Powered By Blogger

Friday, November 2, 2018

நல்ல மதிப்பெண் வாங்க குழந்தைகளுக்கு உதவுவது எப்படி?




பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நெருங்கி விட்டது. இச்சமயத்தில் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளைப் படிக்கவைக்க ஒரு பெரும் போரே நடக்கும். குறிப்பாக மற்ற நாட்களில் எல்லாம் குழந்தைகள் படிக்கிறார்களா என்பதைக்கூட சரியாக கவனிக்காத பெற்றோர்கள் இந்த தேர்வு நேரத்தில் தாங்களும் பதற்றமாகி குழந்தைகளையும் பதற்றமடையச் செய்யும் நிலையைக் காணலாம். இந்த நிலை உங்கள் வீட்டில் தொடராதிருக்க, குழந்தைகளை படிக்கவைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்:
ஆசிரியர்களிடம் பேசுங்கள்:
உங்கள் குழந்தைகளின் பள்ளிக்கு மாதம் ஒருமுறையாவது சென்று அவர்களின் ஆசிரியர்களைச் சந்தியுங்கள். வெளியுலகில் உங்கள் குழந்தையைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள்  ஆசிரியர்கள்தான் என்பதால், அவர்களிடம் அடிக்கடி ஆலோசனை நடத்துவது நல்லது. குழந்தைகளின் படிப்பு தொடர்பாக எந்த சூழ்நிலையிலும் அவர்கள் உங்களை அணுக தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.
ஒருசில பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டி இருக்குமே என்ற தயக்கத்தில் அவர்களைச் சந்திப்பதை தவிர்ப்பர்கள். அது தவறு. உங்களின் தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் விட  குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமானது. ஆகவே உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்த யாரையாவது வைத்து அவர்களுடன் பேசுங்கள். வகுப்பில் உங்கள் குழந்தையின் செயல்பாடு எப்படி உள்ளது, அவர்களின் திறனை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகள் படிக்கும்போது பக்கத்தில் இருங்கள்
 தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். என்னதான் தலைபோகும் வேலை இருந்தாலும் அந்த நேரத்தில் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துங்கள். மிக முக்கியமாக குழந்தைகள் படிக்கும்போது பெற்றோரில் யாராவது ஒருவர் அருகில் இருக்க வேண்டும். முடிந்தால் குழந்தைகளுக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோரும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருப்பது நல்லது. இதனால், பெற்றோரும் தங்களுடன் சேர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படும். அவர்களும் உற்சாகமாக படிப்பார்கள்.
ஒருசில பெற்றோர்கள் குழந்தைகள் படிக்கும்போது தாங்களும் அருகில் இருக்கிறோம் என்ற பெயரில் அருகில் அமர்ந்து செல்போனையோ, லாப்டாப்பையோ  நோண்டிக்கொண்டு இருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயம். உங்கள் குழந்தைகளின் கவனத்தை இது திசைதிருப்பக்கூடும். எனவே குழந்தைகள் படிக்கும்போது,  செல்போன் லாப்டாப் போன்ற விஷயங்களை ஒதுக்கிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது நல்லது. பாடத்தில் அவர்கள் சந்தேகங்களைக் கேட்டால், ‘இதுகூட உனக்கு தெரியாதா’ என்று எரிந்து விழாமல் பொறுமையாக விளக்குங்கள்.
நல்ல சூழல் முக்கியம்
குழந்தைகள் படிக்கும்போது அதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள். ஒருசில வீடுகளில் குழந்தைகள் படிக்கும்போது, பெரியவர்கள் சத்தமாக டிவியை  வைப்பார்கள். அல்லது அந்த நேரத்தில் அக்கம் பக்கத்தினருடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.  இப்படிச் செய்வதால்  அவர்களின் கவனம் சிதற வாய்ப்புண்டு. எனவே குழந்தைகள் படிக்கும்போது டிவி, ரேடியோ,  டேப் ரிக்கர்டர் போன்றவற்றை சத்தமாக வைக்காதீர்கள். மேலும் படிக்கும் நேரத்தை ஒரு தண்டனைக்குரிய நேரமாக அல்லாமல் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ளும் இனிய அனுபவமாக மாற்றுங்கள்.
நூலகங்களுக்கு செல்வதை ஊக்கப்படுத்துங்கள்
ஒவ்வொரு முறையும் தேர்வில் உங்கள் குழந்தை சிறப்பாக மதிப்பெண்களை எடுக்கும்போது, அவர்களைப் பாராட்டுங்கள். அதற்காக சிறு சிறு பரிசுகளை அளியுங்கள். இது உங்கள் குழந்தைகளை மேலும் ஊக்கப்படுத்தி, அடுத்த தேர்வில் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். மாறாக அவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுக்கும் நேரத்தில் நாம் அவர்களை ஊக்குவிக்காவிட்டால் அது அவர்களை சோர்வடையச் செய்யும். பாடப் புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். அவர்கள் திரைப்படங்களுக்கோ, பூங்காக்களுக்கோ செல்வதை விட நூலகங்களுக்கு செல்வதை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களின் பொது அறிவை வளர்க்க உதவும்.

