குழந்தைகள் வீட்டுக்குள் இருக்கும்போது அவர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறோம். ஆனால் வீட்டை விட்டு வெளியில் விளையாடச் செல்லும்போதோ, அல்லது பள்ளிக்கு செல்லும்போதோ பெற்றோர்களால் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க முடியாது. இதுபோன்ற சூழலிலும் அவர்கள் பாதுகாப்பாக இருக்க பெற்றோர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
செல்போன் எண்களைக் கற்றுக் கொடுங்கள்
உங்கள் குழந்தைக்கு ஓரளவு பேச்சு வந்ததும் முதலில் வீட்டு முகவரி, பெற்றோர்களின் செல்போன் எண்கள் ஆகியவற்றை கற்றுக்கொடுங்கள். வெறும் வீட்டு முகவரி மட்டுமின்றி, வீடு அமைந்திருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களின் பெயர்களையும் குழந்தைகளின் மனதில் பதிய வையுங்கள். பொது இடங்களில் தொலைந்து போவது, மற்றவர்களால் கடத்தப்படுவது போன்ற அவசர காலங்களில் தாங்கள் யார் என்பதை மற்றவர்களிடம் விளக்கி உதவி பெற இது உதவும். பெற்றோரின் செல்பேசி எண்களைத் தவிர தாத்தா பாட்டிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் செல்பேசி எண்களையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, பொது இடங்களில் ஆபத்தில் சிக்கும்போது அவர்களுக்கு உதவும். அதேநேரத்தில் அவசியமின்றி தங்கள் வீட்டின் முகவரியை யாருக்கும் சொல்லவேண்டாம் என்றும் அறிவுரை கூறிவைப்பது நல்லது.
புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை
குழந்தைக் கடத்தல் அதிகமாக இருக்கும் இன்றைய சூழலில், பொது இடங்களில் உங்கள் குழந்தைகளை தனியாக இருக்க விடாதீர்கள். எப்போதும் குழந்தைகள் உங்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள். பொது இடங்களில் அவர்கள் தனியாக இருக்கும் சமயத்தில், தங்களை அணுகும் புதியவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது எப்படி என்பதை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். குறிப்பாக அவர்கள் ஏதாவது உணவுப் பொருட்களையோ, பரிசுகளையோ தந்தால், பெற்றோரின் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக வாங்கக் கூடாது என்று எடுத்துச் சொல்லுங்கள்.
குழந்தைக் கடத்தல் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்தால், அதைக் குழந்தைகளுக்கு கட்டாயம் படித்துக் காட்ட வேண்டு. அத்தகைய சூழலில் அவர்கள் சிக்கிக் கொண்டால் அதிலிருந்து மீள்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.மர்ம நபர்கள் யாராவது தங்களை கவனிப்பதாகவோ, பின் தொடர்வதாகவோ தோன்றினால் உடனடியாக அருகில் இருப்பவர்களிடம் இதுபற்றி புகார் தெரிவிக்குமாறு எடுத்துக் கூறுங்கள். அதையும் மீறி அசாதாரணமான சூழல் ஏற்பட்டால், உடனடியாக அந்த இடத்தை விட்டு ஓடிவிடுமாறு எச்சரித்து வையுங்கள்.
விளையாடும் இடத்தை கண்காணியுங்கள்
விளையாடச் செல்லும் இடங்களில்தான் குழந்தைகளுக்கு அதிக காயங்கள் ஏற்படுகின்றன. உங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்று காயம் ஏற்படாமல் இருக்க, அவர்கள் விளையாடச் செல்லும் பூங்காக்களை அடிக்கடி சோதனை செய்யுங்கள். பூங்காவில் பாதுகாவலர் இருக்கிறாரா, அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு மரம் போன்றவை துருப்பிடித்து உடைந்துவிழும் நிலையில் இருக்கிறதா என்று சோதியுங்கள். மேலும் குழந்தைகளுக்கு காயம் ஏற்படும் வகையில் அங்கு கூரான நிலையில் ஏதாவது பொருட்கள் இருந்தால் அகற்றுவது அவசியம். பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடுபவர்களைப் பற்றியும், அதன் சுற்று வட்டாரத்தைப் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது குழந்தைகளின் பாதுகாப்புக்கு நல்லது.
