கிரிக்கெட் மைதானத்தில் தனக்கே உரிய ஸ்டைலில் டென் தவுசண்ட்வாலா வெடித்து தீபாவளிப் பண்டிகையை வரவேற்றிருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்து அவர் படைத்துள்ள சாதனை ஒவ்வொரு இந்தியரையும் கர்வம் கொள்ள வைக்கிறது.
ஒருநாள் சர்வதேச போட்டிகளில் சச்சின், கங்குலி, திராவிட், தோனி ஆகிய நால்வரும் ஏற்கெனவே 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ள போதிலும் கோலியின் சாதனை ரசிகர்களுக்கு அதிகம் ருசிக்கக் காரணம் அவரது வேகம். 213 போட்டிகளில் வெறும் 205 இன்னிங்ஸ்கள் மட்டுமே பேட்டிங் செய்து இந்த சாதனையை எட்டியுள்ளார் கோலி. கிரிக்கெட் கடவுள் என்று எல்லோராலும் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரே 259 இன்னிங்ஸ்களில்தான் (266 போட்டிகளில்) 10 ஆயிரம் ரன்களை எட்டினார். இந்நிலையில் சச்சினைவிட 54 இன்னிங்ஸ்கள் குறைவாக ஆடி 10 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார் விராட் கோலி. இதில் 9 ஆயிரம் ரன்களில் இருந்து 10 ஆயிரம் ரன்களை எட்ட அவருக்கு வெறும் 11 இன்னிங்ஸ்கள் மட்டுமே தேவைப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அளவுக்கு வேகமாக கோலி ரன்களைக் குவிப்பதற்கு முதல் காரணம் அவரது மன உறுதி. இதற்கு உதாரணமாக 2006-ம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்,.
2006-ம் ஆண்டில் விராட் கோலி 18 வயதேயான இளம் வீரர். டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை போட்டிகளில் அப்போது அவர் ஆடிவந்தார். இந்த நேரத்தில் கர்நாடகாவுக்கும் டெல்லிக்கும் இடையிலான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லியின் பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்துகொண்டிருந்தது. முதலில் ஆடிய கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் 446 ரன்களைக் குவித்தது. அடுத்து ஆடிய டெல்லி அணியோ அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் அந்த அணி 105 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது. விராட் கோலி 40 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். அடுத்த நாள் ஆட்டத்தில் பாலோ ஆன் ஆவதில் இருந்து தப்பிக்க கோலியையே அணி நம்பியிருந்தது. அப்போதுதான் இடி இறங்கியதுபோல் ஒரு செய்தி வந்தது. விராட் கோலியின் அப்பா பிரேம் கோலி மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதுதான் அந்தச் செய்தி.
அப்பா இறந்ததால் அடுத்த நாள் விராட் கோலி ஆடமாட்டார், அதனால் தங்கள் அணி பாலோ ஆன் ஆகும் என்று டெல்லி அணியின் வீரர்கள் நினைத்திருந்தனர். ஆனால் தந்தைக்கு இணையாக கிரிக்கெட்டை நேசித்த விராட் கோலி, அந்தக் கட்டத்திலும் அணியையும் மன உறுதியையும் கைவிடவில்லை. உறவினர்கள் சம்மதத்துடன் அப்பாவின் உடலை வீட்டிலேயே கிடத்திவிட்டு அடுத்த நாள் மைதானத்துக்குள் நுழைந்தார். தனது கண்ணீரை அடக்கிக்கொண்டு அணிக்காக களம் புகுந்த அவர், 90 ரன்களைச் சேர்த்து டெல்லி அணி பாலோ ஆன் ஆவதில் இருந்து காப்பாற்றினார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 100 சதங்களை விளாசியபோது எல்லோரும் வாயைப் பிளந்தவர்கள், இந்தச் சாதனையை யாராலும் முறியடிக்கவே முடியது என்று அடித்துச் சொன்னார்கள். ஆனால் இப்போது சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து, கிரிக்கெட் உலகில் உச்சாணிக் கொம்பில் ஏறிக்கொண்டிருக்கிறார் விராட் கோலி. அவரது அசுர வேகத்தைக் கண்டு அசந்து நிற்கும் கிரிக்கெட் வல்லுநர்கள், சச்சினின் சாதனைகள் அனைத்தையும் கோலி ஒவ்வொன்றாய் முறியடிப்பார் என்று உறுதியாக நம்புகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பின்படியே கோலியும் சச்சினின் ஒவ்வொரு சாதனையாக முறியடித்து வருகிறார். உதாரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், தனது 50-வது சதத்தை 376-வது இன்னிங்ஸில் எட்டினார். ஆனால் விராட் கோலியோ அதை 348 போட்டிகளிலேயே எட்டியுள்ளார்.
