Powered By Blogger

Friday, November 2, 2018

குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள்



குழந்தைகளின் வளர்ச்சி என்பது அறிவு வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் மட்டுமல்ல. சமுதாயத்துக்கு பயன்பெறும் வகையில் உருவாக வேண்டுமானால் நல்ல குணங்களையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும். ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பார்கள்.  உங்கள் குழந்தைகள் மனதில் நல்ல குணங்கள் குடியேற வேண்டுமானால் சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு அதை கற்றுக்கொடுக்க வேண்டும். ஒரு கற்சிலையை சிற்பி உருவாக்குவது போல குழந்தைகளை பார்த்துப் பார்த்து செதுக்க வேண்டும்.
நேர்மை நல்லது!
வாழ்க்கையில் நல்லவராக பெயரெடுக்க தேவையான முக்கிய குணங்களில் ஒன்று நேர்மை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் சொல்லாமல் நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை உங்கள் குழந்தையின் மனதில் பதியவையுங்கள். அதற்கு முதலில் பெற்றோர்கள் உண்மையானவர்களாக இருக்க வேண்டும். சிறு விஷயத்துக்குகூட குழந்தைகளிடம் பொய் சொல்வதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை  அளித்து ஏமாற்றவும் கூடாது. ஒரு சில அப்பாக்கள், அம்மாவுக்கு தெரியாமல் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துவிட்டு, ‘அம்மாவிடம் சொல்லாதே. தெரிந்தால்   கோபித்துக்கொள்வார்’ என்று கூறுவார்கள். இதுகூட ஒரு விதத்தில் பொய்களை ஊக்குவிக்கும் செயல்தான். எனவே விளையாட்டுக்குகூட இப்படி செய்யாதீர்கள்
  ‘நாம் தவறு செய்தாலும், அதை மறைக்காமல் கூறினால் நம் பெற்றோர்கள் தண்டிக்க மாட்டார்கள்’ என்ற நம்பிக்கையையும் குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டும். தவறு செய்வது சகஜம். ஆனால் அதை மறைப்பதுதான் பெரும் குற்றம் என்ற எண்ணத்தை சிறு வயதில் இருந்தே ஆழமாக பதியவைக்க வேண்டும்.     இக்கட்டான நேரத்தில்கூட உண்மைகளைச் சொல்லும் குழந்தைகளைப் பாராட்டி, முடிந்தால் பரிசுகளும் வழங்கினால்   உண்மைக்கும் நேர்மைக்குமான மரியாதை குழந்தைகளிடம் அதிகரிக்கும். முடிந்தபோதெல்லாம்  நேர்மைதான் வெல்லும் என்ற எண்ணத்தை வளர்க்கக்கூடிய கதைகளை அவர்களுக்கு படித்துக் காட்டுங்கள்.

பொறுமை கடலினும் பெரிது
வாழ்க்கையில் வெற்றி பெற தேவையான முக்கிய விஷயங்களில் பொறுமையும் ஒன்று. பொறுமையாக இருப்பது எப்படி என்பதை பெற்றோர்களால் சொல்லிக் கொடுக்க முடியாது. வாழ்ந்துதான்  காட்ட முடியும். குழந்தைகளுடன் வாகனத்தில் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் பொறுமையிழந்து ஹாரனை அடித்துக்கொண்டே இருந்தாலோ, வீட்டில் சமையல் தாமதமாகும்போது மனைவியைப் பார்த்து கத்தினாலோ, பொறுமை விஷயத்தில் உங்கள் குழந்தைகளுக்கு தவறான முன்னுதாரணமாகி விடுவீர்கள். மாறாக எந்த கணத்திலும் நீங்கள் பொறுமையாக இருந்தால், உங்களைப் பார்த்து அவர்களும் கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுக்கு பொறுமை ஏற்பட   பிராணாயாமம், யோகா போன்ற விஷயங்களையும் கற்றுக்கொடுக்கலாம்.
 மதிக்கக் கத்துக்கணும்!
எல்லா பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.    ஆனால் பெரியவர்களிடம் மட்டுமின்றி  வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் தங்களை விட சிறியவர்களுக்கும் அவர்கள் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுங்கள். எக்காரணைத்தைக்  கொண்டும் யாரையும் கையால் மட்டுமின்றி வார்த்தைகளாலும் புண்படுத்தக் கூடாது என்ற எண்ணத்தை உங்கள் குழந்தைகள் மனதில் ஏற்படுத்துங்கள். அடுத்தவர்களை புண்படுத்த நேர்ந்தால் அடுத்த கணமே அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்துங்கள்
குடும்ப பாசம்
  குடும்ப உறவுகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசிய தேவை. தங்களைத் தாங்குவதற்கு நல்ல குடும்பம் இருந்தால், ஒரு மனிதனால் எத்தகைய சவாலையும் எளிதாக கடக்க முடியும். அப்படி ஒரு நல்ல குடும்பம் அமையவேண்டுமானால் நாமும் வீட்டில் உள்ள அனைவரிடமும் அன்பாகவும், பாசத்துடனும் இருக்கவேண்டும். சிற்சில விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டிய பாலபாடம்.
இப்போதெல்லாம் பல வீடுகளில் அப்பா, அம்மா ஒரு குழந்தை என்று குடும்பத்தின் அளவு சிறிதாகிக்கொண்டே வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு மற்ற உறவுகளைப் பற்றியும், அவர்களை அனுசரித்துச் செல்வது பற்றியும் தெரிவதில்லை. இந்த நிலை உங்கள் குழந்தைகளுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு விடுமுறையிலும் அவர்களை பல்வேறு கோச்சிங் கிளாஸ்களில் சேர்ப்பதற்கு பதில், உங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள். உங்களின் பெற்றோர்களான தாத்தா- பாட்டிகளிடமோ, அல்லது மற்ற உறவினர்களிடமோ அவர்கள் சில நாட்களை செலவிடும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்கள் மீது உங்கள் குழந்தைகளுக்கு அன்பும், அக்கறையும் ஏற்படும். அதேபோல் முடிந்தவரை உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு அவர்களையும் அழைத்துச் செல்லுங்கள். அவர்களை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைக்கு அவர்கள் எந்த விதத்தில் உதவியாக இருந்தார்கள் என்பதை பதிய வையுங்கள். இதனால் உங்கள் குழந்தைகளுக்கும் அவர்கள் மீது பிடிப்பு ஏற்படும். அவர்களும் குடும்ப பாசம் கொண்டவர்களாக வளர்வார்கள்.
உதவும் மனப்பான்மை
அறிவியல் வளர வளர மனிதர்களிடம் இருந்து உதவும் மனப்பான்மை  வேகமாக குறைந்து வருகிறது. சாலையில் ஒரு விபத்து நடந்தால்கூட, வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் எண்ணம் பலருக்கும் தோன்றுவதில்லை. இதே நிலை நீடித்தால் மனிதாபிமானம் என்ற விஷயமே இல்லாமல் போய்விடும். வரும் தலைமுறையிலாவது மனிதாபிமானம் காக்கப்பட வேண்டுமென்றால், பிறருக்கு உதவும் குணத்தை குழந்தைகள் மனதில் ஏற்படுத்த வேண்டும். ‘இன்று நீ அடுத்தவர்களுக்கு உதவினால்தான் நாளை அடுத்தவர்கள் உனக்கு உதவி செய்வார்கள்’ என்ற விஷயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். குழந்தைகளின் கண்பட நாமே மற்றவர்களுக்கு உதவி இந்த விஷயத்தில் அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
தன்னம்பிக்கை
உங்கள் குழந்தைகளுக்கு பல நல்ல குணங்கள் இருந்தும் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் எல்லாமே அடிபட்டுப் போய்விடும். எனவே அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். எந்த விஷயத்திலும் தாங்கள் சிறந்தவர்கள், தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். முடிந்தவரை கடைக்குப் போவது போன்ற சிறுசிறு வேலைகளை அவர்களிடம் கொடுத்து, எப்படி செய்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். அவர்கள் அதை சரியாக செய்யும் பட்சத்தில் பாராட்டத் தயங்கக்கூடாது. இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அதே நேரத்தில் கொடுத்த வேலையை அவர்கள் தவறாகச் செய்தா, ‘உன்னால இதுகூட செய்ய முடியலியே’ என்று திட்டக்கூடாது. மாறாக தட்டிக்கொடுத்து தவறுகளை நாசூக்காக சுட்டிக்காட்ட வேண்டும். இது அவர்கள் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


