Powered By Blogger

Friday, November 2, 2018

தலை நிமிருமா தமிழ் தலைவாஸ்



விளையாட்டுப் போட்டிகளைப்  பொறுத்தவரை தமிழகத்துக்கு இது பொற்காலம்.  கடந்த ஆண்டு நடந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னையின் எஃப்சி கோப்பையை வென்றது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் தொடரில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை முத்தமிட்டது. அந்த வரிசையில் இப்போது புரோ கபடி லீக் போட்டிகள் அக்டோபர் 7-ம் தேதி  தொடங்குகிறது. கால்பந்து, கிரிக்கெட் வரிசையில் இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் தலைவாஸ் அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு விளையாட்டு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
புரோ கபடி லீக் போட்டிகளைப் பொறுத்தவரை முதல் 4 சீசன்களிலும் தமிழகத்தைச் சார்ந்த அணிகள் எதுவும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த 5-வது சீசனில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி உருவாக்கப்பட்டு களம் இறக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனான அஜய் தாக்குரின் தலைமையில் களம் இறங்கிய தமிழ் தலைவாஸ் அணி, இத்தொடரில்   பி பிரிவில் கடைசி இடத்தையே பிடித்தது. போதிய அனுபவமின்மையால் இந்த தொடரில் தோற்றதாக கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முற்றிலும் புதிய அணியுடனும் புதிய பயிற்சியாளருடனும் களம் இறங்குகிறது.  
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி எப்படியோ, அப்படித்தான் தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டன் அஜய் தாக்குர்.  இந்திய கபடி அணியின் கேப்டனான அஜய் தாக்குர், 2016-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கபடி போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரானுக்கு எதிராக தனிநபராக 12 புள்ளிகளைப் பெற்று இந்தியாவுக்கு கோப்பை வாங்கித் தந்தவர். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 76.23 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்ட அஜய் தாக்குரை இந்த ஆண்டு மீண்டும் தக்கவைத்துள்ளது தமிழ் தலைவாஸ். புரோ கபடி லீக்கில் ரெய்ட் மூலம் இதுவரை  213 புள்ளிகளைப் பெற்றுள்ள அஜய் தாக்குர், கடந்த ஆண்டு 3 ஆட்டங்களில் தன் கடைசி ரெய்ட் மூலம் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 அவருக்கு அடுத்தபடியாக அணியின் முக்கிய நட்சத்திரமாக அமித் ஹூடா விளங்குகிறார். ரூ.69.30 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ள அவர் தற்காப்புக்கு பெயர் பெற்றவர். அஜய் தாக்குர், எதிரணி முகாமுக்கு சென்று விரட்டுவதில் வல்லவர் என்றால் அமித் ஹூடா, தங்கள் எல்லைக்குள் வரும் வீரர்களை மடக்கிச் சுருட்டுவதில் வல்லவர்.  புரோ கபடி லீக்கில் இதுவரை 61 டாக்கிள் புள்ளிகளைப் பெற்றுள்ள இவர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இருவரின் இணைக்கு துணையாக     மஞ்சித் சில்லார், ஜஸ்வீர் சிங், சுகேஷ் ஹெக்டே, அருண் போன்ற அனுபவமும் துடிப்பும் மிக்க வீரர்களும் இருப்பதால் கபடியிலும் கோப்பையை வெல்ல இந்த தமிழக அணிக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்புகிறார்கள்.
கடந்த முறை கடைசி இடத்தைப் பிடித்த அவமானத்தைத் துடைக்க, இம்முறை கோப்பையை வென்றாக வேண்டும் என்ற வெறியுடன் கடந்த 2 வாரங்களாக சென்னையில் தீவிர பயிற்சியில் இந்த அணியின் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு ஆட்ட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து அவர்களின் ஆட்டத் திறனை கூர்தீட்டிக்கொண்டு இருக்கிறார் அணியின் பயிற்சியாளர் எடச்சேரி பாஸ்கரன். புரோ கபடி லீக் போட்டியின் 2-வது சீசனில் ’யு மும்பா’ அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணிக்கு கோப்பையை பெற்றுத்தந்த இவர், இப்போது சென்னை அணிக்காக வரிந்து கட்டிக்கொண்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
இந்த ஆண்டு புரோ கபடி லீகுக்காக தமிழ் தலைவாஸ் அணி எப்படி தயாராகி வருகிறது? என்று கேட்டால் உற்சாகமாக கட்டை விரலை உயர்த்துகிறார் பாஸ்கரன். “கடந்த சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் தமிழ் தலைவாஸ் அணி கடைசி வரை போராடி தோற்றது. போதிய அனுபவமின்மையால் இந்த தொடரில் முக்கியமான கட்டங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்ற புரிதல் வீரர்களுக்கு இல்லாமல் இருந்தது.   தமிழ் தலைவாஸ் அணியின் தோல்விகளுக்கு இது முக்கிய காரணமாக இருந்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மஞ்சித் சில்லார், ஜஸ்வீர் சிங், சுகேஷ் ஹெக்டே போன்ற அனுபவம் மிக்க வீரர்களை  அணியில் சேர்த்துள்ளோம். அதே நேரத்தில் மூத்த வீரர்களுக்கு இணையாக இளம் வீரர்களும் அணியில் இருப்பதால் அனுபவமும் வேகமும் இணைந்த அணியாக தமிழ் தலைவாஸ் இருக்கும்” என்கிறார் பாஸ்கரன்.
 கடந்த ஆண்டு மற்ற நகரங்களில் போட்டிகள் நடந்து முடிந்த பிறகு கடைசியில்தான் சென்னையில் போட்டிகள் நடைபெற்றன. ஆனால் இந்த முறை முதல் சுற்று போட்டிகளே தங்கள் சொந்த மண்ணான சென்னையில் நடப்பது தமிழ் தலைவாஸ் வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்றும் அவர் நம்புகிறார்.
பெயரில் ‘தமிழ் தலைவாஸ் இருந்தாலும் தமிழகத்தைச் சேர்ந்த மிகச் 5  வீரர்கள் மட்டும்தான் இந்த அணியில் இருக்கிறார்கள். கடந்த முறை அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருந்த தமிழகத்தின் பிரபஞ்சன், இம்முறை தமிழ் தலைவாஸ் அணியில் இல்லாதது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதுபற்றி பாஸ்கரனிடம் கேட்டபோது, “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் குறைந்த அளவு தமிழர்களே இருந்தபோதிலும் அதை தமிழகத்தின் அணியாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா? மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னையின் எஃப்சி ஆகிய அணிகளில் இருந்த தமிழக வீரர்களை விட இதில் அதிக வீரர்கள் உள்ளனர். அதிலும் அருண் போன்ற தமிழகத்தின் நட்சத்திர வீரர்கள் அணிக்கும், தமிழகத்துக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பார்கள்” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.
அவரது நம்பிக்கை வெல்லட்டும். தமிழகத்துக்கு மேலும் ஒரு கோப்பையை ஜெயிக்கட்டும்.
 பாக்ஸ் மேட்டர்
மல்லுக்கட்டும் அணிகள்
புரோ கபடி லீக் போட்டியில் மொத்தம் 12 அனிகள் இம்முறை மோதுகின்றன. இதில் ஏ பிரிவில் டபாங் டெல்லி, குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ், புனேரி பல்டான், யு மும்பா ஆகிய அணிகள் உள்ளன. பி ப்ரிவில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுகு டைட்டன்ஸ், யுபி யோதாஸ் அகிய அணிகள் உள்ளன.

No comments:

Post a Comment