு ஏற்படவில்லை. தன் மகன் சொகுசாக கல்வி கற்க வசதியாக ஆசிரியர்களை வீட்டுக்கே வரவழைத்தார் தேவேந்திரநாத் தாகூர்.
தாகூரின் அப்பாவுக்கு இசை மற்றும் கலைகளில் ஆர்வம் அதிகம். அதனால் புகழ்பெற்ற கலைஞர்களையும் இலக்கியவாதிகளையும் வீட்டுக்கு வரவழைத்து உபசரிப்பதையும், அவர்களின் நிகழ்ச்சிகளை வீட்டில் நடத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ரவீந்திரநாத் தாகூருக்கும் சிறு வயதில் இருந்தே இலக்கியத்திலும், கலைகளிலும் ஆர்வம் ஏற்பட்டது. சிறு வயதில் வெறும் ஏட்டுக்கல்வியோடு நின்றுவிடாமல், ஓவியம் வரைவது, இலக்கியம், புவியியல், மலையேற்றம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ் என்று பல்வேறு துறைகளில் அவர் அடிப்படைக் கல்வி பெற்றார். குறிப்பாக தாகூரின் அண்ணன் ஹேமேந்தர்நாத்திடம் இருந்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது பற்றி தெரிந்துகொண்டார்.
ஆரம்பகால கல்வியை கொல்கத்தாவில் பெற்ற அவர், பின்னர் தனது தந்தையாருடன் வணிகம் தொடர்பாக பல்வேறு ஊர்களுக்கு சென்றார். இடைப்பட்ட காலத்தில் சம்ஸ்கிருதம் மற்றும் வங்க மொழியை கற்றுக்கொண்டார். தாகூரை ஒரு வழக்கறிஞராக்கி பார்க்க வேண்டும் என்று விரும்பிய அவரது தந்தையார், லண்டனில் உள்ள பிரைட்டன் கல்லூரியில் சேர்த்தார். ஆனால் சில நாட்களிலேயே தனக்கும் சட்டப் படிப்புக்கும் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்த தாகூர், 1880-ம் ஆண்டு சட்டப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு திரும்பினார். கொல்கத்தா திரும்பிய அவர், இசை ஆசிரியர்களை வைத்து முறைப்படி சங்கீதம் பயின்றார். அத்துடன் இலக்கியத்தின் மீது காதல் கொண்டு கவிதை நூல்களை வெளியிடத் தொடங்கினார். 1883-ம் ஆண்டு 10 வயதான மிருணாளினி தேவியை திருமணம் செய்துகொண்டார்.
ஆன்மீகம் மற்றும் கலைகளில் தீவிர ஆர்வம் கொண்ட தாகூர், தனது மனதுக்கு பிடித்த ஒரு இடத்தை உருவாக்க விரும்பினார். அந்த முயற்சியில் 1901-ம் ஆண்டில் சாந்தினிகேதனில் தனக்கென்று ஒரு ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். மந்திர் என்ற பெயரில் ஒரு பள்ளிக்கூடம், ஒரு சிறிய பிரார்த்தனை அரங்கம், நூலகம், பெரிய தோட்டம் என்று இலக்கியவாதிகள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஆசிரமமாக சாந்தினிகேதன் ஆசிரமம் அமைந்தது. இந்த ஆசிரமத்தில் இருந்துகொண்டு பல்வேறு கவிதை நூல்களை வெளியிட்டார் ரவீந்திரநாத் தாகூர்.
1905-ம் ஆண்டு ஆங்கிலேய அரசு வங்கத்தை இரண்டாக பிரிக்க, அதை எதிர்த்து அங்கு மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. தாகூருக்குள் இருந்த தேசியவாதியை இந்த போராட்டம் வெளிக்கொண்டு வந்தது. வங்கப் பிரிவினையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார் தாகூர். பல்வேறு கூட்டங்களிலும் சொற்பொழிவாற்றினார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி மக்களின் நலனுக்காகவும் பல்வேறு சேவைகளை அவர் மேற்கொண்டார். . தீண்டாமைக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்
1912-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டார் தாகூர். அந்தப் பயணத்தின்போது, தான் எழுதிய சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளையும் அவர் எடுத்துச் சென்றிருந்தார். இந்த பயணத்தின்போது டபிள்யூ.பி.யீட்ஸ் என்ற கவிஞருடன் தாகூருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது., தாகூரின் கவிதைகள் சரியாக மொழிபெயர்க்கப்படவில்லை என்று கருதிய யீட்ஸ், அவற்றை சரியான முறையில் மொழிபெயர்க்க தாகூருக்கு உதவினார்.
‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் வெளியான இந்த கவிதைத் தொகுப்பு பெரும் வரவேற்பை பெற்றது. 6 மாதங்களிலேயே இந்த கவிதைத் தொகுப்பின் 10 பதிப்புகள் வெளியாகி விற்றுத் தீர்ந்தன. அத்துடன் 1913-ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும், ரவீந்திரநாத் தாகூருக்கு இது பெற்றுத்தந்தது. இதன்மூலம் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் தாண்டி, இப்பரிசைப் பெற்ற ஐரோப்பியர் அல்லாத முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார்.
நோபல் பரிசு பெற்றதைத்தொடர்ந்து இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தாகூர் புகழ்பெற்றார். அவருக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் அழைப்புகள் வந்தன. ஜப்பானின் டோக்கியோ நகரில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தாகூரை வரவேற்க 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோபல் பரிசு பெற்றபோது கிடைத்த பரிசுத் தொகை, தனது இலக்கிய நூல்களின் மூலம் கிடைத்த வருமானம் மற்றும் நன்கொடைகளைக் கொண்டு 1921-ம் ஆண்டில் சாந்தினிகேதனில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தை அவர் தொடங்கினார். அதுவரை இருந்துவந்த கல்வித்திட்டங்களுக்கு மாற்றாக புதிய கல்வித் திட்டத்துடன் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இதில் பல பாடங்கள் திறந்தவெளியில் வைத்து நடத்தப்பட்டன.
தாகூருடன் பல்வேறு அறிஞர்களும், தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இதில் முக்கியமான மனிதராக ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைச் சொல்லலாம். தாகூரை அவர் அடிக்கடி சந்தித்து பேசினார். இலக்கிய உலகுக்கு மிகப்பெரிய அளவில் சேவையாற்றிய ரவீந்திரநாத் தாகூர், 1941-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி கலமானார். தாகூர் காலமானாலும் அவர் இயற்றிய கவிதைகளும், மாற்று கல்விக்காக அவர் தொடங்கிய விஸ்வ பாரதி பல்கலைக்கழகும் இன்றும் நிலைத்து நின்று அவரது புகழை பரப்பிக்கொண்டு இருக்கின்றன.
-----------------------------------------------------------------------------------------------
4. விளம்பரத்தால் வந்த திருப்பம்
ஒருவரின் வாழ்க்கையில் எப்போது, யாரால், எந்த வடிவில் திருப்பம் வரும் என்று யாராலும் கூறமுடியாது. அது எந்த நேரத்திலும், எப்படியும் வரலாம். 1989-ம் ஆண்டில் சிம்லாவில் உள்ள செயின்ட் பீட்ஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த 21 வயதான பிரியா ஜிங்கனின் (Priya Jhingan) வாழ்க்கையில், ஒரு பத்திரிகை விளம்பரத்தின் வடிவில் அந்த திருப்பம் வந்தது. தேசியப் பத்திரிகைகளில் வெளியான அந்த விளம்பரத்தை இந்திய ராணுவம் கொடுத்திருந்தது. நாட்டிலுள்ள துடிப்பான இளைஞர்களை, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சேவை செய்ய அழைத்திருந்தது அந்த விளம்பரம்.
இந்த விளம்பரத்தைப் பார்த்ததும், பிரியா ஜிங்கனின் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. “ஆண்கள் மட்டும்தான் ராணுவத்தில் இணைந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமா? பெண்களும் ஏன் அந்த சேவையைச் செய்யக்கூடாது?” என்பதே அந்தக் கேள்வி. அந்த கேள்வியை மனதிலேயே போட்டு புதைத்துவிடாமல், அதைக் கடிதமாக எழுதினார். அந்தக் கடிதத்தை இந்திய ராணுவத்தின் அப்போதைய தளபதியான ஜெனரல் சுனித் பிரான்சிஸ் ரோட்ரிகஸுக்கு அனுப்பினார். பெண்களை ராணுவத்தில் சேர்ப்பதாக இருந்தால், தான் முதல் நபராக அதில் சேர விரும்புவதாகவும் இக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பிரியா ஜிங்கன் அனுப்பிய கடிதம் ராணுவ தளபதியை சிந்திக்க வைத்தது. இந்தக் கடிதம் பற்றி, சக ராணுவ தளபதிகளுடனும், அமைச்சர்களுடனும் விவாதித்தார். இது நடந்த சில மாதங்கள் கழித்து, ராணுவ தளபதியிடம் இருந்து பிரியா ஜிங்கனுக்கு ஒரு கடிதம் வந்தது. “ராணுவத்தில் சேர விரும்புவதாக ஒரு பெண்ணிடம் இருந்து கடிதம் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கான வாய்ப்பு விரைவில் வரும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் நடந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, ராணுவ தளபதி சொன்னதைப் போலவே, ராணுவத்தில் பெண்களைச் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் வெளியாக உடனடியாக விண்ணப்பித்தார் பிரியா ஜிங்கன்.
பிரியா ஜிங்கன் மட்டுமல்ல அவருடன் சேர்த்து சுமார் 25 ஆயிரம் பேர் இதற்கு விண்ணப்பிக்க, அதிலிருந்து 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களில் இருந்து 25 பேர் மட்டும் இந்திய ராணுவத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட, அவர்களில் முதல் பெண் கேடட்டாக இந்திய ராணுவத்துக்குள் நுழைந்தார் பிரியா ஜிங்கன்.
இதுபற்றிக் கூறும் பிரியா ஜிங்கன், “என் தந்தை ஒரு போலீஸ் அதிகாரி. அதனால் சிறுவயது முதலே போலீஸ் அதிகாரியாவது என் கனவாக இருந்தது. நான் 9-ம் வகுப்பில் படிக்கும்போது, எங்கள் பள்ளிக்கு ஆளுநர் வந்திருந்தார். அவருடன் ஒரு ராணுவ அதிகாரியும் வந்திருந்தார். அவரது ராணுவ மிடுக்கு, பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் பிடித்துவிட்டது. அவரால் ராணுவம் மீது ஏற்பட்ட ஈர்ப்பால், ‘நாங்கள் திருமணம் செய்துகொண்டால் ஒரு ராணுவ வீரரைத்தான் திருமணம் செய்துகொள்வோம்’ என்று என் தோழிகள் கூறினார்கள்.
ஆனால் நான் அப்படி சொல்லவில்லை. மாறாக, ஒரு ராணுவ அதிகாரியை திருமணம் செய்துகொள்வதற்கு பதில், நானே ஒரு ராணுவ அதிகாரி ஆவேன் என்று கூறினேன். அப்போது என் தோழிகள், ராணுவத்தில் பெண்களைச் சேர்ப்பதில்லையே என்று என்னைக் கிண்டல் செய்தார்கள் ஆனால் நான் ராணுவத்தில் நிச்சயம் சேர்வேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இந்தச் சூழலில்தான் நான் கல்லூரியில் படிக்கும்போது, ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கான விளம்பரம் வெளியானது. இதைத்தொடர்ந்து ராணுவ அதிகாரிக்கு கடிதம் எழுதினேன்” என்கிறார்.
1992-ம் ஆண்டு சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சியைத் தொடங்கிய பிரியா ஜிங்கன், ஆண்கள் மேற்கொண்ட அத்தனை பயிற்சிகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன்மூலம் ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் ராணுவத்தில் செயலாற்ற முடியும் என்பதை நிரூபித்தார். இதுபற்றி கூறும் பிரியா, “பயிற்சிக் காலத்தில் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்தவித சலுகையையும் காட்டத் தேவையில்லை என்று ராணுவ பயிற்சி மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் முதலிலேயே தெரிவித்துவிட்டேன். அவர்களும் என்னை அப்படியே நடத்தினார்கள். குறிப்பாக அங்குள்ள சக ராணுவ அதிகாரிகள் என்னை ‘மேடம்’ என்று அழைக்காமல் ‘சார்’ என்றுதான் அழைத்தனர். இதெல்லாம் என் தன்னம்பிக்கையை அதிகரித்தது” என்கிறார்.