குழந்தைகளை நம்புங்கள்

உங்கள் குழந்தை எதிலும் வெற்றியாளராய் வர வேண்டுமானால் முதலில் அவர்களின் மனதில் தங்களால் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை வரவேண்டும். அந்த தன்னம்பிக்கை மட்டும் இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகளுக்கு எத்தனை ஆற்றல்கள் இருந்தாலும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க முடியாது. அத்தகைய தன்னம்பிக்கையை உங்கள் குழந்தையின் மனதில் விதைக்க சில வழிகள்;
குழந்தைகளை நம்புங்கள்
உங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மீது நம்பிக்கை வரவேண்டுமானால், முதலில் நீங்கள் அவர்களை நம்புங்கள். உங்கள் குழந்தை உங்களிடம் வந்து, ‘அப்பா நான்  ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளப் போகிறேன்’ என்று சொன்னால் அவர்கள்  முதுகில் தட்டிக்கொடுங்கள். “உன்னால் நிச்சயம் இதில் வெற்றி பெற முடியும்’  என்று  தட்டிக் கொடுத்து வாழ்த்துங்கள்.  அந்த போட்டியில் அவர்களால் வெற்றி பெற முடியாவிட்டாலும்,  ‘இப்போது தோற்றால் என்ன? அடுத்த முறை கண்டிப்பாக ஜெயிப்பாய்’ என்ற நம்பிக்கையை அளியுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் குழந்தையின் மனதில் தன்னம்பிக்கை ஜொலிக்கும்.
இதற்கு மாறாக,  தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ளப் போவதாக அவர்கள் கூறியதும், “நீ நடக்கும்போதே தடுக்கி விழற. இதுல ஓட்டப்பந்தயத்துல வேற சேர்றியா?” என்று மட்டம் தட்டினால், அவர்களின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் குலைந்துவிடும். எனவே உங்கள் குழந்தைகளால்  எத்தகைய  சவால்களையும் செய்து முடிக்க முடியும் என்று உறுதியாய்  நம்புங்கள். அதை வார்த்தைகளாய் அவர்களிடம் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான், ‘இந்த செயலை என்னால் முடிக்க முடியும் என்று என் பெற்றோர்களே கூறிவிட்டார்கள்” என்று கூடுதல் தன்னம்பிக்கையுடன் உங்கள் குழந்தை முயற்சி செய்யும்.
தோல்விகளை ஏற்க தயார்படுத்துங்கள்
உங்கள் குழந்தைகள் எந்த கட்டத்திலும் தோல்விகளால் துவளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக தோல்விகளின்போது உங்கள் குழந்தைகளின் மனோதைரியம் குறைய வாய்ப்புள்ளது. இந்த கட்டத்தில் பெற்றோர்கள்தான் ஆறுதலான வார்த்தைகளைக் கூறி குழந்தைகளை அதிலிருந்து  மீட்க வேண்டும். “வாழ்க்கையில் முயற்சி  செய்பவர்களுக்குத்தான் தோல்விகள் வரும். முயற்சிகளைத் தொடர்ந்தால், அந்த தோல்விகளை வெற்றியாக மற்ற முடியும். அதே நேரத்தில் தோல்விகளுக்கு பயந்து ஒருவர் முயற்சிகளே செய்யாமல் இருந்தால், அவரால் எதையும் சரியாகச் செய்ய முடியாது” என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.
இதுபற்றி இன்னும் விவரமாக குழந்தைகளுக்கு விளக்க வேண்டுமானால், “நீ ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போது அ, ஆ என்று ஒவ்வொரு எழுத்தையும் எழுதவே கஷ்டப்படுவாய். சரியாக எழுதாததற்காக பலமுறை அடிகளைக் கூட வாங்கியிருப்பாய். அதற்காக நீ அவற்றை எழுதிப் பழகும் முயற்சியை கைவிட்டாயா? அதைக் கைவிடாமல் தொடர்ந்து முயற்சிகளைச் செய்ததால்தானே இன்று பல எழுத்துகளைக் கொண்ட வரிகளை எழுத முடிகிறது” என்று கூறி ஊக்குவியுங்கள். இது அவர்களை மேலும் தன்னம்பிக்கையுடன் உழைக்க வைக்கும்.
குழந்தைகள் உங்களை கவனிக்கிறார்கள்
பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள்தான் ரோல் மாடல்.  அவர்களைப் பார்த்துதான் பல விஷயங்களை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். எனவே குழந்தைகள் முன்னிலையில் எந்த கட்டத்திலும் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். உதாரணமாக, வார இறுதியில் அவர்களுக்கு பிடித்த சினிமாவுக்கு அழைத்துச் செல்லும் வேளையில்,  அங்கு டிக்கெட் தீர்ந்துவிட்டால், “என்னால் உங்களை அழைத்துப் போக முடியவில்லையே” என்று  அவர்களிடம் புலம்பாதீர்கள். மாறாக, “சினிமா என்ன ஓடியா போகப் போகிறது. சினிமாவுக்கு பதில் இன்று உங்களுக்கு பிடித்த கடற்கரைக்கு போவோம். அடுத்த வாரம் நாம் இந்த படத்தை முன்கூட்டியே பதிவு செய்து பார்த்து விடலாம்” என்று  தன்னம்பிக்கையுடன் கூறுங்கள். நம்பிக்கை மனிதராகவே உங்கள் பிம்பம் அவர்கள் மனதில் பதிய வேண்டும்.
நல்லவற்றை கவனிக்க  வையுங்கள்
தங்களைச் சுற்றி நடக்கும்  நல்ல விஷயங்களையும், தங்களுக்கு நேர்ந்த நல்ல அனுபவங்களையும் பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தாலே, ஒருவருக்கு நல்ல எண்ணங்கள் தோன்றி, எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக்கொள்ளும். அதனால் உங்கள் குழந்தைகளின் மனம் நல்ல விஷயங்களில் மட்டும் செல்லுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
  குழந்தைகளுடன் சேர்ந்து சாலையில் நடந்து செல்லும்போது, அவர்கள் மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களைப் பார்த்து வரிசைப்படுத்தச் சொல்லுங்கள். அது சாலையோரத்தில் புதிதாக மலர்ந்துள்ள மலராகவோ, வேகமாகச் சென்ற சொகுசுக் காராகவோ அல்லது அவர்களின் மனம் கவர்ந்த ஐஸ்கிரீம் கடையாகவோ கூட இருக்கலாம். இப்படி அவர்களின் மனதைக் கவர்ந்த விஷயங்களை பட்டியலிட்டுச் சொல்வதை ஒரு வழக்கமாக கொள்ளுங்கள். இந்த முறையை தொடர்ந்து செயல்படுத்தினால், தாங்கள் வளர வளர தங்களைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை கவனிக்கும் அவர்களின் பண்பு அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்கள் அண்டவே அண்டாது.
உதவக் கற்றுக் கொடுங்கள்
மற்றவர்களுக்கு உதவ உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.  பிறருக்கு உதவுவதால் எப்படி தன்னம்பிக்கை உயரும் என்ற கேள்வி உங்கள் மனதில் ஏற்படலாம். நிச்சயம் இதனால் தன்னம்பிக்கை வளரும்.
தன்னைவிட வசதி வாய்ப்புகளில் குறைந்தவர்களுக்கு உதவும் போதுதான் ஒரு குழந்தைக்கு, தன்னை விடவும் தாழ்ந்தவர்கள், தனது உதவியைப் பெற்று வாழ்பவர்கள் உலகில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படும். மேலும் மற்றவர்களுக்கு உதவும் இடத்தில் நாம் இருக்கிறோம் என்ற எண்ணமும் ஏற்படும். அந்த எண்ணம் அவர்களின் தன்னம்பிக்கையை நிச்சயம் உயர்த்தும்.
பலத்தை சுட்டிக்காட்டுங்கள்
குழந்தைகளின் தவறுகளையும், அவர்களின் பலவீனத்தையும் சுட்டிக் காட்டுவதைவிட அவர்களின் பலத்தைச் சுட்டிக் காட்டுங்கள். உங்கள் குழந்தை சோர்வுடன் வந்து, “இன்று  எங்கள் பள்ளியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் நான் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தேன்” என்று புலம்பினால், அவர்களை ஆறுதல்படுத்துவதுடன், அன்றைய தினம் அவர்கள் மைதானத்தில் செய்த சிறந்த காரியம் ஏதாவது இருக்கிறதா என்று கேளுங்கள். அன்றைய போட்டியில் அவர்கள் கேட்ச் ஏதாவது பிடித்ததாக சொன்னால் அதைப் பற்றி பேசி பாராட்டுங்கள். ஒரு கேட்ச் பிடிப்பது 20 ரன்களைச் சேர்த்ததற்கு சமம் என்று  பாராட்டுங்கள்.   கடந்த போட்டியில் உங்கள் மகன் சிறப்பாக பேட்டிங் செய்த நாளைப்  பற்றி நினைத்துப் பார்க்கச் சொல்லுங்கள். சச்சின் டெண்டுல்கர்கூட சில போட்டிகளில் டக் அவுட் ஆகியிருக்கிறார் என்று கூறி தேற்றுங்கள். நிச்சயம் உங்கள் மகன் அடுத்த போட்டியில் தன்னம்பிக்கையுடன் பேட்டிங் செய்து நிறைய ரன்களைக் குவிப்பார்.
மேற்கூறிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் நிச்சயம் உங்கள் குழந்தைகளை தன்னம்பிக்கை உள்ளவர்களாய் மாற்றலாம்.



குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்

ஆரோக்கியமான வாழ்க்கை - இந்த வார்த்தையைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. வாழும் காலம் முழுமைக்கும் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது மனிதர்களின் முக்கிய கனவாகும். தாங்களே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் இன்னும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. தங்கள் ஆசைப்படி குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க பெற்றோர் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தூக்கம் முக்கியம்
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தூக்கம் மிகவும் முக்கியம்.  அடுத்த நாளுக்கு தேவையான ஆற்றலை இந்த தூக்கம்தான் குழந்தைகளுக்கு அளிக்கிறது. எனவே உங்கள் குழந்தைகள்  தினமும்  8 முதல்  10 மணிநேரம் வரை தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.  பள்ளிக்கு செல்லாத சிறு குழந்தைகள் தினமும் கொஞ்சம் அதிகமாக 13 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  சில குழந்தைகள் இரவில் தூக்கம் வரவில்லை என்று கூறி இரவில் நெடுநேரம் விழித்திருக்கும். இதுபோன்ற குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தூக்கம் வர, அவர்களை  தினமும் ஒரே நேரத்தில் படுக்கைக்கு அனுப்புங்கள்.
குழந்தைகள்  தூங்கச் செல்வதற்கு முன் வீட்டில் உள்ள டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை அணைத்து வையுங்கள். முடிந்தவரை குழந்தைகள் தூங்கச் செல்லும் நேரத்திலேயே பெற்றோரும் படுக்கை அறைக்கு சென்றுவிட வேண்டும். மாறாக குழந்தைகளை படுக்க அனுப்பிவிட்டு பெற்றோர்கள் டிவி பார்த்துக்கொண்டிருந்தால், அந்தச் சத்தமே குழந்தைகளின் தூக்கத்தை கெடுக்கும். எனவே முடிந்தவரை குழந்தைகள் தூங்கச் செல்லும்போதே பெற்றோரும் தூங்கச் செல்ல வேண்டும்.
உணவில் கவனம் செலுத்துங்கள்
துக்கத்துக்கு அடுத்தபடியாக நாம் அதிகம் கவனம் செலுத்தவேண்டிய விஷயம் குழந்தைகளின் உணவு. முடிந்தவரை சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். ஒரு சில வீடுகளில் ஃபிரிட்ஜ் இருக்கிறது என்பதாலேயே ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளையும், பழங்களையும் வீட்டில் வாங்கி வைத்து விடுகிறார்கள். இது தவறு. முடிந்தவரை பிரஷ்ஷான காய்கறி பழங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும். 2 நாட்களுக்கு மேல் அவற்றை ஃபிரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது.
குழந்தைகளுக்கு உணவைச் சாப்பிடுவதில் ஆர்வம் வரவேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு பிடித்த பொருட்களைச் சமைத்துக் கொடுக்கவேண்டும். சமைக்கும்போது அவர்களையும் உதவிக்கு வைத்துக்கொண்டால், அது அவர்களின் சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்கும். எனவே சமைப்பதில் குழந்தைகளின் பங்களிப்பும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இது ஃபாஸ்ட்புட் காலமாகி விட்டது. குழந்தைகளுக்கும் அந்த வகை உணவின் மீதுதான் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதைத் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில், ஹோட்டலில் அவற்றை வாங்கிக் கொடுக்காமல் வீட்டிலேயே சமைத்துக் கொடுப்பது ஓரளவுக்காவது குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காக்கும்.   நொறுக்குத் தீனிகளை முடிந்தவரை குறையுங்கள்.
ரிலாக்ஸான நேரங்களில் குழந்தைகளுடன் பேசும்போது நல்ல உணவுகளைச்  சாப்பிடுவது, அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கு எந்த வகையில் உதவும் என்பதை எடுத்துக் கூறுங்கள். உணவு விஷயத்தைப் பொறுத்தவரை குழந்தைகளை மிரட்டிச் சாப்பிட வைப்பதை விட, அவர்களாக விரும்பிச் சாப்பிடும் நிலையை ஏற்படுத்துவதுதான்  நல்லது. முடிந்தவரை குழந்தைகளுக்கான உணவில் இனிப்புகளை குறையுங்கள்.

உணவைப் போலவே குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு தண்ணீரும் மிக அவசியமாகும்.    4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் நாளொன்றுக்கு குறைந்தது 4 கிளாஸ் தண்ணீரையாவது அருந்த வேண்டும். குழந்தைகளின் வயது ஏற ஏற அவர்கள் குடிக்க வேண்டிய நீரின் அளவைக் கூட்டுவது மிகவும் அவசியம்.
வீட்டை காற்றோட்டமாக வையுங்கள்
ஒரு சில பெற்றோர்கள் வீட்டுக்குள் பூச்சிகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக, ஜன்னல்களையும், கதவுகளையும் எப்போதும் அடைத்து வைத்திருப்பர்கள். இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஆபத்தானது. அவர்கள் சுறுசுறுப்பாக, உற்சாகமாக இருக்கவேண்டுமானால் வீட்டுக்குள் காற்றும், வெளிச்சமும் நன்றாக வந்துசெல்ல வழி இருக்கவேண்டும். அதற்கு வீட்டின் ஜன்னல்களையும், கதவுகளையும் முடிந்தவரை திறந்து வைத்திருக்க வேண்டும். அப்படியே உங்களுக்கு பூச்சிகள் உங்கள் வீட்டுக்குள் நுழையும் என்ற பயம் இருந்தால், ஜன்னலை மூடிவைப்பதற்கு பதில் அவற்றில் மெல்லிய வலைகளை அடித்து வைக்கலாம்.
உடற்பயிற்சி நல்லது.

மனிதனின் வேலைகளை இயந்திரங்கள் குறைத்துள்ள இன்றைய காலகட்டத்தில், அவர்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சிகள் மிகவும் அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளுக்கும் இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதில் அர்வத்தை ஏற்படுத்துங்கள். எத்தனை வேலைகள் இருந்தாலும் அதிகாலை நேரத்தில் எழுந்து நடைப்பயிற்சிக்கோ, ஜாக்கிங்குக்கோ சென்றால், அது உங்கள் உடலுக்கு நல்லது.   நீங்கள் அப்படிச் செய்யும்போது உங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றால் அவர்களின் எதிர்கால அரோக்கியத்துக்கு நல்லது. உடற்பயிற்சி செய்வதுடன் காற்றோட்டமான இடங்களில் ஆடுவது, நீச்சலடிப்பது போன்ற செயல்களைச் செய்யவும் உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களின் உடலை மட்டுமின்றி மனதையும் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நோய்த் தொற்றில் இருந்து காப்பாற்றுங்கள்
நமக்கு தெரிந்த யாராவது ஒருவர் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தால் அவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறச் செல்வது நல்லதுதான். ஆனால் அந்த இடத்துக்கு உங்கள் குழந்தைகளையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது நல்லதல்ல. குழந்தைகளுக்கு நோய்கள் எளிதில் பரவும் என்பதால் நோயாளிகளைப் பார்க்கச் செல்லும்போது குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிருங்கள். முடிந்தவரை நோயாளிகளிடம் இருந்து உங்கள் குழந்தைகளை தள்ளிவையுங்கள். இது அவர்களுக்கு நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதே நேரத்தில் உங்கள் குழந்தைக்கே ஜுரம் போன்ற ஏதாவது நோய்கள் வந்தால், அது பரிபூரணமாக குடையும் வரை அவர்களை ஓய்வெடுக்க விடுங்கள்.   பாடம் போகிறது என்ற அவசரத்தில் நடுவிலேயே பள்ளிக்கு அனுப்பிவிடாதீர்கள் அது அவர்களின் உடல்நிலையை மேலும் பாதிக்கும். கூடவே அருகில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் அந்த நோய் பரவ வாய்ப்பு ஏற்படுத்தி விடும்.




பஜ்ரங் கொடுத்த குருதட்சிணை


  
சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு கவுரவம் சேர்க்கும் விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். மற்ற பிரிவுகள் இந்தியாவைக் கைவிட்டாலும் மல்யுத்தம் மட்டும் இந்தியாவை ஒருபோதும் கைவிட்டதில்லை. அந்த வரிசையில் ஜகார்த்தாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்து கவுரவப்படுத்தியுள்ளது மல்யுத்தம். இதை பெற்றுத் தந்தவர் பஜ்ரங் பூனியா.


