Powered By Blogger

Friday, November 2, 2018

தந்தைக்காக வாங்கிய தங்கம்




ஆசிய விளையாட்டுப் போட்டி. குண்டு எறியும் பிரிவில்  ஒவ்வொரு வீரரும்  ஆக்ரோஷமாக குண்டை எறிந்துகொண்டிருக்க, இந்திய வீரரான தஜிந்தர் பால் சிங் டூரின்  மனதை மட்டும் அவரது அப்பா ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். எலும்பு புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அவரது அப்பா கரம் சிங் டூர்.  இந்தியாவை  விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், தஜிந்தரின்  மனம் மட்டும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பாவையே நினைத்துக் கொண்டிருந்தது. இதனாலோ என்னவோ முதல் 4 முறை அவரால் சரியாக குண்டை எறிய முடியவில்லை.

சோகத்துடன் பார்வையாளர்கள் வரிசையைப் பார்க்கிறார் தஜிந்தர். அங்கிருந்த அவரது பயிற்சியாளர் தில்லான், கோபம் கொப்பளிக்க தஜிந்தரை பார்க்கிறார்.   “இதற்காக நீ வெட்கப்பட்டு சாகவேண்டும்” என்று அவர் ஆவேசத்தில் கத்த, தஜிந்தருக்குள் வெறி ஏற்படுகிறது. அந்த வெறியுடன் அவர் குண்டை எடுத்து வீச, அது 20.75 மீட்டர் தூரத்துக்கு பறந்துபோய் விழுந்து அவருக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருகிறது.

பதக்கம் கழுத்தில் விழுந்ததும் “இது என் தந்தைக்காக வாங்கிய தங்கம். விரைவாக இந்தியாவுக்கு சென்று  இந்த பதக்கத்தை தந்தையிடம் காட்ட வேண்டும். அவர் வாழும் காலத்துக்குள் மேலும் பல பதக்கங்களை வென்று அவரை மகிழ்விக்க  வேண்டும்” என்று கூறியுள்ளார் தஜிந்தர் பால் சிங் டூர். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. தந்தை மீது அவர் கொண்டிருந்த பாசம் அப்படி. தஜிந்தர் ஒரு விளையட்டு வீரராக உருவெடுக்க, அவரது தந்தை செய்த தியாகங்களும் அதிகம்.  


 1980-களில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோசா பாண்டோ கிராமத்தில் கரம் சிங் டூர் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரர். ‘ஹீரோ’ என்று ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர், கயிறு இழுக்கும் போட்டியில் மாநில அளவில் பல பதக்கங்களை வென்றவர்.   குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் விளையாட்டுத் துறையில்   ஈடுபட முடியவில்லை. குடும்பத்தை காப்பாற்ற விவசாயத்தில் ஈடுபட்ட அவர்,  தன்னால் சாதிக்க முடியாததை தனது மகன் தஜிந்தர் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார்.


தஜிந்தரும்  சிறு வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அவர் ஆர்வம் செலுத்திய விளையாட்டு கிரிக்கெட்டாக இருந்தது. சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்கின் தீவிர ரசிகராக இருந்த தஜிந்தர், அவர்கள் வழியில் தானும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இது கரம் சிங்குக்கு பிடிக்கவில்லை. கிரிக்கெட் போன்ற குழு போட்டியை விட தனிப்பட்ட விளையாட்டுகளில்  தனது மகன் சாதிக்க  வேண்டும் என்பது அவரது விருப்பம். இதை தஜிந்தரிடம் சொல்ல, அவரும் உள்ளூரில் மிகப்பெரிய குண்டு   எறியும் வீரரான தனது மாமாவைப் போல குண்டு எறியும் போட்டியில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்.


இதைத்தொடர்ந்து   தஜிந்தரை,   மொஹிந்தர் சிங் தில்லான் என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார் கரம் சிங். ஒருபுறம் தஜிந்தர் குண்டு எறியும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட, மறுபுறம் அவரது பயிற்சிக்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்குமான செலவுகள் எகிறத் தொடங்கின. நாளொன்றுக்கு குறைந்தது 10 முட்டைகளுடன் சிறுவயதில் தொடங்கிய அவரது டயட், நாளாக ஆக பெருகிக்கொண்டே வந்துள்ளது. ஆனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கரம் சிங் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மகனின் வளர்ச்சிக்காக பணத்தை தண்ணீராய் செலவழித்துள்ளார்.
  

  தேசிய அளவிலான போட்டிகளில் தஜிந்தர் பங்கேற்கத் தொடங்க, அவருக்கான செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கியது, “குண்டு எறியும் போட்டியில் பங்கேற்க வாகாக காலில் அணியும் ஷூக்களின் விலை மட்டுமே ரூ.10 ஆயிரம். அதுவும் 3 மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது. மேலும் சத்தான உணவுகள், பயிற்சி செலவுகள் என்று மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.  என் அப்பா அத்தனை செலவுகளையும் சமாளித்தார். ஆனால் 2012-ம் அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட எனக்கு எதிர்காலமே இருண்டதுபோல் ஆனது. ஒருபுறம் அவரது மருத்துவச் செலவுகள், மறுபுறம் எனது பயிற்சிக்கான செலவு என்று மிகவும் திணறிவிட்டோம். ஆனால் அந்த கட்டத்திலும் விவசாயத்தைக் கவனித்து அப்பா என் செலவுகளை சமாளித்தார். இந்த இக்கட்டான நேரத்தில்தான் இந்திய கடற்படையில் என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள். குண்டு எறியும் போட்டியில் கவனம் செலுத்த எனக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தார்கள்” என்கிறார் தஜிந்தர்.

இந்திய கடற்படையில் இருந்துகொண்டே குண்டு எறியும் போட்டிகளில் கலந்துகொண்ட தஜிந்தர், இந்திய அளவில் கூடுதல் கவனம் பெறத் தொடங்கியது கடந்த 2017-ம் ஆண்டில்தான். 2017 ஜூன் மாதம் நடந்த தேசிய சீனியர் தடகளப் போட்டியில் 20.40 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து  அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தார் தஜிந்தர். இதைத்தொடர்ந்து  ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தஜிந்தரால், இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இடைக்காலத்தில்  தோல் புற்றுநோயில் இருந்து குணமான   தஜிந்தரின் அப்பாவை எலும்பு புற்றுநோய் தாக்கியது. இது மூளைக்கும் பரவிவிட அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பாவின் உடல்நிலையை நினைத்து மனம் சோர்ந்திருந்த தஜிந்தரை அவரது பயிற்சியாளர் தில்லான்தான் தேற்றி ஆசிய போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கே செல்லவேண்டாம் என்று நினைத்திருந்த  தஜிந்தரை அழைத்துப் பேசிய தில்லான், “உனக்காக இந்திய அரசும் கடற்படையும் லட்சக்கணக்கில் செலவு செய்கிறது. அதுமட்டுமின்றி உன்மீது உன் அப்பா வைத்துள்ள நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் அதற்காக நீ இந்த ஆசிய போட்டியில் பங்கேற்றே ஆகவேண்டும்” என்று கூறி இந்தோனேஷியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு அவர் தயங்கிய நிலையில் பார்வையாளர் பகுதியில் இருந்து அவரை உசுப்பேற்றி விட்டு தங்கப் பதக்கம் பெற வைத்துள்ளார்.

ஒரு புறம் குருநாதர், மறுபுறம் அப்பா என்று இரட்டைக் குதிரைகளின் மீது சவாரி செய்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் தஜிந்தர்.

No comments:

Post a Comment