வீட்டுப் பாடம் முக்கியம்
உங்கள் குழந்தைகள் தினமும்  வீட்டுப் பாடத்தை தொடர்ந்து ஒழுங்காக செய்கிறார்களா என்பதைக் கண்காணியுங்கள். குழந்தைகள் அதை  ஒழுங்காக செய்து முடித்தாலே அவர்களின் படிப்புச் சுமையில் பாதி குறையும். அதை அவர்கள் ஒழுங்காக செய்து முடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காகவே தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி வையுங்கள். வீட்டுப் பாடத்தை குழந்தைகள் ஒழுங்காக செய்து முடிக்க அவர்களுக்கு உதவுங்கள். அதே நேரத்தில் அவர்களின் பளுவைக் குறைப்பதாக கருதி நீங்களே அவர்களுக்காக வீட்டுப் பாடத்தை எழுதிக் கொடுக்காதீர்கள். அதை அவர்களே செய்தால்தான், அதுபற்றிய முழுமையான புரிதல் அவர்களுக்கு ஏற்படும்.
லட்சியத்தை உருவாக்குங்கள்
குழந்தைகளிடம் அடிக்கடி மனம்விட்டு பேசுங்கள். நன்றாகப் படித்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். குடும்பத்தின் தற்போதைய சூழல் என்ன? எத்தனை கடுமையான சூழலில் அவர்களை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறோம் என்பதை எடுத்துக் கூறுங்கள். வாழ்க்கையில் அவர்களுக்கென்று ஒரு லட்சியத்தை சிறிய வயதில் இருந்தே உருவாக்குங்கள். அந்த லட்சியத்தை நோக்கி அவர்கள் முன்னேற தூண்டுங்கள். குறிப்பிட்ட நாளில் என்னென்ன பாடங்களை படிக்கவேண்டும் என்ற அட்டவணையை போட்டு அவர்களைப் படிக்க வையுங்கள். குறிப்பாக தேர்வுக் காலத்தில் அவர்கள் மனதைப் பாதிக்கும் எந்த விஷயமும் வீட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மதிப்பெண்கள் குறைந்தால்...
இவை அனைத்தையும் தாண்டி தேர்வில்  உங்கள் குழந்தையின்  மதிப்பெண்கள் குறைந்தாலோ அல்லது அவர்கள் தோல்வி அடைந்தாலோ அவர்களைத் திட்டாதீர்கள். இதுபோன்ற நேரத்தில்தான் உங்களின் அரவணைப்பு  அவர்களுக்கு அதிகம் தேவை. இதுபோன்ற சமயங்களில்   அவர்களால் ஏன் அதிக மதிப்பெண்களைப் பெற முடியவில்லை என்ற கரணத்தைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் உண்மையாக இருந்தால் அதைத் தீர்க்க முயலுங்கள். பாடத்தில் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள். உங்களால் அதற்கு முடியாவிட்டால், உங்களுக்கு தெரிந்த நன்கு படித்தவர்களிடம் அவர்களை அழைத்துப் போய் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள உதவுங்கள்.  எல்லாவற்றுக்கும் மேலாக, “உன் தோல்விகளின்போதும் நான் உன்னுடனேயே இருக்கிறேன்” என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். இப்படிச் செய்தல் அடுத்த முறை நிச்சயம் உங்கள் குழந்தை தேர்வில் நன்றாகச் செயல்படும்.

No comments:

Post a Comment