சாலை விதிகளை கற்றுக்கொடுங்கள்
உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு நடந்து செல்பவர்களாக இருந்தால், முடிந்தவரை பெற்றோரும் உடன் செல்வது நல்லது. அப்படிச் செல்லும்போது அடிக்கடி கிராஸ் செய்யவேண்டிய சாலைகளைத் தேர்ந்தெடுக்காமல் அதிகம் சாலையைக் கடக்க வேண்டி இல்லாத வழியைப் பயன்படுத்துவது நல்லது. சாலையைக் கடக்க நேரிடும் சமயங்களில், அதன் இருபுறங்களையும் கவனித்து, வாகனங்கள் ஏதும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே சாலையை கடக்கவேண்டும் என்பதை குழந்தைகளின் மனதில் பதியவைக்க வேண்டும். அதிலும் சாலையைக் கடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கடக்க வேண்டும் என்ற வழக்கத்தை சிறுவயதில் இருந்தே குழந்தைகளின் மனதில் பதியவையுங்கள். அப்போதுதான் அவர்கள் வளர்ந்த பிறகும் இதே வழக்கத்தைக் கடைப்பிடிப்பர்கள்.
மழைக்காலம் ஜாக்கிரதை
குழந்தைகளுக்கு பிடித்தமான காலங்களில் ஒன்று மழைக்காலம். பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை விடப்படுவதுடன், மழையில் நனைந்து ஜாலியாக விளையாடலாம் என்ற அவர்களின் மனநிலையே இதற்கு காரணம். அதே நேரத்தில் பெற்றோரைப் பொருத்தவரை மிகவும் கவனமாக இருக்கவேண்டிய காலம் இது. குழந்தைகள் விளையாடச் செல்லும் இடங்களில் கண்ட தண்ணீரைக் குடித்து உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்க, அவர்கள் வெளியில் செல்லும்போதெல்லாம் காய்ச்சிய தண்ணீரை ஒரு பாட்டிலில் எடுத்துச் செல்ல அறிவுறுத்த வேண்டும்.மேலும் கொசுக்கடியில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்கள் விளையாடும் இடங்களுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை வெறும் கால்களில் குழந்தைகள் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும்போது
இது தீபாவளி நேரம். குழந்தைகளுக்கு இது எந்த அளவுக்கு மகிழ்ச்சியான நேரமோ, அந்த அளவுக்கு பெற்றோர்கள் குழந்தைகளை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய நேரம் இது. பெற்றோர்கள் கொஞ்சம் கவனம் தவறினாலும் குழந்தைகளுக்கு தீ விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவே இந்த தீபாவளி காலத்தில் குழந்தைகளுக்கு தீ விபத்து ஏற்படாமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
இதற்கு முதல் கட்டமாக பெரிய பட்டாசு வகைகளை குழந்தைகளின் கையில் கொடுத்து வெடிக்கச் செய்வதை தவிர்க்க வேண்டும். அவர்களைப் பார்க்கவைத்து பெரியவர்கள் வெடிப்பதே பாதுகாப்பான வழி. அவர்களே வெடிக்க வேண்டும் என்று விரும்பினால் சிறிய ரக பட்டாசுகளைக் கொடுத்து வெடிக்க வையுங்கள். அப்படி வெடிக்கும்போது அருகிலேயே இருந்து கண்காணியுங்கள். குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது, அருகிலேயே தண்ணீரை வைத்திருப்பது நல்லது. அப்போதுதான் தீப்பிடித்தாலும் எளிதாக அணைக்க முடியும்.
வெடிக்காமல் போன பட்டாசுகளுக்கு அருகில் உடனடியாக செல்லக்கூடாது என்பதை குழந்தைகளிடம் வலியுறுத்த வேண்டும். 2-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தாலும், ஒரு சமயத்தில் ஒரு பட்டாசைத்தான் வெடிக்கவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். தீபாவளிக்காக குழந்தைகளுக்கு பட்டுத் துணிகளை வாங்கியிருந்தாலும், பட்டாசு வெடிக்கும்போது எளிதில் தீப்பற்றாத ஆடைகளையே அவர்களுக்கு அணிவியுங்கள். தீபாவளி பண்டைகையை ஆபத்து இல்லாமல் கொண்டாடுங்கள்.
No comments:
Post a Comment