Powered By Blogger

Friday, November 2, 2018

குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை - இந்த வார்த்தையைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. வாழும் காலம் முழுமைக்கும் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மனிதர்களின் முக்கிய கனவாகும். தாங்களே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தங்கள் ஆசைப்படி குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெற்றோர் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தூக்கம் முக்கியம்
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தூக்கம் மிகவும் முக்கியம்.  அடுத்த நாளுக்கு தேவையான ஆற்றலை இந்த தூக்கம்தான் குழந்தைகளுக்கு அளிக்கிறது. எனவே உங்கள் குழந்தைகள்  தினமும்  8 முதல்  10 மணிநேரம் வரை தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள் தினமும் கொஞ்சம் அதிகமாக 13 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  சில குழந்தைகள் இரவில் தூக்கம் வரவில்லை என்று கூறி இரவில் நெடுநேரம் விழித்திருக்கும். இதுபோன்ற குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தூக்கம் வர, அவர்களை  தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு அனுப்புங்கள்.
குழந்தைகள்  தூங்கச் செல்வதற்கு முன் வீட்டில் உள்ள டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை அணைத்து வையுங்கள். முடிந்தவரை குழந்தைகள் தூங்கச் செல்லும் நேரத்திலேயே பெற்றோரும் படுக்கை அறைக்கு சென்றுவிட வேண்டும். மாறாக குழந்தைகளை படுக்க அனுப்பிவிட்டு பெற்றோர்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்தால், அந்தச் சத்தமே குழந்தைகளின் தூக்கத்தை கெடுக்கும். எனவே முடிந்தவரை குழந்தைகள் தூங்கச் செல்லும்போதே பெற்றோரும் தூங்கச் செல்ல வேண்டும்.
உணவில் கவனம் செலுத்துங்கள்
துக்கத்துக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் குழந்தைகளின் உணவு. முடிந்தவரை சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு சில வீடுகளில் ஃபிரிட்ஜ் இருக்கிறது என்பதாலேயே ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளையும், பழங்களையும் வீட்டில் வாங்கி வைத்து விடுகிறார்கள். இது தவறு. முடிந்தவரை பிரஷ்ஷான காய்கறி பழங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு மேல் அவற்றை ஃபிரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு உணவைச் சாப்பிடுவதில் ஆர்வம் வரவேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு பிடித்த பொருட்களைச் சமைத்துக் கொடுக்கவேண்டும். சமைக்கும்போது அவர்களையும் உதவிக்கு வைத்துக்கொண்டால், அது அவர்களின் சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்கும். எனவே சமைப்பதில் குழந்தைகளின் பங்களிப்பும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இது ஃபாஸ்ட்புட் காலமாகி விட்டது. குழந்தைகளுக்கும் அந்த வகை உணவின் மீதுதான் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதைத் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில், ஹோட்டலில் அவற்றை வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே சமைத்துக் கொடுப்பது ஓரளவுக்காவது குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்கும்.   நொறுக்குத் தீனிகளை முடிந்தவரை குறையுங்கள்.
ரிலாக்ஸான நேரங்களில் குழந்தைகளுடன் பேசும்போது நல்ல உணவுகளைச்  சாப்பிடுவது, அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையில் உதவும் என்பதை எடுத்துக் கூறுங்கள். உணவு விஷயத்தைப் பொறுத்தவரை குழந்தைகளை மிரட்டிச் சாப்பிட வைப்பதை விட, அவர்களாக விரும்பிச் சாப்பிடும் நிலையை ஏற்படுத்துவதுதான்  நல்லது. முடிந்தவரை குழந்தைகளுக்கான உணவில் இனிப்புகளை குறையுங்கள்.

உணவைப் போலவே குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தண்ணீரும் மிக அவசியமாகும்.    4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நாளொன்றுக்கு குறைந்தது 4 கிளாஸ் தண்ணீரையாவது அருந்த வேண்டும். குழந்தைகளின் வயது ஏற ஏற அவர்கள் குடிக்க வேண்டிய நீரின் அளவைக் கூட்டுவது மிகவும் அவசியம்.
வீட்டை காற்றோட்டமாக வையுங்கள்
ஒரு சில பெற்றோர்கள் வீட்டுக்குள் பூச்சிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜன்னல்களையும், கதவுகளையும் எப்போதும் அடைத்து வைத்திருப்பர்கள். இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானது. அவர்கள் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்கவேண்டுமானால் வீட்டுக்குள் காற்றும், வெளிச்சமும் நன்றாக வந்துசெல்ல வழி இருக்கவேண்டும். அதற்கு வீட்டின் ஜன்னல்களையும், கதவுகளையும் முடிந்தவரை திறந்து வைத்திருக்க வேண்டும். அப்படியே உங்களுக்கு பூச்சிகள் உங்கள் வீட்டுக்குள் நுழையும் என்ற பயம் இருந்தால், ஜன்னலை மூடிவைப்பதற்கு பதில் அவற்றில் மெல்லிய வலைகளை அடித்து வைக்கலாம்.
உடற்பயிற்சி நல்லது.

மனிதனின் வேலைகளை இயந்திரங்கள் குறைத்துள்ள இன்றைய காலகட்டத்தில், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சிகள் மிகவும் அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளுக்கும் இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதில் அர்வத்தை ஏற்படுத்துங்கள். எத்தனை வேலைகள் இருந்தாலும் அதிகாலை நேரத்தில் எழுந்து நடைப்பயிற்சிக்கோ, ஜாக்கிங்குக்கோ சென்றால், அது உங்கள் உடலுக்கு நல்லது.   நீங்கள் அப்படிச் செய்யும்போது உங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றால் அவர்களின் எதிர்கால அரோக்கியத்துக்கு நல்லது. உடற்பயிற்சி செய்வதுடன் காற்றோட்டமான இடங்களில் ஆடுவது, நீச்சலடிப்பது போன்ற செயல்களைச் செய்யவும் உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களின் உடலை மட்டுமின்றி மனதையும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றுங்கள்
நமக்கு தெரிந்த யாராவது ஒருவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தால் அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறச் செல்வது நல்லதுதான். ஆனால் அந்த இடத்துக்கு உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது நல்லதல்ல. குழந்தைகளுக்கு நோய்கள் எளிதில் பரவும் என்பதால் நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிருங்கள். முடிந்தவரை நோயாளிகளிடம் இருந்து உங்கள் குழந்தைகளை தள்ளிவையுங்கள். இது அவர்களுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதே நேரத்தில் உங்கள் குழந்தைக்கே ஜுரம் போன்ற ஏதாவது நோய்கள் வந்தால், அது பரிபூரணமாக குடையும் வரை அவர்களை ஓய்வெடுக்க விடுங்கள்.   பாடம் போகிறது என்ற அவசரத்தில் நடுவிலேயே பள்ளிக்கு அனுப்பிவிடாதீர்கள் அது அவர்களின் உடல்நிலையை மேலும் பாதிக்கும். கூடவே அருகில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் அந்த நோய் பரவ வாய்ப்பு ஏற்படுத்தி விடும்.




No comments:

Post a Comment