6 மாத பயிற்சியை முடித்த பிரியா ஜிங்கன், 1993-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி இந்திய ராணுவத்தில் முதல் பெண் அதிகாரியாக சேர்ந்தார். இந்திய ராணுவத்தின் காலாட்படை பிரிவில் பணியாற்றவே பிரியா விரும்பினார். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. மாறாக பிரியா சட்டம் பயின்றவர் என்பதால் ராணுவத்தின் சட்டப்பிரிவில் பணியமர்த்தப்பட்டார். ராணுவ வீரர்கள் மீதான புகார்களை விசாரிக்கும், மற்றும் அவர்களுக்காக வாதாடும் பொறுப்பு பிரியாவுக்கு வழங்கப்பட்டது.
ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த ராணுவத் துறையில், முதல் பெண்ணாக நுழைந்த பிரியா ஜிங்கன் ஏராளமான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. ஒரே நீச்சல் குளத்தில் சக ராணுவ வீரர்களுடன் குளிப்பது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக உள்ள ஒரே கழிப்பறையை பயன்படுத்துவது என்று பல சவால்களைக் கடந்து இந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளார் பிரியா ஜிங்கன். இப்படி பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும் பெண்களுக்கென்று பிரத்யேக சலுகைகள் வேண்டும் என்று கேட்காமல் ஆண் அதிகாரிகளுக்கு சமமாக வாழ்ந்து காட்டியுள்ளார்.
இந்திய ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவையை முடித்த பிரியா ஜிங்கன், மேஜராக பதவி உயர்வு பெற்ற நிலையில் 2002-ம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
“ஒருவர் ஆணோ பெண்ணோ, தனக்கு பிடித்த விஷயத்தை வாழ்க்கையில் செய்யவேண்டும். பிடிக்காத விஷயங்களைச் செய்யக் கூடாது. இதுவே என் வாழ்க்கையின் மூலம் நான் சொல்ல விரும்பும் விஷயம்” என்கிறார் பிரியா ஜிங்கன்.
---------------------------------------------------------------------------------------------------------
5. இந்திய ராணுவத்தில் பிதாமகன்
1965-ம் ஆண்டு, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே கடுமையான போர் நடந்துகொண்டு இருந்தது. இந்த போரின்போது பாகிஸ்தான் மீது குண்டுவீசச் சென்ற இந்திய விமானம் ஒன்று அந்நாட்டு ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்த விமானி, பாராசூட் மூலம் தரையிறங்க, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அவரைக் கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்ட விமானப்படை விமானியின் பெயர் கே.சி.கரியப்பா என்றும், அவர் இந்தியாவின் முன்னாள் ராணுவ தளபதியான கே.எம்.கரியப்பாவின் மகன் என்றும் தெரியவந்தது. இத்தகவல் உடனடியாக அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கு தெரிவிக்கப்பட்டது.
சுதந்திரத்துக்கு முன் ஒருங்கிணைந்த இந்திய ராணுவத்தில் கே.எம்.கரியப்பாவின் கீழ் பணியாற்றியவர் அயூப் கான். அந்த விசுவாசத்தில் அவரது மகன் கே.சி. கரியப்பாவை விடுதலை செய்ய உத்தரவிட்டார் அயூப் கான். ஆனால் இந்த தகவல் கே.எம்.கரியப்பாவுக்கு தெரியவந்ததும், தன் மகனை மட்டும் பாகிஸ்தான் விடுவிப்பதை எதிர்த்தார். “பாகிஸ்தானில் இப்போது போர்க் கைதிகளாக இருக்கும் அனைவரும் என் மகன்களைப் போன்றவர்கள்தான். அதனால் விடுதலை செய்தால் அனைவரையும் விடவேண்டும். மாறாக என் மகனை மட்டும் விடுதலை செய்வதை ஏற்க முடியாது” என்று திட்டவட்டமாக கூறினார்.
- இப்படி ராணுவ வீரர்கள் அனைவரையும் தன் மகனாக பாவித்தவர்தான் கோடன்டேர மாடப்ப கரியப்பா (Kodandera Madappa Cariappa) என்று அழைக்கப்படும் கே.எம்.கரியப்பா. சுதந்திரத்துக்கு பிறகு நமது ராணுவத்தின் முதல் இந்திய தளபதியாக பொறுப்பேற்றவர். தனது செயலாற்றல் மூலமாக இந்திய இளைஞர்கள் பலரையும் ராணுவத்துக்கு ஈர்த்த பிதாமகரான பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பாவைப் பற்றி இந்த வாரம் தெரிந்துகொள்வோம்.
1899-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள கூர்க் பகுதியில் கரியப்பா பிறந்தார். ஆங்கிலேய அரசின் வருவாய்த் துறையில் பணியாற்றிய கரியப்பாவின் தந்தைக்கு, அவரையும் சேர்த்து 6 குழந்தைகள். அனைவருக்கும் தரமான கல்வியை கரியப்பாவின் தந்தை வழங்கினார். கரியப்பாவின் வீட்டைச் சுற்றிலும் ராணுவத்தில் பணியாற்றிய பலர் வசித்து வந்தனர். இளம் வயதில் அவர்கள் மூலமாக முதலாம் உலகப் போர் பற்றியும் அதில் பங்கேற்ற வீரர்களைப் பற்றியும் தெரிந்துகொண்ட கரியப்பாவுக்கு, தானும் ஒரு ராணுவ வீரராக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.
கூர்கில் பள்ளிப் படிப்பை முடித்த கரியப்பா, இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது ராணுவத்தில் பணியாற்ற இந்தியர்களை தேர்வு செய்கிறார்கள் என்றும் அவர்களுக்கு இந்தூரில் உள்ள டாலி கேடட் கல்லூரியில் ராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கேள்விப்பட்ட கரியப்பா அதற்கு விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து அவர் அக்கல்லூரியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் வயதில் மிகவும் துடிப்புடன் விளங்கிய கரியப்பா, இந்த கல்லூரியில் அனைத்து பயிற்சிகளையும் திறம்பட முடித்து, சிறந்த ராணுவ வீரராக தேர்வு பெற்றார். இதைத்தொடர்ந்து 1920-ம் ஆண்டில் லெப்டினென்டாக ராணுவத்தில் பணியில் சேர்ந்தார் கரியப்பா. தன் துடிப்பான செயலாற்றலால், அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்ற கரியப்பா, 1938-ம் ஆண்டு மேஜராக பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து 1942-ம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக கரியப்பா பொறுப்பேற்றார். அப்போது அவரது தலைமையின்கீழ் பல ஆங்கிலேய அதிகாரிகள் பணியாற்றினர். அந்த வகையில் ஆங்கிலேய ராணுவ அதிகாரிகளுக்கு மேலதிகாரியாக பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் கரியப்பா.
2-ம் உலகப் போரின்போது நேதாஜியால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம், ஆங்கிலேய அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. ஜப்பானுடன் இணைந்துகொண்டு இந்திய எல்லைப்பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. . அவர்களில் பலர் போரின்போது கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்த இடங்களை ஆங்கிலேயர் தரப்பு ராணுவத்தின் ராணுவ அதிகாரி என்ற முறையில் கரியப்பா பார்வையிட்டுள்ளார். அப்போது, இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள், சிறைச்சாலைகளில் மோசமாக நடத்தப்பட்டு வந்தது அவரை மிகவும் பாதித்தது.
இதைத்தொடர்ந்து அவர்களை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, இங்கிலாந்தில் இருந்த தனது உயர் அதிகாரிகளுக்கு கரியப்பா கடிதம் எழுதினார். இந்திய மக்கள் மத்தியில் அவர்களுக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கரியப்பாவின் இந்த செய்கை ராணுவ வீரர்கள் மட்டுமின்றி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மத்தியிலும் அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.
1947-ம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சில காலத்துக்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவரான லெப்டினென்ட் ஜெனரல் சர் ராய் பவுச்சர் என்பவர் இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தார். இக்காலகட்டத்தில் இந்திய ராணுவத்துக்கு துணை தளபதியாக இருந்த கரியப்பா, 1947-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில் மிக முக்கிய பங்காற்றினார். அவரது ஆற்றலாலும், திட்டமிடலாலும் காஷ்மீர் பகுதிகளான நவுஷேரா, ஜாங்கர், பூஞ்ச், சோஜி லா, டிராஸ், கார்கில் உள்ளிட்டவற்றில் பாகிஸ்தான் படைகளை விரட்டியடித்த இந்திய ராணுவம் அப்பகுதிகளை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இதற்காக மக்கள் மற்றும் தலைவர்களின் பாராட்டுகளைப் பெற்றார் கரியப்பா.
1949-ல் லெப்டினென்ட் ஜெனரல் சர் ராய் பவுச்சர் ஓய்வுபெற, அடுத்த தலைமை ராணுவ தளபதியாக, ஒரு இந்தியரை நியமிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அப்போது ஆட்சியில் இருந்தவர்களுக்கு முதலில் கரியப்பாவின் பெயர்தான் தோன்றியது. இதைத்தொடர்ந்து ராணுவ தளபதியான முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் கே.எம்.கரியப்பா.
இந்திய ராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்ற பிறகு, ராணுவ வீரர்களின் மேம்பாட்டுக்காக பல நலத்திட்டங்களை கரியப்பா அறிவித்தார். இந்திய அரசுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே பாலமாக திகழ்ந்தார். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ராணுவத்தில் அரசியல் நுழையாமல் அவர் பார்த்துக்கொண்டார். இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தானில் பல முறை ராணுவப் புரட்சிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவம் இதுவரை எந்த புரட்சியிலும் ஈடுபடாமல் இருப்பதற்கு, கரியப்பா எடுத்த சில ஆரம்பகட்ட நடவடிக்கைகளே காரணமாகும்.
----------------------------------------------------------------------------------------------------
6. இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர்
பாம்பே பல்கலைக்கழகத்தில் படித்த முதல் இந்தியப் பெண், பிரிட்டிஷ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண், இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் என ஏராளமான விஷயங்களில் முதலாமவராக வந்து சரித்திரம் படைத்தவர் கார்னீலா சொராப்ஜி (Cornelia Sorabji). இந்த சாதனைகளைச் செய்ய இந்த உலகம் அத்தனை சீக்கிரம் அவரை அனுமதிக்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான போராட்டங்களைச் சந்தித்துதான் இந்த சாதனைகளைப் படைத்துள்ளார் கார்னீலா சொராப்ஜி.
1866-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி நாசிக் நகரில் கார்னீலா சொராப்ஜி பிறந்தார். 7 பெண் குழந்தைகளையும், ஒரு ஆண்குழந்தையையும் கொண்ட மிகப்பெரிய குடும்பத்தில் 5-வது நபராக கார்னீலா இருந்தார். அவரது தந்தை ரெவரெண்ட் சொராப்ஜி கார்செட்ஜி. பார்சி இனத்தில் பிறந்த இவர், பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர்.
பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் அக்காலகட்டத்தில் இல்லாததால், கார்னீலாவின் தந்தை அவருக்கு வீட்டிலேயே மெட்ரிக்குலேஷன் பாடத்தை போதித்து 10-ம் வகுப்புவரை படிக்கவைத்தார். பின்னர் பாம்பே பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதவைக்க அழைத்துச் சென்றார். ஆனால் ஒரு பெண் என்பதால் அவரை தேர்வு எழுதவைக்க பாம்பே பல்கலைக்கழகம் முதலில் மறுத்தது. பின்னர் பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அவர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் புனேயில் உள்ள டெக்கான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். அக்கல்லூரியில் அப்போது படித்துக்கொண்டிருந்த 300 மாணவர்களுக்கு மத்தியில், கார்னீலா சொராப்ஜி ஒருவர்தான் மாணவியாக இருந்தார். இதனால் மாணவர்கள் அவருக்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்தனர். ஆனால் கல்விக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார் கார்னீலா. இறுதியில் அந்த கல்லூரியிலேயே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். இதன்மூலம் புனே கல்லூரி இடம்பெற்றிருந்த பாம்பே பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் முதலிடத்தைப் பெறுபவர்களுக்கு அப்போதெல்லாம் அரசாங்கமே ஸ்காலர்ஷிப் வழங்கி வந்தது. ஆனால் ஒரு பெண் என்ற காரணத்தால், அங்கும் கார்னீலா சொராப்ஜி புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அவர் தனது முயற்சிகளைக் கைவிடவில்லை. இங்கிலாந்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனது நிலையைப் பற்றி கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குரல் கொடுத்தனர். அதேநேரத்தில் பிரபல செவிலியரான ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல், அவருக்காக நிதி திரட்ட முன்வந்தார். அவரது உதவியால் 1889-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி கார்னீலா சொராப்ஜி இங்கிலாந்தில் சென்று இறங்கினார். ஆனால் அங்கும் சவால்கள் அவரைத் தொடர்ந்தன.
