ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத காலம் என்றால் அது அவர்களின் பள்ளிக் காலமாகத்தான் இருக்கும். “நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததே பள்ளிக் காலத்தில்தான். எந்தக் கவலையும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிந்த அந்த நாட்களை மறக்கவே முடியாது” என்று பலரும் நெஞ்சம் கனக்க பெருமூச்சு விட்டபடி சொல்வதை கேட்டிருப்போம்.
ஆனால் இதெல்லாம் பள்ளிக்காலத்தை முடித்தவர்களின் மலரும் நினைவுகள். அதேநேரம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் கேட்டால், தங்களைப் போல் கஷ்டப்படும் ஜீவன்களே இல்லை என்று புலம்புவார்கள். மழை பெய்யாதா, பள்ளிக்கு விடுமுறை கிடைக்காதா என்று ஏங்காத குழந்தைகளே இல்லை. அந்த அளவுக்கு பள்ளிகளும் பாடங்களும் பல குழந்தைகளுக்கு மன உளைச்சலையும், அழுத்தத்தையும் தருகின்றன. இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.
காலை உணவும் மனநிலையும்
உங்கள் குழந்தைகள் காலை உணவை எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதை கவனியுங்கள். அவர்கள் ஆற அமர, சிரித்துப் பேசி பெற்றோருடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள் என்றால் நல்ல மனநிலையில் ரிலாக்ஸாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதே நேரத்தில் வீட்டில் சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் பள்ளி வேனுக்காக காத்திருக்கும் நேரத்திலோ, வேனுக்குள்ளோ சாப்பிடுகிறார்கள் என்றால் அவர்கள் பரபரப்பான வாழ்க்கையால் மன அழுத்தத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
எல்லாவற்றையும் திணிக்காதீர்கள்:
பெரும்பாலும் குழந்தைகள் இந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள்தான். தங்கள் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்காக குழந்தைகளுக்கு சுதாரித்துக் கொள்ளக்கூட நேரம் ஒதுக்காமல் அவர்களை பாட்டு, ஓவியம், கராத்தே என்று பல்வேறு வகுப்புகளில் சேர்த்துவிடுகிறார்கள். இதனால் மூச்சு விடக்கூட நேரமின்றி பம்பரமாக சுற்றும் குழந்தைகள், எதிலும் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியாத நிலை ஏற்படுகிறது. அதே நேரத்தில் தங்கள் குழந்தைகள் படிப்பிலும் சுட்டியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள் அதற்காகவும் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனாலேயே குழந்தைகள் ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளாகும் சூழல் ஏற்படுகிறது. இது அவர்களின் படிப்பை வெகுவாக பாதிப்பதுடன், கலகலப்பையும் காணாமல் செய்து விடுகிறது.
இதுபோன்ற சூழல் உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பள்ளியைத் தவிர பிற வகுப்புகளுக்கு, உங்கள் குழந்தைகளுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அனுப்புங்கள். முடிந்தவரை உங்களின் அனைத்து விருப்பங்களையும் குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்களின் விருப்பப்படி வாழ அனுமதியுங்கள். இதுவே குழந்தைகளின் மன அழுத்தத்தை பாதி குறைக்கும். பள்ளிகளில் அவர்கள் உற்சாகமாக இருக்க உதவும்.
பிரச்சினையை கண்டுபிடியுங்கள்
பள்ளியில் இருந்து உங்கள் குழந்தை கவலையான முகத்துடன் வந்தால், அதற்கு என்ன காரணம் என்று அவர்களிடம் கேளுங்கள். பின்னர் அவர்களின் பிரச்சினையை தீர்க்க என்ன வழி என்று யோசியுங்கள். பள்ளியில் நண்பர்களுக்குள் பிரச்சினை என்றால் அதை தீர்ப்பதற்கான வழிகளை சொல்லிக் கொடுங்கள். முடிந்தால் பள்ளிக்கு ஒருமுறை சென்று மற்ற குழந்தைகளை அழைத்துப் பேசி அவர்களுக்குள் சுமுகமான உறவு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். படிப்பில் ஏதாவது பிரச்சினை என்றால், அவர்களுக்கு பாடத்தை தெளிவாக விளக்கி புரியவையுங்கள். உங்களால் முடியாவிட்டால் நன்றாகப் படித்தவர்களின் உதவியுடன் அந்த சந்தேகத்தை தீர்க்க உதவுங்கள்.
