Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - பிப்ரவரி 12- பிப்ரவரி 15

 பிப்ரவரி 12

கிரிக்கெட் காதலர் ரிச்சி பெனாட்
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ரிச்சி பெனாட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நாள் இன்று (பிப்ரவரி 12).
ஆஸ்திரேலியாவின்  சிட்னி நகரில்  1930-ம் ஆண்டு ரிச்சி பெனாட் பிறந்தார்.  உள்ளூர் கிரிக்கெட் கிளப்பில்,  அவரது  அப்பா லூயிஸ் சுழற்பந்து வீச்சாளராக இருந்தார். அதனால் சிறுவயதிலேயே ரிச்சி பெனாடுக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நியூ சவுத்வேல்ஸ் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்த ரிச்சி பெனாட், 1952-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்காக 63 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரிச்சி பெனாட், 2,201 ரன்களை எடுத்ததுடன் 248 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 1964-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.
கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய காலகட்டத்தைவிட,   கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த காலகட்டம்தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. சரளமான மற்றும் நகைச்சுவைமிக்க தனது வர்ணனையால் கிரிக்கெட் போட்டிகளுக்கு அவர் மேலும் சுவை கூட்டினார். ‘சேனல் நைன்’ தொலைக்காட்சியில் நீண்டகாலம் அவர் வர்ணனையாளராக இருந்துள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளின்போது ஒரு கணத்தைக்கூட அவர் தவற விடமாட்டார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்வார்கள். புகழ்பெற்ற டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வர்ணனையாளர்கள் அறைக்கும், கழிப்பறைக்கும் இடையே நீண்ட தூரம் இருந்தது. அதனால் அங்கு  செல்லும் சமயத்தில் ஆட்டத்தின் ஏதாவது ஒரு முக்கிய அம்சத்தை தவறவிட்டு விடுவோமோ என்பதால் சிறுநீர் கழிக்கக்கூட செல்லாமல் வர்ணனையாளர் அறையிலேயே இருப்பாராம் ரிச்சி பெனாட்.  பின்னாளில் அவரது வேண்டுகோளுக்கு இணங்க, டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் வர்ணனையாளர் அறைக்கு அருகிலேயே கழிப்பறை  கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.  
------------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 13
சென்னையில் உருவான டென்னிஸ் வீரர்
லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதிக்குப் பிறகு டென்னிஸ் உலகில் இந்தியாவின் கொடியை உயர்த்திப் பிடித்த சோம்தேவ் தேவ் வர்மனின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 13).
அசாமில் உள்ள குவாஹாட்டி நகரில், திரிபுராவைச் சேர்ந்த ரஞ்சனா, பிரவஞ்சன் தேவ் வர்மன் ஆகியோருக்கு மகனாக சோம்தேவ் தேவ் வர்மன் பிறந்தார். அவரது தந்தை பிரவஞ்சன் தேவ் வர்மன் வருமான வரித்துறை கமிஷனராக இருந்தார். சோம்தேவ் தேவ் வர்மனுக்கு 8 வயதாக இருந்தபோது, அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. சென்னை கிறுஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படித்த சோம்தேவ், படிக்கும் காலத்திலேயே டென்னிஸ் விளையாட்டிலும் பயிற்சி பெறத் தொடங்கினார். அந்த வகையில் அவர் ஒரு சிறந்த டென்னிஸ் வீரராக உருவெடுத்ததில் சென்னை நகரம் முக்கிய பங்கு வகித்தது.
 
17 வயது முதல் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கிய சோம்தேவ், 2004-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த எஃப்2 சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார்.  இதைத்தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பட்டம் வென்றவர், 2009-ம் ஆண்டில் நடந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுவரை முன்னேறி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் அவர் தனது பயணத்தை தொடங்க, இந்த டென்னிஸ் தொடர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலம்,  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம் உட்பட இந்தியாவுக்காக பல பதக்கங்களை வென்றுள்ள சோம்தேவ், தனிப்பட்ட முறையிலும் பல போட்டிகளில் பட்டம் வென்றுள்ளார். சோம்தேவ் தேவ் வர்மனை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு கடந்த 2011-ம் ஆண்டில், அவருக்கு அர்ஜுனா விருது வழங்கியது.
--------------------------------------------------
பிப்ரவரி 14

நீளம் தாண்டும் போட்டியின் வரலாறு
கிரேக்கத்தில் பண்டைய காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலேயே நீளம் தாண்டும் போட்டி இருந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், தங்கள் கைகளில் கனமான பொருட்களை தூக்கிக்கொண்டு வருவார்களாம். தாங்கள் நீளம் தாண்டவேண்டிய இடம்வரை அந்த கனமான பொருட்களை கைகளில் வைத்திருப்பார்கள். நீளம் தாண்டும் நேரத்தில், தங்கள் கைகளை வீச, அந்தப் பொருட்களின் கனம் அவர்களை நீண்டதூரம் தாண்டவைக்கும். அதே நேரத்தில் நீளம் தோண்டும்போது அந்த கனமான பொருட்களை பாதியிலேயே கீழே போட்டு விடுவார்கள். இதன்மூலம் அதிக தூரத்தை அவர்கள் எட்ட முடியும்.

1896-ம் ஆண்டில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய காலம் முதலே அதில் நீளம் தாண்டும் போட்டி ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஆனால் நவீன ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்கள், முந்தைய காலத்தைப் போன்று நீளம் தாண்டும்போது எந்த கனமான பொருட்களையும் தூக்கிச் சென்றதில்லை. இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர்.
ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளைப் பொருத்தவரை நீளம் தாண்டும் போட்டி, 6 சுற்றுகளைக் கொண்டதாக இருக்கும். இதில் முதல் 3 சுற்றுகளில் அதிக நீளம் தாண்டிய முதல் 8 வீரர்கள் மட்டும், அடுத்த 3 சுற்றுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் அவர்களில் இருந்து சிறந்த வீரர், வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்
1935-ம் ஆண்டு, அமெரிக்காவின் ஜெஸ்ஸி ஓவன்ஸ், 8.13 மீட்டர் நீளம் தாண்டினார். இது வெகு காலத்துக்கு உலக சாதனையாக இருந்தது. பிற்காலத்தில் 1960-ம் ஆண்டு, 8.90 மீட்டர் நீளம் தாண்டி பாப் பீமோன் அதை முறியடித்தார். பிற்காலத்தில் 1991-ம் ஆண்டு 8.95 மீட்டர் நீளம் தாண்டி மைக் பொவல் புதிய சாதனை படைத்தார்.

--------------------------------------------
பிப்ரவரி 15
6 மணிநேரத்தில்  முடிந்த கிரிக்கெட் டெஸ்ட்
 உலகிலேயே அதிக நாட்கள் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியைப் பற்றி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திருந்தோம். 10 நாட்கள் நீடித்த அந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதியிருந்தன. அதற்கு நேர் எதிராக, மிகக் குறுகிய காலத்துக்குள் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியைப் பற்றி இன்று தெரிந்துகொள்வோம்.
 
1932-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட்  போட்டிதான் மிகக் குறுகிய காலத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டி 5 மணிநேரம் 53 நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது.
1932-ம் ஆண்டில் கேமரான் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில், தென் ஆப்பிரிக்க அணி ஏற்கெனவே 4 டெஸ்ட் போட்டிகளில் தோற்றிருந்தது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது ஆறுதல் வெற்றியைப் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் தென் ஆப்பிரிக்க அணி களம் இறங்கியது. ஆனால் ஆஸ்திரேலியா அதற்கு கொஞ்சம்கூட இடம் கொடுக்கவில்லை. தென் ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்ஸில்  36 ரன்களுக்குள் அந்த அணி ஆல் அவுட் ஆக்கியது. இதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 153 ரன்களை எடுத்தது.
ஆஸ்திரேலியாவை 200 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்க அணி பேட் பிடித்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 45 ரன்களில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 6 மணிநேரத்துக்குள் முடிந்த டெஸ்ட் என்ற பெருமை, இப்போட்டிக்கு கிடைத்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பிரட் ஐயன்மோங்கர் 11 விக்கெட்களை வீழ்த்தினார்.

No comments:

Post a Comment