ஆக்ஸ்போர்டில் உள்ள சோமர்வில்லி கல்லூரியில் சட்டம் படிக்க கார்னீலா விரும்பினார். ஆனால் அது பெண்களுக்கான படிப்பல்ல என்று கூறி அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. மாறாக ஆங்கில இலக்கியத்தை படிக்குமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அதனால் வேறு வழியின்றி ஆங்கில இலக்கிய படிப்பில் கார்னீலா சேர்ந்தார். அங்கு படிக்கும் காலத்தில் அவரது புத்திசாலித்தனம் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும் கார்னீலாவும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிபுணர்களுடன் நல்லுறவை வளர்த்துள்ளார். அவர்கள் அனைவரும் சேர்ந்து கார்னீலாவுக்கு சட்டம் படிக்க வாய்ப்பு வழங்குமாறு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிபாரிசு செய்தனர்.
இதைத்தொடர்ந்து 1890-ம் ஆண்டில் அவருக்கு பொது சிவில் சட்டம் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. 1892-ம் ஆண்டில் படிப்பை முடித்த அவர், இந்தியா திரும்பினார். ஆனால் அன்றைய ஆண்களின் உலகம் அவருக்கு தொடர்ந்து இன்னல்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தது. பாம்பே நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதியான சர் சார்லஸ் சார்ஜெண்ட், ஒரு பெண்ணான கார்னீலா சொராப்ஜியை யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ள கூடாது என்று வழக்கறிஞர்களுக்கு ஒரு தனி உத்தரவையே வழங்கினார்.
இதனால் வழக்கறிஞர்கள் யாரும் அவரை ஜூனியராக சேர்த்துக்கொள்ளவில்லை. இதுபற்றி அவர் கேட்டதற்கு, “நீஒரு பெண். சட்டத்தில் தலையிட பெண்களை அனுமதிக்க முடியாது” என்று அவர்கள் கூறியுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவின் அப்போதைய வைஸ்ராயான லார்ட் கர்சன், சட்டம் சார்ந்த பணிகளில் ஒரு பெண்ணான கார்னீலா சொராப்ஜி தலையிடுவதை வெறுத்தார். அதனால் அவருக்காக வந்த சிபாரிசுகளைப் புறம்தள்ளினார். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத கார்னீலா, தன் படிப்பை மேலும் தொடர்ந்தார். 1895-ம் ஆண்டில் எல்எல்பி படிக்க அவர் திட்டமிட்டார். இதைப் படித்தால் யாரிடமும் ஜூனியராக சேராமல் நேரடியாக பார் கவுன்சிலில் நுழைந்துவிடலாம் என்பததே இதற்கு காரணம்.
ஆனால் அதற்கும் பல்வேறு தடைகள் வந்தன. சட்டத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் பெண் என்ற ஒரே காரணத்தால் பல இடங்களிலும் பந்தாடப்பட்டார் கார்னீலா. ஆனால் அவர் தனது முயற்சிகளை கைவிடவில்லை. தனது உரிமைகளைப் பெறுவதற்காக கடுமையாக போராடினார். வெள்ளைய அரசாங்கம் தன்னை நிராகரித்த நிலையில் இந்திய மகாராஜாக்களின் வழக்கறிஞராக அவர் புதிய பரிமாணம் எடுத்தார். அவர்களுக்காக வழக்குகளில் வாதாடினார்.
கார்னீலாவின் விஷயத்தில் கடைசியில் கொஞ்சம் இறங்கிவந்த ஆங்கிலேய அரசாங்கம், 1904-ம் ஆண்டில் வங்கத்தில் உள்ள கோர்ட் ஆஃப் வார்ட்ஸில் (Court of Wards ) அவரை பெண்களுக்கான சட்ட ஆலோசகராக நியமித்தது. அதைத்தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் வங்கம், பிஹார், ஒரிசா, அஸ்ஸாம் ஆகிய பகுதிகளில் உள்ள பெண்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு வழிகளில் போராடினார். 1929-ம் ஆண்டில் ஓய்வுபெற்ற இவர், தனது கடைசிக் காலத்தை லண்டனில் கழித்தார். வாழ்க்கை முழுவதும் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த அவர், 1954-ம் ஆண்டில் காலமானார்.
காந்திக்கு எதிர்ப்பு
சட்டப் பணிகளில் மட்டுமின்றி சமூக சீர்திருத்தங்களிலும் கார்னீலா அதிக ஆர்வம் காட்டினார். குழந்தைத் திருமணம் மற்றும் விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கம் ஆகியவற்றுக்கு எதிரான இயக்கங்களில் பங்குகொண்டார். அதேநேரத்தில் இந்திய சுதந்திரத்துக்கான போராட்டங்களை இவர் எதிர்த்தார். குறிப்பாக காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை கண்டித்தார். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆள்வதே நல்லது என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். இதனால் பலரது எதிர்ப்பையும் அவர் சம்பாதித்துக்கொண்டார்.
-----------------------------------------------------------------------------------
7. இந்தியாவின் முதல் கிரிக்கெட் கேப்டன்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய முதல் இந்தியர் ரஞ்சித்சிங்ஜியாக இருக்கலாம். ஆனால் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் அந்த விளையாட்டை பிரபலப்படுத்தியவர் சி.கே.நாயுடு. இந்திய கிரிக்கெட்டின் தொடக்க காலத்தில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்த சி.கே.நாயுடு, தனது பேட்டிங் ஸ்டைலால் பல இளைஞர்களைக் கவர்ந்து கிரிக்கெட் ஆடவைத்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டனாகவும் அவர் பொறுப்பு வகித்தார். அவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்..
இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சி.கே.நாயுடு என்று அழைக்கப்படும் கோட்டாரி கனகய்யா நாயுடு, 1885-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நாக்பூரில் பிறந்தார். ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இளமைப் பருவத்தில் அவர் நாக்பூரிலேயே தங்கியிருந்தார். சி.கே.நாயுடுவின் குடும்பம் செல்வச் செழிப்பு மிக்கதாக இருந்தது. அவரது தாத்தா ராய் பகதூர் கோட்டேரி நாராயண் சாமி நாயுடு, நிலச்சுவான்தாராகவும், வழக்கறிஞராகவும் இருந்தார். அத்துடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலும் அவர் முக்கிய பதவிகளை வகித்துவந்தார்.
சி.கே.நாயுடுவுக்கு சிறு வயதிலேயே கிரிக்கெட் விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. தன் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மைதானங்களில் ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதை அவர் ஆர்வமாக பார்ப்பார். 7 வயதில் இருந்தே பள்ளி கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்த சி.கே.நாயுடு, தனது டீன் ஏஜ் வயதில் நாக்பூரில் உள்ள மோடி கிரிக்கெட் கிளப்பில் இணைந்தார். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் உறுப்பினர்களாக இருந்த இந்த கிரிக்கெட் கிளப்பில் சில வெள்ளையர்களும் இருந்தனர். அக்காலகட்டத்தில் மோடி கிளப்பில் உள்ள கிரிக்கெட் வல்லுநர்களிடம் இருந்து பல்வேறு நுணுக்கங்களை சி.கே.நாயுடு கற்றுக்கொண்டார்.
பள்ளி மற்றும் கிளப் கிரிக்கெட்களில் ஆடிவந்த சி.கே.நாயுடு, 1916-ம் ஆண்டில் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அக்காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இந்து கிரிக்கெட் கிளப்புக்காக அவர் களம் இறங்கினார். 1916-ம் ஆண்டில் எம்சிசி கிளப்புக்கு எதிராக இந்து கிரிக்கெட் கிளப் விளையாடிய ஒரு போட்டி, சி.கே.நாயுடுவை வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது. இப்போட்டியில் ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களைச் சேர்த்து பலவீனமாக இருந்தது இந்து கிரிக்கெட் கிளப். இந்த சமயத்தில் களம் இறங்கிய சி.கே.நாயுடு, முதல் பந்தையே சிக்சருக்கு பறக்கவிட்டு தனது வரவை அறிவித்தார். இப்போட்டியில் 14 பவுண்டரிகள் 11 சிக்சர்களுடன் அவர் 153 ரன்களைக் குவிக்க, எதிரணி ஆடிப்போனது. இந்தியாவில் கிரிக்கெட் ஆடும் அனைவருக்கும் நாயுடுவின் பெயர் பழகிப் போனது.
இதற்கடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கனவு நாயகனாக மாறினார் நாயுடு. இந்தச் சூழ்நிலையில்தான் 1932-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆடும் அந்தஸ்தை இந்தியா பெற்றது. அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியை இங்கிலாந்துக்கு அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதி வழங்கிவந்த போர்பந்தர் மகாராஜாவை கேப்டனாகவும், ஞான்ஷியாம்ஜி என்பவரை துணை கேடப்டனாகவும் தேர்வுக்குழுவினர் நியமித்தனர். இந்திய கிரிக்கெட்டில் அப்போது சூப்பர் ஸ்டாராக கருதப்பட்ட சி.கே.நாயுடுவுக்குத்தான் கேப்டன் பதவி வழங்கப்படும் என்று இந்திய வீரர்களும், ரசிகர்களும் அப்போது பெரிய அளவில் நம்பிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கு மாறாக போர்பந்தர் மகாராஜா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தான் கேப்டனாக நியமிக்கப்பட்டது பலருக்கும் பிடிக்கவில்லை என்பதை அறிந்த போர்பந்தர் மகாராஜா, முதல் போட்டியில் களம் இறங்குவதற்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் ஞான்ஷியாம்ஜியும் ராஜினாமா செய்ய, இந்திய அணியின் முதல் கேப்டனாக சி.கே.நாயுடு நியமிக்கப்பட்டார். அப்போது சி.கே.நாயுடுவின் வயது 37.
இப்போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்துகொண்டு இருந்தபோது, நாயுடுவின் கையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பேட்டிங் செய்யவந்த நாயுடு, முதல் இன்னிங்ஸில் 40 ரன்களைக் குவித்தார்.
வழக்கமாக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு நடக்கும் விஷயம்தான் இந்தத் தொடரில் இந்தியாவுக்கு நடந்தது. வலுவான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசையைக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோற்றது. அதேநேரத்தில் கவுண்டி அணிகளுக்கு எதிரான முதல் தரப் போட்டிகளில் சிறப்பாக ஆடியது. 26 முதல்தர போட்டிகளில் 9-ல் வென்றது. இதில் அனைத்து முதல்தர போட்டியிலும் ஆடிய கேப்டன் சி.கே.நாயுடு 1,618 (சராசரியாக 40.45) ரன்களைக் குவித்தார். அத்துடன் 79 விக்கெட்களையும் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 1933-ம் ஆண்டு, நாயுடுவுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அதிரடி மன்னனாக பெயரெடுத்த நாயுடு, இந்த ஆண்டில் முதல்தர கிரிக்கெட்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்ததுடன் 51 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும் 1933-ம் ஆண்டில் புகழ்பெற்ற கிரிக்கெட் பத்திரிகையான விஸ்டனின், சிறந்த வீரர் விருதையும் பெற்றார். தனது கழுத்தில் ஒரு கர்ச்சீப்பை இறுக்கிக் கட்டிக்கொண்டு பேட்டிங் செய்ய வருவது அப்போது சி.கே.நாயுடுவின் ஸ்டைலாக இருந்தது. அது அந்த காலகட்டத்தில் உள்ள இளைஞர்களிடையே வேகமாக பரவியது.
மிகத் தாமதமாக, தனது 37 வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆடவந்ததால், இந்திய அணிக்காக வெறும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே நாயுடுவால் ஆட முடிந்தது. 1936-ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். ஆனால் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதை அத்தனை சீக்கிரத்தில் அவர் விடவில்லை. தனது 62-வது வயது வரை உத்தரப் பிரதேச அணிக்காக அவர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடினார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் மிக அதிக வயதில் ஆடிய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
1957-ம் ஆண்டு தனது கடைசி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 52 ரன்களைக் குவித்த நாயுடு, அத்துடன் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்தார். 1962-ம் ஆண்டில் அவர் காலமானார். சி.கே.நாயுடுவின் நினைவாக அவரது பெயரில் மாநில அளவிலான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------
8. இமயத்தை வென்ற மலைமகள்
ஒருசில விஷயங்களை ஆண்களால்தான் செய்ய முடியும் என்பதுபோன்ற மாயையை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் அதுபோன்ற மாயைகளை பொய்யாக்கி, ஆண்கள் செய்யக்கூடிய எல்லா விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும் என்று சில பெண்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர். அப்படி நிரூபித்தவர்களில் ஒருவர் பச்சேந்திரி பால். ஆண்களால் மட்டுமே மலைகளின் உச்சியை அடைய முடியும் என்ற மாயையை உடைத்து இமய மலையின் மீது முதலில் ஏறிய இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பச்சேந்திரி பால்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நாக்ரி எனும் கிராமத்தில் 1954-ம் ஆண்டு பச்சேந்திரி பால் (Bachendri Pal) பிறந்தார். அவரது தந்தை ஸ்ரீகிஷன் சிங் பால், கோவேறு கழுதையில் மளிகைப் பொருட்களை ஏற்றிக்கொண்டு திபெத்தில் உள்ள மலைக் கிராமங்களுக்கு சென்று விற்கும் வியாபாரியாக இருந்தார். பச்சேந்திரி பாலையும் சேர்த்து அவருக்கு மொத்தம் 5 குழந்தைகள் இருந்தனர். வறுமைச் சூழலில் வாழ்ந்து வந்தாலும், தன் குழந்தைகளை அவர் சிறப்பாக படிக்கவைத்தார்.
