Powered By Blogger

Friday, November 2, 2018

குழந்தைகளை நம்புங்கள்

உங்கள் குழந்தை எதிலும் வெற்றியாளராய் வர வேண்டுமானால் முதலில் அவர்களின் மனதில் தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வரவேண்டும். அந்த தன்னம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகளுக்கு எத்தனை ஆற்றல்கள் இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க முடியாது. அத்தகைய தன்னம்பிக்கையை உங்கள் குழந்தையின் மனதில் விதைக்க சில வழிகள்;
குழந்தைகளை நம்புங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மீது நம்பிக்கை வரவேண்டுமானால், முதலில் நீங்கள் அவர்களை நம்புங்கள். உங்கள் குழந்தை உங்களிடம் வந்து, ‘அப்பா நான்  ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்’ என்று சொன்னால் அவர்கள்  முதுகில் தட்டிக்கொடுங்கள். “உன்னால் நிச்சயம் இதில் வெற்றி பெற முடியும்’  என்று  தட்டிக் கொடுத்து வாழ்த்துங்கள்.  அந்த போட்டியில் அவர்களால் வெற்றி பெற முடியாவிட்டாலும்,  ‘இப்போது தோற்றால் என்ன? அடுத்த முறை கண்டிப்பாக ஜெயிப்பாய்’ என்ற நம்பிக்கையை அளியுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை ஜொலிக்கும்.
இதற்கு மாறாக,  தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளப் போவதாக அவர்கள் கூறியதும், “நீ நடக்கும்போதே தடுக்கி விழற. இதுல ஓட்டப்பந்தயத்துல வேற சேர்றியா?” என்று மட்டம் தட்டினால், அவர்களின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் குலைந்துவிடும். எனவே உங்கள் குழந்தைகளால்  எத்தகைய  சவால்களையும் செய்து முடிக்க முடியும் என்று உறுதியாய்  நம்புங்கள். அதை வார்த்தைகளாய் அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான், ‘இந்த செயலை என்னால் முடிக்க முடியும் என்று என் பெற்றோர்களே கூறிவிட்டார்கள்” என்று கூடுதல் தன்னம்பிக்கையுடன் உங்கள் குழந்தை முயற்சி செய்யும்.
தோல்விகளை ஏற்க தயார்படுத்துங்கள்
உங்கள் குழந்தைகள் எந்த கட்டத்திலும் தோல்விகளால் துவளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக தோல்விகளின்போது உங்கள் குழந்தைகளின் மனோதைரியம் குறைய வாய்ப்புள்ளது. இந்த கட்டத்தில் பெற்றோர்கள்தான் ஆறுதலான வார்த்தைகளைக் கூறி குழந்தைகளை அதிலிருந்து  மீட்க வேண்டும். “வாழ்க்கையில் முயற்சி  செய்பவர்களுக்குத்தான் தோல்விகள் வரும். முயற்சிகளைத் தொடர்ந்தால், அந்த தோல்விகளை வெற்றியாக மற்ற முடியும். அதே நேரத்தில் தோல்விகளுக்கு பயந்து ஒருவர் முயற்சிகளே செய்யாமல் இருந்தால், அவரால் எதையும் சரியாகச் செய்ய முடியாது” என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.
இதுபற்றி இன்னும் விவரமாக குழந்தைகளுக்கு விளக்க வேண்டுமானால், “நீ ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போது அ, ஆ என்று ஒவ்வொரு எழுத்தையும் எழுதவே கஷ்டப்படுவாய். சரியாக எழுதாததற்காக பலமுறை அடிகளைக் கூட வாங்கியிருப்பாய். அதற்காக நீ அவற்றை எழுதிப் பழகும் முயற்சியை கைவிட்டாயா? அதைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சிகளைச் செய்ததால்தானே இன்று பல எழுத்துகளைக் கொண்ட வரிகளை எழுத முடிகிறது” என்று கூறி ஊக்குவியுங்கள். இது அவர்களை மேலும் தன்னம்பிக்கையுடன் உழைக்க வைக்கும்.
குழந்தைகள் உங்களை கவனிக்கிறார்கள்
பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்தான் ரோல் மாடல்.  அவர்களைப் பார்த்துதான் பல விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் முன்னிலையில் எந்த கட்டத்திலும் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். உதாரணமாக, வார இறுதியில் அவர்களுக்கு பிடித்த சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் வேளையில்,  அங்கு டிக்கெட் தீர்ந்துவிட்டால், “என்னால் உங்களை அழைத்துப் போக முடியவில்லையே” என்று  அவர்களிடம் புலம்பாதீர்கள். மாறாக, “சினிமா என்ன ஓடியா போகப் போகிறது. சினிமாவுக்கு பதில் இன்று உங்களுக்கு பிடித்த கடற்கரைக்கு போவோம். அடுத்த வாரம் நாம் இந்த படத்தை முன்கூட்டியே பதிவு செய்து பார்த்து விடலாம்” என்று  தன்னம்பிக்கையுடன் கூறுங்கள். நம்பிக்கை மனிதராகவே உங்கள் பிம்பம் அவர்கள் மனதில் பதிய வேண்டும்.
நல்லவற்றை கவனிக்க  வையுங்கள்
தங்களைச் சுற்றி நடக்கும்  நல்ல விஷயங்களையும், தங்களுக்கு நேர்ந்த நல்ல அனுபவங்களையும் பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தாலே, ஒருவருக்கு நல்ல எண்ணங்கள் தோன்றி, எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக்கொள்ளும். அதனால் உங்கள் குழந்தைகளின் மனம் நல்ல விஷயங்களில் மட்டும் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
  குழந்தைகளுடன் சேர்ந்து சாலையில் நடந்து செல்லும்போது, அவர்கள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைப் பார்த்து வரிசைப்படுத்தச் சொல்லுங்கள். அது சாலையோரத்தில் புதிதாக மலர்ந்துள்ள மலராகவோ, வேகமாகச் சென்ற சொகுசுக் காராகவோ அல்லது அவர்களின் மனம் கவர்ந்த ஐஸ்கிரீம் கடையாகவோ கூட இருக்கலாம். இப்படி அவர்களின் மனதைக் கவர்ந்த விஷயங்களை பட்டியலிட்டுச் சொல்வதை ஒரு வழக்கமாக கொள்ளுங்கள். இந்த முறையை தொடர்ந்து செயல்படுத்தினால், தாங்கள் வளர வளர தங்களைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை கவனிக்கும் அவர்களின் பண்பு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் அண்டவே அண்டாது.
உதவக் கற்றுக் கொடுங்கள்
மற்றவர்களுக்கு உதவ உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.  பிறருக்கு உதவுவதால் எப்படி தன்னம்பிக்கை உயரும் என்ற கேள்வி உங்கள் மனதில் ஏற்படலாம். நிச்சயம் இதனால் தன்னம்பிக்கை வளரும்.
தன்னைவிட வசதி வாய்ப்புகளில் குறைந்தவர்களுக்கு உதவும் போதுதான் ஒரு குழந்தைக்கு, தன்னை விடவும் தாழ்ந்தவர்கள், தனது உதவியைப் பெற்று வாழ்பவர்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். மேலும் மற்றவர்களுக்கு உதவும் இடத்தில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமும் ஏற்படும். அந்த எண்ணம் அவர்களின் தன்னம்பிக்கையை நிச்சயம் உயர்த்தும்.
பலத்தை சுட்டிக்காட்டுங்கள்
குழந்தைகளின் தவறுகளையும், அவர்களின் பலவீனத்தையும் சுட்டிக் காட்டுவதைவிட அவர்களின் பலத்தைச் சுட்டிக் காட்டுங்கள். உங்கள் குழந்தை சோர்வுடன் வந்து, “இன்று  எங்கள் பள்ளியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நான் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தேன்” என்று புலம்பினால், அவர்களை ஆறுதல்படுத்துவதுடன், அன்றைய தினம் அவர்கள் மைதானத்தில் செய்த சிறந்த காரியம் ஏதாவது இருக்கிறதா என்று கேளுங்கள். அன்றைய போட்டியில் அவர்கள் கேட்ச் ஏதாவது பிடித்ததாக சொன்னால் அதைப் பற்றி பேசி பாராட்டுங்கள். ஒரு கேட்ச் பிடிப்பது 20 ரன்களைச் சேர்த்ததற்கு சமம் என்று  பாராட்டுங்கள்.   கடந்த போட்டியில் உங்கள் மகன் சிறப்பாக பேட்டிங் செய்த நாளைப்  பற்றி நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள். சச்சின் டெண்டுல்கர்கூட சில போட்டிகளில் டக் அவுட் ஆகியிருக்கிறார் என்று கூறி தேற்றுங்கள். நிச்சயம் உங்கள் மகன் அடுத்த போட்டியில் தன்னம்பிக்கையுடன் பேட்டிங் செய்து நிறைய ரன்களைக் குவிப்பார்.
மேற்கூறிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நிச்சயம் உங்கள் குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாய் மாற்றலாம்.



No comments:

Post a Comment