29 வயதுக்குள் பல சாதனைகளை அவர் எட்டிப்பிடிக்க மற்றொரு காரணம் அவரது ஆக்ரோஷமான மனநிலை. அறிமுக வீரராக இருந்த காலகட்டங்களிலும் சரி, அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் இன்றைய காலகட்டத்திலும் சரி, தன் ஆக்ரோஷமான மனநிலையை எந்த காலகட்டத்திலும் விராட் கோலி மாற்றிக் கொண்டதில்லை.
பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் தடுப்பாட்டத்தில் ஆடினால், எதிரணி கேப்டனும், பந்துவீச்சாளர்களும் அவரது விக்கெட்டை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பார்கள். இதனால் ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த பேட்ஸ்மேன் தனது தடுப்பாட்டத்தில் இருந்து சற்று கவனம் சிதறினாலும் அவரது விக்கெட் பறிபோகும். ஆனால் கோலியைப் பொறுத்தவரை அவர் தடுப்பாட்டத்தை விட தாக்குதல் ஆட்டத்தையே தேர்ந்தெடுப்பதால், எதிரணி வீரர்கள் அவரது ரன் வேகத்தை சமாளிக்க தடுப்பாட்டத்துக்கு தள்ளப்படுவார்கள். இதைப் பயன்படுத்தி அதிக ரன்களைக் குவிப்பது கோலியின் ஸ்டைலாக உள்ளது.
இதுபற்றி ஒருமுறை செய்தியாளர்களிடம் கூறிய விராட் கோலி, “ஆக்ரோஷமான எனது ஸ்டைல்தான் கிரிக்கெட்டில் எனக்கு முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. அதைத்தான் எனது ரசிகர்களும் விரும்புகிறார்கள். அதனால் எனக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தபோதிலும் அந்த ஆட்ட முறையைக் கைவிட நான் தயாராக இல்லை” என்று சொல்லியுள்ளார்.
ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு அடுத்ததாக எதிரணி பந்துவீச்சாளர்களை துல்லியமாக கணிக்கும் கோலியின் ஆற்றலும் அவருக்கு வெற்றிகளைக் குவித்து வருகின்றன. ஒரு பந்துவீச்சாளரின் சில பந்துகளை எதிர்கொண்டாலே அவர் எப்படி பந்து வீசுவார் என்பதை கணிக்கும் ஆற்றல் கோலிக்கு உண்டு, தனது இந்த ஆற்றலால் உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சாளர்களைக்கூட துவைத்து எடுக்கிறார் விராட் கோலி.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போது 10 ஆயிரம் ரன்களைக் குவித்துள்ள கோலி, ஓய்வு பெறுவதற்குள் நிச்சயம் 20 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிச் செய்தால் ஒருநாள் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனை மகுடமும் அவரது சிரசில் ஏறும். கடந்த 11 போட்டிகளில் 1000 ரன்களுக்கு மேல் குவித்த கோலியால் இதைச் செய்ய முடியாதா என்ன?
No comments:
Post a Comment