ஹரியாணாவில் உள்ள குந்தன் கிராமத்தின் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் பஜ்ரங் பூனியா. அவரது ஊரில் மல்யுத்த வீரர்கள் பலர் உருவாகி சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர். அவர்களின் வரிசையில் தன் மகன்களான பஜ்ரங் பூனியாவையும், ஹரீந்தரையும்  சேர்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் பஜ்ரங்கின் தந்தையான பல்வான் சிங் பூனியா.  .
 பஜ்ரங்குக்கு 7 வயது இருக்கும்போதே அவரது அண்ணன் ஹரீந்தருடன்  உள்ளூரில் மல்யுத்த பயிற்சி அளிக்கும் அகாடாக்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார் பல்வான் சிங். மல்யுத்தத்தை விட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வாழும் வசதியான வாழ்க்கை பஜ்ரங்கை கவர்ந்துள்ளது. தினமும் ரொட்டி, தண்ணீர் கலந்த  பால் மட்டுமின்றி வேறு எந்த உணவும் கிடைக்காத தனது ஏழ்மை நிலையை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் மாற்ற முடியும் என்று நம்பினார் பஜ்ரங். இதனால் தந்தை அழைத்துச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களிலும் பள்ளிக்கு கட் அடித்து அகாடாவில் தவம் கிடந்தார். மல்யுத்த நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.

அகடாக்களில் அடிக்கடி போட்டிகள் நடக்கும். இதில் சிறுவர்களுக்கான  பிரிவில்  போட்டிகளில் வெற்றி பெற பஜ்ரங் பூனியாவுக்கு பரிசாக   ரூபாய் நோட்டுகள் கிடைக்க, மல்யுத்தத்தின் மீதான இவரது காதல் அதிகரித்தது. இந்த நேரத்தில் அவரது ஆற்றலைப் பார்த்து டெல்லியில் உள்ள சத்ராசால் மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு பஜ்ரங் பூனியாவுக்கு கிடைத்துள்ளது.

 “டெல்லியில் பயிற்சி பெற வாய்ப்பு கிடைத்ததும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  ரொட்டி, பால் மட்டுமே சாப்பிடும் சாதாரண வாழ்க்கையில் இருந்து இந்த பயிற்சி மையம் எனக்கு விடுதலை வாங்கிக் கொடுத்ததே என் மகிழ்ச்சிக்கு  முதல் காரணமாக இருந்தது. அடுத்ததாக இங்கு முறையாக பயிற்சி பெற்றால் வறுமை நிலையில் இருந்து குடும்பத்தையும் மீட்க   முடியும் என்று உறுதியாக நம்பினேன். இந்த மையத்தில் நான் பெற்ற வெற்றிகள் என் நம்பிக்கையை மேலும் அதிகரித்தன” என்கிறார் பஜ்ரங்.

இந்திய மல்யுத்த வீரர்களில் சுமார் 80 சதவீதம் பேரைக் கூர்தீட்டிய சத்ராசால் பயிற்சி மையம் பஜ்ரங் பூனியாவையும் மெருகூட்டியது. இந்தியாவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்களான சுஷில் குமார், யோகேஷ்வர் தத் போன்றவர்களுடன் மோதி பயிற்சிபெறும் வாய்ப்பு பஜ்ரங்குக்கு கிடைத்தது. அதிலும் அங்கிருந்த மூத்த வீரரான யோகேஸ்வர் தத்துக்கு அவரை மிகவும் பிடித்துவிட, தன் தம்பியைப் போலவே அவர் மீது பாசம் காட்டத் தொடங்கினார். சத்ராசால் பயிற்சி மையத்தில் பெற்ற அனுபவத்தால் தேசிய அளவிலான போட்டிகள் பலவற்றில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார் பஜ்ரங்.


உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவந்த அவர், 2013-ம் ஆண்டில் சர்வதேச மல்யுத்த அரங்கில் தடம் பதித்தார். இந்த ஆண்டில் புடாபெஸ்ட் நகரில் நடந்த உலக  மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதைத்தொடர்ந்து 2014-ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இன்சியானில் நடந்த ஆசிய போட்டியிலும் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. கூடவே ஹரியாணா காவல் துறையில் வேலையும் கிடைத்தது.  

2014-ம் ஆண்டில் சத்ராசால் பயிற்சி மையத்தை விட்டு விலகிய பூனியா, மூத்த வீரரும் தன் வழிகாட்டியுமான யோகேஷ்வர் தத்துக்கு சொந்தமாக கொஹானாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்துகொண்டார்.  ஏற்கெனவே ஆற்றல் மிகுந்த வீரராக இருந்த பஜ்ரங், யோகேஸ்வர் தத்தின் பயிற்சியால் மேலும் கூர் திட்டப்பட்டார். பாட்மிண்டனில்  சிந்துவையும், சாய்னாவையும் கோபிசந்த் செதுக்கியதைப் போன்று பஜ்ரங் பூனியாவை பார்த்துப் பார்த்து செதுக்கினார் யோகேஷ்வர் தத். குருநாதரிடம் கற்றது போக மீதமிருக்கும் நேரத்தில் தன் செல்போனில் சர்வதேச மல்யுத்த போட்டிகளின் வீடியோக்களைப் பார்த்து மேலும் பல நுணுக்கங்களை தெரிந்துகொண்டார் பூனியா.


ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரான யோகேஷ்வர் தத்திடம் சேரும் வரை 61 கிலோ எடைப்பிரிவில்தான் பஜ்ரங் பூனியா போட்டியிட்டு வந்தார். ஆனால் அதன் பிறகு அவர் 65 கிலோ எடைப்பிரிவுக்கு மாறினர். இதற்கு காரணம் யோகேஷ்வர் தத். “ஒலிம்பிக்கில் 61 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்த போட்டிகள் கிடையாது. 65 கிலோ எடைப்பிரிவில்தான் மல்யுத்த போட்டிகள் உள்ளன. இப்போது 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு வருகிறேன். சர்வதேச மல்யுத்த போட்டிகளில் இருந்து நான் விலக உள்ளதால், இப்பிரிவில்   இனி  நீ கலந்துகொள்ள வேண்டும்” என்று தன் பிரிய சிஷ்யனுக்கு கட்டளை இட்டிருந்தார் யோகேஷ்வர் தத். தன் குருவின் கட்டளைப்படியே 65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடத் தொடங்கிய பூனியா இந்த ஆண்டில் கோல்ட்கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அதே வேகத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 65 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

 “2014-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலும் 65 கிலோ எடைப்பிரிவில் யோகேஷ்வர் தங்கம் வென்றார். அவர் ஓய்வுபெற்ற நிலையில் இப்பிரிவில் நான் தங்கம் வெல்ல வேண்டும் என்று  ஆசைப்பட்டார். அதைப் பெற்றுத் தருவதாக நானும் வாக்கு கொடுத்திருந்தேன். அதன்படி காம்ன்வெல்த் போட்டியிலும், ஆசிய விளையாட்டு போட்டியிலும் அடுத்தடுத்து தங்கம் வென்று என் குருநாதருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன்” என்று பூரிப்புடன் சொல்கிறார் பஜ்ரங் பூனியா.

ஆசிய போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் யோகேஷ்வர் தத்துக்கு குருதட்சிணை கொடுத்துள்ளார் பூனியா. தன் குருநாதரைப் போலவே அடுத்ததாக ஒலிம்பிக்கிலும் அவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்போம்.





நல்ல மதிப்பெண் வாங்க குழந்தைகளுக்கு உதவுவது எப்படி?




பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு நெருங்கி விட்டது. இச்சமயத்தில் பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளைப் படிக்கவைக்க ஒரு பெரும் போரே நடக்கும். குறிப்பாக மற்ற நாட்களில் எல்லாம் குழந்தைகள் படிக்கிறார்களா என்பதைக்கூட சரியாக கவனிக்காத பெற்றோர்கள் இந்த தேர்வு நேரத்தில் தாங்களும் பதற்றமாகி குழந்தைகளையும் பதற்றமடையச் செய்யும் நிலையைக் காணலாம். இந்த நிலை உங்கள் வீட்டில் தொடராதிருக்க, குழந்தைகளை படிக்கவைக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம்:
ஆசிரியர்களிடம் பேசுங்கள்:
உங்கள் குழந்தைகளின் பள்ளிக்கு மாதம் ஒருமுறையாவது சென்று அவர்களின் ஆசிரியர்களைச் சந்தியுங்கள். வெளியுலகில் உங்கள் குழந்தையைப் பற்றி அதிகம் தெரிந்தவர்கள்  ஆசிரியர்கள்தான் என்பதால், அவர்களிடம் அடிக்கடி ஆலோசனை நடத்துவது நல்லது. குழந்தைகளின் படிப்பு தொடர்பாக எந்த சூழ்நிலையிலும் அவர்கள் உங்களை அணுக தேவையான நடவடிக்கைகளை எடுங்கள்.
ஒருசில பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் ஆங்கிலத்தில் பேசவேண்டி இருக்குமே என்ற தயக்கத்தில் அவர்களைச் சந்திப்பதை தவிர்ப்பர்கள். அது தவறு. உங்களின் தயக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் விட  குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமானது. ஆகவே உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும், ஆங்கிலம் தெரிந்த யாரையாவது வைத்து அவர்களுடன் பேசுங்கள். வகுப்பில் உங்கள் குழந்தையின் செயல்பாடு எப்படி உள்ளது, அவர்களின் திறனை மேம்படுத்த நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகள் படிக்கும்போது பக்கத்தில் இருங்கள்
 தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்துங்கள். என்னதான் தலைபோகும் வேலை இருந்தாலும் அந்த நேரத்தில் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்துங்கள். மிக முக்கியமாக குழந்தைகள் படிக்கும்போது பெற்றோரில் யாராவது ஒருவர் அருகில் இருக்க வேண்டும். முடிந்தால் குழந்தைகளுக்கு படிப்பில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெற்றோரும் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டிருப்பது நல்லது. இதனால், பெற்றோரும் தங்களுடன் சேர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு ஏற்படும். அவர்களும் உற்சாகமாக படிப்பார்கள்.
ஒருசில பெற்றோர்கள் குழந்தைகள் படிக்கும்போது தாங்களும் அருகில் இருக்கிறோம் என்ற பெயரில் அருகில் அமர்ந்து செல்போனையோ, லாப்டாப்பையோ  நோண்டிக்கொண்டு இருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயம். உங்கள் குழந்தைகளின் கவனத்தை இது திசைதிருப்பக்கூடும். எனவே குழந்தைகள் படிக்கும்போது,  செல்போன் லாப்டாப் போன்ற விஷயங்களை ஒதுக்கிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது நல்லது. பாடத்தில் அவர்கள் சந்தேகங்களைக் கேட்டால், ‘இதுகூட உனக்கு தெரியாதா’ என்று எரிந்து விழாமல் பொறுமையாக விளக்குங்கள்.
நல்ல சூழல் முக்கியம்
குழந்தைகள் படிக்கும்போது அதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குங்கள். ஒருசில வீடுகளில் குழந்தைகள் படிக்கும்போது, பெரியவர்கள் சத்தமாக டிவியை  வைப்பார்கள். அல்லது அந்த நேரத்தில் அக்கம் பக்கத்தினருடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.  இப்படிச் செய்வதால்  அவர்களின் கவனம் சிதற வாய்ப்புண்டு. எனவே குழந்தைகள் படிக்கும்போது டிவி, ரேடியோ,  டேப் ரிக்கர்டர் போன்றவற்றை சத்தமாக வைக்காதீர்கள். மேலும் படிக்கும் நேரத்தை ஒரு தண்டனைக்குரிய நேரமாக அல்லாமல் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து அறிவை வளர்த்துக்கொள்ளும் இனிய அனுபவமாக மாற்றுங்கள்.
நூலகங்களுக்கு செல்வதை ஊக்கப்படுத்துங்கள்
ஒவ்வொரு முறையும் தேர்வில் உங்கள் குழந்தை சிறப்பாக மதிப்பெண்களை எடுக்கும்போது, அவர்களைப் பாராட்டுங்கள். அதற்காக சிறு சிறு பரிசுகளை அளியுங்கள். இது உங்கள் குழந்தைகளை மேலும் ஊக்கப்படுத்தி, அடுத்த தேர்வில் இன்னும் சிறப்பாக செயல்பட வைக்கும். மாறாக அவர்கள் நல்ல மதிப்பெண்களை எடுக்கும் நேரத்தில் நாம் அவர்களை ஊக்குவிக்காவிட்டால் அது அவர்களை சோர்வடையச் செய்யும். பாடப் புத்தகங்களை தவிர மற்ற புத்தகங்களையும், செய்தித் தாள்களையும் படிக்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். அவர்கள் திரைப்படங்களுக்கோ, பூங்காக்களுக்கோ செல்வதை விட நூலகங்களுக்கு செல்வதை ஊக்கப்படுத்துங்கள். இது அவர்களின் பொது அறிவை வளர்க்க உதவும்.

வீட்டுப் பாடம் முக்கியம்
உங்கள் குழந்தைகள் தினமும்  வீட்டுப் பாடத்தை தொடர்ந்து ஒழுங்காக செய்கிறார்களா என்பதைக் கண்காணியுங்கள். குழந்தைகள் அதை  ஒழுங்காக செய்து முடித்தாலே அவர்களின் படிப்புச் சுமையில் பாதி குறையும். அதை அவர்கள் ஒழுங்காக செய்து முடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காகவே தினமும் சிறிது நேரத்தை ஒதுக்கி வையுங்கள். வீட்டுப் பாடத்தை குழந்தைகள் ஒழுங்காக செய்து முடிக்க அவர்களுக்கு உதவுங்கள். அதே நேரத்தில் அவர்களின் பளுவைக் குறைப்பதாக கருதி நீங்களே அவர்களுக்காக வீட்டுப் பாடத்தை எழுதிக் கொடுக்காதீர்கள். அதை அவர்களே செய்தால்தான், அதுபற்றிய முழுமையான புரிதல் அவர்களுக்கு ஏற்படும்.
லட்சியத்தை உருவாக்குங்கள்
குழந்தைகளிடம் அடிக்கடி மனம்விட்டு பேசுங்கள். நன்றாகப் படித்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம் என்பதைப் பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். குடும்பத்தின் தற்போதைய சூழல் என்ன? எத்தனை கடுமையான சூழலில் அவர்களை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறோம் என்பதை எடுத்துக் கூறுங்கள். வாழ்க்கையில் அவர்களுக்கென்று ஒரு லட்சியத்தை சிறிய வயதில் இருந்தே உருவாக்குங்கள். அந்த லட்சியத்தை நோக்கி அவர்கள் முன்னேற தூண்டுங்கள். குறிப்பிட்ட நாளில் என்னென்ன பாடங்களை படிக்கவேண்டும் என்ற அட்டவணையை போட்டு அவர்களைப் படிக்க வையுங்கள். குறிப்பாக தேர்வுக் காலத்தில் அவர்கள் மனதைப் பாதிக்கும் எந்த விஷயமும் வீட்டில் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மதிப்பெண்கள் குறைந்தால்...
இவை அனைத்தையும் தாண்டி தேர்வில்  உங்கள் குழந்தையின்  மதிப்பெண்கள் குறைந்தாலோ அல்லது அவர்கள் தோல்வி அடைந்தாலோ அவர்களைத் திட்டாதீர்கள். இதுபோன்ற நேரத்தில்தான் உங்களின் அரவணைப்பு  அவர்களுக்கு அதிகம் தேவை. இதுபோன்ற சமயங்களில்   அவர்களால் ஏன் அதிக மதிப்பெண்களைப் பெற முடியவில்லை என்ற கரணத்தைக் கேளுங்கள். அவர்கள் சொல்லும் காரணங்கள் உண்மையாக இருந்தால் அதைத் தீர்க்க முயலுங்கள். பாடத்தில் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்த்து வையுங்கள். உங்களால் அதற்கு முடியாவிட்டால், உங்களுக்கு தெரிந்த நன்கு படித்தவர்களிடம் அவர்களை அழைத்துப் போய் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள உதவுங்கள்.  எல்லாவற்றுக்கும் மேலாக, “உன் தோல்விகளின்போதும் நான் உன்னுடனேயே இருக்கிறேன்” என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். இப்படிச் செய்தல் அடுத்த முறை நிச்சயம் உங்கள் குழந்தை தேர்வில் நன்றாகச் செயல்படும்.

தந்தைக்காக வாங்கிய தங்கம்




ஆசிய விளையாட்டுப் போட்டி. குண்டு எறியும் பிரிவில்  ஒவ்வொரு வீரரும்  ஆக்ரோஷமாக குண்டை எறிந்துகொண்டிருக்க, இந்திய வீரரான தஜிந்தர் பால் சிங் டூரின்  மனதை மட்டும் அவரது அப்பா ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார். எலும்பு புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் அவரது அப்பா கரம் சிங் டூர்.  இந்தியாவை  விட்டு வெகுதூரத்தில் இருந்தாலும், தஜிந்தரின்  மனம் மட்டும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அப்பாவையே நினைத்துக் கொண்டிருந்தது. இதனாலோ என்னவோ முதல் 4 முறை அவரால் சரியாக குண்டை எறிய முடியவில்லை.

சோகத்துடன் பார்வையாளர்கள் வரிசையைப் பார்க்கிறார் தஜிந்தர். அங்கிருந்த அவரது பயிற்சியாளர் தில்லான், கோபம் கொப்பளிக்க தஜிந்தரை பார்க்கிறார்.   “இதற்காக நீ வெட்கப்பட்டு சாகவேண்டும்” என்று அவர் ஆவேசத்தில் கத்த, தஜிந்தருக்குள் வெறி ஏற்படுகிறது. அந்த வெறியுடன் அவர் குண்டை எடுத்து வீச, அது 20.75 மீட்டர் தூரத்துக்கு பறந்துபோய் விழுந்து அவருக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தருகிறது.

பதக்கம் கழுத்தில் விழுந்ததும் “இது என் தந்தைக்காக வாங்கிய தங்கம். விரைவாக இந்தியாவுக்கு சென்று  இந்த பதக்கத்தை தந்தையிடம் காட்ட வேண்டும். அவர் வாழும் காலத்துக்குள் மேலும் பல பதக்கங்களை வென்று அவரை மகிழ்விக்க  வேண்டும்” என்று கூறியுள்ளார் தஜிந்தர் பால் சிங் டூர். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. தந்தை மீது அவர் கொண்டிருந்த பாசம் அப்படி. தஜிந்தர் ஒரு விளையட்டு வீரராக உருவெடுக்க, அவரது தந்தை செய்த தியாகங்களும் அதிகம்.  


 1980-களில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோசா பாண்டோ கிராமத்தில் கரம் சிங் டூர் ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரர். ‘ஹீரோ’ என்று ஊர் மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அவர், கயிறு இழுக்கும் போட்டியில் மாநில அளவில் பல பதக்கங்களை வென்றவர்.   குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் விளையாட்டுத் துறையில்   ஈடுபட முடியவில்லை. குடும்பத்தை காப்பாற்ற விவசாயத்தில் ஈடுபட்ட அவர்,  தன்னால் சாதிக்க முடியாததை தனது மகன் தஜிந்தர் சாதிக்க வேண்டும் என்று விரும்பினார்.


தஜிந்தரும்  சிறு வயதிலேயே விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கினார். ஆனால் அவர் ஆர்வம் செலுத்திய விளையாட்டு கிரிக்கெட்டாக இருந்தது. சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்கின் தீவிர ரசிகராக இருந்த தஜிந்தர், அவர்கள் வழியில் தானும் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இது கரம் சிங்குக்கு பிடிக்கவில்லை. கிரிக்கெட் போன்ற குழு போட்டியை விட தனிப்பட்ட விளையாட்டுகளில்  தனது மகன் சாதிக்க  வேண்டும் என்பது அவரது விருப்பம். இதை தஜிந்தரிடம் சொல்ல, அவரும் உள்ளூரில் மிகப்பெரிய குண்டு   எறியும் வீரரான தனது மாமாவைப் போல குண்டு எறியும் போட்டியில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார்.


இதைத்தொடர்ந்து   தஜிந்தரை,   மொஹிந்தர் சிங் தில்லான் என்ற பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார் கரம் சிங். ஒருபுறம் தஜிந்தர் குண்டு எறியும் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட, மறுபுறம் அவரது பயிற்சிக்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்குமான செலவுகள் எகிறத் தொடங்கின. நாளொன்றுக்கு குறைந்தது 10 முட்டைகளுடன் சிறுவயதில் தொடங்கிய அவரது டயட், நாளாக ஆக பெருகிக்கொண்டே வந்துள்ளது. ஆனால் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கரம் சிங் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மகனின் வளர்ச்சிக்காக பணத்தை தண்ணீராய் செலவழித்துள்ளார்.
  

  தேசிய அளவிலான போட்டிகளில் தஜிந்தர் பங்கேற்கத் தொடங்க, அவருக்கான செலவுகளும் அதிகரிக்கத் தொடங்கியது, “குண்டு எறியும் போட்டியில் பங்கேற்க வாகாக காலில் அணியும் ஷூக்களின் விலை மட்டுமே ரூ.10 ஆயிரம். அதுவும் 3 மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது. மேலும் சத்தான உணவுகள், பயிற்சி செலவுகள் என்று மாதந்தோறும் 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.  என் அப்பா அத்தனை செலவுகளையும் சமாளித்தார். ஆனால் 2012-ம் அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட எனக்கு எதிர்காலமே இருண்டதுபோல் ஆனது. ஒருபுறம் அவரது மருத்துவச் செலவுகள், மறுபுறம் எனது பயிற்சிக்கான செலவு என்று மிகவும் திணறிவிட்டோம். ஆனால் அந்த கட்டத்திலும் விவசாயத்தைக் கவனித்து அப்பா என் செலவுகளை சமாளித்தார். இந்த இக்கட்டான நேரத்தில்தான் இந்திய கடற்படையில் என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார்கள். குண்டு எறியும் போட்டியில் கவனம் செலுத்த எனக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்தார்கள்” என்கிறார் தஜிந்தர்.

இந்திய கடற்படையில் இருந்துகொண்டே குண்டு எறியும் போட்டிகளில் கலந்துகொண்ட தஜிந்தர், இந்திய அளவில் கூடுதல் கவனம் பெறத் தொடங்கியது கடந்த 2017-ம் ஆண்டில்தான். 2017 ஜூன் மாதம் நடந்த தேசிய சீனியர் தடகளப் போட்டியில் 20.40 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து  அனைவரின் புருவத்தையும் உயரச் செய்தார் தஜிந்தர். இதைத்தொடர்ந்து  ஆசிய தடகளப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தஜிந்தரால், இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இடைக்காலத்தில்  தோல் புற்றுநோயில் இருந்து குணமான   தஜிந்தரின் அப்பாவை எலும்பு புற்றுநோய் தாக்கியது. இது மூளைக்கும் பரவிவிட அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்பாவின் உடல்நிலையை நினைத்து மனம் சோர்ந்திருந்த தஜிந்தரை அவரது பயிற்சியாளர் தில்லான்தான் தேற்றி ஆசிய போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கே செல்லவேண்டாம் என்று நினைத்திருந்த  தஜிந்தரை அழைத்துப் பேசிய தில்லான், “உனக்காக இந்திய அரசும் கடற்படையும் லட்சக்கணக்கில் செலவு செய்கிறது. அதுமட்டுமின்றி உன்மீது உன் அப்பா வைத்துள்ள நம்பிக்கையையும் காப்பாற்ற வேண்டும் அதற்காக நீ இந்த ஆசிய போட்டியில் பங்கேற்றே ஆகவேண்டும்” என்று கூறி இந்தோனேஷியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.  அங்கு அவர் தயங்கிய நிலையில் பார்வையாளர் பகுதியில் இருந்து அவரை உசுப்பேற்றி விட்டு தங்கப் பதக்கம் பெற வைத்துள்ளார்.

ஒரு புறம் குருநாதர், மறுபுறம் அப்பா என்று இரட்டைக் குதிரைகளின் மீது சவாரி செய்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார் தஜிந்தர்.

உங்கள் குழந்தை தவறு செய்தால்


இரண்டாவது குழந்தையை வரவேற்க முதல் குழந்தையை தயார்படுத்துவது எப்படி?



நீங்கள் ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஒரு நிறுத்தத்தில் அந்த பேருந்தில் புதிதாக ஏறும் நபர்,  உங்களிடம் வந்து சற்று நகர்ந்து அமர்ந்து தனக்கு இடம்விடச் சொன்னால் என்ன செய்வீர்கள்? நிச்சயம் உடனே நகர மாட்டீர்கள் ஒரு கணம் சிந்திப்பீர்கள் அவரை ஒருமுறை ஏற இறங்க பார்த்து, இந்தப் பயணத்தில் அருகில் அமர்ந்து செல்ல அவர் ஏற்ற துணைதானா என்று யோசிப்பீர்கள்.
ஒரு பேருந்து பயணத்துக்கே இப்படி என்றால் வாழ்க்கைப் பயணத்தில் இதை எப்படி எதிர்கொள்வது?  தாய் தந்தையின் மொத்த அன்பையும் பெற்று மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தையிடம்,  இனி அவர்களின் அன்பை உன்னுடன் பகிர்ந்துகொள்ள புதிதாக ஒரு குழந்தை பிறக்கப் போகிறது என்பதை அதன் மனம் புண்படாதபடி எப்படிச் சொல்வது?
  திடீரென்று ஒரு தம்பியோ, தங்கையோ பிறந்து தனது பெற்றோரின் அன்புக்கு போட்டியிடுவது எந்தக் குழந்தைக்கும் பிடிக்காது. எனவே ஒரு தாய், தான் கருவுற்றிருக்கும் செய்தியை மிகவும் பக்குவமாக தங்கள் மூத்த குழந்தையிடம் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போதே அந்த குழந்தை பிறப்பதால் ஏற்கெனவே உள்ள குழந்தைக்கு என்ன பயன், மூத்த அண்ணனாகவோ, அக்காவாகவோ முதல் குழந்தைக்கு உள்ள கடமைகள் என்ன என்பதை விளக்க வேண்டும்.
சிரமங்களைப் புரியவையுங்கள்
ஒரு குழந்தை எப்படி வயிற்றில் 10 மாதங்கள் தங்கியிருக்கும் என்பதையும், அந்த மாதங்களில் தாய் எப்படியெல்லாம் கஷ்டப்படுவார், அவருக்கு தாங்கள் எந்த வகையிலெல்லாம் உதவி செய்ய முடியும் என்பதை  முதல் குழந்தைக்கு  தாய் பொறுமையாக விளக்க வேண்டும். சாதாரணமாக தன்னை எப்போதும் ஆசையோடு தூக்கிக் கொஞ்சும் அம்மா, வயிற்றில் பாப்பா வந்ததும் அவ்வாறு தூக்குவதில்லையே என்ற ஏக்கம் குழந்தைக்கு ஏற்படலாம். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் வயிற்றில் குழந்தை உள்ள நிலையில் அவர்களை ஏன் தூக்கிக் கொஞ்ச முடியவில்லை? அப்படித் தூக்குவதால் அம்மாவுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை பொறுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். புதிய குழந்தையை வரவேற்க அவர்களை மனதளவில் தயார்படுத்த வேண்டும்.
எல்லா குழந்தைகளுக்கும் தாங்கள் சிறு குழந்தையாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும். எனவே 2-வது குழந்தையை கருவுற்றிருக்கும் நேரத்தில் முதல் குழந்தையின் சிறுவயதுக் காலத்தைப் பற்றி அவர்களுக்கு  விளக்குங்கள். அவர்களின் சிறுவயது ஆல்பங்கள், வீடியோ படங்கள் ஆகியவற்றை வைத்து சிறுவயதில்   செய்த சுட்டித் தனங்களைப் பற்றி விவரியுங்கள். அந்த வயதில் அம்மாவை விட்டு ஒரு விநாடிகூட பிரியாமல் அவர்கள் இருந்த காலத்தைப் பற்றி எடுத்துக்கூறுங்கள்.
 அவற்றை அந்த குழந்தை வாய்மூடாமல் ஆர்வமாக கேட்டுக்கொண்டு இருக்கும்போதே, “புதுசா வரப்போற பாப்பாவும் இதுமாதிரித்தான் செய்யும். அம்மாவைப் பிரிஞ்சு அதனால இருக்க முடியாது. அப்ப நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணணும். அம்மாவோட சேர்ந்து நீயும் அதைப் பார்த்துக்கணும் என்று அன்பாக எடுத்துக் கூறுங்கள். அம்மாவிடம் இனி தன்னைவிட புதிதாய் பிறக்கப்போகும் குழந்தைதான் அதிகம் இருக்கப்போகிறது என்ற தகவலை மெதுவாக புரியவையுங்கள்.
அவர்களையும் கலந்தாலோசியுங்கள்

 2-வது குழந்தை கருவிலிருக்கும்காலத்தில் அம்மாக்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் மூத்த குழந்தையையும் சேர்த்துக்கொள்வது அவசியம். வயிற்றில் வளரும் கருவை ஸ்கேன் செய்யச் செல்லும்போதுகூட அவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். திரையில் அந்தக் குழந்தை அசைவதை மூத்த குழந்தைக்கு காட்டி உற்சாகப்படுத்துங்கள். புதிய குழந்தைக்கான பெயரைத் தேர்ந்தெடுப்பது முதல் அவர்களின் தொட்டிலை அலங்கரிப்பது வரை அனைத்து விஷயங்களிலும் மூத்த குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள். அந்த குழந்தை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் கலந்தாலோசியுங்கள். இப்படி ஒவ்வொரு அசைவின் மூலமும் 2-வதாக வரப்போகும் குழந்தையின் வளர்ச்சியில் தங்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் பதிய வையுங்கள்.
அப்பாவுடன் இருக்க தயார்படுத்துங்கள்
பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளைக் மட்டுமே கொண்ட   சிறு குடும்பங்களில் அம்மாக்களையே பெரும்பாலும் சார்ந்திருப்பது குழந்தைகளின் குணம். ஒரு தாய் 2-வது குழந்தையை பெறும் நேரத்தில் முதல் குழந்தை மீது போதுமான அக்கறை செலுத்த முடியாது. எனவே அந்தத் தாய் கருவுற்றிருக்கும் நேரத்திலேயே, தங்கள் முதல் குழந்தை தந்தையிடம் அதிக நேரம் செலவழிப்பதுபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் தங்களின் தேவைகளை தந்தையர் மூலமே தீர்த்துக்கொள்ளும்படி பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அப்போதுதான் 2-வது குழந்தை பிறக்கும்போது, அது முதல் குழந்தையை அதிகம் பாதிக்காது. தந்தை மூலமே தங்கள் தேவைகளை அவர்கள் தொடர்ந்து தீர்த்துக் கொள்வார்கள்.
முன்கூட்டியே பயிற்சி அளியுங்கள்
2-வது குழந்தை பிறந்து தாய் மருத்துவமனையில் இருக்கும் காலத்தில் முதல் குழந்தையை வீட்டில் பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்துவிடுவது நல்லது. இந்தக் காலகட்டத்தில் அம்மா இல்லாமல் அப்பாவுடனோ, பாட்டியுடனோ வீட்டில் தனியாக இருக்க மூத்த குழந்தைகளுக்கு முன்கூட்டியே பயிற்சி அளிக்க வேண்டும். இதுபோன்ற காலக்கட்டத்தில் அம்மா ஊட்டிவிடாமல் தனியாக சாப்பிடுவது எப்படி, அம்மா இல்லாமல் தூங்குவது எப்படி என்பது குறித்து மூத்த குழந்தையிடம் முன்னதாகவே விளக்கி கூறிவிட வேண்டும்.
முதல் சந்திப்பில் கவனம் தேவை
புதிதாக பிறந்துள்ள குழந்தையைப் பார்க்க மூத்த குழந்தை முதல் முறையாக வரும் அனுபவம் மிகவும் முக்கியமானது. அந்த சமயத்தில் அம்மாவைத் தவிர வேறு யாராவது 2-வது குழந்தையை கையில் வைத்திருப்பது நல்லது. இதனால் மூத்த குழந்தையின் மனம் புண்படாமல் இருக்கும். தன் சகோதரனையோ, சகோதரியையோ பார்க்க வரும் முதல் குழந்தையை 2-வது குழந்தையிடம் அழைத்துச் செல்லும் தாய், பின்னர் ஒரே நேரத்தில் இருவரையும் செல்லமாக அணைப்பது, அவர்களுக்கு இதத்தைத் தரும். அதே போல் பிரசவத்துக்கு பின் வீட்டுக்கு வரும்போதும் குழந்தையை அம்மாவைத் தவிர வேறு யாராவது தூக்கி வருவது நல்லது. இதனால் அம்மா எப்போதும் புதிய குழந்தையை தூக்கிக்கொண்டு இருக்கிறார் என்ற எண்ணம் மூத்த குழந்தைக்கு வராமல் இருக்கும். 2-வது குழந்தை பிறப்பதற்கு முன்பே உங்கள் மூத்த குழந்தை தனது அப்பாவுடன் தனியாக படுத்திருக்கும் வகையில் பயிற்சி கொடுத்திருப்பது நல்லது.
பொதுவாக புதிதாக பிறந்த குழந்தையை பார்க்க வீட்டுக்கு வரும் விருந்தினர்கள், அதன் அழகைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். அதற்குப் பரிசுகளை வாங்கி வருவார்கள். இது உங்கள் குழந்தையை அதிகம் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். யாராவது   பார்த்து, “உங்கள் 2-வது குழந்தை மிகவும் அழகாக இருக்கிறது” என்று பாராட்டினால், அதற்கு “ஆமாம் எனக்கு இப்போது 2 அழகான குழந்தைகள் இருக்கின்றன” என்று கூறி இருவரையும் வாஞ்சையோடு அணைத்துக் கொள்ளுங்கள். இதனால் பாப்பாவைப் போலவே தன்னையும் அம்மா சமமாக நேசிக்கிறார் என்ற எண்ணம் முதல் குழந்தைக்கு ஏற்படும். அந்த எண்ணத்தை கடைசிவரை காப்பாற்றுங்கள்.



பெற்றோர் - குழந்தைகள் உறவு நெருக்கமாக....



குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் எந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள், எந்த அளவுக்கு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதில்தான் பெற்றோரின்  வெற்றி அடங்கியிருக்கிறது. குழந்தைகளிடம் இருந்து அன்பையும் மதிப்பையும் பெறுவது அத்தனை சுலபமான காரியமல்ல. இதை குழந்தைகளிடம் இருந்து பெற பெற்றோர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான சில வழிகளைக் காண்போம்:
குழந்தைகளின் விருப்பங்களை மதியுங்கள்
ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும். உதாரணமாக  தங்களுக்கு உடைகளை வாங்கச் செல்லும்போது, அவர்கள் குறிப்பிட்ட சில உடைகளை தேர்ந்தெடுப்பார்கள். உங்களுக்கு அந்த உடைகள் பிடிக்காமல் போகலாம். அல்லது அந்த உடைகள் மேட்சிங்காக இல்லாமல் இருக்கலாம். அதற்காக பலர் முன்னிலையில் அவர்களைத் திட்டவோ, அந்த உடைகளைப் பிடுங்கி தூக்கிப் போடவோ கூடாது. மாறாக அந்த உடைகள் எந்த வகையில் சிறப்பாக இல்லை என்பதை சொல்லிப் புரியவையுங்கள். அப்படியும் அதே உடையைத்தான் வாங்குவேன் என்று அவர்கள் அடம்பிடித்தால் அதற்கான காரணத்தை கேளுங்கள். அது அவர்களின் வயதுக்கு ஏற்ற வகையில் ஒப்புக்கொள்ளும்படி இருந்தால்  வீண் பிடிவாதம் பிடிக்காமல்  அந்த உடையை வாங்கிக் கொடுங்கள்.
அதேபோல் ஒரு சில குழந்தைகள்   பிடித்த விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்களின் படங்களை தங்கள் அறையில் ஒட்டி வைத்திருப்பார்கள். இதுபோன்ற அவர்களின் தேர்வுகளையும், விருப்பங்களையும் முடிந்தவரை மதியுங்கள். அவர்கள் செய்வது சரியில்லை என்று உங்களுக்கு தோன்றினால் பொறுமையாக விளக்கி புரியவையுங்கள். மாறாக எடுத்தவுடனே அவற்றை எதிர்த்தால் வீண்  மனஸ்தாபம்தான் ஏற்படும். இதனால் குழந்தைகளும் உங்களை வெறுக்கத் தொடங்கிவிடும்.

குழந்தைகளைக் கட்டி அணையுங்கள்
அன்புக்காக ஏங்கும் இதயம் குழந்தைகளுடையது. ஆனால் சில பெற்றோர்கள், குழந்தைகள் மீது பாசத்தைப் பொழிந்தால் அவர்கள் கெட்டுப் போய் விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். அதன் காரணமாக உள்மனதில் குழந்தைகள் மீது அன்பு இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் கண்டிப்புடன் இருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயமாகும். இதன் காரணமாக பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான நெருக்கம் குறைய வாய்ப்பு உண்டு.
எனவே முடிந்தவரை  குழந்தைகள் மீது அன்பு காட்டுங்கள். அவர்கள் மீது எத்தனை பாசமாக இருக்கிறோம் என்பதை அவர்களிடம் எடுத்துக் கூறுங்கள். அப்போதுதான் பிற்காலத்திலும் அவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவார்கள்.  குழந்தைகள் மீதான அன்பை வெளிப்படுத்த  மிகச்சிறந்த உபாயம் அவர்களை கட்டி அணைப்பது. பெற்றோர்களின் பாசமான அணைப்பு குழந்தைகளின் மனதில் அன்பு மலர்களை பூக்கவைக்கும். எனவே தினந்தோறும் அவர்கள் படுக்கையில் இருந்து எழும்போது, பள்ளிக்கு செல்லும்போது, இரவில் படுக்கச் செல்லும்போது என்று எப்போதெல்லாம் முடியுமோ, அப்போதெல்லாம் அவர்களைக் கட்டியணைத்து உங்கள் அன்பைப் பரிமாறுங்கள். இதுபோல் முதுகில் தட்டிக் கொடுப்பது, புன்னகைப்பது, தலையைக் கோதி விடுவது போன்ற செய்கைகளாலும் பெற்றோர்கள் தங்கள் அன்பை அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும். அவர்களுக்கு  தேவைப்படும் நேரத்தில்  ஆதரவாக இருக்க தாங்கள் இருக்கிறோம் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்.   
குழந்தைகள் எதைச் செய்தாலும் உற்சாகப்படுத்துங்கள்
அன்புக்கு அடுத்தபடியாக குழந்தை அதிகம் விரும்புவது, அடுத்தவர்கள், குறிப்பாக பெற்றோர்கள் தங்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதுதான். எனவே உங்கள் குழந்தை ஒரு சிறிய நல்ல விஷயத்தைச் செய்தாலும் உற்சாகப்படுத்துங்கள். அதைப்பற்றி மற்றவர்களிடம் பெருமையாக கூறுங்கள். அது அவர்களை பல்வேறு புதிய முயற்சிகளைச் செய்யத் தூண்டும். அந்த புதிய முயற்சிகளில் அவர்கள் கொஞ்சம் சறுக்கினாலும், அவர்களை விமர்சிக்காதீர்கள். மாறாக அந்த முயற்சியில் அவர்கள் செய்த தவறு என்ன என்பதை விளக்கி, அடுத்த முறை அந்த தவறு மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர்கள் எந்த கட்டத்திலும் தங்களுக்கு துணையாக  இருப்பர்கள் என்ற  நம்பிக்கையை குழந்தைகளுக்கு அளியுங்கள். இது குழந்தைகளுடனான பெற்றோரின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்கும்.
குழந்தைகளுடன் விளையாடுங்கள்
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று விளையாட்டு. குழந்தைகளுடன் எந்த அளவுக்கு விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடன் பெற்றோர்கள் நெருக்கமாக முடியும். எனவே முடிந்தவரை தினமும் 1 மணிநேரமாவது டிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற நவீன உபகரணங்களை அணைத்து வைத்து விட்டு குழந்தைகளுடன் பேசிச் சிரித்து விளையாடுங்கள். இது அவர்களுடன் உங்களை நெருக்கமாக்கிக் கொள்வதுடன், உங்கள் மனதையும் லேசாக்கும். முடிந்தவரை இரவு உணவுக்குப் பின் குழந்தைகள் படுக்கைக்கு செல்லும்முன் அவர்களுடன் விளையாடுவது நல்லது. இந்த நினைவுகள் அவர்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்து பெற்றோர் மீதான பாசத்தையும், நெருக்கத்தையும் அதிகரிக்கும்.
குழந்தைகளை மதியுங்கள்
குழந்தைகள் பெரியவர்களை மதிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கும் விஷயம். அதே நேரத்தில் பெரியவர்களும் குழந்தைகளை மதிக்க வேண்டும். எந்த நேரமும் ஒரு நாட்டாமையாக நடந்துகொண்டு, ‘நான் சொல்வதுதான் சரி. அதை வீட்டில் உள்ள குழந்தைகள் மதித்து நடக்க வேண்டும்’ என்று பெற்றோர்கள் கட்டளையிடக் கூடாது. ஒரு சினிமாவுக்கு செல்வதாக இருந்தால்கூட, அந்தச் சினிமாவுக்கு செல்ல குழந்தைகளுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதை தெரிந்துகொண்டு அதன் பிறகுதான் முடிவெடுக்க வேண்டும். மாறாக பெற்றோர்களின் கருத்துகளை குழந்தைகள் மீது எக்காலத்திலும் திணிக்கக் கூடாது.
பரஸ்பர நம்பிக்கை அவசியம்
எந்த ஒரு உறவும் நெருக்கமாக இருக்க வேண்டுமானால் பரஸ்பர நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம். பெற்றோர்கள் குழந்தைகளையும், குழந்தைகள் பெற்றோரையும் தீவிரமாக நம்ப வேண்டும். குழந்தைகளிடையே பெற்றோர் மீதான நம்பிக்கை அதிகரிக்க வேண்டுமானால், அவர்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை பெற்றோர்கள் நிறைவேற்ற வேண்டும். எந்த காலத்திலும் அந்த வாக்குறுதிகளை மீறக் கூடாது. உதாரணமாக ஒரு தேர்வில் சிறப்பாக மதிப்பெண் வாங்கினால், மிதிவண்டி வாங்கித் தருவதாக குழந்தைகளுக்கு வாக்குறுதி அளித்தால், அவர்கள் நல்ல மதிப்பெண் வாங்கும்போது அதை கட்டாயம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டு. இல்லாவிட்டால் பெற்றோர் தீதன குழந்தைகளின் நம்பிக்கை தகர்ந்துவிடும். அதுவே உறவுப்பாலம் தகரவும் காரணமாக அமைந்துவிடும்.