Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - ஏப்ரல் 10 - ஏப்ரல் 13

 ஏப்ரல் 10 

கேப்டனை மாற்றாத சூப்பர் கிங்ஸ் 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களின் முதல் போட்டியில் ஆடவுள்ளது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்: 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கிய காலம் முதல், இதுவரை தங்கள் கேப்டனை மாற்றாத ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ்தான். முதல் தொடரில் இருந்து இதுவரை அந்த அணியின் கேப்டனாக  தோனியே நீடிக்கிறார். 

 போட்டிகளின்போது எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் போட்டி விதிகளை முழுமையாக கடைபிடித்து ஆடியதற்காக அதிக முறை (6 முறை) ஃபேர் பிளே அவார்ட் வாங்கிய அணி என்ற பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ளது. அத்துடன் சென்னை அணி ஐபிஎல் தொடரில் 8 முறை இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 

தங்கள் சொந்த மைதானத்தில் (சென்னை) அனைத்து போட்டிகளையும் வென்ற ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. 2011-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சென்னையில் நடந்த அனைத்து போட்டிகளிலும் வென்று, சென்னை அணி இந்த சாதனையை படைத்துள்ளது. 

 ஒரே தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையும் சென்னை வீரருக்கே உள்ளது. 2013-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்களை வீழ்த்தி பிராவோ இந்த சாதனையை படைத்துள்ளார்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸியில் மதுபான நிறுவனம் ஒன்றின் லோகோ அச்சிடப்பட்டுள்ளது. தான்  மதுபானங்களுக்கு எதிரான கொள்கை உள்ளவன் என்பதால், அந்த லோகோவை தனது ஜெர்ஸியில் அச்சிடக் கூடாது என்று மொயின் அலி, அணி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார். அவரது உணர்வுகளுக்கு மதிப்பளித்த அணி நிர்வாகம், அவரது ஜெர்ஸியில் இருந்து மட்டும் அந்த லோகோவை நீக்கியுள்ளது. 

ஏப்ரல் 11 

 

ரசிகராக சென்று பதக்கம் வென்ற வீரர்  

1896-ல் நடந்த முதலாவது ஒலிம்பிக்ஸில், ஆண்களுக்கான டென்னிஸ் போட்டியில் முதல் தங்கப்பதக்கத்தை ஜான் பியஸ் போலண்ட் கைப்பற்றினார். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இவர், இங்கிலாந்துக்காக ஏப்ரல் 11, 1896-ல் இந்த தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 

 

ஜான் பியஸ் போலண்ட், டப்ளின் நகரில் பிறந்தவர். தனிப்பட்ட டியூஷன் மூலம் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர், பின்னர் பிர்மிங்காமில் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். இதைத்தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை படித்தார்.  ஜான் லூயிஸைப் பொறுத்தவரை, இளம் வயதில் அவருக்கு விளையாட்டுகளின் மீது அதிக ஆர்வம் இருந்ததில்லை. பொழுதுபோக்குக்காக டென்னிஸ் மட்டும் ஆடிவந்துள்ளார்.  இந்த சூழலில் அவர் பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருந்த காலத்தில், முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸில் நடக்கவுள்ளதாக கேள்விப்பட்டார். இதைத்தொடர்ந்து அந்த ஒலிம்பிக் போட்டியை பார்ப்பதற்காக அவர் ஏதென்ஸ் நகருக்கு பயணமானார். 

  

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, கிரேக்க தடகள வீரர் ஒருவருடன் இரவு உணவு உண்பதற்காக ஜான் லூயிஸ் சென்றுள்ளார். அவருடன் பேசும்போது, ஒலிம்பிக்கில்  டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்க போதுமான வீரர்கள் முன்வரவில்லை என்று கேள்விப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த ஒலிம்பிக்கில், டென்னிஸ் போட்டியில் தான் பங்கேற்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியுள்ளது. 

 

இதைத்தொடர்ந்து ஆண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டியில் பங்கேற்க, இவர் பெயர் கொடுத்துள்ளார். தொழில்முறை டென்னிஸ் வீரர் இல்லை என்பதால், போட்டிகளின் போது அணிவதற்கான சரியான காலணிகள்கூட இவரிடம் இல்லை. இருப்பினும் இப்போட்டியில் அதிர்ஷ்டம் அவரது பக்கம் இருந்தது. ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் அவர் வெற்றி பெற்றார். 

இதே டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் ஜெர்மனி அணியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீரருடன் இணைந்து விளையாடிய ஜான் லூயிஸ், இதிலும் தங்கப்பதக்கத்தை வென்றார். 

