விஜயதசமியன்று பொதுவாக நல்ல விஷயங்களைத் தொடங்குவது வழக்கம். வீட்டில் 3 அல்லது மூன்றரை வயது சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களை பள்ளியில் சேர்ப்பது அந்த நல்ல விஷயங்களில் ஒன்றாக இருக்கும். சரஸ்வதி கடாக்ஷம் கிடைக்கட்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோர்கள் அவர்களைப் பள்ளியில் சேர்க்க, முதல் நாளில் ஒருவித பயத்தோடும், பதற்றத்தோடும் பள்ளிக்கு செல்லும் பிஞ்சுக் குழந்தைகள் பலரை இந்த காலகட்டத்தில் பார்க்க முடியும்.
புதிதாக ஒரு வேலைக்கு செல்லும்போது, பெரிய மனிதர்களைப் பார்க்க செல்லும்போதோ, நம் மனதில் ஒருவித பதற்றம் வருவது இயல்பு. ஓரளவு பக்குவப்பட்ட நமக்கே அந்த பதற்றம் இருக்கும்போது, பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றி சொல்லத் தேவையில்லை. நாற்றப் பறித்து வேறு இடத்தில் நடுவதைப் போல் தங்களை திடீரென்று வீட்டில் இருந்து பிரித்து பள்ளிக்கு அனுப்பும்போது குழந்தைகள் நிச்சயம் கலவரப்படத்தான் செய்வார்கள். இதுபோன்ற சூழலில் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் அவர்களை மன ரீதியாக தயார்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.
படிப்பின் மீது ஆர்வத்தை விதையுங்கள்
குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது கலவரப்படாமல் இருக்க, அவர்கள் பள்ளிக்கு செல்ல சில நாட்கள் இருக்கும்போதே, படிப்பின் மீதான ஆர்வத்தை விதைக்க வேண்டும் நன்றாகப் படித்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம், பள்ளியில் எப்படிப்பட்ட நண்பர்கள் கிடைப்பார்கள், அங்கு என்னவெல்லாம் விளையாடலாம் என்பதைப் பற்றி கூறி குழந்தைகளின் மனதில் பள்ளிக்கு செல்லும் ஆசையைத் தூண்ட வேண்டும். அதே நேரத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் பள்ளியில் தனியாக சாப்பிடுவது எப்படி, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை அணுகுவது எப்படி என்பதைப் பற்றி சொல்லிப் புரியவையுங்கள். இதன்மூலம் பள்ளிக்கு செல்வதற்கு ஏற்ற மனநிலையை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம்.
பெற்றோரைப் பிரிந்திருக்க கற்றுக்கொடுங்கள்
பெரும்பாலான குழந்தைகள் பள்ளியை வெறுப்பதற்கு காரணம் அங்கு பெற்றோர்களைப் பிரிந்திருக்க வேண்டுமே என்ற பயம்தான். எனவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன், சில நாட்களாவது தினமும் குறிப்பிட்ட சில மணி நேரம் பெற்றோர்களிடம் இருந்து அவர்களைப் பிரித்து வைப்பது நல்லது. முடிந்தால் குழந்தைகளை அவர்களின் தாத்தா பாட்டியின் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். இல்லாவிட்டால் தினமும் குறிப்பிட்ட சில மணிநேரம் உங்களின் நெருங்கிய நண்பர்களின் வீட்டில் சிறிது நேரம் விட்டுவையுங்கள். அப்படிச் செய்வதால் வீட்டில் இருந்து பிரிந்து சிறிதுகாலம் இருக்க குழந்தைகள் பழகிக் கொள்ளும். திடீரென்று பள்ளிக்கு செல்லும்போது அவர்களுக்கு தயக்கம் இருக்காது.
வாய்ப்பு கிடைத்தால் குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் முன்பாக அதே பள்ளியில், உங்கள் குழந்தையின் வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற மாணவர்களில் சிலரையாவது கண்டுபிடியுங்கள். பின்னர் அவர்களுடன் உங்கள் குழந்தைகளை விளையாட விடுங்கள். முதல் நாளில் ஏற்கெனவே பழகிய நண்பர்கள் வகுப்பில் இருப்பதால் குழந்தைகள் சற்று தைரியமாக இருக்கும்.
பொருட்கள் தொலைந்து போகாமல் இருக்க...
