Powered By Blogger

Friday, November 2, 2018

பஜ்ரங் கொடுத்த குருதட்சிணை


  
சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு கவுரவம் சேர்க்கும் விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். மற்ற பிரிவுகள் இந்தியாவைக் கைவிட்டாலும் மல்யுத்தம் மட்டும் இந்தியாவை ஒருபோதும் கைவிட்டதில்லை. அந்த வரிசையில் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்து கவுரவப்படுத்தியுள்ளது மல்யுத்தம். இதை பெற்றுத் தந்தவர் பஜ்ரங் பூனியா.


ஹரியாணாவில் உள்ள குந்தன் கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் பஜ்ரங் பூனியா. அவரது ஊரில் மல்யுத்த வீரர்கள் பலர் உருவாகி சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர். அவர்களின் வரிசையில் தன் மகன்களான பஜ்ரங் பூனியாவையும், ஹரீந்தரையும்  சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பஜ்ரங்கின் தந்தையான பல்வான் சிங் பூனியா.  .
 பஜ்ரங்குக்கு 7 வயது இருக்கும்போதே அவரது அண்ணன் ஹரீந்தருடன்  உள்ளூரில் மல்யுத்த பயிற்சி அளிக்கும் அகாடாக்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பல்வான் சிங். மல்யுத்தத்தை விட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வாழும் வசதியான வாழ்க்கை பஜ்ரங்கை கவர்ந்துள்ளது. தினமும் ரொட்டி, தண்ணீர் கலந்த  பால் மட்டுமின்றி வேறு எந்த உணவும் கிடைக்காத தனது ஏழ்மை நிலையை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் மாற்ற முடியும் என்று நம்பினார் பஜ்ரங். இதனால் தந்தை அழைத்துச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களிலும் பள்ளிக்கு கட் அடித்து அகாடாவில் தவம் கிடந்தார். மல்யுத்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.

அகடாக்களில் அடிக்கடி போட்டிகள் நடக்கும். இதில் சிறுவர்களுக்கான  பிரிவில்  போட்டிகளில் வெற்றி பெற பஜ்ரங் பூனியாவுக்கு பரிசாக   ரூபாய் நோட்டுகள் கிடைக்க, மல்யுத்தத்தின் மீதான இவரது காதல் அதிகரித்தது. இந்த நேரத்தில் அவரது ஆற்றலைப் பார்த்து டெல்லியில் உள்ள சத்ராசால் மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு பஜ்ரங் பூனியாவுக்கு கிடைத்துள்ளது.

 “டெல்லியில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  ரொட்டி, பால் மட்டுமே சாப்பிடும் சாதாரண வாழ்க்கையில் இருந்து இந்த பயிற்சி மையம் எனக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததே என் மகிழ்ச்சிக்கு  முதல் காரணமாக இருந்தது. அடுத்ததாக இங்கு முறையாக பயிற்சி பெற்றால் வறுமை நிலையில் இருந்து குடும்பத்தையும் மீட்க   முடியும் என்று உறுதியாக நம்பினேன். இந்த மையத்தில் நான் பெற்ற வெற்றிகள் என் நம்பிக்கையை மேலும் அதிகரித்தன” என்கிறார் பஜ்ரங்.

இந்திய மல்யுத்த வீரர்களில் சுமார் 80 சதவீதம் பேரைக் கூர்தீட்டிய சத்ராசால் பயிற்சி மையம் பஜ்ரங் பூனியாவையும் மெருகூட்டியது. இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களான சுஷில் குமார், யோகேஷ்வர் தத் போன்றவர்களுடன் மோதி பயிற்சிபெறும் வாய்ப்பு பஜ்ரங்குக்கு கிடைத்தது. அதிலும் அங்கிருந்த மூத்த வீரரான யோகேஸ்வர் தத்துக்கு அவரை மிகவும் பிடித்துவிட, தன் தம்பியைப் போலவே அவர் மீது பாசம் காட்டத் தொடங்கினார். சத்ராசால் பயிற்சி மையத்தில் பெற்ற அனுபவத்தால் தேசிய அளவிலான போட்டிகள் பலவற்றில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார் பஜ்ரங்.


உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவந்த அவர், 2013-ம் ஆண்டில் சர்வதேச மல்யுத்த அரங்கில் தடம் பதித்தார். இந்த ஆண்டில் புடாபெஸ்ட் நகரில் நடந்த உலக  மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இன்சியானில் நடந்த ஆசிய போட்டியிலும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கூடவே ஹரியாணா காவல் துறையில் வேலையும் கிடைத்தது.  

2014-ம் ஆண்டில் சத்ராசால் பயிற்சி மையத்தை விட்டு விலகிய பூனியா, மூத்த வீரரும் தன் வழிகாட்டியுமான யோகேஷ்வர் தத்துக்கு சொந்தமாக கொஹானாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்துகொண்டார்.  ஏற்கெனவே ஆற்றல் மிகுந்த வீரராக இருந்த பஜ்ரங், யோகேஸ்வர் தத்தின் பயிற்சியால் மேலும் கூர் திட்டப்பட்டார். பாட்மிண்டனில்  சிந்துவையும், சாய்னாவையும் கோபிசந்த் செதுக்கியதைப் போன்று பஜ்ரங் பூனியாவை பார்த்துப் பார்த்து செதுக்கினார் யோகேஷ்வர் தத். குருநாதரிடம் கற்றது போக மீதமிருக்கும் நேரத்தில் தன் செல்போனில் சர்வதேச மல்யுத்த போட்டிகளின் வீடியோக்களைப் பார்த்து மேலும் பல நுணுக்கங்களை தெரிந்துகொண்டார் பூனியா.


ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான யோகேஷ்வர் தத்திடம் சேரும் வரை 61 கிலோ எடைப்பிரிவில்தான் பஜ்ரங் பூனியா போட்டியிட்டு வந்தார். ஆனால் அதன் பிறகு அவர் 65 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினர். இதற்கு காரணம் யோகேஷ்வர் தத். “ஒலிம்பிக்கில் 61 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டிகள் கிடையாது. 65 கிலோ எடைப்பிரிவில்தான் மல்யுத்த போட்டிகள் உள்ளன. இப்போது 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகிறேன். சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இருந்து நான் விலக உள்ளதால், இப்பிரிவில்   இனி  நீ கலந்துகொள்ள வேண்டும்” என்று தன் பிரிய சிஷ்யனுக்கு கட்டளை இட்டிருந்தார் யோகேஷ்வர் தத். தன் குருவின் கட்டளைப்படியே 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடத் தொடங்கிய பூனியா இந்த ஆண்டில் கோல்ட்கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதே வேகத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 65 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

 “2014-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் 65 கிலோ எடைப்பிரிவில் யோகேஷ்வர் தங்கம் வென்றார். அவர் ஓய்வுபெற்ற நிலையில் இப்பிரிவில் நான் தங்கம் வெல்ல வேண்டும் என்று  ஆசைப்பட்டார். அதைப் பெற்றுத் தருவதாக நானும் வாக்கு கொடுத்திருந்தேன். அதன்படி காம்ன்வெல்த் போட்டியிலும், ஆசிய விளையாட்டு போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம் வென்று என் குருநாதருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்” என்று பூரிப்புடன் சொல்கிறார் பஜ்ரங் பூனியா.

ஆசிய போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் யோகேஷ்வர் தத்துக்கு குருதட்சிணை கொடுத்துள்ளார் பூனியா. தன் குருநாதரைப் போலவே அடுத்ததாக ஒலிம்பிக்கிலும் அவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்போம்.





No comments:

Post a Comment