--------------------------------------------------------------------------------------------------- 

 ஏப்ரல் 12 

 

இந்தியா துரத்திய இமாலய இலக்கு 

 

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 4-வதாக பேட்டிங் செய்யும் அணிகள் 250 ரன்களை எட்டுவதே பெரிய  விஷயமாக உள்ளது. இதனாலேயே டாஸில் வெற்றி பெறும் அணிகள் பெரும்பாலும் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுக்கும். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையில் 4-வதாக  பேட்டிங் செய்து, 406 ரன்களைத் துரத்திப் பிடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 1976-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் இந்திய அணி இச்சாதனையைப் படைத்தது. 

 

இந்திய அணிக்கு கவாஸ்கர் வந்து சேர்ந்த காலம் அது. அவருக்கு துணையாக அப்போது குண்டப்பா விஸ்வநாத்தும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றிபெற, இரண்டாவது போட்டி டிராவில் முடிந்தது.  

இந்தச் சூழலில் 3-வது டெஸ்ட் போட்டி குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் மேற்கிந்திய தீவுகள் அணி 359 ரன்களையும், இந்தியா 228 ரன்களையும் சேர்த்தது. இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, காளிசரணின் சதத்தின் உதவியால் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களை எடுத்தது. இந்திய அணி வெற்றிபெற வேண்டுமானால் 406 ரன்களை எடுக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் அதிகபட்ச சேஸிங்காக 256 ரன்களே இருந்தன. 

  

முதல் இன்னிங்ஸில் குறைந்த ரன்களில் சுருண்ட இந்தியாவை, 2-வது இன்னிங்ஸில் மேலும் குறைந்த ரன்களில் சுருட்டலாம் என்று மேற்கிந்திய பந்துவீச்சாளர்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக விஸ்வரூபம் எடுத்து நின்றது இந்திய பேட்டிங் வரிசை. கவாஸ்கர் 102 ரன்களையும், விஸ்வநாத் 112 ரன்களையும் குவிக்க 4 விக்கெட் இழப்புக்கு 406 ரன்களைக் குவித்து வெற்றி பெற்றது இந்தியா. 

 

 

 ஏப்ரல் 13 

செஸ் ராஜா கேரி காஸ்பரோவ்  

இந்தியாவின்   விஸ்வநாதன் ஆனந்துக்கு முன்பு, செஸ் உலகில் கொடிகட்டிப் பறந்தவரான ரஷ்ய வீரரான  கேரி காஸ்பரோவின் பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 13). இன்றைய தினம் அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்: 

அஜர்பைஜானில் உள்ள பாகு என்ற ஊரில் 1963-ம் ஆண்டு கேரி காஸ்பரோவ் பிறந்தார். சுறு வயதில் தனது பெற்றோர் சதுரங்க விளையாட்டில் ஈடுபடும்போது அதை வேடிக்கை பார்ப்பது காஸ்பரோவின் வழக்கம். அப்போது  அவர்கள் சிக்கலான சூழ்நிலையில் இருக்கும்போது காஸ்பரோவ் ஆலோசனைகளைக் கூறுவாராம். இதைப் பார்த்த காஸ்பரோவின் பெற்றோர், அவர் மிகச்சிறந்த செஸ் வீரராக வருவார் என்று கணித்து, அருகில் உள்ள செஸ் அகாடமியில் சேர்த்துள்ளனர். 7 வயதில் தந்தை இறந்த பிறகு, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார் கேரி காஸ்பரோவ். 

1976-ம் ஆண்டில் நடந்த சோவியத் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவ், பிறகு உள்ளூரில் புகழ்பெற்ற செச் வீரரான அலெக்ஸாண்டர் ஷகாரோவிடம் பயிற்சி பெற்றுள்ளார். 1984-ம் ஆண்டில் 2,710 புள்ளிகளுடன் உலக செஸ் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 1985-ம் ஆண்டுமுதல் பலமுறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 

செஸ் விளையாட்டு மட்டுமின்றி, அரசியலிலும் காஸ்பரோவ் கவனம் செலுத்தினார். 1984-ம் ஆண்டு சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த காஸ்பரோவ், 1987-ல் அதன் மத்திய கமிட்டி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1990-ல் அக்கட்சியில் இருந்து விலகினார். 

சர்வதேச செஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, மீண்டும் தீவிர அரசியைலில் ஈடுபட்ட காஸ்பரோவ், 2005-ல் அந்நாட்டு அதிபர் புடினுக்கு எதிராக யுனைடட் சிவில் பிரண்ட் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் செஸ் விளையாட்டில் சாதித்த அவரால், அரசியலில் பெரிதாக சாதிக்க முடியவில்லை.  2007-ல் ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த காச்பரோவ், பின்னர் அதிலிருந்து பின்வாங்கினார். 

