குழந்தைகளின் வளர்ச்சி என்பது அறிவு வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் மட்டுமல்ல. சமுதாயத்துக்கு பயன்பெறும் வகையில் உருவாக வேண்டுமானால் நல்ல குணங்களையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள். உங்கள் குழந்தைகள் மனதில் நல்ல குணங்கள் குடியேற வேண்டுமானால் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு அதை கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு கற்சிலையை சிற்பி உருவாக்குவது போல குழந்தைகளை பார்த்துப் பார்த்து செதுக்க வேண்டும்.
நேர்மை நல்லது!
வாழ்க்கையில் நல்லவராக பெயரெடுக்க தேவையான முக்கிய குணங்களில் ஒன்று நேர்மை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லாமல் நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை உங்கள் குழந்தையின் மனதில் பதியவையுங்கள். அதற்கு முதலில் பெற்றோர்கள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். சிறு விஷயத்துக்குகூட குழந்தைகளிடம் பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றவும் கூடாது. ஒரு சில அப்பாக்கள், அம்மாவுக்கு தெரியாமல் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு, ‘அம்மாவிடம் சொல்லாதே. தெரிந்தால் கோபித்துக்கொள்வார்’ என்று கூறுவார்கள். இதுகூட ஒரு விதத்தில் பொய்களை ஊக்குவிக்கும் செயல்தான். எனவே விளையாட்டுக்குகூட இப்படி செய்யாதீர்கள்
‘நாம் தவறு செய்தாலும், அதை மறைக்காமல் கூறினால் நம் பெற்றோர்கள் தண்டிக்க மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையையும் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும். தவறு செய்வது சகஜம். ஆனால் அதை மறைப்பதுதான் பெரும் குற்றம் என்ற எண்ணத்தை சிறு வயதில் இருந்தே ஆழமாக பதியவைக்க வேண்டும். இக்கட்டான நேரத்தில்கூட உண்மைகளைச் சொல்லும் குழந்தைகளைப் பாராட்டி, முடிந்தால் பரிசுகளும் வழங்கினால் உண்மைக்கும் நேர்மைக்குமான மரியாதை குழந்தைகளிடம் அதிகரிக்கும். முடிந்தபோதெல்லாம் நேர்மைதான் வெல்லும் என்ற எண்ணத்தை வளர்க்கக்கூடிய கதைகளை அவர்களுக்கு படித்துக் காட்டுங்கள்.
பொறுமை கடலினும் பெரிது
வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான முக்கிய விஷயங்களில் பொறுமையும் ஒன்று. பொறுமையாக இருப்பது எப்படி என்பதை பெற்றோர்களால் சொல்லிக் கொடுக்க முடியாது. வாழ்ந்துதான் காட்ட முடியும். குழந்தைகளுடன் வாகனத்தில் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் பொறுமையிழந்து ஹாரனை அடித்துக்கொண்டே இருந்தாலோ, வீட்டில் சமையல் தாமதமாகும்போது மனைவியைப் பார்த்து கத்தினாலோ, பொறுமை விஷயத்தில் உங்கள் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாகி விடுவீர்கள். மாறாக எந்த கணத்திலும் நீங்கள் பொறுமையாக இருந்தால், உங்களைப் பார்த்து அவர்களும் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு பொறுமை ஏற்பட பிராணாயாமம், யோகா போன்ற விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம்.
மதிக்கக் கத்துக்கணும்!
எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால் பெரியவர்களிடம் மட்டுமின்றி வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தங்களை விட சிறியவர்களுக்கும் அவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். எக்காரணைத்தைக் கொண்டும் யாரையும் கையால் மட்டுமின்றி வார்த்தைகளாலும் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தை உங்கள் குழந்தைகள் மனதில் ஏற்படுத்துங்கள். அடுத்தவர்களை புண்படுத்த நேர்ந்தால் அடுத்த கணமே அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்துங்கள்
குடும்ப பாசம்
குடும்ப உறவுகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசிய தேவை. தங்களைத் தாங்குவதற்கு நல்ல குடும்பம் இருந்தால், ஒரு மனிதனால் எத்தகைய சவாலையும் எளிதாக கடக்க முடியும். அப்படி ஒரு நல்ல குடும்பம் அமையவேண்டுமானால் நாமும் வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பாகவும், பாசத்துடனும் இருக்கவேண்டும். சிற்சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய பாலபாடம்.
இப்போதெல்லாம் பல வீடுகளில் அப்பா, அம்மா ஒரு குழந்தை என்று குடும்பத்தின் அளவு சிறிதாகிக்கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு மற்ற உறவுகளைப் பற்றியும், அவர்களை அனுசரித்துச் செல்வது பற்றியும் தெரிவதில்லை. இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு விடுமுறையிலும் அவர்களை பல்வேறு கோச்சிங் கிளாஸ்களில் சேர்ப்பதற்கு பதில், உங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள். உங்களின் பெற்றோர்களான தாத்தா- பாட்டிகளிடமோ, அல்லது மற்ற உறவினர்களிடமோ அவர்கள் சில நாட்களை செலவிடும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்கள் மீது உங்கள் குழந்தைகளுக்கு அன்பும், அக்கறையும் ஏற்படும். அதேபோல் முடிந்தவரை உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். அவர்களை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைக்கு அவர்கள் எந்த விதத்தில் உதவியாக இருந்தார்கள் என்பதை பதிய வையுங்கள். இதனால் உங்கள் குழந்தைகளுக்கும் அவர்கள் மீது பிடிப்பு ஏற்படும். அவர்களும் குடும்ப பாசம் கொண்டவர்களாக வளர்வார்கள்.
உதவும் மனப்பான்மை
அறிவியல் வளர வளர மனிதர்களிடம் இருந்து உதவும் மனப்பான்மை வேகமாக குறைந்து வருகிறது. சாலையில் ஒரு விபத்து நடந்தால்கூட, வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணம் பலருக்கும் தோன்றுவதில்லை. இதே நிலை நீடித்தால் மனிதாபிமானம் என்ற விஷயமே இல்லாமல் போய்விடும். வரும் தலைமுறையிலாவது மனிதாபிமானம் காக்கப்பட வேண்டுமென்றால், பிறருக்கு உதவும் குணத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்த வேண்டும். ‘இன்று நீ அடுத்தவர்களுக்கு உதவினால்தான் நாளை அடுத்தவர்கள் உனக்கு உதவி செய்வார்கள்’ என்ற விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். குழந்தைகளின் கண்பட நாமே மற்றவர்களுக்கு உதவி இந்த விஷயத்தில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
தன்னம்பிக்கை
உங்கள் குழந்தைகளுக்கு பல நல்ல குணங்கள் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எல்லாமே அடிபட்டுப் போய்விடும். எனவே அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். எந்த விஷயத்திலும் தாங்கள் சிறந்தவர்கள், தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். முடிந்தவரை கடைக்குப் போவது போன்ற சிறுசிறு வேலைகளை அவர்களிடம் கொடுத்து, எப்படி செய்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். அவர்கள் அதை சரியாக செய்யும் பட்சத்தில் பாராட்டத் தயங்கக்கூடாது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதே நேரத்தில் கொடுத்த வேலையை அவர்கள் தவறாகச் செய்தா, ‘உன்னால இதுகூட செய்ய முடியலியே’ என்று திட்டக்கூடாது. மாறாக தட்டிக்கொடுத்து தவறுகளை நாசூக்காக சுட்டிக்காட்ட வேண்டும். இது அவர்கள் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.