பள்ளி திறப்பதற்கு முதல் நாளில் குழந்தைகள் மனதளவில் தயாராகிறார்களோ இல்லையோ, பெற்றோர்கள் தயாராக வேண்டும். குழந்தைகள் எடுத்துச் செல்லும் பைகள், புத்தகங்கள், லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் போன்ற பொருட்களின் மீது அவர்களின் பெயர்களை லேபிளில் எழுதி ஒட்ட வேண்டும். இதனால் குழந்தைகள் பள்ளியில் அவற்றை தவற விட்டாலும், யாராவது பார்த்துவிட்டு திரும்ப ஒப்படைப்பார்கள். தங்கள் பொருட்கள் தொலைந்துபோய் மன அழுத்தத்துக்கு ஆளாவதில் இருந்து இதன்மூலம் குழந்தைகளை காப்பாற்றலாம்.
ஒருசில பெற்றோர்கள் தங்கள் வசதியைக் காட்டும் விதமாக நவீன வடிவத்தில் லஞ்ச் பாக்ஸ், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பார்கள். குழந்தைகளால் அவற்றை எளிதில் கையாள முடியுமா என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள மாட்டார்கள். இதனால் குழந்தைகள் வகுப்பறையில் அவற்றை சரியாகத் திறக்கத் தெரியாமல் உணவை பாதி கொட்டிவிடும் அபாயம் உள்ளது. இதுபோன்ற சிக்கல் உங்கள் குழந்தைகளுக்கு நேராமல் இருக்க, அவர்கள் எளிதில் கையாளும் வகையிலான லஞ்ச் பாக்ஸ்கள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை வாங்கிக் கொடுங்கள். மேலும் குழந்தைகளுக்கு பிடித்த உணவுப் பொருட்களையே தினமும் கட்டிக் கொடுங்கள்.
டிபன் பாக்ஸ், தண்ணீர் பட்டில் ஆகியவற்றை திறப்பது, தானாகவே உடை மாற்றுவது, தனியாக கழிவறைக்கு செல்வது, ஸ்கூல் பேகை பேக் செய்வது, அவர்களின் பொருட்களை சரியாக ஞாபகம் வைத்திருப்பது போன்ற விஷயங்களிலும் குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதும் நல்லது.
ஆசிரியர்களை அறிமுகப்படுத்துங்கள்
குழந்தைகள் முதல் நாளில் பள்ளிக்கு செல்லும்போது, வீட்டில் இருந்து அவர்களுக்குப் பிடித்த பொம்மை, ஸ்டிக்கர், தண்ணீர் பாட்டில் என்று ஏதாவது ஒரு பொருளை எடுத்துச் செல்ல அனுமதியுங்கள். இது வீட்டிலேயே இருப்பதுபோன்ற ஒரு உணர்வை அவர்களுக்கு ஏற்படுத்தலாம். பள்ளிக்கு சென்றதும் குழந்தைகளை உள்ளே அனுப்பிவிட்டு விரைவில் திரும்பாதீர்கள். பள்ளி தொடங்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்பாகவே குழந்தையுடன் அங்கு செல்லுங்கள். பள்ளியில் கழிவறை எங்கு உள்ளது, எங்கு சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றி முதலில் எடுத்துக் கூறுங்கள். பிறகு வகுப்பறைக்கு சென்று அங்குள்ள சூழல் உங்கள் குழந்தைக்கு புரியும்வரை சிறிது நேரம் அவர்களுடன் அங்கு இருங்கள். வகுப்பாசிரியர் வந்ததும் உங்கள் குழந்தையை அவருக்கு அறிமுகப்படுத்தி பேச வையுங்கள். முடிந்தால் சக மாணவர்களுடனும் அவர்களைப் பேச வையுங்கள். குழந்தைகளின் இறுக்கமான மனநிலையை போக்க இது உதவும்.
குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு அவர்களுக்கு சிரித்த முகத்துடன் ‘குட்பை’ சொல்லிவிட்டு கிளம்புங்கள். அப்படிச் செல்லும்போது மாலையில் எத்தனை மணிக்கு திரும்ப வந்து அவர்களை அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்பதையும் சொல்லி விடுங்கள். அப்படி சொன்ன நேரத்துக்கு மறக்காமல் சென்று அவர்களை மீண்டும் அழைத்து வருவது அவசியம்.
குழந்தைகளின் மனம் கண்ணாடியைப் போன்றது. முதல் நாள் பள்ளி அனுபவத்தின்போது அது சேதமடையாமல் தன்மையாக பார்த்துக்கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்பதை மனதில் வையுங்கள்.
No comments:
Post a Comment