விளையாட்டாய் சில கதைகள் ஏப்ரல் 6 - ஏப்ரல் 9

 ஏப்ரல் 6 

ஒலிம்பிக் போட்டி தொடங்கிய நாள்  

உலகில் நாகரீகம் வளர்வதற்கு முன்பே, கிமு 776-ல் சில நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகள் கிரேக்க நாட்டில் நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் காலம் செல்லச் செல்ல, இப்போட்டியின் மதிப்பு குறைந்து பின்னர் ஒலிம்பிக் போட்டிகளே நின்று போனது.  

இதைத்தொடர்ந்து நவீன யுகத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த கிரேக்க நாட்டினர் 18-ம் நூற்றாண்டு முதல்  முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இதன் தொடக்கமாக உள்ளூர் இளைஞர்கள் கலந்துகொண்ட போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பைரே டி குபெர்டின் என்பவர், நவீன ஒலிம்பிக் போட்டிக்கான அடிப்படை விதிகளை  வகுத்தார். 1892-ம் ஆண்டில் சர்வதேச விளையாட்டு அமைப்புகளிடம், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்குவது பற்றி அவர் விவாதித்தார். இதைத்தொடர்ந்து 1894-ம் ஆண்டில் அடந்த சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் கூட்டத்தில், ஒலிம்பிக் போட்டியை மீண்டும் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து 1896-ம் ஆண்டு, ஏப்ரல் 6-ம் தேதி முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதன்ஸ் நகரில் தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டியில் சைக்கிளிங், கத்திச் சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், தடகளம், பளுதூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகிய 9 பிரிவுகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன. 13 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.  முதல் நாளன்று நடந்த டிரிபிள் ஜம்ப் போட்டியில் (மும்முறை தாண்டும் போட்டி) அமெரிக்க தடகள வீரரான ஜேம்ஸ் கோனோளி தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த உயரம் தாண்டும் போட்டியிலும் பங்கேற்ற ஜேம்ஸ் கோனோளி, இதில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏப்ரல் 7 

ஜெயசூர்யாவின் அதிரடி அரைசதம் 

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை இலங்கை வீரர் சனத் ஜெயசூர்யா படைத்த நாள் ஏப்ரல் 7. 

1996-ம் ஆண்டு நடந்த சிங்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 17 பந்துகளில் அரைசதம் எடுத்து ஜெயசூர்யா இந்த சாதனையைப் படைத்தார். 

 இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெயசூர்யாவின் புகழ் உச்சத்தை தொட்ட ஆண்டு என 1996-ஐ கூறலாம்.  இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அவர்,  தனது அதிரடி ஆட்டத்தால்  பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். இந்த சூழலில் சிங்கப்பூரில் நடந்த சிங்கர் கோப்பைக்கான கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை சந்தித்தது இலங்கை. 

டாஸில் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.  முதலில் ஆடிய பாகிஸ்தான் அணியால்  215 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை அணி களம் இறங்க, முதல் ஓவரிலேயே வகார் யூனுஸின் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி, தான் சூப்பர் பார்மில் இருப்பதை பாகிஸ்தானுக்கு கோடிட்டு காட்டினார் சனத் ஜெயசூர்யா. இதைத்தொடர்ந்து அடார் உர் ரஹ்மான் வீசிய ஒரு ஓவரில் 3 சிக்சர்கள் உட்பட 22 ரன்களைக் குவித்த ஜெயசூர்யா, 17-வது பந்திலேயே அரைசதம் அடித்து, மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் ஜெயசூர்யா 76 ரன்களைக் குவித்தபோதிலும், பாகிஸ்தானின் வலுவான பந்துவீச்சுக்கு இலங்கை அணியால் பதில் சொல்ல முடியவில்லை. 172 ரன்களில் இலங்கை அணி ஆல் அவுட் ஆக சிங்கர் கோப்பையை பாகிஸ்தான் வென்றது. 

ஏப்ரல் 8 

சாஸ்திரி செய்த சமாதானம் 

எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல் என்று தமிழ் சினிமாவில் காலம் காலமாக இரு துருவங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம். அதேபோல் இந்திய கிரிக்கெட்டிலும் கபில்தேவ் – கவாஸ்கர், தோனி – யுவராஜ் சிங், விராட் கோலி – ரோஹித் சர்மா என்று எல்லா காலகட்டத்திலும் இரு துருவங்கள் உள்ளன. 

 இதில் கடந்த சில காலமாக கோலி – ரோஹித் சர்மா இடையே தனிப்பட்ட முறையில் மோதல் இருந்ததைப்போல சித்தரிக்கப்பட்டு வந்தன. அவர்களின் சில நடவடிக்கைகளும் இதை உறுதிப்படுத்துவதாய் இருந்தன.  குறிப்பாக சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடருக்கு முதலில் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்படவில்லை. காயம் காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தேர்வாளர்கள் கூறிய நிலையில், ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா ஆடியது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கோலியிடம் செய்தியாளர்கள் கேட்க, ரோஹித் சர்மாவின் காயம் எந்த அளவுக்கு உள்ளது என்பது தனக்கு தெரியாது என்றார். தனது அணியில் ஆடும் வீரருக்கு என்ன நடந்தது என்றுகூட கேப்டனுக்கு தெரியாதா என்ற விமர்சனம் எழுந்தது. 

அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடும் வீரர்களை வைத்து ரோஹித் சர்மா அணிக்குள் அரசியல் செய்வதாக அவர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன.  

இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த  இங்கிலாந்து தொடர், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இத்தொடரில் போட்டிகளின்போது ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.   

இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இருவரின் இந்த மாற்றத்துக்கு காரணம் ரவி சாஸ்திரிதான் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து தொடருக்கு முன்பிருந்த  பயோ பபிள் காலத்தில் இருவரையும் அழைத்து சாஸ்திரி சமாதானம் செய்ததாகவும், அதன் பிறகே இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------   

 ஏப்ரல் 9 

ஒலிம்பிக்கில் முதல் இரட்டைத் தங்கம்

முதலாவது ஒலிம்பிக் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவுக்காக  2 தங்கப்பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையை பெற்றவர் எட்வின் பிளாக். இந்த 2 தங்கப்பதக்கங்களையும் அவர் வென்ற நாள் ஏப்ரல் 9, 1896. 800 மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் அவர் இந்த தங்கப்பதக்கங்களை வென்றார். 

 எட்வின் பிளாக் லண்டன் நகரில் பிறந்தவர். இருப்பினும் எட்வின் குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது. மெல்பர்ன் நகரில் உள்ள பள்ளியில் படித்த எட்வின் பிளாக், படிக்கும் காலத்திலேயே தடகள போட்டிகளில் சிறந்தவராக விளங்கினார். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ‘பிரைஸ் அண்ட் வாட்டர்ஹவுஸ்’ என்ற நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக 1895-ல் லண்டன் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் பிளாக். 

தனது விளையாட்டு ஆர்வம் காரணமாக, லண்டனில் உள்ள தடகள கிளப்பில் இணைந்த எட்வின் பிளாக், இங்கிலாந்தில் நடந்த பல்வேறு தடகள போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தார். இந்த நேரத்தில்தான் ஏதென்ஸ் நகரில் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பதைக் கேள்விப்பட்டார். ஆஸ்திரேலியாவின் சார்பில் இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அவர் விருப்பம் தெரிவித்தார். 

இந்த ஒலிம்பிக் போட்டியில், ஆஸ்திரேலியாவின் சார்பில் பங்கேற்ற ஒரே வீரரான எட்வின் பிளாக், 800 மீட்டர் ஓட்டத்தில் 2 நிமிடம் 11 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதைத்தொடர்ந்து நடந்த 1,500 மீட்டர் ஓட்டத்திலும் வெற்றி அவரது வசமாகியது.  

இந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் உற்சாகமடைந்த எட்வின், மாரத்தான் போட்டியிலும் பங்கேற்றார். ஆனால் நீண்டதூரம் ஓடிப் பழக்கம் இல்லாததால், அவரால் வெற்றி பெற முடியவில்லை. 

தடகளப் போட்டிகள் மட்டுமின்றி, டென்னிஸ் போட்டியிலும் ஆஸ்திரேலியா சார்பாக அவர் போட்டியிட்டார். ஆனால் இதிலும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.  பிற்காலத்தில் ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக மாறிய எட்வின் பிளாக், தனது 62-வது வயதில் காலமானார். 

 ---------------------------------------------------------------------------------------- 

விளையாட்டாய் சில கதைகள் ஏப்ரல் 2 - ஏப்ரல் 5

 ஏப்ரல் 2 

மகுடம் சூடிய இந்தியா  

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-வது முறையாக மகுடம் சூடிய நாள் ஏப்ரல் 2, 2011. 

இந்திய கிரிக்கெட் அணி, முதல் முறையாக 1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு 28 ஆண்டுகள், அந்த கோப்பையை இந்தியாவால் வெல்ல முடியவில்லை. குறிப்பாக  2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில்,  முதல் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த சமயத்தில் தோனியை கேப்டனாக கொண்டு, இளம் வீரர்கள் அதிகம் கொண்ட இந்திய அணியை உருவாக்கும் முயற்சியில் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு ஈடுபட்டது. 

 டிராவிட், கங்குவி, லக்ஷ்மண் போன்ற மூத்த வீரர்கள் ஓரம்கட்டப்பட்டு, ரெய்னா, விராட் கோலி, போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருபுறம் சச்சின், சேவக் போன்ற அனுபவமிக்க  மூத்த வீரர்களையும், மறுபுறம் இளம் வீரர்களையும் கொண்ட கலவையான இந்திய அணி, 2011-ல் நடந்த உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே சீறிப் பாய்ந்தது. 

கால் இறுதியில் ஆஸ்திரேலியாவையும், அரை இறுதியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்த இந்திய அணிக்கு இறுதிப் போட்டியில் இலங்கை சவால் விடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்தது. அன்றைய காலகட்டத்தில் இது வலுவான ஸ்கோராக கருதப்பட்டது.  

அடுத்து ஆடிய  இந்திய அணியில் சேவாக் (0), சச்சின் (18) ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆக, கவுதம் காம்பீரும் (97 ரன்கள்)  கேப்டன் தோனியும் (91 ரன்கள்) தூண்களாய் நின்று இந்தியாவைக் காத்தனர். கவுதம் காம்பீர் இடையில் அவுட் ஆனாலும் கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த தோனி இந்தியாவைக் கரைசேர்த்து கோப்பையை வாங்கிக் கொடுத்தார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத நாளாக ஏப்ரல் 2 மாறியது.  

 

     

 ஏப்ரல் 3 

ஈட்டியின் பயணம்  

நம் முன்னோர்கள், வேட்டையாடுவதற்காக முதலில் பயன்படுத்திய ஆயுதம் ஈட்டியாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால் அதை வைத்து  நிச்சயம் தங்களுக்குள் போட்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. 

 

ஈட்டி எறியும் போட்டி எப்போது தோன்றியது என்பதற்கான குறிப்புகள் ஏதும் வரலாற்றில் இல்லை. ஆனால் கிமு 708-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பென்டத்லான் போட்டியின் ஒரு அங்கமாக ஈட்டி எறியும் போட்டி இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதைவைத்து ஆதிகாலத்து விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறியும் போட்டியும் ஒன்று என்பது நிரூபணமாகி உள்ளது. நவீன ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் பிரிவில் 1908-ம் ஆண்டிலும், பெண்கள் பிரிவில் 1932-ம் ஆண்டிலும் ஈட்டி எறியும் போட்டிகள் அறிமுகமாகி உள்ளன. 

 

ஈட்டி எறியும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள்,  2.6 முதல் 2.7 மீட்டர் நீளமும், 800 கிராம் எடையும் கொண்ட ஈட்டியைத் துக்கிக்கொண்டு சிறிது தூரம் ஓடிவந்து, குறிப்பிட்ட இடத்தில் இருந்து ஓங்கி வீசவேண்டும். அப்படி வீசி முடித்தவுடன்  திரும்பாமல் நேராக நிற்க வேண்டும். குறிப்பிட்ட எல்லைக் கோட்டை தாண்டிச் சென்றும் ஈட்டியை வீசக்கூடாது.  வீசப்படும் ஈட்டியின் முனை எந்த இடத்தில் முதலில் படுகிறதோ அந்த இடத்தை வைத்துதான் ஈட்டி வீசப்பட்ட தூரம் அளக்கப்படும்.  அதிக தூரத்துக்கு ஈட்டியை எறியும் வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். போட்டியின்போது ஒவ்வொரு வீரருக்கும் 4 முதல் 6 வாய்ப்புகள் வழங்கப்படும்.  இதேபோல் பெண்கள் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் 2.2 முதல் 2.3 மீட்டர் நீளமும் 600 கிராம் எடையும் கொண்ட ஈட்டிகளைப் போட்டியில் பயன்படுத்த வேண்டும். ஈட்டி எறியும் போட்டியைப் பொறுத்தவரை ஐரோப்பிய வீரர்கள்தான் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். 

  

ஏப்ரல் 4 

ஒலிம்பிக்கை குறிவைக்கும் சென்னைப் பெண் 

 

இந்தியாவில் அதிகம் பிரபலமாகாத விளையாட்டு பாய்மர படகுப் போட்டி.  இந்த விளையாட்டில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடிக்க வந்துள்ளார் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன். 23 வயது வீராங்கனையான நேத்ரா குமணன் 2019-ம் ஆண்டு, மியாமியில் நடந்த ஹெம்பல் வேர்ல்ட் கப் சீரிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இப்போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது  ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் முயற்சியில்  தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

 

நேத்ராவின் தந்தை குமணன், சொந்தமாக ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். தனது மகளுக்கு படகுப் போட்டியில் ஆர்வம் இருப்பது தெரிந்ததும், அவர் அதில் முன்னேறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளார். இதுபற்றி கூறும் நேத்ரா, “என் முயற்சிகளுக்கு துணையாக என் பெற்றோர் பாறைபோல் உறுதியாக இருக்கிறார்கள். என் பயிற்சிக்கு நிறைய செலவானாலும், அவர்கள் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள்” என்கிறார். 

 

2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய போட்டிகளில் இந்தியாவுக்காக பங்கேற்ற நேத்ராவின் ஒரே லட்சியம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான். இதற்காக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற கடுமையாக உழைத்து வருகிறார் நேத்ரா. ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஓமன் நாட்டில் நடக்கவுள்ள முசானா ஓபன் சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு தகுதிபெற முடியும் என்பதால் அதற்கான பயிற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். 

   “பாய்மரப் போட்டிகளில் பங்கேற்க உடல் வலிமை மட்டுமின்றி, மன வலிமையும் மிகவும் முக்கியம். அதுதான் நமது வெற்றிக்கு வழிவகுக்கும்” என்று கூறும் நேத்ரா, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று, இந்தியாவுக்கு பதக்கத்துடன் திரும்ப வாழ்த்துவோம். 

 

ஏப்ரல் 5 

 

அன்று தண்ணீருக்கு பயந்தவர் 

இன்று தண்ணீரில் சாதிக்கிறார் 

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே படகு ஓட்டும் வீரரான தத்து பாபன் பொகானலின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 5). 

  

1991-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தத்து. அவரது அப்பா ஒரு விவசாயி. கூடவே கிணறு வெட்டும் வேலைக்கும் சென்றுவந்தார். தத்துவுக்கு 2 தம்பிகள். பள்ளி இறுதியில் படிக்கும் காலத்திலேயே தன் தந்தையுடன் சேர்ந்து தத்துவும் கிணறு வெட்டும் வேலைக்கும், விவசாய வேலைக்கும் சென்று வந்தார். 

 

இந்நிலையில் 2011-ம் ஆண்டு அவர்கள் குடும்பத்தில் புயல் வீசியது. தத்துவின் தந்தை திடீரென இறந்தார். அதோடு அவர் வாங்கிய கடன்களும் குடும்பத்தின் கழுத்தை நெறித்தன. அப்பாவின் கடன்களை அடைக்க, வீட்டில் இருந்த டிராக்டரும், சிறிது விவசாய நிலமும் விற்கப்பட்டது. மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தத்து கையைப் பிசைந்துகொண்டிருந்தார். அப்போதுதான் ராணுவத்தில் ஆட்களைச் சேர்ப்பதற்கான முகாம் நடைபெறுவதாக அவருக்கு தகவல் தெரிந்தது. தன் குடும்பத்தின் கஷ்டங்களைத் தீர்க்க ராணுவத்தில் சேர்ந்தார் தத்து. 

 

இந்த நேரத்தில் ராணுவத்தில் இருந்த படகோட்டும் பயிற்சியாளரான இஸ்மாயில் பேக் என்பவரின் பார்வையில் தத்து பட்டார். 6 அடி 4 அங்குல உயரம் கொண்ட தத்துவின் உடல்வாகு, படகோட்டும் போட்டிக்கு ஏற்றதாக இருப்பதாக அவர் கருதினார். இதுபற்றி தத்துவிடம் கூற, அவரோ, “எனக்கு தண்ணீர் என்றாலே பயம். நீச்சல் தெரியாது. அதனால் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை” என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால் இஸ்மாயில் பேக் விடவில்லை. அவருக்கு நீச்சல் கற்றுக்கொடுத்து,  பின்னர் படகில் ஏற்றினார். சில நாட்களிலேயே படகு ஓட்டும் பிரிவில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார் தத்து. இன்று தண்ணீர் பயத்தை வென்று இந்தியாவின் முன்னணி படகு ஓட்டும் வீரராக திகழ்கிறார் தத்து. 

விளையாட்டாய் சில கதைகள் - மார்ச் 29 - ஏப்ரல் 1

 மார்ச் 29 

ஆலன் பார்டரின் கோபம்  

இந்திய கிரிக்கெட் உலகில்  சுனில் கவாஸ்கர் எப்படி முக்கிய இடத்தை வகிக்கிறாரோ, அதேபோல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் முக்கிய இடம் வகிக்கும் பேட்ஸ்மேன் ஆலன் பார்டர். கவாஸ்கருக்கு அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்த ஆலன் பார்டர், 1987-ல் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக இருந்து, தனது அணிக்கு உலகக் கோப்பையையும் பெற்றுத் தந்துள்ளார்.    

1955-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் நகரில் பிறந்த ஆலன் பார்டர், 156 டெஸ்ட் போட்டிகளில் 11,174 ரன்களைக் குவித்ததுடன் 39 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 273 ஒருநாள் போட்டிகளில் 6,524 ரன்களைக் குவித்து 73 விக்கெட்களை எடுத்துள்ளார்.  

 1979-80-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 4 ரன்களில் அவுட் ஆகியுள்ளார் பார்டர். அவரால் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பெவிலியன் திரும்பியவர் தலையைக் குனிந்தவாறே டிரஸ்ஸிங் ரூமுக்குள் சென்று பேட்டையும் கிளவுஸ்களையும் கழற்றி வீசியுள்ளார். இங்கிலாந்து அணி வீரர்களை சத்தமாக  திட்டியவாறே தனது கால் காப்புகளையும் கழற்றி வீசியவர், பின்னர் அவற்றை வைப்பதற்காக டிரஸ்ஸிங் ரூமில் இருந்த தனது பையைத் தேடியுள்ளார். அப்போதுதான் தான் ஏதோ ஞாபகத்தில் இங்கிலாந்து அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்குள் தவறுதலாக நுழைந்தது அவருக்கு தெரிந்தது. 

 

 இங்கிலாந்து வீரர்களை அவர் திட்டியபோது அந்த அறைக்குள் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த சிலரும் இருந்துள்ளனர். கோபத்தில்,  தான் டிரஸ்ஸிங் ரூம் மாறி வந்ததுடன் இங்கிலாந்து வீரர்களை அவர்கள் முன்பே திட்டியதற்காக வெட்கப்பட்டார்.  இருப்பினும் அதே போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 138 ரன்களைச் சேர்த்தார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தைப் பற்றி, தனது வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆலன் பார்டர்.  

------------------------------------------------------------------------------------------------------------ 

மார்ச் 30 

தடகள உலகின் புதிய நட்சத்திரம் 

 

இந்திய தடகள உலகில் புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் எம்.ஸ்ரீசங்கர். சில நாட்களுக்கு முன் நடந்த நீளம் தாண்டும் போட்டியில் 8.26 மீட்டர் நீளம் தாண்டி புதிய தேசிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்லும் இந்திய அணியிலும் இடம்பிடித்துள்ளார்.  

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீசங்கரின் இந்த சாதனைக்கு, அவரது பெற்றோரும்  ஒரு காரணம். ஸ்ரீசங்கரின் அப்பா முரளி, அம்மா பிஜிமோள் ஆகியோர் இந்தியாவுக்காக சர்வதேச அளவில் பல தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி கூறும் ஸ்ரீசங்கர், “சிறுவயது முதலே நான் விளையாட்டுகளின் மீது காதலோடு இருந்தேன். என் பெற்றோர் இருவரும் தடகளப் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருந்தது எனக்கு  தூண்டுகோலாக இருந்தது.  அத்துடன் என் உறவினர்கள் பலரும் தடகள உலகில் இருந்ததால், சிறு வயதில் இருந்தே எனக்கு விளையாட்டுகளில் ஆர்வம் அதிகம்” என்கிறார். 

ஆரம்ப காலகட்டத்தில் ஓட்டப்பந்தய வீரராகத்தான் ஸ்ரீகுமார் இருந்துள்ளார். ஜூனியர் அளவிலான போட்டிகளில் பல பதக்கங்களையும் அவர் வென்றுள்ளார். இந்த காலகட்டத்தில் நீளம் தாண்டுதல் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் வீரரான ஸ்ரீசங்கரின் அப்பாதான் அவரை நீளம் தாண்டும் போட்டிகளில் பங்கேற்குமாறு ஊக்கப்படுத்தியுள்ளார். 

10-ம் வகுப்பு படிக்கும் காலத்தில் நீளம் தாண்டும் போட்டிகளில் பயிற்சி பெறத் தொடங்கிய ஸ்ரீசங்கர், தனது அப்பா காட்டிய வழியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். ஆரம்பத்தில் தனது அப்பாவிடம் பயிற்சி பெற்ற ஸ்ரீசங்கர், பின்னர் வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய ஸ்ரீசங்கர், தற்போது இந்தியாவில் இதுவரை யாரும் தாண்டாத அளவுக்கு நீளம் தாண்டி அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார். இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளையும் அவர் கவர்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். 

மார்ச் 31 

இந்தியாவின் செஸ் ராணி 

 

இந்திய செஸ் உலகில் ராணியாக வலம்வரும் கொனேரு ஹம்பியின் பிறந்தநாள் இன்று.  

1987-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிவாடா என்ற ஊரில் கொனேரு ஹம்பி பிறந்தார். ‘ஹம்பி’ என்ற வார்த்தைக்கு வெற்றி என்று அர்த்தம். அதனால் அப்பெயரையே தனது மகளுக்கு சூட்டினார் கொனேரு ஹம்பியின் அப்பா கொனேரு அசோக்.   

முன்னாள் செஸ் வீரரான அசோக், தன்னைப் போலவே தனது மகளும் செஸ் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 5 வயதிலேயே ஹம்பியை செஸ் பயிற்சிக்கு அனுப்பினார். செஸ் விளையாட்டில் புகழ்பெற்ற வீராங்கனைகளாக இருந்த பலரது வாழ்க்கைக் கதைகளையும் சொல்லி உற்சாகமூட்டினார்.  ஒருபுறம் பயிற்சி, மறுபுறம் அப்பா கொடுக்கும் உற்சாகம் ஆகியவை கொனேரு ஹம்பியின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தன. ஒரு கட்டத்தில் தனது மகளின் முன்னேற்றத்துக்கு துணைபுரிவதற்காக, பல்கலைக்கழகத்தில் தான் பார்த்துவந்த வேலையை உதறி,  போட்டிக்காக மகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் துணையாகச் சென்றார்.  

அப்பாவின் உழைப்புக்கு சற்றும் குறையாமல் போராடிய கொனேரு ஹம்பி, 10, 12, 14 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டிகளில் பட்டம் வென்றார். தனது 14 வயதிலேயே செஸ் வீராங்கனைகள் பட்டியலில் 3-வது இடம்பிடித்த கொனேரு ஹம்பி, 2,539 புள்ளிகளை ஈட்டினார். 1997-ல் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற ஹம்பி, தனது 15-வது வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் இப்பட்டத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற அவர், இன்னும் இந்தியாவின் முன்னணி செச் வீராங்கனையாக உள்ளார். தனது சாதனைகளுக்காக, சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான பிபிசி விருதையும் அவர் வென்றுள்ளார். 

ஏப்ரல் 1 

வெங்சர்க்காருக்கு உதவாத சக வீரர்கள்  

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்டிங்கின் முக்கிய தூணாக இருந்தவர்  திலிப் வெங்சர்க்கார். அவர் புகழின் உச்சத்தில் இருந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்த சம்பவத்துக்காக துபாயில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நாள் ஏப்ரல் 1.  

1982-ம் ஆண்டில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா லெவன் அணிக்கும், இன்திகாப் ஆலம் தலைமையிலான பாகிஸ்தான் லெவன் அணிக்கும் இடையேயான  ஒருநாள் காட்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, துபாய் சென்றது. அந்நாட்டின் விதிப்படி, விமான நிலையத்தில்  மற்ற பயணிகளைப்போல், கிரிக்கெட் வீரர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் சக பயணிகளுடன் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அப்போது அதே  வரிசையில் இருந்த சில சினிமா நட்சத்திரங்களை முதலில் பரிசோதித்து அனுப்பியுள்ளனர் சுங்கத் துறை அதிகாரிகள். கிரிக்கெட் வீரர்கள் அப்போது அத்தனை பிரபலமானவர்களாக இல்லாததால் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டனர்.   

இயல்பாகவே கொஞ்சம் கோபக்காரரான திலிப் வெங்சர்க்காருக்கு இது பிடிக்கவில்லை. அதனால் அவர் சுங்கத் துறை அதிகாரிகளை கடும்  சொற்களால் விமர்சித்துள்ளார். இதனால் கோபமடைந்த சுங்கத் துறை அதிகாரி,  அவரை விமான நிலையத்தில் இருந்து வெளியேறாமல் தடுத்ததுடன், இந்தியாவுக்கு அவரை திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தச் சூழலில் கவாஸ்கர் உட்பட எந்த வீரர்களும் வெங்சர்க்காருக்காக பரிந்து பேசவில்லை. 

 துபாயில் இருந்து தான் வெளியேற்றப்பட்டதை விட, தனக்காக யாரும் பரிந்து பேசாதது வெங்சர்க்காருக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்திய அணிக்காக ஆடினாலும், பல காலம் மற்ற வீரர்களிடம் இருந்து தன்னை அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். அத்துடன் கவாஸ்கருக்கும் வெங்சர்க்காருக்கும் இடையே தனிப்பட்ட பகையும் மூண்டது. அந்த பகை இன்னும் நீடிப்பதாக கூறப்படுகிறது.