மார்ச் 17
சாய்னாவைப் பார்க்க வராத பாட்டி
ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த சாய்னா நெவாலின் பிறந்தநாள் இன்று (மார்ச் 17).
1990-ல் ஹரியானாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் சாய்னா நெவால் பிறந்தார். சாய்னாவின் பாட்டிக்கு ஆண் குழந்தைகள் மீதுதான் விருப்பம். தனக்கு பேரன்தான் பிறப்பார் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண் குழந்தை (சாய்னா நெவால்) பிறந்ததால் கோபமடைந்த பாட்டி, ஒரு மாதம் வரை குழந்தையைப் பார்க்க வராமல் இருந்துள்ளார். ஆனால் அந்தக் குழந்தையான சாய்னாதான், இன்று மொத்த குடும்பத்துக்கும் புகழை தேடிக் கொடுத்துள்ளது.
சாய்னா குழந்தையாக இருந்தபோது, அவரது தந்தைக்கு ஹைதராபாத்துக்கு பணியிட மாற்றம் கிடைத்துள்ளது. இதனால் அவரது குடும்பம் ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தது. முதலில் கராத்தேவில்தான் சாய்னா ஆர்வமாக இருந்துள்ளார். இதில் பிரவுன் பெல்ட் வாங்கினார். பின்னாளில் பாட்மிண்டன் வீரர் கோபிசந்த்தால் ஈர்க்கப்பட்டு, அந்த விளையாட்டில் கவனம் செலுத்த தொடங்கினார்.
சாய்னாவின் அப்பா ஹர்வீர் சிங், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இருப்பினும் தன்னால் இயன்றவரை சாய்னா பயிற்சி பெறுவதற்கு தேவையான உதவிகளை செய்தார். சாய்னாவுக்கு மிகவும் பிடித்த கோபிசந்திடம் பயிற்சி பெற வழி செய்தார். ஒரு கட்டத்தில் கடன் வாங்கி, சாய்னாவின் பயிற்சிக்கு தேவையான உதவிகளைச் செய்தார். தந்தையின் கஷ்டங்களை உணர்ந்து சாய்னாவும், கடுமையாக உழைத்தார். முதல் முறையாக 2004-ம் ஆண்டில் நடந்த காமன்வெல்த் இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதைத்தொடர்ந்து ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் உட்பட பல்வேறு பதக்கங்களையும், சாம்பியன் பட்டங்களையும் சாய்னா நெவால் வென்றுள்ளார்.
பாட்மிண்டன் உலகில் சாய்னாவின் சாதனைகளை பாராட்டும் விதமாக அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மத்திய அரசு அவருக்கு வழங்கியுள்ளது.
--------------------------------------------------------
மார்ச் 18
கிரிக்கெட் உலகை உலுக்கிய மரணம்
2007-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றிலேயே இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேறின. இந்திய ரசிகர்கள் இதனால் வருத்தப்பட்டாலும் வருந்தத்தக்க சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. ஆனால் பாகிஸ்தானில் பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க விஷயம் அந்நாட்டு பயிற்சியாளர் பாப் உல்மரின் மரணம்.
ஒரு கிரிக்கெட் வீரராக பெரிய அளவில் சாதிக்காத பால் உல்மர், 1990-களில் தென் ஆப்பிரிக்க அணியைக் கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டார். 2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தார் பாப் உல்மர். இவரது பயிற்சியின்கீழ் பாகிஸ்தான் அணி, 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டின் ரசிகர்கள் வெகுவாக நம்பினர். ஆனால் அதற்கு நேர்மாறாக பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலேயே வெளியேற, அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தச் சூழலில் மார்ச் 18-ம் தேதி ஜமைக்காவில் உள்ள தனது ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் பாப் உல்மர். அவரது மரணம் கிரிக்கெட் உலகையே உலுக்கியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவரைக் கொன்றிருக்கலாம் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆரம்பத்தில் இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்த விசாரணை அதிகாரி, பின்னர் இது இயற்கையான மரணமாக இருக்கலாம் என்றார். பாப் உல்மரின் உடலில் காயம் ஏதும் இல்லாததால், தான் இப்படி கருதுவதாக தெரிவித்தார். ஆண்டுகள் பல கடந்தபோதிலும் உல்மரின் மரணம் தொடர்பாக இன்னும் சந்தேகம் இன்னும் நீடிக்கிறது.
-----------------------------------------------------------------------------------
மார்ச் 19
பாரலிம்பிக்ஸ் பிறந்த கதை
1948-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி லண்டன் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா நடந்தது. இந்த தொடக்க விழாவை வித்தியாசமான முறையில் நடத்தும் விதமாக உலகப் போரில் காயமடைந்து மாற்றுத் திறனாளியான 16 வீரர்கள் பங்கேற்ற வில்வித்தை போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்மேன் என்ற டாக்டரின் ஏற்பாட்டில் நடந்த இந்த வில்வித்தை போட்டிக்கு ‘ஸ்டோக் மண்டேவிலி கேம்ஸ்’ எனப் பெயரிடப்பட்டது. இந்தப் போட்டிதான் பின்னாளில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாரலிம்பிக்ஸ் போட்டிக்கு விதையாக இருந்தது.
1948-ம் ஆண்டுக்கு பிறகு மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு இடங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன. இருப்பினும் அவர்களுக்கான முழுமையான விளையாட்டுப் போட்டி, சர்வதேச அளவில் நடைபெறாமல் இருந்தது. இந்த சூழலில் 1960-ம் ஆண்டு ரோம் நகரில் முதலாவது பாரலிம்பிக்ஸ் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த விளையாட்டுப் போட்டியில் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட வீரர்களே பெருமளவில் கலந்துகொண்டனர்.
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் நடந்த முதல் சர்வதேச போட்டி என்பதால், இதில் அவர்களுக்கு தேவையான வசதிகள் இல்லாமல் இருந்தன. குறிப்பாக மாடிகளில் உள்ள ஓட்டல் அறைகளுக்கு சக்கர நாற்காலிகள் செல்ல சாய்வுதளங்கள் இல்லாததால், மற்றவர்கள் அவர்களை தூக்கிச் செல்லவேண்டி இருந்தது. இப்படி பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், காலம் செல்லச் செல்ல பாரலிம்பிக்ஸ் போட்டிகள் முன்னேற்றத்தைச் சந்தித்தன.
1976-ம் ஆண்டுமுதல் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலிகல் பயன்படுத்தப்பட்டன. குண்டு எறியும் போட்டி, ஓட்டப் பந்தயம் என பல்வேரு பிரிவுகளில் போட்டிகள் களைகட்டத் தொடங்கின.
முதல் பாரலிம்பிக்ஸ் போட்டியில் 400 வீரர்களே கலந்துகொண்ட நிலையில் 2016-ம் ஆண்டு ரியோ நகரில் நடந்த பாரலிம்பிக் போட்டியில் 159 நாடுகளைச் சேர்ந்த 4,342 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 22 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் சீனா, அதிகபட்சமாக 107 தங்கப்பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது.
------------------------------------------------------------------------------------
மார்ச் 20
சென்னையின் புதிய சிங்கம்
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. கடந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், அணியில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா போன்றோரை கழற்றிவிட்டு புதிய வீரர்களை சேர்த்துள்ளது. அந்த மாற்றங்களில் ஒன்றாக சென்னையின் புதிய சிங்கமாக இணைந்துள்ளார் மொயின் அலி.
இங்கிலாந்தில் செட்டிலான பாகிஸ்தானிய குடும்பத்தில் 1987-ல் பிறந்த மொயின் அலி, தனது 15 வயது முதலே இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். ‘தூஸ்ரா’ வகைப் பந்துகளை வீசக்கூடிய முதலாவது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் என்று பெயர்பெற்ற மொயின் அலி, 2014-ம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக பல்வேறு போட்டிகளில் ஆடியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் தேவைக்கு ஏற்ப தொடக்க ஆட்டக்காரர், அதிரடியான பினிஷர், பேட்ஸ்மேன்களுக்கு கிடுக்கிப் பிடி போடும் சுழற்பந்து வீச்சாளர் என பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில்கூட இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்களை வீசியதுடன், 17 பந்துகளில் 43 ரன்களை விளாசி அதிரடி காட்டியுள்ளார்.
மொயின் அலியின் இந்த அம்சங்கள், ‘தல’ தோனியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகிகளையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. சென்னை அணிக்கும் இப்போது அதிரடியான பினிஷர், ரன் கொடுக்காத பந்துவீச்சாளர், வலுவான தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படுவதால், மூன்றும் ஒன்றாகக் கலந்த மொயின் அலியை ரூ.7 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். கடந்த போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடிய மொயின் அலி, இம்முறை சென்னையை கரைசேர்க்க கேப்டன் தோனிக்கு உதவுவாரா என்று பார்ப்போம்.
No comments:
Post a Comment