சிறு வயதில் மிகவும் துறுதுறுப்பாக இருந்த பச்சேந்திரி பாலுக்கு, அப்போதில் இருந்தே சிறிய குன்றுகளிலும், மரங்களிலும் ஏறுவதில் ஆர்வம் இருந்துள்ளது. இந்நிலையில் அவரது 12-வது வயதில், பள்ளிச் சுற்றுலாவுக்காக கிராமத்துக்கு அருகில் உள்ள பனிமலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். பச்சேந்திரி பாலுக்கு இந்த மலையேறும் பயணம் மிகவும் பிடித்துப் போனது. அதிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பள்ளித் தோழிகளுடன் இணைந்து வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சிறு பனி மலைகளில் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அவ்வாறு ஏறும்போது உணவை மட்டும் அவர்கள் எடுத்துச் செல்வார்கள். தண்ணீரை எடுத்துச் செல்ல மாட்டார்கள். மாறாக பனிமலையில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து உறிஞ்சிக் கொள்வார்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை, பச்சேந்திரி பாலும் அவரது தோழிகளும், தங்களின் கிராமத்துக்கு அருகில் உள்ள ஒரு பனிமலையின் உச்சிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் சென்றுள்ளனர். மிகப்பெரிய உயரத்துக்கு அவர்கள் சென்றதால், பிராணவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களால் உடனடியாக கீழே இறங்க முடியவில்லை. ஓர் இரவு முழுக்க உணவும் தண்ணீரும் இல்லாமல் மலையிலேயே கழித்து, மிகவும் கஷ்டப்பட்டு அவர்கள் கீழே இறங்கியிருக்கிறார்கள்.
இரவு முழுவதும் மகள் வீட்டுக்கு வராத கோபத்தில், பச்சேந்திரியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். “இத்தனை பெரிய உயரத்துக்கெல்லாம் உன்னால் செல்ல முடியாது. இனியாவது வீட்டில் அடங்கி இரு” என்று கண்டித்துள்ளனர். இது அவரை உசுப்பி விட்டது. சிறு பிராயத்தில் இருந்தே, தன்னிடம் யாராவது ஒரு செயலை செய்ய முடியாது என்று சொன்னால், அதைச் செய்து கட்டுவது பச்சேந்திரி பாலின் குணமாக இருந்தது. அந்த வகையில் பெற்றோரின் இந்த கண்டிப்பு அவரை உசுப்பி விட்டது. “இந்த மலை என்ன, இதைவிட பெரிய மலையில்கூட ஏறிக் காட்டுவேன்” என்ற வைராக்கியத்தை அவரது மனதில் ஏற்படுத்தியது.
பச்சேந்திரி பாலின் மலையேறும் ஆர்வத்தைக் கண்ட அவரது பள்ளித் தலைமை ஆசிரியர், ‘நேரு இன்ஸ்டிடியூட் ஆஃப் மவுண்டனீரிங்’ என்ற மலையேற்ற பயிற்சி பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தி உள்ளார். இதுபற்றி பெற்றோரிடம் கூற, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பச்சேந்திரி பால் விடவில்லை. பெற்றோரிடம் அடம் பிடித்து மலையேற்ற பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். அதேநேரத்தில் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற எம்.ஏ. முதுகலைப் பட்டம் பெற்றார்.
மலையேற்ற பயிற்சி மையத்தில் இருந்த காலகட்டத்தில் மவுண்ட் கங்கோத்ரி, மவுண்ட் ருத்ரகாரியா ஆகிய மலைகளில் பச்சேந்திரி பால் ஏறியுள்ளார். அவரது திறமையைப் பார்த்து ‘நேஷனல் அட்வெஞ்சர் பவுண்டேஷன்’ என்ற சாகசப் பயிற்சி மையத்தில் பயிற்றுநராக வேலை கிடைத்துள்ளது. இந்த சூழலில் பல்வேறு மலைகளில் ஏறி சாதனை படைத்த பச்சேந்திரி பால், 1984-ம் ஆண்டு இமய மலை மீது ஏறுவதற்காக செல்லும் குழுவில் சேர்க்கப்பட்டார்.
பச்சேந்திரி பால் உட்பட 6 பெண்கள் 11 ஆண்களைக் கொண்ட குழுவினர், 1984-ம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தங்கள் பயணத்தை தொடங்கினர். இனிமையாகத் தொடங்கிய இப்பயணம், மே 16-ம் தேதி மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்தது. புத்த பூர்ணிமா தினமான அன்று, மலையேறும் குழுவைச் சேர்ந்த அனைவரும் 24 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தங்கள் டென்டுகளில் தூங்கிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பல டென்டுகள் தரைமட்டமானதுடன், பலரும் காயமடைந்தனர். அக்குழுவில் இருந்த பலரின் மனோதைரியத்தை இது குலைத்தது.
பச்சேந்திரி பாலைத் தவிர மற்ற பெண்களும், சில ஆண்களும் பயணத்தில் இருந்து பின்வாங்கி, கீழே இறங்க முடிவெடுத்தனர். குழுவின் தலைவராக இருந்த கர்னல் குல்லார் பச்சேந்திரி பாலிடம் வந்தார். “அடுத்தகட்ட பயணம் ஆபத்து நிறைந்ததாக இருக்கும். நீ பயணத்தை தொடர்கிறாயா அல்லது கீழே திரும்புகிறாயா??’ என்று கேட்டுள்ளார். அதற்கு, தான் பயணத்தை தொடர விரும்புவதாக உறுதியுடன் கூறியுள்ளார் பச்சேந்திரி பால். அந்த உறுதிதான் இமய மலையில் முதலில் ஏறிய பெண் என்ற சாதனையைப் படைக்க பச்சேந்திரி பாலுக்கு உதவியுள்ளது. 1984-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி தனது 30-வது பிறந்த நாளுக்கு ஒருநாள் முன்னதாக இமய மலையின் உச்சியை அடைந்த பச்சேந்திரி பால், இமயத்தின் உச்சியைத் தொட்ட முதல் பெண் என்ற சாதனையை படைத்தார். அவரது இந்த சாதனை மேலும் பல பெண்களை இமய மலையை வெற்றிகொள்ளத் தூண்டியது. அந்த வகையில் பல பெண்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார் பச்சேந்திரி பால்.
1984-ம் ஆண்டில் முதல் முறையாக இமய மலையில் ஏறிய பச்சேந்திரி பால், அதன் பிறகு பல முறை இமய மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதில் முக்கியமாக 1993, 1994 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கி இமய மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார். மலையேறுதலில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள பச்சேந்திரி பாலுக்கு மத்திய அரசு, அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கியுள்ளது.
------------------------------------------------------------------------------------
9. டாடாவின் விமானக் கனவு
1930-ம் ஆண்டு 3 இருக்கைகளைக் கொண்ட ஒற்றை இன்ஜின் விமானம் ஒன்று கராச்சியில் இருந்து புறப்பட்டு, மும்பையின் ஜுஹு விமான நிலையத்தை வந்தடைந்தது. ரேடியோ வசதி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் ஏதுமின்றி, ஒரு அல்டிமீட்டர் மற்றும் ஒரு ஸ்பீடாமீட்டரின் உதவியுடன் மணிக்கு 90 மைல் தூர வேகத்தில் இந்த விமானத்தை ஓட்டிவந்தார் 26 வயதான இந்திய இளைஞர். அந்த இளைஞர்தான் இந்தியாவின் முதல் விமான பைலட்டான ஜே.ஆர்.டி.டாடா.
நண்பர்களால் ‘ஜே’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஜே.ஆர்.டி.டாடா, 1904-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் பிறந்தார், அவரது தந்தை ரத்தன்ஜி தாதாபாய் டாடா, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்தார். ஜே.ஆர்.டி.டாடாவின் தாயார் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் சிறுவயதில் பிரான்ஸ் நாட்டிலேயே பள்ளிப் படிப்பை முடித்தார். பிரான்ஸ் நாட்டில் இவர் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில்தான் லூயிஸ் பிளெராய்ட் என்ற விமானி வசித்து வந்தார். 1909-ம் ஆண்டில் இங்கிலீஷ் சானல் மீது விமானத்தை ஓட்டிய முதல் விமானியாக பெயரெடுத்தவர் லூயிஸ். சிறுவயதில் தனது ஓய்வு நேரத்தை லூயிஸுடன் கழித்ததால், டாடாவுக்கும் விமானியாகும் ஆசை வந்தது.
1925-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த டாடா, முதலில் சில காலம் தங்கள் சொந்த நிறுவனமான டாடா குழுமத்தில் அப்ரண்டீஸாக வேலை பார்த்தார். டாடா குழுமத்தில் அப்ரண்டீஸாக பணியாற்றிய காலத்திலும், பைலட் ஆகும் கனவு அவரை விடாமல் துரத்தியது. இதைத்தொடர்ந்து மும்பையில் அப்போது தொடங்கப்பட்ட பிளையிங் கிளப்பில் உறுப்பினராக சேர்ந்தார் டாடா. அங்கு விமானம் ஓட்டும் பயிற்சி பெற்ற அவர், 1929-ம் ஆண்டு விமானங்களை ஓட்டுவதற்கான லைசன்ஸைப் பெற்றார். இதன்மூலம் பைலட் லைசன்ஸ் பெற்ற முதல் இந்தியர் என்ற புகழை பெற்றார்.
இந்தியாவின் முதல் பைலட்டாக லைசன்ஸ் வாங்கிய டாடாவுக்கு, இங்கு சொந்தமாக வர்த்தக விமான போக்குவரத்து நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்ற ஆசை
எழுந்தது. இதுகுறித்து டாடா குழுமத்தின் அப்போதைய தலைவரான தனது மாமா சர் தொராப்ஜி டாடாவிடம் (Sir Dorabji Tata) பேசியுள்ளார். ஆனால் தொராப்ஜிக்கு முதலில் இதில் விருப்பம் இல்லை. நீண்ட நாள் போராட்டத்துக்கு பிறகு விமான போக்குவரத்து நிறுவனத்தை தொடங்க தனது மாமாவை சம்மதிக்க வைத்துள்ளார் ஜே.ஆர்.டி.டாடா. இதைத்தொடர்ந்து 1932-ம் ஆண்டு டாடா ஏர் சர்வீசஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மும்பையின் ஜுஹூ பகுதியில் உள்ள ஒரு சிறிய குடிசையில் இதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டது. பெரிய ஆடம்பரங்கள் ஏதுமின்றி, மிக எளிமையாக தனது பணியைத் தொடங்கியது டாடா ஏர் சர்வீசஸ்.
இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் முக்கியமான நாளாக 1932-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி கருதப்படுகிறது. அன்றைய நாளில்தான் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தின் முதல் விமானம் தனது பயணத்தைத் தொடங்கியது. கராச்சியில் இருந்து அகமதாபாத் வழியாக மும்பையில் உள்ள ஜுஹூ பகுதிக்கு பறந்த இந்த விமானத்தை டாடாவே ஓட்டினார். நாலணா மதிப்புள்ள 25 கிலோ ஏர்மைல் கடிதங்களை இந்த முதல் விமானப் பயணத்தில் டாடா எடுத்துவந்தார். இந்த பயணத்துக்கு ஒற்றை இன்ஜினைக் கொண்ட விமானத்தை அவர் பயன்படுத்தினார். இந்த பயணம் தொடங்கிய சிறிது நாளிலேயே 6 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் விமானத்தையும் டாடா ஏர் சர்வீசஸ் அறிமுகப்படுத்தியது. இந்த விமானங்கள் மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்பட்டது. பின்னாளில் இந்த நிறுவனத்தின் பெயர் டாடா ஏர்லைன்ஸ் என்று மாற்றப்பட்டது.
