Powered By Blogger

Thursday, April 15, 2021

விளையாட்டாய் சில கதைகள் - ஜனவை 27 - 30

 ஜனவரி 27

உலகின் முதல் விளையாட்டு உபகரணம்
ஹாக்கி விளையாட்டைப் பொறுத்தவரை, வீரர்கள் கைகளாலோ, கால்களாலோ பந்தை தொடக்கூடாது. ஹாக்கி ஸ்டிக் மூலமாகத்தான் பந்தை கோல் எல்லையை நோக்கி நகர்த்த வேண்டும். அந்த வகையில் ஹாக்கி விளையாட்டுக்கு முக்கியத் தேவையாக ஹாக்கி ஸ்டிக்குகள் விளங்குகின்றன.
உலகிலேயே முதலில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு உபகரணம் ஹாக்கி ஸ்டிக்காக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எகிப்து நாட்டின் குகைகளில் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்களில் ஹாக்கி ஸ்டிக்கின்  உருவம் பொறிக்கப்பட்டிருப்பதே  இதற்கு ஆதாரமாக கூறப்படுகிறது. ஆரம்ப கட்டங்களில் மூங்கில் மரங்களைக் கொண்டு ஹாக்கி ஸ்டிக்குகள் உருவாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
அதன்பிறகு காலம் மாறத் தொடங்கியதும், மூங்கிலைக் கொண்டு ஹாக்கி ஸ்டிக்குகளை உருவாக்குவதற்கு பதிலாக மல்பெரி அல்லது ஹிக்கரி மரத் துண்டுகளைக் கொண்டு ஹாக்கி ஸ்டிக்குகள் உருவாக்கப்பட்டன. தற்போது ஹாக்கி போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஸ்டிக்குகள் பெரும்பாலும் இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ தயாரிக்கப்படுகின்றன. பிரம்புகள், மல்பெரி உள்ளிட்டவை மட்டுமின்றி . ஃபைபர் கிளாஸைக் கொண்டும் நவீன ஹாக்கி ஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன.
ஹாக்கி ஸ்டிக்குகளின் நீளம் பெரும்பாலும் 89 சென்டிமீட்டர் முதல் 105 சென்டிமீட்டர்கள் வரை இருக்கும். இவற்றின்  எடை 560 கிராம்களைக் கொண்டதாக இருக்கும். ஹாக்கி ஸ்டிக்குகளைப் பொறுத்தவரை, அவை ஹெட், ஹாண்டில் மற்றும் ஸ்பிளைஸ் ஆகிய 3 பாகங்களைக் கொண்டதாக இருக்கும். இதில் ஹாண்டில் பகுதி, வீரர்கள் ஹாக்கி ஸ்டிக்குகளைப் பிடிக்கும் பகுதியாகும். வளைந்திருக்கும் ஹெட் பகுதியால் வீரர்கள் பந்தை அடிப்பார்கள். ஸ்பிளைஸ் பகுதியானது இந்த இரு பகுதிகளையும் இணைக்கும் பகுதியாகும்.
----------------------------------------------------------------------------------------
ஜனவரி 28
சச்சினின் சாதனையை முறியடித்த ஷபாலி
கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை படைத்தவர்  சச்சின் டெண்டுல்கர். அவரது  சாதனையையே முறியடித்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான  ஷபாலி வர்மாவின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 28).
ஹரியாணா மாநிலத்தில் உள்ள ரோஹ்டக் எனும் ஊரில் பிறந்த ஷபாலி வர்மாவுக்கு சிறு வயதில் இருந்தே பெண்கள் ஆடும் ஆட்டங்களில் ஆர்வம் இல்லை. ஆண் குழந்தைகள் கிரிக்கெட் ஆடும் இடங்களில்தான் இவரைப் பார்க்க முடியும். 10 வயது முதல் ஆண் குழந்தைகளுடன் கிரிக்கெட் ஆடுவதை வழக்கமாக கொண்ட அவர், பல போட்டிகளில் அவர்களைவிட அதிகமாக ரன்களைக் குவித்துள்ளார். இப்படி தெருக்களில் கிரிக்கெட் ஆடத் தொடங்கியவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, 15 வயதிலேயே ஹரியாணா மாநில அணியில் இடம் பிடித்தார்.
இந்த சூழலில் 2019-ம் ஆண்டு நடந்த தேசிய அளவிலான டி20 போட்டி ஒன்றில், ஹரியாணா அணிக்காக 56 பந்துகளில் 128 ரன்களைக் குவிக்க, தேசிய கிரிக்கெட் தேர்வாளர்களின் பார்வை இவர் மீது விழுந்தது. 2020-ம் ஆண்டில் நடந்த மகளிர் டி20 போட்டியில் அதிக ரன்களைக் குவித்த ஷபாலி, இதுவரை 19 போட்டிகளில் 487 ரன்களை அடித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், 29 பந்துகளில் 73 ரன்களைக் குவித்ததன் மூலம் மிகக் குறைந்த வயதில் (15 ஆண்டு 285 நாட்கள்) சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இதன்மூலம் 16 வயதில் அரைசதம் அடித்து சச்சின் படைத்த சாதனையை முறியடித்தார். மேலும் இதே போட்டியில் ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து முதல் விக்கெட் ஜோடியாக 143 ரன்களைக் குவித்தார். டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கான இந்தியாவின் அதிகபட்ச கூட்டணியாகும் இது.
-----------------------------------------------------
ஜனவரி 29
பதக்கம் வென்ற ராணுவ வீரர்
ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தை பெற்றுத் தந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோரின் பிறந்த நாள் இன்று (ஜனவரி 29).
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் 1970-ம் ஆண்டு பிறந்தவர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர். இவரது அப்பா லக்ஷ்மன் சிங் ரத்தோர், இந்திய ராணுவத்தில் கர்னலாக இருந்தார். தந்தையைப் போலவே தானும் ராணுவத்தில் இணைய விரும்பிய ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், சிறுவயதில் கிரிக்கெட் விளையாட்டிலும் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். தனது 15-வது வயதில் அவர் ரஞ்சி கோப்பையில் ஆடும் மத்தியப் பிரதேச அணிக்காக ஆட தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் தந்தையின் வழியில், 1990-ம் ஆண்டில் ராணுவத்தில் இணைந்த ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர்,  ராணுவ வீரராக இருந்துகொண்டே துப்பாக்கி சுடும் போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரிலும் அவர் பங்கேற்றுள்ளார்.    2004-ம் ஆண்டில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், டபிள் டிராப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்திய துப்பாக்கி சுடும்  வீரர்களாலும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல முடியும் என்பதை ரத்தோர் நிரூபித்தார். ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வென்ற பிறகு, இந்தியாவில் துப்பாக்கி சுடும் வீரர்கள் மத்தியில் புத்தெழுச்சியை ஏற்படுத்தியது.
ஒலிம்பிக் போட்டி மட்டுமின்றி காமன்வெல்த் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள், ஆசிய விளையாட்டில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட சர்வதேச போட்டிகளில் மொத்தம் 26 பதக்கங்களை ரத்தோர் வென்றுள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் இருந்தும், ராணுவத்தில் இருந்தும் ஓய்வு பெற்ற பிறகு, நரேந்திர மோடியின் கடந்த ஆட்சிக்காலத்தில் அவர் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------
ஜனவரி 30
வில்வித்தை போட்டியில் இந்தியாவின் பிதாமகனாக கருதப்படும் லிம்பா ராமின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 30).
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சரதீத் எனும் ஊரில், 5 குழந்தைகளைக் கொண்ட ஒரு எளிய குடும்பத்தில் 1972-ம் ஆண்டு பிறந்தவர் லிம்பா ராம். இவருக்கு முதலில் அர்ஜுன் ராம் என்றுதான் பெற்றோர் பெயரிட்டிருந்தனர். ஆனால் சிறுவயதில் திடீரென்று உடல் நலமில்லாமல் போய், மறுஜென்மம் எடுத்து வந்ததால்,  வேண்டுதலுக்காக தங்கள் குலதெய்வத்தின் பெயரான லிம்பா ராம் என்ற பெயரை அவருக்கு பெற்றோர் வைத்தனர்.
வீட்டில் சாப்பாட்டுக்கே வழியிலாமல் இருந்ததால், சிறுவயதிலேயே லிம்பா ராம் வேலைக்கு சென்றுவிட்டார். இந்த காலகட்டத்தில் வயல்களில் வேலைக்குச் செல்லும்போது மூங்கிலால் ஆன வில் அம்புகளை வைத்து விளையாடுவது லிம்பா ராமின் பொழுதுபோக்காக இருந்தது. பிற்காலத்தில் ஊரில் நடக்கும் அம்பு எய்யும் போட்டிகளில் லிம்பா ராம் வெற்றிகளை ஈட்டத் தொடங்கினார்.

இந்தச் சூழலில்தான் வில் வித்தையில் மேலும் பயிற்சி பெற்றால் வாழ்க்கையில் உச்சத்தை எட்டலாம் என்று லிம்பா ராமிடம் அவரது மாமா ஒருவர் கூறியுள்ளார். மேலும் வில்வித்தையில் சிறந்த வீரரை தேர்ந்தெடுப்பதற்கான முகாம் பக்கத்து ஊரில் நடப்பதாகவும் லிம்பா ராமிடம் அவர் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த ஊருக்குச் சென்ற லிம்பா ராம், தேர்வாளர்களின் கவனத்தைக் கவர, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி முகாமில் சேர்க்கப்பட்டார். இந்த பயிற்சி முகாமில் சேர்ந்த பிரகு, தேசிய ஜூனியர் பிரிவில் பல பதக்கங்களை வென்ற லிம்பா ராம், தன் 16 வயதிலேயே 1988-ம் ஆண்டில் நடந்த சியோல் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு பெற்றார்.
இப்போட்டியில் பதக்கம் வெல்ல முடியாவிட்டாலும், இதில் பெற்ற அனுபவம் அவருக்கு கைகொடுத்தது. இதைத்தொடர்ந்து ஆசிய கோப்பைக்கான வில்வித்தை, காமன்வெல்த் வில்வித்தை போட்டி என பல சர்வதேச பந்தயங்களில் பதக்கங்களை வென்றார்.  

No comments:

Post a Comment