தவறு செய்வது மனிதர்களுக்கு இயல்பான விஷயம். அதிலும் குழந்தைகள் தவறு செய்வது மிகவும் இயல்பாக நடக்கக்கூடிய விஷயம். தங்கள் குழந்தை தவறு செய்துவிட்டது என்பதாலேயே அது ஒரு மோசமான குழந்தை என்ற முடிவுக்கு பெற்றோர்கள் வந்துவிடக் கூடாது. மாறாக அந்த தவற்றில் இருந்து குழந்தைகளை திருத்துவது எப்படி என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
தவறுகள் குழந்தைகளுக்கு நல்ல ஆசிரியர்களாக செயல்படும். பெரும்பாலான குழந்தைகளுக்கு தவறுகள்தான் நல்ல படிப்பினையைக் கொடுக்கும். அவற்றில் இருந்துதான் அவர்கள் பாடம் கற்றுக் கொள்கிறார்கள். தவறே செய்யாத மனிதன் என்பவன் முயற்சிகள் செய்யாதவனாக இருப்பான் என்று பெரியவர்கள் கூறுவார்கள். எனவே உங்கள் குழந்தைகளின் தவறுகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். அவை உங்கள் குழந்தைகளை பண்படுத்த வந்தவை என்ற எண்ணத்துடன் அணுகுங்கள்.
அவர்களாகவே பேசும்வரை காத்திருங்கள்:
உங்கள் குழந்தைகள் ஏதாவது தவறு செய்தாலோ, அல்லது முக்கியமான போட்டிகளிலோ, தேர்வுகளிலோ தோல்வி அடைந்தாலோ, நீங்களாகச் சென்று முதலில் அவர்களிடம் பேசாதீர்கள். அவர்களாக வந்து பேசும்வரை காத்திருங்கள். அவர்களாக தங்கள் தவறுகளை உணர்ந்து வந்து உங்களிடம் பேசினால், அவர்கள் பேசி முடிக்கும்வரை காத்திருங்கள். தங்கள் மனதில் உள்ள வேதனையையும், ஆதங்கத்தையும் அவர்கள் முதலில் வெளிப்படுத்த வாய்ப்பு அளியுங்கள்.
மாறாக நீண்டநேரம் ஆகியும் குழந்தைகள் தாங்களாகவே பேசாமல் தலைகுனிந்து நின்றால் அவர்களின் அருகில் போய் தோளில் தட்டிக்கொடுங்கள். பின்னர் மெதுவாக அரவணைத்து அவர்களின் பிரச்சினை என்னவென்று விசாரியுங்கள். அவர்கள் விளக்கமாக கூறி முடிக்கும்வரை காத்திருங்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு நீங்கள் பேச ஆரம்பியுங்கள். அவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்துவிட்டால் அதைப்பற்றியே மீண்டும் பேசவேண்டாம். இதுபோன்று இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, இனியும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று விளக்குங்கள். இதேபோன்ற தவறுகளை சிறுவயதில் நீங்கள் செய்தபோது அதிலிருந்து மீண்டு வந்தது எப்படி என்பதை விளக்கி புரியவையுங்கள்.
தெரியாமல் செய்யும் தவறுகள்
குழந்தைகள் வேண்டுமென்றே ஒரு தவற்றைச் செய்தார்களா அல்லது தெரியாமல் அந்த தவற்றைச் செய்தார்களா என்பதைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உதாரணமாக சாப்பிடும்போது தங்கள் உடையில் உணவைச் சிந்தி கறையாக்குவது, சாப்பிடும்போது உணவைத் தரையில் சிந்துவது, வீட்டிலுள்ள விலையுயர்ந்த பொருட்களை தரையில் போட்டு உடைப்பது போன்றவை அவர்களுக்கு தெரியாமல் நடக்கும் தவறுகள் ஆகும். இதுபோன்ற தவறுகளை பெரிதுபடுத்தாமல் அவர்களுக்கு மெதுவாக சொல்லிப் புரியவையுங்கள்.
அதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வது எப்படி என்பதைப் பற்றி விளக்குக் கூறுங்கள். அதேநேரத்தில் தேர்வில் காப்பி அடிப்பது, வகுப்பில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் சிறுவர்களின் பொருட்களை திருடி வருவது என்பது போன்றவை அவர்களுக்கு தெரிந்தே செய்யும் தவறுகள் ஆகும். இதுபோன்ற சூழலில் இந்தத் தவறுகளால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த முயற்சி செய்யுங்கள்.
சாதாரண தவறுகளைத் தவிருங்கள்
நீங்கள் நினைத்தால் உங்கள் குழந்தைகள் செய்யும் சாதாரண தவறுகளைத் தவிர்க்க முடியும். உங்கள் குழந்தைகள் அடிக்கடி பொருட்களை உடைப்பவர்களாக இருந்தால், விலையுயர்ந்த பொருட்களை அவர்களுக்கு எட்டாத இடத்தில் வையுங்கள். உணவுகளை கீழே சிந்தாமல் எப்படிச் சாப்பிடுவது என்பதைச் சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளுக்குள் அடித்துக்கொள்வதை தவிர்க்க, அவர்களுக்கு ஒற்றுமையின் வலிமையைச் சொல்லிப் புரியவையுங்கள். நாம் கவனமாக இருந்தால் குழந்தைகள் தவறு செய்வதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கும்.
உண்மையைச் சொன்னால் பாராட்டுங்கள்
தாங்கள் ஒரு தவற்றைச் செய்துவிட்டதாக உங்கள் குழந்தை தானாகவே முன்வந்து கூறினால், உடனடியாக அவர்களை கண்டபடி திட்டிவிட வேண்டாம். அந்தத் தவறை மறைக்காமல் உண்மையைச் சொன்னதற்காக முதலில் அவர்களைப் பாராட்டுங்கள். அதன் பிறகு அந்தத் தவறுகளால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி கூறுங்கள். உதாரணமாக, உங்கள் மகன்,தன் சகோதரரை அடித்திருந்தால், அந்த அடியால் அவனது சகோதரன் எந்த அளவுக்கு காயம்பட்டிருப்பான் என்பதைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். சகோதரர்களுக்குள் ஒற்றுமையாக இருப்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அறிவுறுத்துங்கள்.
தவறுகளை அவர்களாகவே ஒப்புக்கொள்ளும்போது, நாம் அவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்தால்தான், பின்னர் அதுபோன்ற தவறுகளை செய்யும் பட்சத்தில் அவர்கள் பகிரங்கமாக வந்து உண்மையைக் கூறுவர்கள். அதற்கு மாறாக, உண்மையைச் சொல்லியும் நாம் அவர்களை கடுமையாக தண்டித்தால், பிறகு தங்களின் தவறுகளை அவர்கள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இது வேறொரு பெரிய தவறுக்கு வழிவகுத்துவிடும்.
தவறுகளுக்கான ஆணிவேரை கண்டுபிடியுங்கள்
உங்கள் குழந்தைகள் செய்யும் தவறுக்கான அடிப்படைக் காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயலுங்கள். உதாரணமாக உங்கள் குழந்தை தனக்கு பள்ளியில் கொடுத்த தேர்வு விடைத்தாளை உங்களிடம் காட்டாமல் மறைத்தால், அந்த குழந்தைக்கு விடைத்தாளுடன் உங்களை எதிர்கொள்ள பயமாக இருக்கிறது என்று அர்த்தம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதற்காக உங்கள் குழந்தையை நீங்கள் கடுமையாக கடிந்துகொண்டோ, அல்லது அடித்தோ கூட இருக்கலாம். அந்த பயத்தால் உங்கள் குழந்தை தேர்வு விடைத்தாள் கிடைத்ததை வீட்டில் சொல்லாமல் இருக்கலாம்.
அதேபோல் உங்கள் குழந்தை தங்கள் தம்பியையோ, தங்கையையோ கடுமையாக தாக்கியிருந்தால், தன்னைவிட பெற்றோர்கள் அந்தக் குழந்தை மீது அதிக பாசம் வைக்கிறார்களோ என்ற சந்தேகம்கூட காரணமாக இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்களின் தவறுகளுக்கு காரணமான ஆணிவேரை அகற்ற முயலுங்கள். குறைந்த மதிப்பெண் வாங்குவதற்காக குழந்தைகளைத் திட்டாமல், அவர்கள் மேலும் அதிக மதிப்பெண் வாங்க உங்களால் எந்த அளவுக்கு உதவ முடியுமோ அதைச் செய்யுங்கள். வீட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஒரே மாதிரித்தான் நடத்துகிறோம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
தவறு செய்யாத குழந்தைகள் உலகில் நிச்சயம் இருக்க மாட்டார்கள். நம்மால் முடிந்தவரை நம் குழந்தைகளின் தவறுகளைத் திருத்தி, அவற்றைக் குறைப்போம்.
No comments:
Post a Comment