குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள், எந்த அளவுக்கு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதில்தான் பெற்றோரின் வெற்றி அடங்கியிருக்கிறது. குழந்தைகளிடம் இருந்து அன்பையும் மதிப்பையும் பெறுவது அத்தனை சுலபமான காரியமல்ல. இதை குழந்தைகளிடம் இருந்து பெற பெற்றோர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான சில வழிகளைக் காண்போம்:
குழந்தைகளின் விருப்பங்களை மதியுங்கள்
ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். உதாரணமாக தங்களுக்கு உடைகளை வாங்கச் செல்லும்போது, அவர்கள் குறிப்பிட்ட சில உடைகளை தேர்ந்தெடுப்பார்கள். உங்களுக்கு அந்த உடைகள் பிடிக்காமல் போகலாம். அல்லது அந்த உடைகள் மேட்சிங்காக இல்லாமல் இருக்கலாம். அதற்காக பலர் முன்னிலையில் அவர்களைத் திட்டவோ, அந்த உடைகளைப் பிடுங்கி தூக்கிப் போடவோ கூடாது. மாறாக அந்த உடைகள் எந்த வகையில் சிறப்பாக இல்லை என்பதை சொல்லிப் புரியவையுங்கள். அப்படியும் அதே உடையைத்தான் வாங்குவேன் என்று அவர்கள் அடம்பிடித்தால் அதற்கான காரணத்தை கேளுங்கள். அது அவர்களின் வயதுக்கு ஏற்ற வகையில் ஒப்புக்கொள்ளும்படி இருந்தால் வீண் பிடிவாதம் பிடிக்காமல் அந்த உடையை வாங்கிக் கொடுங்கள்.
அதேபோல் ஒரு சில குழந்தைகள் பிடித்த விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்களின் படங்களை தங்கள் அறையில் ஒட்டி வைத்திருப்பார்கள். இதுபோன்ற அவர்களின் தேர்வுகளையும், விருப்பங்களையும் முடிந்தவரை மதியுங்கள். அவர்கள் செய்வது சரியில்லை என்று உங்களுக்கு தோன்றினால் பொறுமையாக விளக்கி புரியவையுங்கள். மாறாக எடுத்தவுடனே அவற்றை எதிர்த்தால் வீண் மனஸ்தாபம்தான் ஏற்படும். இதனால் குழந்தைகளும் உங்களை வெறுக்கத் தொடங்கிவிடும்.
குழந்தைகளைக் கட்டி அணையுங்கள்
அன்புக்காக ஏங்கும் இதயம் குழந்தைகளுடையது. ஆனால் சில பெற்றோர்கள், குழந்தைகள் மீது பாசத்தைப் பொழிந்தால் அவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாக உள்மனதில் குழந்தைகள் மீது அன்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் கண்டிப்புடன் இருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயமாகும். இதன் காரணமாக பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான நெருக்கம் குறைய வாய்ப்பு உண்டு.
எனவே முடிந்தவரை குழந்தைகள் மீது அன்பு காட்டுங்கள். அவர்கள் மீது எத்தனை பாசமாக இருக்கிறோம் என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் பிற்காலத்திலும் அவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள். குழந்தைகள் மீதான அன்பை வெளிப்படுத்த மிகச்சிறந்த உபாயம் அவர்களை கட்டி அணைப்பது. பெற்றோர்களின் பாசமான அணைப்பு குழந்தைகளின் மனதில் அன்பு மலர்களை பூக்கவைக்கும். எனவே தினந்தோறும் அவர்கள் படுக்கையில் இருந்து எழும்போது, பள்ளிக்கு செல்லும்போது, இரவில் படுக்கச் செல்லும்போது என்று எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் அவர்களைக் கட்டியணைத்து உங்கள் அன்பைப் பரிமாறுங்கள். இதுபோல் முதுகில் தட்டிக் கொடுப்பது, புன்னகைப்பது, தலையைக் கோதி விடுவது போன்ற செய்கைகளாலும் பெற்றோர்கள் தங்கள் அன்பை அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரவாக இருக்க தாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.
குழந்தைகள் எதைச் செய்தாலும் உற்சாகப்படுத்துங்கள்
அன்புக்கு அடுத்தபடியாக குழந்தை அதிகம் விரும்புவது, அடுத்தவர்கள், குறிப்பாக பெற்றோர்கள் தங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே உங்கள் குழந்தை ஒரு சிறிய நல்ல விஷயத்தைச் செய்தாலும் உற்சாகப்படுத்துங்கள். அதைப்பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறுங்கள். அது அவர்களை பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்யத் தூண்டும். அந்த புதிய முயற்சிகளில் அவர்கள் கொஞ்சம் சறுக்கினாலும், அவர்களை விமர்சிக்காதீர்கள். மாறாக அந்த முயற்சியில் அவர்கள் செய்த தவறு என்ன என்பதை விளக்கி, அடுத்த முறை அந்த தவறு மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் எந்த கட்டத்திலும் தங்களுக்கு துணையாக இருப்பர்கள் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு அளியுங்கள். இது குழந்தைகளுடனான பெற்றோரின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று விளையாட்டு. குழந்தைகளுடன் எந்த அளவுக்கு விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடன் பெற்றோர்கள் நெருக்கமாக முடியும். எனவே முடிந்தவரை தினமும் 1 மணிநேரமாவது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற நவீன உபகரணங்களை அணைத்து வைத்து விட்டு குழந்தைகளுடன் பேசிச் சிரித்து விளையாடுங்கள். இது அவர்களுடன் உங்களை நெருக்கமாக்கிக் கொள்வதுடன், உங்கள் மனதையும் லேசாக்கும். முடிந்தவரை இரவு உணவுக்குப் பின் குழந்தைகள் படுக்கைக்கு செல்லும்முன் அவர்களுடன் விளையாடுவது நல்லது. இந்த நினைவுகள் அவர்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து பெற்றோர் மீதான பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகரிக்கும்.
குழந்தைகளை மதியுங்கள்
குழந்தைகள் பெரியவர்களை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் விஷயம். அதே நேரத்தில் பெரியவர்களும் குழந்தைகளை மதிக்க வேண்டும். எந்த நேரமும் ஒரு நாட்டாமையாக நடந்துகொண்டு, ‘நான் சொல்வதுதான் சரி. அதை வீட்டில் உள்ள குழந்தைகள் மதித்து நடக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் கட்டளையிடக் கூடாது. ஒரு சினிமாவுக்கு செல்வதாக இருந்தால்கூட, அந்தச் சினிமாவுக்கு செல்ல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு அதன் பிறகுதான் முடிவெடுக்க வேண்டும். மாறாக பெற்றோர்களின் கருத்துகளை குழந்தைகள் மீது எக்காலத்திலும் திணிக்கக் கூடாது.
பரஸ்பர நம்பிக்கை அவசியம்
எந்த ஒரு உறவும் நெருக்கமாக இருக்க வேண்டுமானால் பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும் தீவிரமாக நம்ப வேண்டும். குழந்தைகளிடையே பெற்றோர் மீதான நம்பிக்கை அதிகரிக்க வேண்டுமானால், அவர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டும். எந்த காலத்திலும் அந்த வாக்குறுதிகளை மீறக் கூடாது. உதாரணமாக ஒரு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் வாங்கினால், மிதிவண்டி வாங்கித் தருவதாக குழந்தைகளுக்கு வாக்குறுதி அளித்தால், அவர்கள் நல்ல மதிப்பெண் வாங்கும்போது அதை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டு. இல்லாவிட்டால் பெற்றோர் தீதன குழந்தைகளின் நம்பிக்கை தகர்ந்துவிடும். அதுவே உறவுப்பாலம் தகரவும் காரணமாக அமைந்துவிடும்.
No comments:
Post a Comment