ஜனவரி 23
புச்சிபாபுவும் சென்னை கிரிக்கெட் வரலாறும்
சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்ததற்கும், புச்சிபாபுவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. புச்சிபாபுவின் முயற்சியால்தான் 1888-ம் ஆண்டில் சென்னையில் ’மெட்ராஸ் யுனைடட் கிரிக்கெட் கிளப்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
ஆங்கிலேய அரசில் துபாஷியாக (மொழிபெயர்பாளராக) இருந்த மோதரவரப்பு தேரா வெங்கடசாமி என்ற செல்வந்தரின் பேரன்தான் புச்சிபாபு. சென்னையில் தங்கியிருந்த வெங்கடசாமி, பெரும் செல்வந்தராக இருந்தார். சிறுவயதில் தனது பேரன் புச்சிபாபுவை கவனித்துக்கொள்ள வெள்ளைக்கார பெண் ஒருவரை அவர் வேலைக்கு வைத்திருந்தார். தினமும் மாலை வேளைகளில் புச்சிபாபுவுக்கு விளையாட்டு காட்டுவதற்காக, அந்த பெண் வெளியில் அழைத்துச் செல்வார். அந்தப் பெண்ணுக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும் என்பதால் வெள்ளைக்கார இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும் இடத்துக்குத்தான் பெரும்பாலும் புச்சிபாபுவை அழைத்துச் செல்வார்.
இப்படி சிறுவயதில் அந்தப் பெண்ணுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க, புச்சிபாபுவுக்கும் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தன் வீட்டுத் தோட்டத்தில், சகோதரர்களுடன் இணைந்து அவர் முதலில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். காலம் செல்ல செல்லச் புச்சிபாபுவோடு, அவரது கிரிக்கெட் ஆர்வமும் வளர்ந்தது. 1888-ம் ஆண்டில் கல்லூரி மாணவர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு, ‘மெட்ராஸ் யுனைடட் கிரிக்கெட் கிளப்’ (எம்யுசிசி) என்ற அமைப்பைத் தொடங்கிய புச்சிபாபு, தன் சொந்த பணத்திலேயே அந்த கிரிக்கெட் கிளப்புக்கான மைதானத்தையும் அமைத்துக் கொடுத்தார்.
எம்யுசிசி ஆரம்பிக்கப்பட்ட பிறகு, எஸ்ஐஏஏ, வைஎம்ஐஏ ஆங்கிலோ இந்தியன் அசோசியேஷன் போன்ற பல அமைப்புகள் தொடங்கப்பட்டன. அக்காலத்தில் வேட்டிதான் பிரதான உடை என்பதால், கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் இளைஞர்கள் மைதானம் வரை வேட்டியில் வந்து, அங்கு பேண்ட்டை அணிந்து போட்டிகளில் பங்கேற்றதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
-----------------------------------------------------
ஜனவரி 24
டென்னிஸ் ராக்கெட்டின் கதை
ஆரம்ப காலகட்டத்தில் வெறும் கைகளால்தான் டென்னிஸ் போட்டிகள் ஆடப்பட்டு வந்தன. ஒரு சில வீரர்கள், கைகளில் கிளவுஸ்களை அணிந்து ஆடினர். பிற்காலத்தில் மரத்தால் ஆன டென்னிஸ் ராக்கெட்கள் உபயோகத்துக்கு வந்தன. இந்த டென்னிஸ் ராக்கெட்டின் வலை, மாடுகளின் குடலால் உருவான இழைகளை வைத்து பின்னப்பட்டன.
1965-ம் ஆண்டில்தான் இதில் மாற்றம் கொண்டுவரப்பட்டு நைலான் இழைகளால் பின்னப்பட்ட டென்னிஸ் ராக்கெட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இதன்பிறகு மரத்தாலான ராக்கெட்டுக்கு பதில் ஸ்டீலாலான ராக்கெட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆனால் தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் முதலில் ஸ்டீல் ராக்கெட்களை பயன்படுத்த தயங்கினர். அவற்றை பயன்படுத்தி துல்லியமாக ஆட முடியாது என்று அவர்கள் கருதியதே இதற்கு காரணம். 1965-களில் பயன்படுத்தப்பட்ட மரத்தாலான டென்னிஸ் ராக்கெட்டின் எடை சுமார் 350 கிராமாக இருந்தது.
இந்த காலகட்டத்தில், ஸ்டீல் ராக்கெட்களைப் பயன்படுத்தியும் சிறப்பாக ஆடமுடியும் என்பதை முதலில் நிரூபித்தவர் ஜிம்மி கானர்ஸ். அவர் ஸ்டீல் பேட்டைப் பயன்படுத்தி, அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்க, மற்ற வீரர்களும் மர ராக்கெட்டுக்கு பதில் ஸ்டீல் ராக்கெட்களை பயன்படுத்தத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து அமெரிக்க டென்னிஸ் வீரரான ஜான் மெக்கன்ரோ, ‘கிராபைட்’ ராக்கெட்களை பிரபலப்படுத்தினார். தற்போது பயன்படுத்தப்படும் ராக்கெட்களின் எடை சுமார் 250 கிராமாக உள்ளது.
பெரும்பாலான டென்னிஸ் ராக்கெட்கள் ஆசிய கண்டத்தில்தான் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஜப்பானில் அதிக அளவில் அவை உற்பத்தி செய்யப்படுகின்றன. டென்னிஸ் ராக்கெட்டின் நீளம் குறிப்பிட்ட அளவில்தான் இருக்க வேண்டும் என்ற விதிகள் ஏதும் இல்லை. அதனால் வீரர்கள் தங்கள் வசதிக்கேற்ற ராக்கெட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
----------------------------------
ஜனவரி 25
குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்கம்
ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது குளிர்கால ஒலிம்பிக் போட்டி. பனிச்சறுக்கு, ஐஸ் ஹாக்கி போன்ற பனிக்காலத்தில் ஆடும் விளையாட்டுகளைக் கொண்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டி, கடந்த 1924-ம் ஆண்டில் இந்த நாளில்தான் (ஜனவரி 25) தோன்றியது.
ஆரம்பத்தில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், பனிக்காலத்தில் ஆடும் ஆட்டங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற குரல்கள் சர்வதேச அளவில் எழுந்தன. இதைத்தொடர்ந்து 1921-ம் ஆண்டில் கூடிய ஒலிம்பிக் கமிட்டி, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி அளித்தது.
தொடக்கத்தில் ஒலிம்பிக்ஸ் நடத்தப்படும் நாட்டிலேயே குளிர்கால ஒலிம்பிக்ஸும் நடத்தப்பட வேண்டும் என்றும், இவை ஒரே ஆண்டில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை இல்லாத நாட்டில் குளிர்கால ஒலிம்பிக்ஸை நடத்த முடியுமா என்ற கேள்வி எழ, இந்த முறை மாற்றப்பட்டது. இதன்படி 1924-ம் ஆண்டு முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி, பிரான்ஸ் நாட்டில் உள்ள சமோனிக்ஸ் என்ற இடத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
16 நாடுகளைச் சேர்ந்த 258 வீரர்கள் முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த சார்லஸ் ஜேட்ரா என்பவர் 500 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று குளிர்கால ஒலிம்பிக்கின் முதல் பதக்கத்தை வென்றார்.
ஆரம்பத்தில் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் காலம் செல்லச்செல்ல பல நாடுகள் இதில் பங்கேற்கத் தொடங்கின. கடந்த 2018-ல் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்ஸில் 92 நாடுகளைச் சேர்ந்த 2,925 வீரர்கள் பங்கு கொண்டார்கள். நைஜீரியா, சிங்கப்பூர், ஈக்வேடார், எரித்ரியா, மலேசியா ஆகிய நாடுகள்கூட முதன் முறையாக அப்போது பங்கேற்றன. 1964-ம் ஆண்டுமுதல் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் இந்தியா, இதுவரை ஒரு பதக்கத்தைக்கூட வென்றதில்லை.
--------------------------------------------------------
ஜனவரி 26
ஆஸி.யில் சாதித்த வாஷிங்டன் சுந்தர்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது முதலில் வலைப்பயிற்சியில் பந்துவீசும் நபராகத்தான் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டிருந்தார். இடையில் அஸ்வினும், ஜடேஜாவும் காயமடைய 4-வது டெஸ்ட் போட்டியில் அவரைச் சேர்த்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டத்தில் கிடைத்த இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்த வாஷிங்டன் சுந்தர், 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன் முதல் இன்னிங்ஸில் அரை சதமும் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஆஸ்திரேலியாவின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய வாஷிங்டன், சர்வதேச கிரிக்கெட்டில் அழுத்தமாக தடம் பதித்ததற்கு காரணம் அவரது அப்பா எம்.சுந்தர். வாஷிங்டன் சுந்தரின் அப்பா சுந்தரும் முன்னாள் கிரிக்கெட் வீரர்தான். உள்ளூர் போட்டிகளில் ஆடியுள்ள அவர், தான் கிரிக்கெட் போட்டிகளில் ஆடச்செல்லும்போதெல்லாம் மகன் வாஷிங்டனையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். போட்டியின்போது கிடைக்கும் இடைவேளைகளில் அவர் வாஷிங்டனுக்கு டென்னிஸ் பந்துகளை வீசி பேட்டிங் பயிற்சி அளித்துள்ளார். அந்த நேரத்தில் வாஷிங்டனின் ஸ்டைலை வைத்து, அவரால் கிரிக்கெட்டில் ஜொலிக்க முடியும் என்று கணித்திருக்கிறார் சுந்தர். இதைத்தொடர்ந்து வாஷிங்டனை தீவிர கிரிக்கெட்டில் அவர் ஈடுபடுத்தியுள்ளார்.
பின்னர் சுந்தரின் நண்பரும் தமிழக அணியின் முன்னாள் பேட்ஸ்மேனுமான டபிள்யூ.வி.ராமனின் மேற்பார்வையில் வாஷிங்டனின் பேட்டிங் மெருகேற்றப்பட்டுள்ளது. பேட்டிங்கில் மட்டுமின்றி சுழற்பந்து வீச்சிலும் கெட்டிக்காரராக உருவெடுத்துள்ளார் வாஷிங்டன். தமிழகத்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான வெங்கட்ரமணாவின் பயிற்சியால் வாஷிங்டனின் சுழற்பந்து வீச்சில் மெருகு கூட, கிரிக்கெட்டில் ஒவ்வொரு கட்டமாக வளர்ந்து 2016-ல் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் தன் சிக்கனமான பந்து வீச்சாலும் பலரது கவனத்தை ஈர்த்தவர், பின்னர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சாதிக்க, இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
No comments:
Post a Comment