விமான சர்வீஸை தொடங்கிய முதல் ஆண்டிலேயே டாடா ஏர்லைன்ஸ் விமானங்கள் 2,57,295 கிலோமீட்டர் தூரம் பறந்தது. ஆரம்பத்தில் மும்பையில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்பட்ட டாடாவின் விமானங்கள், பின்னர் மும்பையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன. இக்காலகட்டத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்வதற்கான விமான கட்டணம் ரூ.256-ஆக இருந்தது.
டாடா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்த விமான நிறுவனத்தின் பெயர் 1946-ம் ஆண்டு ‘ஏர் இந்தியா’ என்று மாற்றப்பட்டது. மேலும் உள்ளூரில் மட்டுமே விமானங்களை இயக்கிவந்த இந்நிறுவனம், 1948-ம் ஆண்டுமுதல் சர்வதேச விமான சேவைகளைத் தொடங்கியது. இந்த வகையில் முதன்முதலாக மும்பையில் இருந்து லண்டனுக்கு 40 இருக்கைகளைக் கொண்ட ‘மலபார் பிரின்சஸ்’ என்ற விமானத்தை ஏர் இந்தியா இயக்கியது. இந்த விமானத்தில் பயணிப்பதற்காக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1,720 வசூலிக்கப்பட்டது.
1953-ம் ஆண்டு, ஏர் இந்தியாவை நாட்டுடைமையாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இருப்பினும் இந்த நிறுவனத்துக்கு ஜே.ஆர்.டி.டாடா செய்த சேவைகளை கவுரவிக்கும் வகையில் அவரையே இந்நிறுவனத்தின் தலைவராக மத்திய அரசு நியமித்தது. டாடாவின் தலைமையின் கீழ் உலகின் தலைசிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக ஏர் இந்தியா உருவெடுத்தது. 1977-ம் ஆண்டுவரை ஏர் இந்தியாவின் தலைவராக டாடா இருந்தார்.
தற்போது தினமும் நூற்றுக்கணக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா இயக்கி வருகிறது. இந்நிறுவனத்தை மீண்டும் தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை வாங்க பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தை யார் வாங்கினாலும், அதற்கு பிள்ளையார்சுழி போட்ட டாடாவை மறக்க முடியாது.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராய் விளங்கிய ஜஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (ஜே.ஆர்.டி.டாடா) 1904-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தார். 1938-ம் ஆண்டு டாடா குழுமத்தில் தலைவராக பொறுப்பேற்ற ஜே.ஆர்.டி.டாடா 1991-ம் ஆண்டுவரை அப்பதவியில் இருந்து, டாடா குழுமத்தின் முன்னேற்றத்துக்காக கடுமையாக உழைத்தார். ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட தேசிய பல்வேறு தலைவர்கள் அவருக்கு நண்பர்களாக இருந்தனர். இந்திய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக பாரத் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார். இந்தியாவில் தொழில்துறையை முன்னேற்றியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஜே.ஆர்.டி.டாடா 1993-ம் ஆண்டு காலமானார்.
----------------------------------------------------------------------------------------------------------
10. காந்தியால் கிடைத்த ஆஸ்கர்
ஆஸ்கர் விருதுபெற்ற இந்தியர் ஒருவரின் பெயரைக் கூறுங்கள் என்று யாராவது கேட்டால், உடனடியாக ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரைக் கூறுவோம். இன்னும் தீவிரமாக யோசித்தால் சிலர் ரசூல் பூக்குட்டியின் பெயரைக் கூறுவார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் முன்பாக, 1983-ம் ஆண்டிலேயே ஆஸ்கர் விருதைப் பெற்றவர் பானு ரஜோபாத்யே அத்தையா (Bhanu Rajopadhye Athaiya) என்ற பெண்மணிதான். ‘காந்தி’ படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய அவர் இத்துறைக்காக 1983-ம் ஆண்டில் ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
1929-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கோலாப்பூரில் பானு அத்தையா பிறந்தார். அவரது தந்தை அன்னாசாகேப், ஒரு ஓவியராக இருந்தார். பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவர் காலமானார். தந்தையை இழந்த பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். அவரது தாயாரும் இந்த துறையில் அவர் கல்வி கற்க உதவினார். படிப்பை முடித்த பிறகு பல்வேறு பத்திரிகைகளுக்கும் ஆடை வடிவமைப்பாளராக பானு அத்தையா பணியாற்றி உள்ளார்.
இந்த காலகட்டத்தில் இவர் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ‘ஈவ்ஸ் வீக்லி’ பத்திரிகையின் ஆசிரியர் ஒரு பொட்டிக்கை ஆரம்பிக்க, அவரது அழைப்பின் பேரில் அதில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார் பானு அத்தையா. இந்த கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்ததுடன், அவர் வடிவமைத்த ஆடைகள் மும்பை நகரில் புகழ்பெறவும் தொடங்கியது. இதைத்தொடர்ந்து குரு தத் தயாரிப்பில் தேவ் ஆனந்த் நடித்த ‘சிஐடி’ என்ற படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றும் வாய்ப்பு 1956-ம் ஆண்டில் அவரைத் தேடி வந்தது. இப்படத்தில் சிறப்பாக பணியாற்றியதைத் தொடர்ந்து குரு தத்தின் குழுவில் ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளார் பானு அத்தையா.
பாலிவுட் படங்களில் முக்கியமான ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவராக பானு அத்தையா இருந்த காலத்தில் ‘காந்தி’ படத்தை எடுப்பதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளார் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. தனது கனவுப் படமான ‘காந்தி’யில் பயன்படுத்தும் ஆடைகள் அனைத்தும் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆடைகளைப் போலவே இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்தார். இதைத்தொடர்ந்து இப்படத்தில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய உடைகளை வடிவமைப்பதற்காக ஜான் மல்லோ (John Mollo), என்பவரை நியமித்த ஆட்டன்பரோ, இந்திய கதாபாத்திரங்கள் அணியும் ஆடைகளை வடிவமைப்பதற்காக ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். அப்போது இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நடிகை சிமி கரேவால் மூலமாக பானு அத்தையாவைப் பற்றி கேள்விப்பட்டுள்ளார். உடனடியாக அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு ஆட்டன்பரோ கூறினார்.
இந்த தகவலை சிமி கரேவால், பானு அத்தையாவிடம் கூறினார். ஒரு மிகப்பெரிய படத்துக்கு தேவையான ஆடைகளை தன்னால் வடிவமைக்க முடியுமா என்று ஆரம்பத்தில் தயங்கிய பானு அத்தையா, பின்னர் இந்த சவாலை ஏற்கத் தயாரானார். தன்னைப் பற்றிய பயோடேட்டா மற்றும் ‘காந்தி’ படத்துக்கு எப்படியெல்லாம் ஆடைகளை வடிவமைக்கலாம் என்பது பற்றிய திட்டங்களுடன் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆட்டன்பரோவை சந்தித்துள்ளார் பானு அத்தையா.
இந்த சந்திப்புக்கு பிறகு, ‘காந்தி படத்தில் இந்தியா தொடர்பான கதாபாத்திரங்களுக்கு பானு அத்தையாதான் ஆடை வடிவமைப்பாளர் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார் ஆட்டன்பரோ. ‘காந்தி’ படத்தின் முனு ஸ்கிரிப்டையும் பானு அத்தையாவிடம் கொடுத்த ஆட்டன்பரோ, படப்பிடிப்பு தொடங்க 12 வாரங்கள் ஆகும் என்றும், அதற்குள் படத்துக்கு தேவையான ஆடைகளை வடிவமைக்குமாறும் சொல்லிவிட்டு சென்றார். அன்றிலிருந்து, ‘காந்தி’ படத்தின் படப்பிடிப்பு முடியும் நாள் வரை தூக்கத்தை மறந்து வேலை பார்த்தார் பானு அத்தையா.
காந்தி படத்துக்காக பணிபுரிந்த நாட்களைப் பற்றி பின்னாளில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பானு அத்தையா, “மும்பையில் உள்ள அசோகா ஓட்டல்தான் எங்களின் படக்குழுவினர் சந்திக்கும் முக்கிய மையமாக இருந்தது. இப்படத்தில் காந்தி, நேரு கஸ்தூர்பா போன்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு மட்டுமின்றி, உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ளும் காங்கிரஸ் தொண்டர்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான நடிகர், நடிகைகளுக்கு ஆடைகளை வடிவமைக்க வேண்டி இருக்கும். தினமும் காலையில் 9 மணிக்கு படப்பிடிப்பு என்று சொன்னால் எங்கள் குழுவினர் 5 மணிக்கெல்லாம் அங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் 9 மணிக்குள் அவர்கள் அனைவருக்கும் ஆடைகளை மாற்றி அதைச் சரிபார்க்க முடியும். இதேபோல் படப்பிடிப்பு முடிந்த பிறகும் நாங்கள் உடனடியாக வீட்டுக்கு திரும்ப முடியாது. அனைத்து உடைகளையும் மடித்துவைத்து ஒழுங்குபடுத்திய பிறகே வீட்டுக்கு செல்ல முடியும்.
இப்படத்தில் காந்தியின் உடையே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அதற்காக நாங்கள் அவரைப் பற்றி நிறைய படிக்கவேண்டி இருந்தது. மேலும் காந்தியின் பல்வேறு தரப்பட்ட புகைப்படங்களையும் பார்க்கவேண்டி இருந்தது. அத்துடன் காந்தியின் வாழ்க்கை வரலாறு பரந்து விரிந்த பல்வேறு காலக்கட்டங்களிலும், பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையான உடைகளை மக்கள் அணிந்துவந்தனர். இந்த உடைகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து இப்படத்தில் பயன்படுத்தினோம்” என்கிறார்.
காந்தி படத்துக்காக பானு அத்தையா மேற்கொண்ட கடும் உழப்பு வீண் போகவில்லை. 1983-ம் ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆஸ்கர் விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பானு அத்தையா பெற்றார்.
‘காந்தி’ படத்துக்கு பிறகு ஆமிர்கான் நடித்த ‘லாகான்’, ‘லேகின்’ உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு பானு அத்தையா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி உள்ளார். 2 முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ள பானு அத்தையா, இந்தியாவின் மிகச்சிறந்த ஆடை வடிவமைப்பாளராக விளங்குகிறார்.
மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் 1929-ம் ஆண்டு பானு அத்தையா பிறந்தார். 1956-ம் ஆண்டுமுதல் 2004-ம் ஆண்டுவரை பாலிவுட் திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய பானு அத்தையா, அதன்பிறகு இத்துறையில் இருந்து ஓய்வு பெற்றார். 1983-ம் ஆண்டு ஆஸ்கர் விருதைப் பெற்ற இவர், ‘காந்தி’ படத்துக்காக பாஃப்டா விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டர். 1991 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதையும் இவர் வென்றுள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------
11. இந்திய கிரிக்கெட்டின் தந்தை
இந்தியாவில் இன்றைய தினம் கிரிக்கெட் பற்றித் தெரியாதவர்கள் மிகவும் குறைவு. சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய வீரர்களின் ஆதிக்கம் ஓங்கி இருக்கிறது. ஆனால் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பிரபலமாவதற்கு முன்பே, இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அடி வெற்றிக்கொடி நாட்டியவர் மகாராஜா ரஞ்சித் சிங்ஜி. இந்திய கிரிக்கெட்டின் தந்தையாகவும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய முதல் இந்தியராகவும் விளங்கும் மகாராஜா ரஞ்சித் சிங்கை (ரஞ்சி) பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
1872-ம் ஆண்டில் கத்தியவாரில் ரஜபுத்திர குடும்பம் ஒன்றில் ரஞ்சி பிறந்தார். இவரது தந்தை ஜிவான்சிங்ஜி ஒரு விவசாயி. இருப்பினும் இவரது குடும்பம், ரஞ்சிஜியின் தாத்தா வழியில் நவாநகர் அரசகுடும்பத்துக்கு உறவினர்களாக இருந்துள்ளனர். பிற்காலத்தில் நவாநகர் அரசராக இருந்த விபாஜிக்கும், அவரது மகன் கலூபாவுக்கும் இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து மகன் கலூபாவை அரண்மனையில் இருந்து விபாஜி வெளியேற்றினார். பின்னர் ரஜபுத்திர குடும்பங்களில் உள்ள வழக்கப்படி தனது தூரத்து உறவினரின் மகனான ரஞ்சியை தத்தெடுத்தார். அக்காலத்தில் நடந்த போர் ஒன்றில் விபாஜி வெற்றிபெற ரஞ்சியின் தாத்தா உதவியதாகவும், அதன் பிரதிபலனாகவே ரஞ்சியை தனது வாரிசாக விபாஜி அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
அரச குடும்பத்தின் வாரிசாக தத்தெடுக்கப்பட்ட ரஞ்சி, மேற்படிப்புக்காக இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு சென்ற ரஞ்சிக்கு, படிப்பைவிட அந்நாட்டில் பிரபலமாக இருந்த கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வம் பிறந்தது. விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது அவரது வழக்கமாகிப் போனது.
நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், உள்ளூரில் சிறந்த கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து கிரிக்கெட் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். பல்கலைக்கழகத்துக்குள் நடந்த பல போட்டிகளில் சிறப்பாக ஆடிய ரஞ்சி, பின்னாளில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த அணிக்காக ரஞ்சி ஆடிய ஆட்டங்கள், இங்கிலாந்தில் பிரபலமாக இருந்த சசெக்ஸ் கவுண்டி அணியின் கவனத்தை ஈர்த்துள்ளது. உடனடியாக தங்கள் கிளப்புக்காக ஆட அவரை ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
1895-ம் ஆண்டு சசெக்ஸ் அணிக்காக ஆடிய முதல் கவுண்டி போட்டியின் முதல் இன்னிங்ஸில் 77 ரன்களையும், 2-வது இன்னிங்ஸில் 150 ரன்களையும் குவித்து அனைவரையும் திகைக்கவைத்தார் ரஞ்சி. இதைத்தொடர்ந்து பல கவுண்டி போட்டிகளிலும் ரஞ்சி கலக்க, இங்கிலாந்தின் மூலை முடுக்கெல்லாம் அவரது புகழ் பரவியது.
கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணிக்கு தேர்ந்தெடுப்பது வழக்கம். இந்த வழக்கத்தின்படி சசெக்ஸ் அணிக்காக ரன்மழை பொழிந்துவரும் ரஞ்சியை, அணியில் சேர்த்தால் என்ன என்ற கேள்வி இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழுவில் ஒலித்தது. என்னதான் சிறப்பாக ஆடினாலும், ரஞ்சி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் ஒரு இந்தியர் என்றும் கூறி சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் நீண்ட விவாதத்துக்கு பிறகு ரஞ்சியை இங்கிலாந்து அணியில் சேர்க்க முடிவெடுக்கப்பட்டது.
1896-ம் ஆண்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆட ரஞ்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். கிரிக்கெட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டங்களில் எப்படி அனல் பறக்குமோ, அதே போலத்தான் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும்போதும் அனல் பறக்கும். யாரிடம் தோற்றாலும் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்கக் கூடாது என்பது இங்கிலாந்து ரசிகர்களின் எண்ணமாக இருக்கும். இந்நிலையில் தனது ஜென்ம வைரியான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரஞ்சியை களம் இறக்கியது இங்கிலாந்து.
1896-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக களம் இறங்கினார் ரஞ்சி. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஆடிய முதலாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேநேரத்தில் இந்த ஒரு சாதனையுடன் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 62 ரன்களைக் குவித்த ரஞ்சி, 2-வது இன்னிங்ஸில் 154 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன்மூலம் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய பேட்ஸ்மேன்களில் ஒருவராகவும் அவர் சரித்திரத்தில் இடம் பிடித்தார்.
முதல் போட்டியிலேயே சதம் விளாசிய ரஞ்சியை இங்கிலாந்து தேர்வுக் குழுவுக்கு மிகவும் பிடித்துப்போனது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ரஞ்சியும் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ரன் மழை பொழிந்தார். இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் நாயகனாக உருவெடுத்தார். அப்போதுதான் கிரிக்கெட் விளையாட்டின் அரிச்சுவடிகளை படித்துக் கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவரை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டனர்.
கிரிக்கெட் விளையாட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் நவாநகரின் ஆட்சிப் பொறுப்பை அவர் ஏற்கவேண்டிய சூழல் வந்தது. இதைத்தொடர்ந்து 1904-ம் ஆண்டில் கிரிக்கெட்டுக்கு விடை கொடுத்துவிட்டு இந்தியா திரும்பினார் ரஞ்சி.
1907-ம் ஆண்டில் நவாநகரின் அரசராக பொறுப்பேற்ற ரஞ்சி, மக்கள் பணியில் ஈடுபட்டதுடன் இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். 1933-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி அவர் காலமானார். அவர் மறைந்தாலும் கிரிக்கெட் உலகில் அவர் படைத்த சாதனைகள் இன்னும் அவரது பெயரை சொல்லிக்கொண்டு இருக்கின்றன. இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் அளித்த பங்கை போற்றும் வகையில் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்கு ‘ரஞ்சி கோப்பை கிரிக்கெட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் மிகப்பெரிய உள்ளூர் கிரிக்கெட் தொடராக இது இன்னும் விளங்குகிறது.
இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரஞ்சி 2 சதங்கள், 6 அரைசதங்கள் உட்பட 989 ரன்களைக் குவித்துள்ளார். அத்துடன் 39 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். மேலும் இங்கிலாந்தில் 307 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள ரஞ்சி, இதில் 72 சதங்கள், 109 அரைசதங்கள் உட்பட மொத்தம் 24,692 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக 285 ரன்களைக் குவித்துள்ளார்.
---------------------------------------------------------------------------------------
12. இந்தியாவின் முதல் பெண் டாக்டர்
பெண்கள் கல்வி கற்பது இன்றைக்கு வேண்டுமென்றால் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் மூட நம்பிக்கைகள் மிகுந்த 19-ம் நூற்றாண்டில் இது மிகவும் கடினமான காரியம். இந்த காலகட்டத்திலேயே மருத்துவம் படித்து, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆனந்தி கோபால் ஜோஷி.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தானே நகரில், வசதியான குடும்பத்தில் 1865-ம் ஆண்டு பிறந்தவர் யமுனா. அவரது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நிலச்சுவான்தார்களாக இருந்துள்ளனர். ஆனால் ஆங்கிலேய அரசு விதித்த கடுமையான வரிகளால், கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் செல்வத்தை இழந்த யமுனாவின் குடும்பம், அவர் பிறந்த சில ஆண்டுகளேயே ஏழ்மை நிலையை எட்டியது. இந்நிலையில் யமுனாவுக்கு 9 வயதாக இருந்தபோது, அவரைவிட 21 வயது மூத்தவரான கோபால்ராவ் ஜோஷி என்பவருக்கு திருமணம் செய்துவைத்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் அக்காலத்தில் திருமணத்துக்கு பிறகு பெண்களின் பெயரை மாற்றும் வழக்கம் இருந்தது. அந்த வழக்கத்தின்படி யமுனாவின் பெயர் ஆனந்தி கோபால் ஜோஷி என்று மாற்றப்பட்டது.
தானே நகரில் இருந்த தபால் ஆபீஸில் கிளார்க்காக பணிபுரிந்து வந்தார் கோபால் ஜோஷி. ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்தவரான கோபால் ஜோஷி, தன் புது மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார். ஆனந்திக்கு படிப்பில் அதிக ஆசை இருப்பதை அறிந்த கோபால் ஜோஷி, அவரை நன்றாகப் படிக்கவைத்தார்.
ஆனந்திக்கு 14 வயதில் ஒரு குழந்தை பிறந்துள்ளது., ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நோயுற்ற காரணத்தால், பிறந்த 10 நாட்களிலேயே அந்த குழந்தை இறந்துள்ளது. குழந்தையை இழந்த ஆனந்தியும், அவரது கணவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால் தங்கள் குழந்தை பிழைத்திருக்குமே என்று சொல்லிச் சொல்லி அழுது தீர்த்தனர்.
இந்த சமயத்தில் ஆனந்தியின் மனதில் ஒரு ஆசை எழுந்துள்ளது. தனக்கு நேர்ந்ததைப் போல் மற்றவர்களுக்கு நேராமல் இருக்க, தானே ஒரு டாக்டராக வேண்டும் என்பதே அந்த ஆசை. இந்த ஆசையை தயக்கத்துடன் தன் கணவரிடம் கூறியுள்ளார் ஆனந்தி.
மனைவியின் விருப்பத்தைப் பற்றி கேள்விப்பட்டதும், அவரது தோளை ஆதரவாகப் பற்றியுள்ளார் கோபால் ஜோஷி. “உனக்கு டாக்டர் ஆகவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அதற்கு தேவையான தகுதி உனக்கு உள்ளது என்று நம்பினால் மேற்கொண்டு படி. உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்” என்று கூறியுள்ளார் கோபால் ஜோஷி. அத்துடன் தன் மனைவி டாக்டருக்கு படிக்க தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பி படிக்கவைக்க திட்டமிட்ட கோபால், அதற்கு உதவுமாறு கூறி அமெரிக்கன் மெஷினரிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களும் அதற்கு சம்மதிக்க, மனைவியை ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது உறவினர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. “கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட நம் சமூகத்தில் ஆண்களே கடல்தாண்டி போகக்கூடாது என்று கூறுவார்கள். இந்த சூழலில் பெண்ணான உன் மனைவியை எப்படி கடல் கடந்து அனுப்பலாம்” என்று பலரும் கோபால் ஜோஷியை எதிர்த்துள்ளனர். ஆனால் இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளி ஆனந்தியை அமெரிக்காவுக்கு அனுப்பினார் கோபால் ஜோஷி. அவரும் கனவுகளை சுமந்தபடி கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் புறப்பட்டு சென்றார் ஆனந்தி.
அமெரிக்காவுக்கு சென்ற ஆனந்திக்கு, பென்ஸில்வேனியா நகரில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்தியாவில் இருந்த காலகட்டத்திலேயே அடிக்கடி நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் ஆனந்தி. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள குளிர்ச்சியான சீதோஷண நிலை அவரது உடல்நிலையை மேலும் பாதித்தது. அங்கு அவர் காசநோயால் பாதிக்கப்பட்டார். ஆனால் அந்தச் சூழ்நிலையிலும் படிப்பை அவர் கைவிடவில்லை. நோயுடன் போராடியவாறே அவர் மருத்துவப் படிப்பை முடித்தார்.
இந்தியாவைச் சேர்த்த பெண் ஒருவர் முதன்முதலாக மருத்துவப் படிப்பை முடித்தது அந்நாளில் மிகப்பெரிய அதிசயமாக பார்க்கப்பட்டது. ஆனந்தியை பாராட்டி, பல்வேறு பத்திரிகைகளும் கட்டுரைகளை வெளியிட்டன. ஆனந்தியைப் பற்றியும், அவரது சாதனையைப் பற்றியும் கேள்விப்பட்ட விக்டோரியா மகாராணி, பால கங்காதர திலகர் ஆகியோர் அவருக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
அமெரிக்காவில் மருத்துவப் படிப்பை முடித்த நிலையில் 1886-ம் ஆண்டு, ஆனந்தி இந்தியாவுக்கு திரும்பினார். துறைமுகத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா திரும்பிய ஆனந்திக்கு கோலாப்பூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட ஆல்பர்ட் எட்வர்ட் மருத்துவமனையில் வேலை கிடைத்தது. இந்த மருத்துவமனையில் சேர்ந்து ஏராளமான இந்தியர்களுக்கு மருத்துவம் பார்க்க ஆர்வமாக இருந்தார் ஆனந்தி. ஆனால் இந்த சமயத்தில்தான் விதி விளையாடியது.
ஏற்கெனவே காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்தி, அமெரிக்காவில் இருந்து திரும்பிய சிறிது நாட்களிலேயே மேலும் மோசமாக பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், தனது 22-வது பிறந்தநாளுக்கு ஒரு மாதம் முன்னதாக அவர் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கு ஒட்டுமொத்த இந்தியாவே கண்ணீர் சிந்தியது. இந்தியாவில் பெண்களுக்காக ஒரு மருத்துவக் கல்லூரியை கட்டவேண்டும் என்பது அவரது மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் காசநோய் காரணமாக இளம் வயதிலேயே, தன் கனவை நனவாக்க முடியாமல் அவர் உயிரிழந்தார்.
ஆனந்தி கோபால் ஜோஷி இளம் வயதில் மறைந்தாலும், ஏராளமான இந்தியப் பெண்களுக்கு அவர் ரோல் மாடலாக விளங்கினார். அவரைப் பின்பற்றி பலர் மருத்துவத் துறையில் நுழைந்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் முதல் பெண் டாக்டரான ஆனந்தி கோபால் ஜோஷி, 1865-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி பிறந்தார். 1883-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு சென்ற அவர் அங்கு மருத்துவம் படித்து 1886-ல் இந்தியாவுக்கு திரும்பினார். ஏழைகளுக்கு இளம் இலவசமாக மருத்துவம் பார்ப்பதை லட்சியமாக கொண்டிருந்த ஆனந்தி, அது நிறைவேறாமலேயே தனது 21-வது வயதில் காலமானார். இந்தியாவில் காலமான அவரது அஸ்தி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இவரது வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சித் தொடராகவும், திரைப்படமாகவும் வந்துள்ளது. மகாராஷ்டிர அரசு இவரது பெயரில் பெல்லோஷிப் வழங்கி வருகிறது.
---------------------------------------------------------------------------------------
13. இந்திய சினிமாவின் தந்தை
இந்தியர்களை ஒன்றிணைக்கும் முக்கிய விஷயங்களில் ஒன்றாக இன்று சினிமா விளங்குகிறது. தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியையே பிடிக்கும் அளவுக்கு சக்தி பெற்ற ஊடகமாக இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் படங்கள் இந்தியாவில் தயாராகி வருகின்றன. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நிழல்தரும் ஆலவிருட்சமாக வளர்ந்து நிற்கும் சினிமா உலகுக்கு விதைபோட்டவரான தாதா சாகேப் பால்கேவைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
நாசிக் நகருக்கு அருகில் உள்ள திரும்பகேஸ்வர் (Trimbakeshwar) எனும் ஊரில் 1870-ம் ஆண்டு பிறந்தவர் தாதாசாகேப் பால்கே. மும்பையில் பள்ளிப் படிப்பையும், வடோதராவில் கல்லூரிப் படிப்பையும் முடித்த பால்கே, சூரத் நகரில் ஒரு புகைப்படக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். குஜராத்தின் சூரத் நகரில் மனைவி மற்றும் மகனுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் பால்கே. 1899-ல் சூரத் நகரில் பரவிய பிளேக் நோயில் பால்கேவின் மனைவியும் மகனும் உயிரிழக்க, சோகத்துடன் மும்பைக்கே திரும்பியுள்ளார்.
மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்த தாதா சாகேப் பால்கேவுக்கு, 1902-ம் ஆண்டில் அவரைவிட 19 வயது இளையவரான காவேரிபாய் என்பவரை குடும்பத்தினர் மணமுடித்து வைத்துள்ளனர். தனக்கு விருப்பம் இல்லாதபோதிலும், மற்றவர்களின் வற்புறுத்தலால் இந்த திருமணத்துக்கு சம்மதித்துள்ளார் பால்கே. மராத்திய வழக்கப்படி திருமணத்துக்கு பிறகு காவேரிபாயின் பெயர் சரஸ்வதிபாய் என மாற்றப்பட்டுள்ளது. திருமணத்துக்கு பின் அகழ்வாராய்ச்சி மையத்தில், வேலை பார்த்துவந்த பால்கே, பின்னர் 1906-ல் மேனாவலி என்ற நகரில், ‘பால்கேஸ் ஆர்ட் அண்ட் பிரிண்டிங் வொர்க்ஸ்’ என்ற அச்சகத்தை தொடங்கி நடத்தி வந்துள்ளார். பின்னர் போதிய லாபம் கிடைக்காததால் அதையும் மூடிவிட்டார்.
1910-ம் ஆண்டு, ஈஸ்டர் தினத்தன்று பால்கேவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அன்றைய தினம் மும்பையில் உள்ள ‘அமெரிக்கா இந்தியா சினிமாட்டோகிராபி’ என்ற தியேட்டரில் இயேசுநாதரின் வாழ்க்கையை மையப்படுத்திய வெளிநாட்டு குறும்படம் ஒன்று திரையிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தைக் காண தனது மனைவி சரஸ்வதிபாயை அழைத்துச் சென்றுள்ளார் பால்கே. தியேட்டரில் தன் கண் எதிரே மனிதர்களின் பிம்பங்கள் நகர்வதையும், ஓடுவதையும் மெய்மறந்து பார்த்துள்ளார் சரஸ்வதிபாய். படம் முடிந்த பிறகு, அந்த தியேட்டரின் புரொஜக்ஷன் ரூமுக்குள் காவேரிபாயை அழைத்துச் சென்ற பால்கே, படம் எப்படி திரையில் தெரிந்தது என்பதை விளக்கியுள்ளார். இதைக் கேட்டு அவர் வாய்பிளந்து நிற்க, “இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி? இதே போல ஒரு படத்தை நானும் எடுக்கப்போறேன்” என்று தனது கனவை வெளிப்படுத்தி உள்ளார்.
பால்கேவின் இந்த முடிவை அவரது மனைவி வரவேற்றாலும், மற்ற குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர். இதனால் குடும்பத்தின் செல்வம் கரைந்து போய்விடும் என்று எச்சரித்துள்ளனர். ஆனால் சினிமா எடுக்கும் தன் முடிவில் உறுதியாக இருந்துள்ளார் பால்கே. இருப்பினும் அதை செயல்படுத்த பணம் வேண்டுமே...
இந்த நேரத்தில் அவருக்கு உதவ சரஸ்வதிபாய் முன்வந்தார். பிறந்த வீட்டில் இருந்து தான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் பால்கேவிடம் கொடுத்த அவர், அதை வைத்துக்கொண்டு ஐரோப்பாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். மனைவியின் நகையை விற்றுக் கிடைத்த பணத்தில், ஜெர்மனி சென்ற பால்கே, கேமரா மற்றும் படப்பிடிப்புக்கு தேவையான கருவிகளை வாங்கியுள்ளார். பின்னர் லண்டன் சென்றவர், திரைப்படங்களை எடுப்பது பற்றிய நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துள்ளார்.
சினிமா பற்றிய நுணுக்கங்களை கற்றபோதிலும், அதற்குத் தேவையான கருவிகளை வாங்கி வந்தபோதிலும் தாதா சாகேப் பால்கேவின் திரைப்படக் கனவு அத்தனை எளிதில் நனவாகவில்லை. படம் தயாரிக்க போதுமான பணம் கிடைக்காததால் மிகவும் கஷ்டப்பட்டார் பால்கே. கடைசியில் தன் சொத்துகளையும், மனைவின் சொத்துகளையும் விற்று சினிமா எடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
அடுத்தகட்டமாக நடிகர்கள் கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டது. போட்டோ எடுத்தாலே ஆயுள் குறையும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க யார்தான் முன்வருவார்கள். நாடகக் கலைஞர்கள் பலரை பால்கே அணுகியும், யாரும் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நீண்ட வற்புறுத்தல்களுக்கு பிறகு நடிக்கவைக்க முடிவெடுத்தார் பால்கே.
நடிகர்கள் கிடைப்பதற்கே இத்தனை பாடென்றால் கதாநாயகி கிடைக்க அவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு கட்டத்தில் அவரது துயரங்களைப் பார்த்த சரஸ்வதி பாய், தானே படத்தின் நாயகியாக நடிக்கவும் முன்வந்துள்ளார். ஏற்கெனவே படப்பிடிப்புக்கு வரும் கலைஞர்களுக்கு சரஸ்வதிபாய்தான் சமைத்துப் போட வேண்டும் என்பதால், அவரை நாயகியாக்க யோசித்தார் பால்கே. கடைசியில் மும்பை ஓட்டல் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வந்த அன்னா சலுன்கே (Anna Salunkhe) என்ற பெண்ணை வற்புறுத்தி நாயகியாக நடிக்க சம்மதிக்க வைத்தார்.
இப்படியாக பல்வேறு தடைகளைக் கடந்து 1913-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி மும்பையில் உள்ள ஒலிம்பியா தியேட்டரில் இந்தியாவின் முதல் திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’ பிரபலங்கள் பார்ப்பதற்காக திரையிடப்பட்டது. பின்னர் அதே ஆண்டு மே மாதம் 3-ம் தேதி மும்பையில் உள்ள காரனேஷன் சினிமா என்ற அரங்கில் இப்படம் பொதுமக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இந்திய சினிமாவின் தந்தை என்ற புகழையும் தாதா சாகேப் பால்கேவுக்கு பெற்றுத்தந்தது. அன்று ஆரம்பித்த இந்திய சினிமாவின் பயணம், இன்று ஜெட் வேகமெடுத்து ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவு வளர்ந்துகொண்டு இருக்கிறது.
வாழ்க்கைப் பாதை
தாதாசாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே (Dhundiraj Govind Phalke), 1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டில் ‘ராஜா ஹரிச்சந்திரா’ என்ற படத்தை முதல் முறையாக திரையிட்ட தாதாசாகேப் பால்கே, அதன்பிறகு 95 படங்களையும் 27 குறும்படங்களையும் தயாரித்து, இயக்கி வெளியிட்டுள்ளார். 1944-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி அவர் காலமானார். இந்திய திரையுலகுக்கு அவர் செய்துள்ள மகத்தான பணிகளை பாராட்டும் வகையில் 1969-ம் ஆண்டுமுதல் சினிமா உலகில் வாழ்நாள் சாதனை படைத்த கலைஞர்களுக்கு, ‘தாதாசாகேப் பால்கே விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
-----------------------------------------------------------------------------------
14. முதல் பெண் ஆசிரியை
கோயில் கோபுரங்களைப் பார்ப்பவர்களின் கண்களுக்கு எப்போதும் அதன் உச்சியில் உள்ள கலசங்கள்தான் முதலில் தெரியும். அந்த உயர்ந்த கோபுரம் உருவாகக் காரணமான, அதைத் தாங்கி நிற்கும் அஸ்திவாரம் யாருடைய கண்களுக்கும் தெரிவதில்லை. அந்த அஸ்திவாரத்தைப் போலத்தான் சில மனிதர்களும். சமூகத்தின் மேம்பாட்டுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த பல மனிதர்களை சரித்திரம் சரியாக கண்டறிந்து கொண்டாடுவதில்லை. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சாவித்திரி பாய் புலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை.
பெண்கள் படிப்பதற்கே தடை விதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், பல்வேறு தடைகளைக் கடந்து பெண்களுக்காக, அதிலும் கணவனை இழந்த பெண்களுக்காக பள்ளிக்கூடம் நடத்தியவர் சாவித்திரிபாய் புலே.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நைகான் எனும் ஊரில், 1831-ம் ஆண்டு பிறந்தவர் சாவித்திரி பாய் புலே. கல்வி கற்கக்கூடிய வாய்ப்பு இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவரான இவருக்கு, 9-வது வயதில் ஜோராவ் புலே என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான ஜோதிராவ் புலே, இளம் வயதில் கல்வி கற்க மேல்ஜாதியினர் பல்வேறு தடைகளை விதித்துள்ளனர். இந்நிலையில் ஸ்காட்டிஷ் மிஷினரி பள்ளியில் சேர்ந்து படிப்பை முடித்துள்ளார். முற்போக்கு சிந்தனையாளரான ஜோதிராவ் புலே, தன்னைப் போலவே தன் மனைவியும் கல்வியில் கல்வியில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதற்காக சாவித்திரி பாய்க்கு 4 ஆண்டுகள் வீட்டிலேயே கல்வி அளித்துள்ளார். பின்னர் அவரை அமெரிக்கன் மிஷனரியில் மேற்படிப்பு படிக்க வைத்துள்ளார். ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
சாவித்திரி பாய் நன்கு கற்றுத் தேர்ந்ததும் அவருடன் இணைந்து ஒடுக்கப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக 1847-ம் ஆண்டில் புனேவில் ஒரு பள்ளியைத் திறந்துள்ளார் ஜோதிராவ் புலே. இந்த பள்ளியில் முதல் முறையாக பாடம் நடத்தியிருக்கிறார் சாவித்திரி பாய் புலே. இதன்மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
கணவனை இழந்த பெண்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதையே பாவம் என்று நினைத்த காலகட்டம் அது. இத்தகைய காலகட்டத்தில் கணவனை இழந்த பெண்கள் படிக்கச் சென்றால் ஒப்புக்கொள்வர்களா என்ன?
கணவனை இழந்த பெண்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் கல்வி கற்பதை ஏற்றுக் கொள்ளாத ஆதிக்க சமூகத்தினரின் கோபம், அவர்களுக்கு பாடம் நடத்த துணிந்த சாவித்திரி பாய் மீது திரும்பியது. தினமும் பள்ளியில் பாடம் நடத்தச் செல்லும் சாவித்திரி பாய் மீது சாணியையும், சேற்றையும் எடுத்து எறிந்துள்ளனர். இதைப்பார்த்து பயந்துபோய் அவர் பாடம் நடத்த பள்ளிக்கு செல்லாமல் வீட்டுக்கு திரும்பிவிடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சாவித்திரி பாய் இதற்காக கலங்கவில்லை.
தனது கணவரின் அறிவுரைப்படி தினமும் ஒரு சேலையை பையில் போட்டுக்கொண்டு, பழைய சேலையை உடுத்திக்கொண்டு பள்ளிக்கு சென்றார். மற்றவர்களால் எறியப்படும் சாணி, சேறு உள்ளிட்டவற்றால் அழுக்கான சேலையை பள்ளிக்கு சென்றதும் மாற்றி பையில் இருக்கும் சேலையை அணிந்துகொண்டு பாடம் நடத்தினார். ஆரம்பத்தில் ஒடுக்கப்பட்ட மற்றும் கணவரை இழந்த பெண்களுக்காக ஒரு பள்ளியை நடத்தியவர், பின்னர் தினந்தோறும் பல்வேறு இடங்களுக்கு சென்று கல்வி கற்பிக்க தொடங்கினார்.
சாவித்திரி பாயின் இந்த உறுதி, அவரை எதிர்த்தவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களால் சாவித்திரி பாயின் செயல்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
கல்விப் பணிகளுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளாத சாவித்திரி பாய் புலே, சமூக சீர்திருத்தப் பணிகளிலும் கவனம் தீவிரமாக ஈடுபட்டார். தீண்டாமை கொடுமை காரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தங்கள் வீட்டில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க தாழ்த்தப்பட்ட மக்களை புலே தம்பதியினர் அனுமதித்தனர். அத்துடன் விதவைகளுக்கு திருமணம் செய்துவைப்பதிலும் இத்தம்பதியினர் தீவிரமாக ஈடுபட்டனர். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் கலாச்சாரம் மற்றும் பெண் குழந்தைகளை பச்சிளம் வயதில் கொல்லும் வழக்கம் ஆகியவற்றுக்கு எதிராகவும் தன் கணவருடன் இணைந்து சாவித்திரி பாய் புலே போராட்டங்களை நடத்தினார்.
இளம் விதவைகள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை தடுப்பதற்காக போராடிய சாவித்திரி பாய், அவர்கள் தங்குவதற்காக பால்ஹத்யா பிரதிபந்தக் கிரஹா (Balhatya Pratibandhak Griha) என்ற இல்லத்தையும் கட்டினார். 1952-ல் ‘மஹிளா சேவா மண்டல்’ என்ற பெண்கள் சேவை மையத்தை தொடங்கிய சாவித்திரி பாய், பெண்களிடையே சமூக விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
1897-ம் ஆண்டில் இந்தியாவில் பிளேக் நோய் பரவ, நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கிவைத்து, மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஆங்கிலேய அரசு ஈடுபட்டது. இந்த சமயத்தில் சாவித்திரி பாயும், மருத்துவரான அவரது வளர்ப்பு மகன் யஷ்வந்தும் சேர்ந்து பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக புனே புறநகர் பகுதியில் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். தங்களையும் இந்நோய் தொற்றிக்கொள்ளுமோ என்ற கவலையின்றி நோயுற்றவர்களுக்கு சேவைகளை செய்துவந்தனர்.
இந்த சமயத்தில் பாண்டுரங்க பாபாஜி கெய்க்வாட் என்பவரின் மகன் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவர, அவரை தனது தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துப் போய் சேர்த்தார் சாவித்திரி பாய் புலே. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் பாண்டுரங்க பாபாஜியின் மகன் காப்பாற்றப்பட்டார். ஆனால் அவரை தோளில் சுமந்துவந்த சமயத்தில் சாவித்திரி பாய் புலேவுக்கும் பிளேக் நோய் பரவ, அடுத்த சில நாட்களிலேயே அவர் காலமானார்.
இந்திய நாட்டுக்கு சாவித்திரி பாய் புலே செய்துள்ள சேவைகளைப் போற்றும் வகையில் புனே பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டில் மத்திய அரசு சாவித்திரி பாய் புலேயின் நினைவாக தபால் தலையையும் வெளியிட்டது.
1931-ம் ஆண்டு ஜனவரி 3-ம் தேதி புனேயில் இருந்து 50 கிலோமீட்டர் தூரம் தள்ளியுள்ள நிகான் என்ற கிராமத்தில் சாவித்திரி பாய் புலே பிறந்தார். தன் கணவருடன் இணைந்து 1853-ம் ஆண்டுமுதல் அவர் கல்விப்பணிகளில் ஈடுபட்டார். சாவித்திரி பாயின் அனைத்து முயற்சிகளுக்கும் துணைநின்ர அவரது கணவர் 1890-ம் ஆண்டில் காலமானார். இந்த சமயத்தில் ஊர்மக்களின் எதிர்ப்பையும் மீறி அவரது இறுதிச் சடங்குகளை சாவித்திரிபாயே செய்துள்ளார்.ஆசிரியராக மட்டுமின்றி மிகச்சிறந்த கவிஞராகவும் விளங்கிய சாவித்திரி பாய் புலே 1897-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி காலமானார்.
-----------------------------------------------------------------------------------------------------------
14. ஒலிம்பிக் பதக்கத்தை வசப்படுத்திய ஜாதவ்
பி.எம்.சுதிர்
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு பதக்கங்களை அள்ளித்தரும் விளையாட்டாக மல்யுத்தம் இருக்கிறது. சுஷில் குமார், யோகேஸ்வர் தத், சாக்ஷி மாலிக் என்று இந்த விளையாட்டில் இன்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இந்தியாவுக்கு அதிக பதக்கங்களையும், நட்சத்திரங்களையும் தந்த மல்யுத்தம்தான் ஒலிம்பிக் போட்டியில் சுதந்திரத்துக்கு பிறகு இந்தியாவுக்கு முதல் தனிநபர் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது. இப்பதக்கத்தை வென்ற வீரர் கே.டி.ஜாதவ் என்று அழைக்கப்படும் கஷாபா தாதாசாஹேப் ஜாதவ்.
ஜாதவின் அப்பா ஒரு மல்யுத்த வீரர். அதனாலேயே ஜாதவுக்கு சிறுவயது முதலே மல்யுத்தத்தில் ஆர்வம் இருந்துள்ளது. இதைப்பார்த்த அவரது தந்தை, ஜாதவை ஒரு அகாடாவில் (மல்யுத்த பயிற்சி அளிக்கும் இடம்) கொண்டுபோய் சேர்த்துள்ளார். வீட்டில் இருந்து 5 கிலோமீட்டர் தள்ளியுள்ள அகாடாவுக்கு தினமும் நடந்தே போய் பயிற்சி பெற்றுள்ளார் ஜாதவ்.
கல்லூரியில் படிக்கும்போது அங்கு நடக்கும் மல்யுத்த போட்டியில் பங்கேற்க ஜாதவுக்கு ஆவல் ஏற்பட்டுள்ளது. குள்ளமான மற்றும் ஒல்லியான தேகத்தைப் பெற்றிருந்ததால் ஜாதவைப் பார்ப்பவர்கள் யாரும், அவர் ஒரு மல்யுத்த வீரர் என்று சொல்ல மாட்டார்கள். எனவே மல்யுத்த போட்டிக்கு பெயர் கொடுக்கச் சென்ற ஜாதவைப் பார்த்து கிண்டல் செய்திருக்கிறார்கள். போட்டியில் பங்கேற்றால் கைகால்கள் முறிந்துவிடும் என்றும் பயமுறுத்தி இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஆனால் பிடிவாதமாக இப்போட்டியில் பங்கேற்ற ஜாதவ், அதில் வெற்றியும் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
கல்லூரியில் நடந்த இந்த மல்யுத்த போட்டிக்கு பிறகு மாவட்ட அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகள் என்று முன்னேறி 1948-ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஃபிளைவெயிட் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்ற அவருக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் லைட்வெயிட் மல்யுத்த சாம்பியனான ரீஸ் கார்டனர் பயிற்சி அளித்துள்ளார். தனது முதல் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாவிட்டாலும், கவுரவமாக 6-வது இடத்தைப் பிடித்துள்ளார் ஜாதவ். இன்னும் கொஞ்சம் முயன்றால், ஹெல்சிங்கியில் 1952-ம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கத்தை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை, இது அவருக்குள் விதைத்துள்ளது.
ஆனால் 1952-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் பங்கேற்பது அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டி நெருங்கிய சமயத்தில், அவருக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வந்தது. மல்யுத்த பிரிவில் ஜாதவுக்கு பதிலாக நிரஞ்சன் தாஸ் என்ற மற்றொரு வீரரை அரசு தேர்வு செய்துவிட்டது என்பதே அந்தச் செய்தி. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நிரஞ்சன் தாஸ், உடலளவில் ஜாதவை விட வலுவானவராகவும், உயரமானவராகவும் (நிரஞ்சன் தாஸின் உயரம் 6 அடி. அதே நேரத்தில் ஜாதவின் உயரம் 5.5 அடி) இருந்தார். அத்துடன் அவர் பிளைவெயிட் பிரிவிலும் அவர் சாம்பியனாக இருந்ததால் அவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இதைக் கேள்விப்பட்டதும் பதறிப் போனார் ஜாதவ். உடனடியாக விளையாட்டுத்துறையில் செல்வாக்கு கொண்ட, பாட்டியாலா மகராஜாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ஜாதவைப் பற்றி நன்கு தெரிந்தவரான பாட்டியாலா மகாராஜாவும் அவருக்கு உதவ முன்வந்தார். இரு வீரர்களுக்கும் இடையில் போட்டி நடத்தி, அதில் வெல்பவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பலாம் என்று மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார். இதன்படி நடந்த போட்டியில் நிரஞ்சன் தாஸை வென்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் ஜாதவ்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதிலும், இதில் பங்கேற்கச் செல்ல போதிய நிதி இல்லாமல் ஜாதவ் தவித்தார். இந்த சமயத்தில் அவர் படித்த, ராஜாராம் கல்லூரியின் முதல்வர் ஜாதவுக்கு உதவினார். தன் வீட்டை அடகுவைத்து ரூ.7,000 வழங்கினார். மேலும் சில நண்பர்களும் உதவ, ஹெல்சிங்கியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார் ஜாதவ். இத்தனை கஷ்டப்பட்டு தன்னை ஹெல்சிங்கிக்கு அனுப்பிய நண்பர்களுக்காகவாவது தான் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்குள் எழுந்தது.
இப்போட்டியில் சிறப்பாக பங்கேற்றவர், 5 சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றி கண்டார். 6-வது சுற்றில் ஜப்பான் வீரரான ஷோஹாசி சிஷியை எதிர்த்து மோதினார். சுமார் 15 நிமிடங்கள் நீண்ட இந்த கடும் போட்டியில் இஷியிடம் வீழ்ந்தார் ஜாதவ். பொதுவாக ஒரு போட்டிக்கும் மற்றொரு போட்டிக்கும் இடையே குறைந்தது 30 நிமிடங்களாவது ஓய்வு வழங்க வேண்டும். ஆனால் இப்போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே வெள்ளிப் பதக்கத்துக்கான போட்டிக்கு ஜாதவ் அழைக்கப்பட்டார். ஏற்கெனவே சோர்ந்து போயிருந்த ஜாதவால், இப்போட்டியில் சரியாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போட்டியில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார்.
இந்தியாவைப் பொறுத்தவரை, அதுவரை ஹாக்கி போட்டியில் மட்டுமே பதக்கங்களை வென்றிருந்தது. இந்நிலையில் தனிநபர் பிரிவில் முதல் முறையாக பதக்கம் வென்று நாட்டுக்கு கவுரவம் சேர்த்தார் கே.டி.ஜாதவ். வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய ஜாதவை 40 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துச் சென்று கவுரவப்படுத்தினார்கள் அவர் பிறந்த கோலேஷ்வர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள். இன்று இந்தியா பல்வேறு பதக்கங்களை வென்று சாதனைகளை படைத்தபோதிலும், நமக்காக முதல் பதக்கத்தை வென்று கொடுத்த இந்த நாயகனை என்றும் மறக்க முடியாது.
வாழ்க்கைப் பாதை
‘பாக்கெட் டைனமோ’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கே.டி.ஜாதவ், 1926-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள கோலேஸ்வர் கிராமத்தில் பிறந்தார். ஹெல்சிங்கி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகு காவல்துறையில் இணைந்து பணியாற்றிய இவர், 1984-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காலமானார். இவருக்கு 2001-ம் ஆண்டில் மரணத்துக்கு பிந்தைய விருதாக அர்ஜுனா விருது வழங்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மல்யுத்த போட்டிக்கான உள் விளையாட்டு அரங்குக்கு ஜாதவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment