மார்ச் 25
தடைதாண்டும் ஓட்டத்தின் கதை
உலகில் முதலில் தோன்றிய விளையாட்டுகளில் ஒன்றாக ஓட்டப்பந்தயம் கருதப்படுகிறது. கற்காலம் முதல் மனிதர்கள் தங்கள் உடல் வலிமையை காட்டும் விஷயங்களில் ஒன்றாக ஓட்டப் பந்தயங்களைப் பயன்படுத்தி வந்தனர். கிரேக்கத்தில் பண்டைய காலகட்டத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் ஓட்டப்பந்தயங்கள் இருந்துள்ளன. இப்படி பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த ஓட்டப்பந்தயத்தில் ஒரு புதுமையைப் புகுத்தும் விதமாக 1830-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டதுதான் தடைதாண்டும் ஓட்டம்.
ஆக்ஸ்போர்டு மற்றும் காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் விளையாட்டு ஆசிரியர்களால் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஓட்டப்பந்தயத்தின்போது, ஓடுதளத்தின் குறுக்கே மரக்கட்டைகள் போடப்பட்டு, அதை வீரர்கள் தாண்டி குதிக்கும் வகையில் போட்டி விதிகள் அமைக்கப்பட்டன. பிற்காலத்தில் இந்த விளையாட்டுக்காகவே 107 சென்டிமீட்டர் உயரமுள்ள தடைகள் வடிவமைக்கப்பட்டு ஓடுதளங்களின் குறுக்கே வைக்கப்பட்டன.அதிகாரபூர்வமான முறையில் முதலாவது தடைதாண்டும் ஓட்டம் 1837-ம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள எல்டன் கல்லூரியில் நடைபெற்றது.
தடைதாண்டும் ஓட்டத்தைப் பொறுத்தவரை, இதில் பங்கேற்கும் வீரர்கள் 110 மீட்டர் தூரம் ஓடவேண்டும். இப்போட்டியில் முதலாவது தடை 13.72 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதைத்தொடர்ந்து ஒவ்வொரு 9.14 மீட்டர் தூரத்துக்கும் இடையே ஒரு தடை என மொத்தம் 10 தடைகளை வீரர்கள் கடக்கவேண்டும். இதே பிரிவில் பெண்களுக்கு 100 மீட்டர் தூர ஓட்டப்பந்தயங்கள் நடப்படுகின்றன.
ஆண்களுக்கான பிரிவில் 1896-ம் ஆண்டு முதலும், பெண்களுக்கான பிரிவில் 1932-ம் ஆண்டு முதலும் ஒலிம்பிக்கில் தடைதாண்டும் ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டைப் பொறுத்தவரை அமெரிக்க வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் இதுவரை அமெரிக்க வீரர்கள் 19 முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளனர்.
------------------------------------------------------------------------------------------------
மார்ச் 26
மூங்கில் குச்சியில் வாள்வீச்சு பயிற்சி
“உன் அப்பாவின் ஆண்டு வருமானம் என்ன?”
சிறுவயதில் வாள்வீச்சில் பயிற்சி பெற விரும்பிய பவானி தேவியிடம், அவரது ஆசிரியர்கள் கேட்ட முதல் கேள்வி இது. வாள்வீச்சு மற்ற விளையாட்டுகளைப் போல் அல்ல. இதற்கான உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். இதற்கு நல்ல வருமானம் இருக்க வேண்டும் என்பதாலேயே பவானி தேவியிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. தன் அப்பாவின் வருமானம் குறைவாக இருந்தபோதிலும், வாள்வீச்சுப் பயிற்சியில் சேரவேண்டும் என்ற விருப்பத்தால், அப்பாவின் வருமானத்தை உயர்த்திக் கூறினார் பவானி தேவி. ஆனால் அதன் பிறகு பயிற்சிக்கான உபகரணங்களை வாங்கவும், பயிற்சி பெறவும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்படி கஷ்டப்பட்டு பயிற்சி செய்ததன் விளைவாக, இன்று ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
பவானி தேவியின் இந்தப் பயணம் அத்தனை எளிதாக அமையவில்லை. இதற்காக அவர் கடுமையாக போராடியுள்ளார். வாள்களின் விலை அதிகம் என்பதாலும், அவை உடைந்தால் மீண்டும் வாங்குவதற்கு அதிகம் செலவாகும் என்பதாலும் ஆரம்ப காலகட்டத்தில் மூங்கில் குச்சிகளை வைத்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். போட்டியில் பங்கேற்கும் சமயங்களில் மட்டும்தான் வாட்களைப் பயன்படுத்துவார்.
இப்படி கடும் பொருளாதார நெருக்கடிக்கு நடுவிலும், ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகளில் வென்ற நிலையில், ராகுல் டிராவிட் நடத்திவரும் ‘கோ ஸ்போர்ட்ஸ் என்ற அமைப்பின் பார்வை பவானி தேவி மீது விழுந்துள்ளது. அவருக்கு கோ ஸ்போர்ட்ஸ் (இதே அமைப்புதான் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மகாருக்கும் ஸ்பான்சர் செய்துள்ளது) ஸ்பான்சர் செய்ய, வெளிநாடுகளில் நடந்த பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்துள்ளார். இதற்கெல்லாம் உச்சமாக, இப்போது ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் பவானி தேவி.
-----------------------------------------------------------------------------------------
மார்ச் 27
இந்திய கால்பந்தின் இளம் நட்சத்திரம்
இந்திய கால்பந்து அணியின் இளம் நட்சத்திரமாக உருவாகி வருகிறார் லாலெங்மாவியா. மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், சமீபத்தில் நடந்த ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மிகச் சிறப்பாக ஆடி கால்பந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தின் ஐஸ்வால் நகரில், கசாப்புக் கடை வைத்திருப்பவரின் மகனாக 2000-ம் ஆண்டில் லாலெங்மாவியா பிறந்தார். 6 வயது முதல் கால்பந்து போட்டிகளில் ஆடத் தொடங்கிய இவர், தான் படித்த பள்ளிக்காக உள்ளூரில் நடந்த சுபர்தோ கோப்பை கால்பந்து போட்டிகளில் ஆடினார். இதைத்தொடர்ந்து மிசோரம் மாநில சிறுவர்கள் அணிக்காக பல போட்டிகளில் பங்கேற்ற லாலெங்மாவியா, கடந்த இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதன்மூலம் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் (20 வயது) கேப்டனாக நியமிக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்றார்.
இத்தாலியின் பிரபல கால்பந்து வீரரான மரியோ பலோடெலியின் ரசிகரான லாலெங்மாவியா, அவர் அணியும் 45-ம் எண் ஜெர்சியை, தனது ஜெர்ஸியின் எண்ணாக வைத்துள்ளார். இதுபற்றி கூறும் அவர், “என் மானசீக குரு என்பதால் பலோடெலி அணியும் 45-ம் எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து ஆடுகிறேன். அது எனக்கு புது உத்வேகத்தை அளிக்கிறது” என்கிறார்.
தனது துடிப்பான ஆட்டத்தாலும், நார்த் ஈஸ்ட் யுனிடெட் அணியை திறம்பட வழிநடத்திய விதத்தலும், 2020-21 ஐஎஸ்எல் தொடரின் ’சிறந்த வளர்ந்துவரும் வீரர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அத்துடன் அடுத்த கால்பந்து தொடர்களுக்கான இந்தியாவின் உத்தேச அணியிலும் இடம்பிடித்துள்ளார்.
--------------------------------------------------------------------------------------
மார்ச் 28
உலகின் முதல் பளுதூக்கும் போட்டி
உலகின் முதலாவது பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற நாள் மார்ச் 28, 1891.
பண்டைய காலத்திலேயே கிரேக்க நாட்டில் உள்ள ஆண்கள், கனமான கற்களைத் தூக்கி தங்கள் பலத்தைக் காட்டியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பளுதூக்கும் போட்டிகள் தற்போதைய வடிவத்தைப் பெற்றது 18 மற்றும் 19-ம் நூற்றாண்டில்தான். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த அர்தர் சாக்சன், ரஷ்யாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஹாக்கன்ஸ்மித், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் அபோலன் போன்றவர்கள் 19-ம் நூற்றாண்டில் தங்கள் நாடுகளில் நடைபெற்ற சர்க்கஸ் போட்டிகளில் கனமான பொருட்களைத் தூக்கி தங்கள் உடல் வலிமையை நிரூபித்து மக்களைக் கவர்ந்தனர். இவ்வாறாக பலர் உருவெடுக்கத் தொடங்கிய நேரத்தில் 1891-ம் ஆண்டில் லண்டன் நகரில் முதலாவது பளுதூக்கும் போட்டி நடத்தப்பட்டது.
6 நாடுகளைச் சேர்ந்த 7 பயில்வான்கள் பங்கேற்ற இப்போட்டியில், இங்கிலாந்தைச் சேர்ந்த எட்வர்ட் லாரன்ஸ் லெவி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 1894-ம் ஆண்டுவரை நடைபெற்ற பல்வேறு பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்ற எட்வர்ட் லாரன்ஸ் லெவி 14 உலக சாதனைகளைப் படைத்தார்.
1896-ம் ஆண்டு நடந்த முதலாவது ஒலிம்பிக் போட்டியில், பளுதூக்கும் போட்டியும் சேர்க்கப்பட்டது. இந்த போட்டியில் எட்வர்ட் லாரன்ஸ் லெவி பங்கேற்கவில்லை. மாறாக இதன் நடுவர் குழுவின் உறுப்பினராக இருந்தார். ஆரம்ப கட்டத்தில் பளுதூக்கும் போட்டிகளுக்கென முறையாக விதிகள் ஏதும் வகுக்கப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அறிவுரைப்படி 1928-ம் ஆண்டில் சர்வதேச பளுதூக்கும் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்பிறகு பளுதூக்கும் போட்டிகளுக்கென்று புதிய விதிகள் உருவாக்கப்பட்டன. சர்வதேச அளவில் முக்கிய விளையாட்டுகளில் ஒன்றாக பளுதூக்கும் போட்டியும் உருவெடுத்தது.
No comments:
Post a Comment