பிப்ரவரி 20
வெளிநாட்டு மண்ணில் முதல் வெற்றி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான பிறகு, வெளிநாட்டு மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை ருசிக்க, இந்தியா 36 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டில் 31 போட்டிகளில் ஆடிய இந்தியா, 21 ஆட்டங்களில் தோற்று, 10 ஆட்டங்களை டிரா செய்திருந்தது. நீண்ட காத்திருப்புக்கு பிறகு, வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி வெற்றியை ருசித்த நாள் பிப்ரவரி 20. 1968-ம் ஆண்டில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக டுனெடின் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்த முதல் வெற்றியை ருசித்தது.
பொதுவாக நியூஸிலாந்து, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்களைக் கொண்டது. இந்திய அணியிலோ, அப்போது வேகப்பந்து வீச்சு பலவீனமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்களான ரமாகாந்த் தேசாய்க்கு வயதானதாலும், சுபர்தா குகாவுக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டதாலும் இந்திய அணி தடுமாறிக்கொண்டு இருந்தது. மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான அபித் அலி, அனுபவம் இல்லாதவராக இருந்தார்.
இந்தச் சூழலிலும் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தினார் பட்டோடி. வேகப்பந்து வீச்சைவிட சுழற்பந்து வீச்சாளர்களான பேடியையும், பிரசன்னாவையும் அவர் அதிகம் நம்பினார். இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் அபித் அலி 4 விக்கெட்களை வீழ்த்த, நியூசிலாந்து அணி 350 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா, அஜித் வடேகர் (80 ரன்கள்), பரூக் இஞ்ஜினீயர் (53 ரன்கள்) ஆகியோரின் உறுதியான பேட்டிங்கால் 359 ரன்களைச் சேர்த்தது. அடுத்த இன்னிங்ஸில் பிரசன்னா 6 விக்கெட்களை வீழ்த்த 208 ரன்களில் சுருண்டது நியூசிலாந்து. இதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. 2-வது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி 71 ரன்களைக் குவித்த அஜித் வடேகர், இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.
--------------------------------------------------------------------------
பிப்ரவரி 21
ரசிகர்களை கவர்ந்த செரீனாவின் உடை
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அணிந்த உடை, அனைவரையும் கவர்ந்தது. பொதுவாக டென்னிஸ் வீராங்கனைகள் குட்டைப் பாவாடை அணிந்துதான் ஆடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒரு காலில் ஷார்ட்ஸ், மறு காலில் பேன்ட் என்று கொஞ்சம் வித்தியாசமான உடையை அணிந்து ஆடினார் செரினா வில்லியம்ஸ். டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் செரின்னாவின் ஆட்டத்தைப் போலவே அவரது உடை அமைப்பும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
வித்தியாசமான இந்த உடை அமைப்பைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, “விளையாட்டு உலகில் இதுபோன்று உடை அணிந்து ஆடுவது ஒன்றும் புதிய விஷயமில்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே புளோரன்ஸ் கிரிபித் ஜாய்னர் என்ற வீராங்கனை இதேபோன்று உடை அணிந்து ஆடியுள்ளார். புகழ்பெற்ற தடகள வீராங்கனையும், ஒலிம்பிக்கில் 5 பதக்கங்களை வென்றவருமான அவர் வித்தியாசமான ஆடைகளை அணிவதிலும் புகழ்பெற்றவர்.
சிறுவயதில் அவர் அணியும் ஆடைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அப்போது அவரைப் போலவே ஆடைகளை அணிய நான் மிகவும் விரும்பினேன். அந்த கனவு இப்போது நனவாகி உள்ளது. அவர் அணிந்த ஆடைகளில் ஒன்றைத்தான் நான் புத்தாக்கம் செய்து இந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பயன்படுத்தினேன். இது இந்த அளவுக்கு ரசிகர்களைக் கவரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்றில் பெற்ற வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் 90 ஆட்டங்களுக்கு மேல் வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் செரீனா வில்லியம்ஸ் பெற்றுள்ளார்.
--------------------------------------------------------------------------------------
பிப்ரவரி 22
இலங்கை கிரிக்கெட்டின் அதிரடி மன்னன்
கிரிக்கெட் உலகில் அதிரடி மன்னனாக விளங்கிய சனத் ஜெயசூர்யா, தனது முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான நாள் இன்று. 1991-ம் ஆண்டு இதே நாளில்தான் (பிப்ரவரி 22) நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஜெயசூர்யா.
1969-ம் ஆண்டு இலங்கையின் கடற்கரை நகரமான மடாராவில் பிறந்தார் ஜெயசூர்யா. சிறுவயதிலேயே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபாடு கொண்ட ஜெயசூர்யா, பள்ளி நாட்களிலேயே கிரிக்கெட் போட்டிகளில் ஆடி, பல பரிசுகளை வென்றுள்ளார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முதல் முறையாக 1988-ம் ஆண்டில் நடைபெற்றது. இந்த தொடரில் இலங்கை அணிக்காக ஆடிய ஜெயசூர்யா, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியில் இடம் பிடித்தார். 1889-ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் ஆடினாலும், டெஸ்ட் போட்டியில் ஆட 1991-ம் ஆண்டுவரை காத்திருக்க வேண்டியிருந்தது.
1996-ம் ஆண்டில் இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜெயசூர்யா, இத்தொடரில் 221 ரன்களைக் குவித்ததுடன் 6 விக்கெட்களையும் கைப்பற்றினார். 110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜெயசூர்யா, 6,973 ரன்களை குவித்ததுடன் 98 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதேபோன்று 445 ஒருநாள் போட்டிகளில் 13,430 ரன்களைக் குவித்ததுடன் 323 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். 2007-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற ஜெயசூர்யா, பின்னர் அரசியலில் நுழைந்தார். மகிந்தா ரஜபக்ஷவின் கட்சியில் இணைந்தவர், பின்னர் இலங்கை அமைச்சரவையிலும் இடம் பிடித்தார்.
------------------------------------------------------------
பிப்ரவரி 23
புத்தகப் பையால் கிடைத்த வீராங்கனை
ஜார்கண்டில் உள்ள ராஞ்சி நகரில் கடந்த வாரம் நடந்த பெண்களுக்கான தேசிய நடைப் பந்தயத்தில் 20 கிலோமீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 28 நிமிடங்கள் மற்றும் 45 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனை படைத்துள்ளார் பிரியங்கா கோஸ்வாமி. இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்தவர் பிரியங்கா கோஸ்வாமி. மீராவைப் பொறுத்தவரை, அவர் நடைப் பந்தய வீராங்கனையாக மாறியதே ஒரு விபத்துதான். 6-ம் வகுப்பு படிக்கும்வரை ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகத்தான் அவர் இருந்துள்ளார். இதற்காக பள்ளி அளவில் பல பரிசுகளையும் அவர் வென்றுள்ளார். இந்த சமயத்தில் உள்ளூரில் ஒரு நடைப் போட்டி நடந்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கத்துடன் புத்தகங்களை எடுத்துச் செல்லும் அழகான பை பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில் பிரியங்காவுக்கு ஒரு பை தேவைப்பட்டதால், இப்போட்டியில் பங்கேற்றுள்ளார்.
ஏற்கெனவே ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருந்தது, இந்த பந்தயத்தில் பிரியங்காவுக்கு உதவியாக இருந்துள்ளது. இப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார் பிரியங்கா. அன்றுமுதல் நடைப்பந்தயம் அவருக்கு மிகவும் பிடித்துப் போக கவுரவ் தியாகி என்ற பயிற்சியாளரிடம் சேர்ந்து பயிற்சி பெற்றுள்ளார்.
“நடைப் பந்தயத்தைப் பொறுத்தவரை நாம் நடக்கும்போது கால் முட்டி மடங்கக் கூடாது. அதேபோல் எப்போதும் ஏதாவது ஒரு பாதம் தரையில் பதிந்திருக்க வேண்டும். இதற்காக என் பயிற்சியாளரிடம் நிறைய அடி வாங்கியிருக்கிறேன்” என்கிறார் பிரியங்கா. ஒலிம்பிக் போட்டியை லட்சியமாகக் கொண்டு, பெங்களூருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் கடந்த 18 மாதங்களாக பயிற்சி பெற்று வருகிறார் பிரியங்கா. இதற்காக வாரந்தோறும் அவர் 250 கிலோமீட்டர்கள் தூரம் நடக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment