நீங்கள் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு நிறுத்தத்தில் அந்த பேருந்தில் புதிதாக ஏறும் நபர், உங்களிடம் வந்து சற்று நகர்ந்து அமர்ந்து தனக்கு இடம்விடச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நிச்சயம் உடனே நகர மாட்டீர்கள் ஒரு கணம் சிந்திப்பீர்கள் அவரை ஒருமுறை ஏற இறங்க பார்த்து, இந்தப் பயணத்தில் அருகில் அமர்ந்து செல்ல அவர் ஏற்ற துணைதானா என்று யோசிப்பீர்கள்.
ஒரு பேருந்து பயணத்துக்கே இப்படி என்றால் வாழ்க்கைப் பயணத்தில் இதை எப்படி எதிர்கொள்வது? தாய் தந்தையின் மொத்த அன்பையும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தையிடம், இனி அவர்களின் அன்பை உன்னுடன் பகிர்ந்துகொள்ள புதிதாக ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அதன் மனம் புண்படாதபடி எப்படிச் சொல்வது?
திடீரென்று ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்து தனது பெற்றோரின் அன்புக்கு போட்டியிடுவது எந்தக் குழந்தைக்கும் பிடிக்காது. எனவே ஒரு தாய், தான் கருவுற்றிருக்கும் செய்தியை மிகவும் பக்குவமாக தங்கள் மூத்த குழந்தையிடம் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போதே அந்த குழந்தை பிறப்பதால் ஏற்கெனவே உள்ள குழந்தைக்கு என்ன பயன், மூத்த அண்ணனாகவோ, அக்காவாகவோ முதல் குழந்தைக்கு உள்ள கடமைகள் என்ன என்பதை விளக்க வேண்டும்.
சிரமங்களைப் புரியவையுங்கள்
ஒரு குழந்தை எப்படி வயிற்றில் 10 மாதங்கள் தங்கியிருக்கும் என்பதையும், அந்த மாதங்களில் தாய் எப்படியெல்லாம் கஷ்டப்படுவார், அவருக்கு தாங்கள் எந்த வகையிலெல்லாம் உதவி செய்ய முடியும் என்பதை முதல் குழந்தைக்கு தாய் பொறுமையாக விளக்க வேண்டும். சாதாரணமாக தன்னை எப்போதும் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும் அம்மா, வயிற்றில் பாப்பா வந்ததும் அவ்வாறு தூக்குவதில்லையே என்ற ஏக்கம் குழந்தைக்கு ஏற்படலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் வயிற்றில் குழந்தை உள்ள நிலையில் அவர்களை ஏன் தூக்கிக் கொஞ்ச முடியவில்லை? அப்படித் தூக்குவதால் அம்மாவுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை பொறுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். புதிய குழந்தையை வரவேற்க அவர்களை மனதளவில் தயார்படுத்த வேண்டும்.
எல்லா குழந்தைகளுக்கும் தாங்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். எனவே 2-வது குழந்தையை கருவுற்றிருக்கும் நேரத்தில் முதல் குழந்தையின் சிறுவயதுக் காலத்தைப் பற்றி அவர்களுக்கு விளக்குங்கள். அவர்களின் சிறுவயது ஆல்பங்கள், வீடியோ படங்கள் ஆகியவற்றை வைத்து சிறுவயதில் செய்த சுட்டித் தனங்களைப் பற்றி விவரியுங்கள். அந்த வயதில் அம்மாவை விட்டு ஒரு விநாடிகூட பிரியாமல் அவர்கள் இருந்த காலத்தைப் பற்றி எடுத்துக்கூறுங்கள்.
அவற்றை அந்த குழந்தை வாய்மூடாமல் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, “புதுசா வரப்போற பாப்பாவும் இதுமாதிரித்தான் செய்யும். அம்மாவைப் பிரிஞ்சு அதனால இருக்க முடியாது. அப்ப நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணணும். அம்மாவோட சேர்ந்து நீயும் அதைப் பார்த்துக்கணும் என்று அன்பாக எடுத்துக் கூறுங்கள். அம்மாவிடம் இனி தன்னைவிட புதிதாய் பிறக்கப்போகும் குழந்தைதான் அதிகம் இருக்கப்போகிறது என்ற தகவலை மெதுவாக புரியவையுங்கள்.
அவர்களையும் கலந்தாலோசியுங்கள்
2-வது குழந்தை கருவிலிருக்கும்காலத்தில் அம்மாக்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மூத்த குழந்தையையும் சேர்த்துக்கொள்வது அவசியம். வயிற்றில் வளரும் கருவை ஸ்கேன் செய்யச் செல்லும்போதுகூட அவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். திரையில் அந்தக் குழந்தை அசைவதை மூத்த குழந்தைக்கு காட்டி உற்சாகப்படுத்துங்கள். புதிய குழந்தைக்கான பெயரைத் தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் தொட்டிலை அலங்கரிப்பது வரை அனைத்து விஷயங்களிலும் மூத்த குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். அந்த குழந்தை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கலந்தாலோசியுங்கள். இப்படி ஒவ்வொரு அசைவின் மூலமும் 2-வதாக வரப்போகும் குழந்தையின் வளர்ச்சியில் தங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் பதிய வையுங்கள்.
அப்பாவுடன் இருக்க தயார்படுத்துங்கள்
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளைக் மட்டுமே கொண்ட சிறு குடும்பங்களில் அம்மாக்களையே பெரும்பாலும் சார்ந்திருப்பது குழந்தைகளின் குணம். ஒரு தாய் 2-வது குழந்தையை பெறும் நேரத்தில் முதல் குழந்தை மீது போதுமான அக்கறை செலுத்த முடியாது. எனவே அந்தத் தாய் கருவுற்றிருக்கும் நேரத்திலேயே, தங்கள் முதல் குழந்தை தந்தையிடம் அதிக நேரம் செலவழிப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களின் தேவைகளை தந்தையர் மூலமே தீர்த்துக்கொள்ளும்படி பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அப்போதுதான் 2-வது குழந்தை பிறக்கும்போது, அது முதல் குழந்தையை அதிகம் பாதிக்காது. தந்தை மூலமே தங்கள் தேவைகளை அவர்கள் தொடர்ந்து தீர்த்துக் கொள்வார்கள்.
முன்கூட்டியே பயிற்சி அளியுங்கள்
2-வது குழந்தை பிறந்து தாய் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் முதல் குழந்தையை வீட்டில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்துவிடுவது நல்லது. இந்தக் காலகட்டத்தில் அம்மா இல்லாமல் அப்பாவுடனோ, பாட்டியுடனோ வீட்டில் தனியாக இருக்க மூத்த குழந்தைகளுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும். இதுபோன்ற காலக்கட்டத்தில் அம்மா ஊட்டிவிடாமல் தனியாக சாப்பிடுவது எப்படி, அம்மா இல்லாமல் தூங்குவது எப்படி என்பது குறித்து மூத்த குழந்தையிடம் முன்னதாகவே விளக்கி கூறிவிட வேண்டும்.
முதல் சந்திப்பில் கவனம் தேவை
புதிதாக பிறந்துள்ள குழந்தையைப் பார்க்க மூத்த குழந்தை முதல் முறையாக வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. அந்த சமயத்தில் அம்மாவைத் தவிர வேறு யாராவது 2-வது குழந்தையை கையில் வைத்திருப்பது நல்லது. இதனால் மூத்த குழந்தையின் மனம் புண்படாமல் இருக்கும். தன் சகோதரனையோ, சகோதரியையோ பார்க்க வரும் முதல் குழந்தையை 2-வது குழந்தையிடம் அழைத்துச் செல்லும் தாய், பின்னர் ஒரே நேரத்தில் இருவரையும் செல்லமாக அணைப்பது, அவர்களுக்கு இதத்தைத் தரும். அதே போல் பிரசவத்துக்கு பின் வீட்டுக்கு வரும்போதும் குழந்தையை அம்மாவைத் தவிர வேறு யாராவது தூக்கி வருவது நல்லது. இதனால் அம்மா எப்போதும் புதிய குழந்தையை தூக்கிக்கொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் மூத்த குழந்தைக்கு வராமல் இருக்கும். 2-வது குழந்தை பிறப்பதற்கு முன்பே உங்கள் மூத்த குழந்தை தனது அப்பாவுடன் தனியாக படுத்திருக்கும் வகையில் பயிற்சி கொடுத்திருப்பது நல்லது.
பொதுவாக புதிதாக பிறந்த குழந்தையை பார்க்க வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், அதன் அழகைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். அதற்குப் பரிசுகளை வாங்கி வருவார்கள். இது உங்கள் குழந்தையை அதிகம் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். யாராவது பார்த்து, “உங்கள் 2-வது குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது” என்று பாராட்டினால், அதற்கு “ஆமாம் எனக்கு இப்போது 2 அழகான குழந்தைகள் இருக்கின்றன” என்று கூறி இருவரையும் வாஞ்சையோடு அணைத்துக் கொள்ளுங்கள். இதனால் பாப்பாவைப் போலவே தன்னையும் அம்மா சமமாக நேசிக்கிறார் என்ற எண்ணம் முதல் குழந்தைக்கு ஏற்படும். அந்த எண்ணத்தை கடைசிவரை காப்பாற்றுங்கள்.
No comments:
Post a Comment