குழந்தைகள் தங்கள் பிரச்சினைகளை உங்களிடம் நேரடியாக சொல்லாவிட்டால், அவர்களின் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தியுங்கள். பெற்றோருக்கு அடுத்தபடியாக குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிடுபவர்கள் ஆசிரியர்கள்தான். பள்ளியில் அவர்களின் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் தெரிந்தவர்களும் அவர்களாகத்தான் இருப்பார்கள். எனவே அவர்களிடம் பேசி, உங்கள் குழந்தை சோர்வாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிய முயற்சி செய்யுங்கள். படிப்பில் பின்தங்கி இருந்தால்கூட சில குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்ல பிடிக்காது. எனவே உங்கள் குழந்தைக்கு படிப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா, எந்தெந்த பாடங்களில் அவர்கள் பலவீனமாக் இருக்கிறார்கள் என்பதை கண்டறியுங்கள். அந்த படங்களில் அவர்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.
நேர மேலாண்மையை கற்றுக்கொடுங்கள்
வீட்டுப் பாடமாக இருந்தாலும், தேர்வுக்கு படிப்பதாக இருந்தாலும் குறித்த நேரத்தில் அதைச் செய்து முடிப்பது எப்படி என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். சில குழந்தைகள் மாலையில் வீட்டுப் பாடங்களை செய்யாமல் சற்று அசட்டையாக இருந்துவிட்டு அடுத்த நாள் காலையில் அவசர அவசரமாக வீட்டுப் பாடத்தைச் செய்து பள்ளிக்கு ஓடுவார்கள். இதனால் காலை உணவைக்கூட அவர்களால் சரிவர சாப்பிட முடியாது. மேலும் அவசர அவசரமாக வீட்டுப் பாடங்களை எழுதும்போது அதில் தவறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆசிரியர்களிடம் திட்டு வாங்கும் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
இதைத் தவிர்க்க, மாலை நேரங்களிலேயே வீட்டுப் பாடங்களை எழுதவேண்டியதன் அவசியத்தை குழந்தைகளுக்கு விளக்குங்கள். அதேபோல் தேர்வுக்கு கடைசி நேரத்தில் அவசர அவசரமாக பதற்றத்துடன் படிப்பதைவிட, முன்னதாகவே திட்டமிட்டு ரிலாக்ஸான முறையில் படிக்க கற்றுக் கொடுங்கள். முடிந்தால் திட்டமிட்டு படிப்பதற்கான அட்டவணையை அவர்களுக்கு போட்டுக் கொடுங்கள். இதனால் படிப்பு சம்பந்தமாகவும், பள்ளி சம்பந்தமாகவும் ஏற்படும் மனச் சோர்வில் இருந்து குழந்தைகளைக் காக்கலாம்.
மற்ற பெற்றோருடன் தொடர்பில் இருங்கள்
ஆசிரியர்களைப் போலவே உங்கள் குழந்தைகள் படிக்கும் வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோரிடமும் அடிக்கடி பேசுங்கள். உங்கள் குழந்தைகளுடன் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு செல்லுங்கள். அவர்களுடன் உறவை வளர்ப்பதால், உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாத நாட்களில் எடுக்கப்பட்ட பாடங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம். இப்போதெல்லாம் எதெதற்கோ வாட்ஸ்அப் குழுக்களை ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் உங்கள் குழந்தைகளின் வகுப்புத் தோழர்களின் பெற்றோருடன் சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்குங்கள். இதன்மூலம் பள்ளியிலும், குழந்தைகள் மத்தியிலும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நம்மால் தெரிந்துகொள்ள முடியும். குழந்தைகளையும் தீவிரமாக கண்காணிக்க முடியும்.
No comments:
Post a Comment